Friday, January 6, 2023

முன்னாடி, எங்கும்- எதிலும்-எல்லாம் நல்லது பேசனும் நல்லதா பேசனும்னு சொல்வாங்க…ஆனா இப்ப எது பேசுனா ஹாட் டிரென்டு, லைக் அதிகம், ஷேர் அதிகம்னு தெரிஞ்சு பேசுறாங்க .. பதிவுகளை கடக்க சங்கடமாகவே இருக்கிறது..

முகநூலில் கவிஞர் பெருந்தேவியின் பதிவு இன்றையச் சூழ்நிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. எனவே அதை பகிர்கின்றேன். இங்கே நியாயங்களுக்கு இடமில்லை. பெருவாரியானவர்கள் சொல்வதை சரியா என்று பார்க்காமல், அதுதான் நியாயம் என்று பேசுகின்ற காட்சிப் பிழைகள் நிலவுகின்ற சமுதாயத்தை என்ன சொல்ல? அரசியலிலும், பொதுவெளியிலும் சாதிய மனப்பான்மை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஊடுருவி இருப்பதை அறிய நேர்கிறது. இது தவறு, கேடு என்பதை சற்றும் புரியாமல் பேசும் மனிதர்களின் மத்தியில் மெய்ப்பொருள் காண்பதரிது.

முன்னாடி,  எங்கும்-  எதிலும்-எல்லாம் நல்லது  பேசனும் நல்லதா பேசனும்னு சொல்வாங்க…ஆனா இப்ப எது பேசுனா ஹாட் டிரென்டு, லைக் அதிகம், ஷேர் அதிகம்னு தெரிஞ்சு பேசுறாங்க ..  பதிவுகளை கடக்க சங்கடமாகவே இருக்கிறது..

—————————————

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நடப்புகள் பற்றிய கட்சியினர் சாராத பதிவுகள் அபூர்வமாகவே தென்படுகின்றன. ஓர் உதாரணம், நேற்று ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஒரு ஊழியரை வெறும் கைகளால் சாக்கடை நீரை அள்ளச் சொன்ன விவகாரம். ஷாலின் மரியா லாரன்ஸ் இது குறித்து போட்ட ட்வீட்டுக்கு பதில் ட்வீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அவரை மிரட்டுவதைப் போலப் பேசியிருக்கிறார். அது சாக்கடை இல்லை என்றும் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தால் சாக்கடை நீர் போலத்தான் இருக்கிறது.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினரின் உடல்மொழி அதிகார தோரணையில்தான் உள்ளது. நிறைய ட்வீட்டுகள், ரீட்வீட்டுகள், ஆனால் ஃபேஸ்புக் கம்மென்று இருக்கிறது.
 
இரண்டாவது, சில நாட்களுக்கு முன்பு, திமுகவை / உதயநிதியை விமர்சிக்கும் வகையில் ஜெண்டில்மேன் படத்தின் மீம் ஒன்றைப் பகிர்ந்ததற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டதாக டிடிவி தினகரன், சவுக்கு சங்கர் போட்ட ட்வீட்களின் வழியாகத் தெரிந்தது.  இது குறித்தும் ஃபேஸ்புக்கில் எந்தப் பதிவையும் பார்க்கமுடியவில்லை. மட்டுமல்ல, அரசியல் ஆர்வம் கொண்ட என்னுடைய பல நண்பர்களுக்கு இப்படி ஒன்று நடந்ததுகூடத் தெரியவில்லை. 

அவதூறு மீம்களுக்காகக் கைது என்றால் அதற்கு முடிவே கிடையாது.  ஒரு காலத்தில் கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் திரிக்குத் திரி தத்துவார்த்த விவாதம் நடந்த காலமெல்லாம் நினைவுக்கு வருகிறது. 
வடக்கில் பாஜக எப்படி பெருமளவு ஊடகங்களைக் கைப்பற்றியிருக்கிறதோ அப்படித்தான் இங்கும் திமுக செயல்படுவதாக தோன்றுகிறது. ஆனால் அதிர்ச்சியான விஷயம் இங்கே இருக்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் மத்தியிலும் moral corruption அல்லது அச்சம், அந்த வகையில் ஏதோ ஒன்றைப் பார்க்க முடிகிறது. 

விமர்சித்தால் பாஜக வந்துவிடும் என்ற சாக்குபோக்கை எத்தனை நாள் சொல்வது? உண்மையில் பாஜகவுக்கு வழிவிட்டிருப்பதே இத்தகைய பக்கச்சார்பு நடைமுறைதான்.

நேற்று அண்ணாமலை தந்த பிரஸ்மீட்டில் அத்தனை களேபரம், அவருடைய தான்தோன்றித்தனமான போக்கு. ஒரு காலத்தில் இப்படியான ஒன்று நடந்தால் மக்கள் ஊடகத்தினர் பக்கம் நிற்பார்கள். ஆனால் இப்போதும் அப்படியா என்றால் சந்தேகம்தான். பாஜக தலைவர் பிரஸ்மீட்டில் பாஜகவை நோக்கி கேள்விகேட்க எத்தனை இருக்கின்றன! இங்கே குலைந்து வரும் வாழ்வாதாரம், அதலபாதாளத்தில் போகும் ரூபாய் மதிப்பு, பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அடிக்கடி அவர்கள் செய்யும் அறிவிப்பு மிரட்டல்கள், ராகுல் நடைபயணத்தின் முக்கியத்துவத்தை பாஜக கொச்சைப்படுத்துவதைப் பற்றிய கேள்வி, ஏன் இரு நாட்களுக்கு முன் நேஷனல் ஹைவேஸ் போட்ட சாலையின் பராமரிப்பின்மையால் நடந்த விபத்து....ஆனால், ஊடகர்கள் கேட்டதெல்லாம் / கேட்பதெல்லாம் டி.ஆர்.பி ரேடிங்குக்கான விஷயங்கள், பெரும்பாலும் பாலியல் குற்றச்சாட்டுகள், ஈஷாவில் நடந்த மரணம் சம்பந்தமானவை. ஈஷா வழக்கு தமிழக காவல்துறை விசாரணையில் இருக்கும்போது மத்திய அரசின் நீதி விசாரணையை ஒருவர் கோருகிறார். அபத்தம். (எனக்கு ஈஷா செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு, அது வேறு).

சுயவிமர்சனம் அரசியல் கட்சிகளுக்குத்தான் வேண்டுமா என்ன, ஊடகர்களுக்கு வேண்டாமா? மக்கள் பிரச்சினைகளில் எந்த அக்கறையுமில்லாமல் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பெரும்பாலான ஊடகர்கள் செயல்படும்போது அவர்களுக்கான மரியாதையை மட்டும் இழப்பதில்லை, மக்கள் பிரச்சினைகளைக் கொண்டுபோவதற்கான பாதைகளும் அடைபட்டுவிடுகின்றன.

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.