Friday, February 24, 2023

தமிழக ஆளுநருடன் சந்திப்பு-கேஎஸ்ஆர்



—————————————
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ராஜ்பவனில் சந்தித்து பேசினேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். HISTORY OF THE TAMILS FROM THE EARLIEST TIMES TO 600 A.D, THIRUKKURAL AS THE BOOK OF THE WORLD, TRAILS OF TAMIRAPARANI, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் ஆளுநரிடம் வழங்கினேன். அதோடு அய்யன் வள்ளுவர் சிலையையும், தமிழக கிராமப்புறங்களில் கிடைக்கும் Aaranya Alli Aaranya Kudil அனுப்பி தந்த கருங்காலிக் குச்சியையும் வழங்கினேன். கருங்காலி குச்சியின் சிறப்புகளை அவரிடம் சொல்லும்போது கவனத்தில் கொண்டார். பக்தி, இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், நவீனகால இலக்கியங்கள் பற்றியும் கூறினேன். 







திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், திரிகடுகம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக் கோவை, நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், கார் நாற்பது, களவழி நாற்பது, புறநூனூறு மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்ப இராமாயணம் இவற்றைப் பற்றியெல்லாம் கலந்துரையாடினோம். 

அரசியல், இன்றைய தேர்தல்கள் (தேர்தல் கூத்துகளைச் சொல்லாமல் சொன்னேன்), அறமற்ற அரசியல் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள், திட்டங்கள், குறிப்பாக 16 முக்கிய நதிநீர்ச் சிக்கல்கள் போன்றவை பற்றியெல்லாம் ஆளுநரிடம் எடுத்துரைத்தேன். 

எங்கள் பகுதியான கோவில்பட்டி தனிமாவட்டமாக அமைய தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையையும் முன் வைத்தேன்.

இன்றைய அரசியலின் போக்குகளைப் பற்றியெல்லாம் பல கோணங்களில் பேசப்பட்டது.

ஈழத்தமிழர் சிக்கல், இந்திய பாதுகாப்பு, இந்துமகா சமுத்திரம் அமைதி மண்டலமாக கடந்த காலங்கள் போல பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தென்கிழக்கு ஆசிய புவியரசியலைக் குறித்தும் கருத்துகளை அவரிடம் வெளியிட்டேன். ஈழத்தமிழர் பிரச்னை, இந்தியாவின் பாதுகாப்பு, இந்துமகா சமுத்திரம் அமைதி மண்டலம் ஒருங்கிணைந்த முக்கோண வடிவமான பிரச்னையாகும்.

அம்பன் தோட்டாவை சீனா இலங்கையிடமிருந்து  99 வருடத்திற்குக் குத்தகைக்கு எடுத்திருப்பது, இந்து மகா சமுத்திரத்தில் பட்டு வழிச் சாலையை (silk way) அமைத்திருப்பது, இந்து மகாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது, சீசல்ஸின் டீகோ கார்சிர்யா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக் குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் மீண்டும் அமைத்திருப்பது, பிரான்ஸும் ரஷ்யாவும் இந்துமகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் திட்டங்களை தீட்டியுள்ளது, ஜப்பான் எண்ணெய் ஆய்வு என்ற நிலையில் இக்கடலில் கீழ்ப்புறம் தன்னுடைய ஆதிக்கத்தைப் பெருக்க நினைப்பது,  இந்தியப் பெருங்கடலில் நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் சீனா  தனது போர்க் கப்பல்களை எல்லாம் நிறுத்துவதோடு மட்டுமல்லாமல்,  கடற்படைப்  பயிற்சிகளும் நடத்துவது, தற்போது ரஷ்யா மற்றும் சீனா தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட்ஸ் பட்டியாலா பகுதியில் கூட்டு இராணுவப் பயிற்சியை 17.02.2023- இல் தொடங்கி நடத்தி வருகிறது.

சீனா இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு முனையத்தை அபகரித்து தன்னுடைய இறையாண்மையை அங்கே நிலைநாட்டி, அங்கு வசிக்கும் மக்களிடம் சீனநாட்டின் அடையாள அட்டையை வழங்கியிருப்பது வேடிக்கையான செயலாகும். அதேபோல கச்சத்தீவு பகுதியில் உள்ள தீவுகளை சீனா குத்தகைக்கு எடுத்து காற்றாலை மின்சார உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. சீனாவின் உளவுக்கப்பலை இந்தியா எதிர்த்தும் இலங்கை அனுமதித்தது.
நான் கூறிய பிரச்னைகளை எல்லாம் நன்கு கவனித்து  அமைதியாக உள்வாங்கிக் கொண்டார். 

ஆளுநர் நன்கு உபசரித்தார். நல்ல பயனுள்ள சந்திப்பு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
K.S.Radhakrishnan
#KSR_POST
#ksrvoice #கேஎஸ்ஆர்
24.02.2023

No comments:

Post a Comment