Tuesday, April 11, 2023

#விதியை மதியால் வெல்லலாம்

#விதியை மதியால்வெல்லலாம்!
————————————————————*
மகாபாரதத்தில் ராஜதர்மத்தை உபதேசம் செய்த பீஷ்மரிடம், “விதி, முயற்சி இரண்டில் எது சக்தி படைத்தது? ” என்று கேட்டார் தர்மபுத்திரர். அதற்கு பீஷ்மர், “இரண்டுக்கும் சம சக்தி உள்ளது. ஆனால் அரசனானவன் விதியை விட முயற்சியை நம்ப வேண்டும் ” என்று கூறினார். விதியை முயற்சியால் வெல்லலாம் என்பதே பீஷ்மரின் கருத்து. மதி என்பதை முயற்சி என்று வைத்துக் கொண்டால், அது பீஷ்மர் கூறியதுடன் ஒத்துப் போகும். மகாபாரத்தில் பீஷ்மர் கூறியதும், முயற்சி திருவினையாக்கும்; முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும் என்று திருவள்ளுவர் கூறியதும் ஒரே கருத்தாகவே உள்ளது.
*****

#வாழ்க்கையில்கஷ்டம்!

வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டம் வந்தால் எப்படிச் சமாளிப்பது? எப்படி மனதைத் தேற்றிக் கொள்வது? 
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவராக ஒருவர் இருந்தால், தொடர்ந்து வரும் கஷ்டங்களை எளிதாகச் சமாளிக்கலாம். இரண்டு ஏழரைச் சனி தொடர்ந்து வரும் ஜாதகராக அவர் இருந்தால், முதல் ஏழரைச் சனி காலத்தில் பட்ட கஷ்டங்களால், கஷ்டங்கள் அவருக்குக் பழகிப் போய்விடும். அடுத்த ஏழரைச் சனிக்காலத்தில் வரும் கஷ்டங்கள் கஷ்டமாகவே தெரியாது. விதியின் மேல் நம்பிக்கை உள்ளவராக இருந்தால், ‘பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்’ என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். இந்த இரண்டு நம்பிக்கைகளுமே இல்லாதவராக ஒருவர் இருந்தால், இந்த கஷ்டங்கள் ஏன் வந்தன என்று ஆராய்‌ச்சி செய்து, அடுத்து இந்த கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதில் நேரத்தைச் செலவழிக்கலாம்.


No comments:

Post a Comment