Monday, May 9, 2016

தெளிவு, நேர்மையான அரசியலும், தேர்தல்களும் மக்களாட்சியின் அடிப்படை

இலவசத்துக்கு சோரம் போகும் நமது நிலைமை நமது தலைமுறையையே இழிவுகுழியில் தள்ளிவிடும். இன்றைக்கு தேர்தல் ஒரு வாகனத்திற்கு வாடகை ரூ. 3000. டீசல் ரூ. 1500. உடன் வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வழிச்செலவு. உடன்வரும் துண்டு பிரசுரம் கொடுக்கும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 10 பேருக்கு ரூ. 300. உணவு, குடிநீர், வேறு இதர செலவுகள் என்று அவசியமாகிவிட்டன.  முன்பு தேர்தலில் வெறும் டீயையும், பன்னையும் நம்பி தொண்டர்கள் பணி செய்தனர். வருவோருக்கு குறைந்தபட்சம் பிரியாணி கொடுக்க வேண்டியுள்ளது.

அதிமுக நடத்தும் ஜெயலலிதா பிரச்சாரங்களில் அக்னி கக்குகின்ற வெயிலில் மக்களை அழைத்து சென்று காக்க வைத்து ரணப்படுத்துகின்றனர். ஏற்கெனவே கூட்ட நெரிசல் பொறுக்க முடியாமல் 5 பேர் மாண்டுள்ளனர். இந்த படத்திலுள்ள பெண்கள் துணிப் பையை தலையில் போட்டு வேகாத வெயிலில் ஜெயலலிதாவுடைய அரசியல் பேச்சை கேட்க ஆர்வத்தோடா வந்துள்ளனர்? ஏதோ அவர்களுடைய வயிற்று பிரச்சினை. வந்தால் பணம் கிடைக்குமே என்று, இந்த பசப்புத்தனத்திற்கு யார் காரணம்? எதிலும் யதார்த்தமும் உண்மையும் இருக்க வேண்டாமா?

அரசியல் என்பது குறிபார்த்து சுடும் ஏகலைவ அம்பு விளையாட்டல்ல. வேத விற்பன்னர்களும், யாம் தெய்வமென பாவிக்கும் யூதர்களும், ஸ்லாவிக் ருஷியர்களும் கொண்டாடும் சதுரங்கம். இது சுறாக்கள் ரத்த வெறியெடுத்து அலையும் கடலில் அசைந்தாடும் கட்டுமரம் மேல் அமர்ந்து விளையாடும் சதுரங்க விளையாட்டு.

ஆள வருபவர்கள்,

1. தம் மக்களின் சமூக, பொருளாதாரம் குறித்து வரலாற்று, புவியியல், உலக அரசியலை ஒட்டி அறிந்து புரிந்திருக்கவேண்டும்.

2. மக்களாட்சியின் அமைப்பு ரீதியான புரிதல் கொண்டு நிர்வாகத் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

3. திட்டங்கள் தீட்டுவதில் தொலைநோக்கு பார்வை

4. நேர்மையாளர்

5. பொதுவாழ்வில் தியாகத்தையும், நீண்ட மக்கள் பணியும் கொண்டவர்தான் பொறுப்புக்கும், தலைமைக்கும் வருவதற்கு பொருத்தமாகும். ஜனநாயகத்தில் யாரும் பங்கேற்கலாம் என்பது ஒரு மரபு என்றாலும், குறைந்தபட்சம் மக்களுக்காக தியாகங்கள் செய்து போர் களங்களை கண்டவர்கள்தான் பொதுவாழ்வில் பொறுப்புக்கு வருவது நியாயமும் கூட. இன்றைக்கு வரம்புள்ள மக்கள் நல அரசு என்ற குடியாட்சி தத்துவத்தை சொல்லி வருகின்றனர். தகுதியில்லாமல் சிலர் பொறுப்புக்கு வந்துவிட்டால் நாடும், மக்களும் பாதிக்கப்படுவார்கள். சமீபத்தில் எகிப்திலும், லத்தின் அமெரிக்க நாடுகளிலும், சில ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷியாவிலும் ஆட்சியாளர்கள் மக்களால் விரட்டப்பட்டனர். ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால், மக்களின் அரசாக அமைவதுதான் நியாயம். இருப்பினும் அந்த அரசு நேர்மையாக, வெளிப்படையாக, மக்களை திருப்திப்படுத்தக்கூடிய அளவில் செயல்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் ஆட்சிக்கு வருபவர்களுக்கு சில தகுதிகள் வேண்டும் என்ற நிலையில் சில வரம்புகளை நமக்கு நாமே நிர்ணயித்துக்கொள்வதுதான் வரம்புள்ள மக்களாட்சி என்று அழைக்கப்படுகின்றது. எந்த பொறுப்புக்கு வந்தாலும், அதற்கான முன் அனுபவமும், தகுதியும் வேண்டும் என்று வலியுறுத்துவதைப் போல அரசியலிலும் நேர்மையும், மக்கள் நலத்திற்கான செயல்பாடும் அவசியம் தேவை.  அந்த வகையில் பொதுவாழ்வில் பொறுப்புக்கு வருபவர்கள் சற்று மக்களுக்காக நேர்மையாக போராடிய தியாக சீலர்கள் வருவதுதான் நல்லது.

