Monday, December 26, 2022

#செண்பகவல்லி தடுப்பு அணை Shenbagavalli_Dam

#செண்பகவல்லி_தடுப்புஅணை_சிக்கல் 
———————————————————-
வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளில் 15000 ஏக்கர் மேலான பரப்பு விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகத் திகழ்ந்து வந்த செண்பகவல்லி தடுப்பு அணையில் உடைப்புகள் ஏற்பட்டன. செண்பகவல்லி அணைக்கட்டு கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ள தடுப்பணையாகும். (இது  பழைய நெல்லை மாவட்டம் இன்று, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பாசனவசதி பெற்றுவந்தது.) அதன் பிறகு  தண்ணீர் கிடைக்கவில்லை.எனவே உடைப்பைச்  சீர் செய்வதற்காக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசு கேரள அரசுக்குப் பணம் கொடுத்தது. ஆனால் கேரள அரசு தடுப்பு அணையைச் சீர்படுத்த வில்லை. பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்த பிறகு, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டது. மத்திய அரசும் பாரா முகமாக 2012 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

கேரள முதல்வர்கள் ஆக இருந்த  சி.அச்சுத மேனன்,  பி. கே. வாசுதேவன் நாயர், கே.கருணாகரன், ஏ. கே. அந்தோணி,முகமதுகோயா,இ.கே.நாயனார்,அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பினராயி விஜயன் என இவர்கள்  இதில்  இருந்த  தமிழக நியாயங்களை புறக்கணித்தனர். சிவகிரி ஜமீன் -திருவாங்கூர் சமஸ்தானம் ஒப்பந்தம் பற்றி சிந்தனை அற்ற கேரள மனிதர்கள். 

அன்றைய நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது, செண்பகவல்லி அணை. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002 மேலும் கேரளா
செண்பகவல்லி தடுப்பு அணை சுவரையும் அத்து மீறி கேரள அரசு இடித்து நாசம் செய்தது. 

ஏற்கனவே தேசிய நதிகள் கங்கை- கிருஷ்ணா,கோதாவரி- காவேரி- வைகை- பொருநை- குமரி மாவட்ட நெய்யாறு இணைப்பு குறித்த எனது உச்ச நீதிமன்ற வழக்கில் செண்பகவல்லி தடுப்பு அணை சிக்கலை குறித்து குறிபிட்டு இருந்தேன். இதன் தீர்ப்பு கடந்த 2012 பிப்ரவரி இறுதி வாரத்தில் உச்ச நீதி மன்றம் வழங்கியது.  அப்போது நான் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக பொறுப்பாளராக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியுடன் பணியில் இருந்தேன். அந்த இடைத்தேர்தல் களத்தில் செண்பகவல்லி தடுப்பு அணை பிரச்சணையும் பேசப்பட்டது.

தமிழகத்திற்கும்  கேரளத்திற்கும் இடையான குமரி மாவட்ட  நெய்யாறு துவங்கி அடவிநயனார் அணை,முல்லைப்
பெரியாறு,பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட அனைத்து 16 க்கு மேல் நதி நீர் ஆதார பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு  மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனைகள் குறித்துப் பேசி வேண்டியது அவசரமானது அவசியமானது.
ஆனால்,இரு மாநிலங்களுக்கு இடையே பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பிரச்சனை  மட்டுமே குறித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால், செண்பகவல்லி தடுப்பு அணை குறித்துப் பேசி வில்லை 

*****

தற்போது தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வேயை  கேரள அரசு செய்கின்றது.தமிழ்நாட்டு  எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள மக்கள் இது குறித்து  கண்டனக் குரல்எழுப்புகின்றனர். 

ஏற்கெனவே,தெற்கே நெடுமங்காடு , நெய்யாற்றங்கரை, தேனி அருகே தேவிகுளம்-பீர்மேடு, பாலக்காட்டின் அட்டப்பாடியின்பல பகுதிகளை கேரளாவிடம்   நவம்பர்  1956 இல் இழந்தோம்.  இதனால்,நெய்யாறு, செண்பகவல்லி அணைக்கட்டு, அச்சன் கோவில்-பம்பை- தமிழக சாத்தூர் அருகே வைப்பாறுயுடன் இணைப்பு,
முல்லைப்பெரியாறு,  ஆழியாறு-பரம்பிக்குளம் என 16 நதி நீர் சிக்கல்கள் என தமிழகம் தவிக்கிறது.
 





#செண்பகவல்லி_தடுப்புஅணை



#Shenbagavalli_Dam


#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
#ksrpost
26-12-2022.

No comments:

Post a Comment

*All you have to decide is what to do do with the time that is given*

*All you have to decide is what to do do with the time that is given*. You can rise from anything. You can completely recreate yourself. Not...