மக்களே மகேசன் என்கிறார்கள். மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான், தங்களுக்கு பணி செய்ய நல்லவர்கள், ஆற்றலாளர்கள், ஆளுமைகளை தங்களுக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் தேர்தல். பணத்துக்காக ஓட்டு போடுவது நமக்கு நாமே புதைகுழியைத் தோண்டி கொள்வது போல. சாமுவேல் ஜான்சன் சொன்னதுபோல, Patriotism is the last refuge of scoundrels என்ற நிலையில்லாமல் ஆரோக்கியமான பொதுவாழ்வை உருவாக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.  இதில் கவனம் இல்லையென்றால் நாட்டையோ, சமுதாயத்தையோ பாதுகாக்கவே முடியாது.

ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு என இரு தேர்தல்களை சந்திக்கின்றோம். 2014ல் நாடாளுமன்றத்தில் கறுப்புப் பணத்தை மீட்போம் என்று சொன்ன மோடி அதை பேசுவதே இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் கொண்டு வந்த சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என்று சொன்ன உறுதிமொழியும் காற்றில் பறந்துவிட்டது. அன்று ஆதார் கார்டு தேவையில்லை என்ற பாஜக நிலை இன்றைக்கு பாஜக அரசு ஆதார் அட்டை அவசியம் என்று சட்டத்தையே அமைச்சர் அருண் ஜேட்லி கொண்டுவந்துவிட்டார். இப்படி தேர்தல் காலத்தில் உறுதிமொழிகள். ஆட்சிக்கு வந்தபின் அந்த உறுதிமொழிகளை வசதியாக மறந்துவிடுவது வாடிக்கை.

இன்றைக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வின் உறுதிமொழிகள் எவ்வளவோ.  இலவச கைபேசி, ஈழப் பிரச்சினை, வீட்டுக்கு ஒருவர்க்கு வேலை, கிரானைட் தாதுமணல் கொள்ளை என்று பல உறுதிமொழிகள். இந்த உறுதிமொழிகள் யாவும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை? இப்படியெல்லாம் பிரச்சினைகளும் நிலைமைகளும் உள்ளதை அறிந்து முடிவெடுக்கவேண்டியது மக்கள்தான்.  சினிமா நடிகர், நடிகைகள் வருவார்கள் போவார்கள். அவர்கள் கூலிக்கு மாரடிக்கின்றார்கள். அவர்கள் வந்து சொல்லி பொதுவாழ்வையும், அரசியலையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையா?

அமெரிக்க அதிபர் கென்னடி தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தில் "என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? அதை என்னால் செய்யமுடியுமா? என சிந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று அமெரிக்க மக்களிடம் வாக்குகளை கேட்டார். அத்தோடு மட்டுமல்லாமல் என் மீது தவறான மதிப்பீடு வைத்து நான் சாதிப்பேன் என்று நினைத்துக்கொண்டு வாக்களிக்காதீர்கள். என்னுடைய நம்பகத் தன்மையை முதலில் தெரிந்துகொண்டு வாக்களியுங்கள். அதுதான் உங்களுக்குள்ள சக்தியும் அதிகாரமும். நீங்கள்தான் இந்த நாட்டின் இறையாண்மை. உங்களின் உத்தரவை வைத்துதான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக முடியும். என்னுடைய சுயநலத்தோடு வாக்கு கேட்கின்றேன். அதை தீர்மானித்து நல்லவர்கள் யாரோ அவர்களை தேர்ந்தெடுங்கள். அமெரிக்கா எனது நாடு. எனது நாட்டு மக்கள் யாரால் நல்லமுறையில் ஆள முடியுமோ அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும். அதில் நானோ? வேறு எவரோ? முடிவு எடுக்க வேண்டியது நீங்களே" என்றார். இந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தங்கள் விரிவானவை.

தேர்தல் திருவிழாவாக இருக்கலாம், அந்த திருவிழாவில் இந்துக்கள் தங்களுடைய மதச் சடங்குகளை செய்வார்கள். கிறித்துவர்கள் தேவாலயத்தில் ஜெபிப்பார்கள். இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுவார்கள். இறை மறுப்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். அதேப் போல திருவிழாவில் கொண்டாடங்கள் இருந்தாலும், இந்த கடமைகளை உளப்பூர்வமாக செய்வதுண்டு.  அதைப்போலவே தேர்தல்களிலும் பிரச்சாரங்களும், வேட்பாளர்களை சந்திப்பதும், மற்ற நிகழ்வுகளை கண்டுகளித்தல் ஒருபுறம் இருந்தாலும், உளப்பூர்வமாக நல்லவர்கள், தகுதியானவர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பதுதான் தேர்தல் திருவிழாவின் முக்கிய கடமையாகும். தகுதியே தடை என்ற நிலையை மீறி பொருத்தமான தரமானவர்களை தேர்ந்தெடுப்பதுதான் தேர்தலின் நோக்கமாகும். இதிலிருந்து இம்மியளவும் விலகாமல் கவனமாக செயல்படவேண்டும்.

பிரியாணி ஜனநாயகம் என்று மக்கள் விரும்பினால் என்ன செய்ய முடியும்?

என்ன நடக்கிறது? ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஜெயலலிதா பிரச்சாரத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயிலில் மக்களை அள்ளிச் சென்று ஆடுகள், மாடுகளை அடைத்தாற்போல், பிரச்சாரக் கூட்டங்களில் அடைத்துவிடுகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினரின் தடியடியும் நடக்கிறது. மூச்சு வாங்க வெளியே சென்றால் கூட அனுமதிப்பதில்லை. 200 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள் கூட்டத்திற்கு வந்தால். கடந்த ஏப்ரல் 11 ல் விருத்தாசலத்தில் இருவர், ஏப்ரல் 15 அருப்புக்கோட்டையில் ஒருவர், சேலத்தில் இருவர் கூட்டத்திற்கு வந்து தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்து மாண்டுவிட்டனர். கூட்டம் 4 மணி என்றால் 11 மணிக்கே வேகாத வெயிலில் குடிநீர் அருந்தவோ, இயற்கை உபாதைகளுக்கு வெளியே செல்லவோ பொட்டல் வெயிலில் அடைத்துவிடுகின்றனர். கிட்டத்தட்ட 5, 6 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காவல்துறையைச் சார்ந்தவர்களும் மயக்கமடைந்து விழுந்துவிடுகின்றனர். 108 டிகிரி வெயிலில் மக்களை மணிக் கணக்கில் அடைத்து வைப்பதுதான் ஜனநாயகமா?

மக்களின் வாக்குரிமை வீரியத்தை சாகடித்து, மக்களை நாடிப் பெறவேண்டிய வாக்குகள் காசுகளுக்கு விற்கப்பட்டால் அந்த வாக்குரிமைக்குப் புனிதம் எப்படி வரும்? பிரியாணி பொட்டலமும், தலைக்கு 200 ரூபாயும், ஆண்களுக்கு மதுவும் என்று கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கின்ற அரசியல் மனோபாவத்தை வேர் அறுக்க வேண்டாமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் களத்தில் சில இடங்களில் கரன்சி நோட்டுக் கட்டுக்களை கிடங்குகளில் போட்டு வைத்திருப்பது வெளிப்பட்டது. அரிசிக் கிடங்கு, சரக்குக் கிடங்கு போல் கரூர் அருகே ரூபாய்க் கிடங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிடங்கிக்காரர் சில முக்கியமான அஇஅதிமுக அமைச்சர்களின் பினாமி என்று ஏடுகள் வெளிப்படையாகவே எழுதிய போதிலும் மறுப்பவரும் இல்லை, அவதூறு வழக்குத் தொடுப்பாருமில்லை.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா தம் கட்சிக்காரர்களைப் பார்த்து “வோட்டுக்குப் பணம் கொடுக்காதீர்கள்” என்றோ மக்களைப் பார்த்து “வாக்குரிமையைக் காசுக்கு விற்காதீர்கள்” என்றோ பேசியதாகச் இதுவரை செய்தி இல்லை. ஆக கரன்சி நோட்டுகளை வாரியிறைத்துத் தேர்தலில் வென்று விட முடியும் என்பதுதான் ஆளுங்கட்சியின் திட்டம்.

முன்பு கட்சிக்காரர்களே கொடி கட்டுவார்கள், சுவரொட்டிகளை ஒட்டுவார்கள். இளைஞர்கள், மாணவர்கள் என்று தாங்கள் சேர்ந்த அரசியல் இயக்கங்களுக்கு உளப்பூர்வமாக பணியாற்றுவார்கள். இப்போது என்ன நடக்கிறது? கொடி கட்டுவது முதல், சுவரொட்டிகள் ஒட்டுவது வரை வணிக ரீதியாக காண்ட்ராக்ட் கொடுத்து வியாபாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அந்த வியாபாரியிடம் அனைத்துக் கட்சிக் கொடிகளும் உண்டு. யார் தங்களை நாடி பணம் கொடுக்கிறார்களோ, அந்தக் கட்சிக் கொடியை அந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டி விடுகிறார்கள். கூட்டங்களுக்கு ஆட்களை அனுப்பவும், சில தரகர்களும் இப்போது தலையெடுத்துவிட்டார்கள்.
சினிமா நடிகர்களும் தேர்தல் காலத்தில் சினிமாவில் நடிப்பது போல பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்திலும் பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கின்றது. இன்னும் சில காலத்தில் கோடம்பாக்கத்திலும் நடிகர்களை கட்சிகளுக்குப் பிடித்து தர சில முகவர்கள் வந்துவிடுவார்களோ என்ற நிலை உள்ளது.

பாசாங்கு, நடிப்பு என்று அரசியல் ஆனபோது எப்படி வாய்மை வெல்லும்? எப்படி டாக் ஷோக்களுக்கு எப்படி பார்வையாளர்களை பணம் கொடுத்து அமர்த்துகிறார்களோ, அது போல கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டி போலியான முகபாவனையோடு நடிப்பான கைதட்டலும் இப்போது நடக்கின்றன.  கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை வரவழைப்பது தவறல்ல என்று தேர்தல் ஆணையமும் மானங்கெட்டு சொல்லிவிட்டது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் 5 பேர் இறந்ததற்கு எந்த நோட்டீசும் இல்லை. கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடைய பணம் என்று தெரிந்தும் தெரியாதது போல காட்டிக் கொள்வது வேதனையிலும் வேதனை.

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பணப் புழக்கம் 60,000 கோடி ரூபாய் கூடுதலாகியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரே கூறியிருப்பது  இந்திய ஜனநாயகம் என்பது இழிவான பணநாயகமே என்பதற்குப் போதிய சான்று.

காவிரி, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, அழகர் அணை, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, ஒகேனக்கல், தென்பெண்ணை, பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு, கச்சத் தீவு, கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ, சேதுக் கால்வாய் திட்டம், விமான நிலையங்கள் விரிவாக்கம், கடலூர்-குளச்சல் துறைமுகங்கள், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மின் பற்றாக்குறை, கனிம வளக் கொள்ளை, விவசாயிகள் பிரச்சினை, தொழில் நெருக்கடி, விலை உயர்வு, கல்வி வணிகம், தமிழீழம், ஈழ அகதிகள் வாழ்வு, எழுவர் விடுதலை, இப்படி வரிசை கட்டி நிற்கும் தமிழ்நாட்டின் பல தீராச் சிக்கல்கள் ஒருபுறம்.

இன்றைக்கு உலக மயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, நம்முடைய முதுகெலும்பான விவசாயம் அழிப்பு என்ற நிலையில் வெற்றிபெற்று வருபவர்கள் செய்யவேண்டிய கடமைகளை மக்கள் வலியுறுத்தும் வகையில் மேலை நாடுகளில் உள்ளபடி மக்களாகவே தங்களின் கோரிக்கைகளை வெளியிடுவார்கள். நமது நாட்டில் மக்கள் இதுவரை இது குறித்து அறியவும் இல்லை. இனிமேலாவது இப்படியான மக்கள் சாசனங்கள் அரசியல் கட்சிகளை தேர்தல் காலத்தில் அறிவுறுத்தக்கூடிய வகையில் அறிக்கைகளாக கொண்டு வரவேண்டும். அதில் வலியுறுத்தவேண்டிய சிலப் பிரச்சினைகள் வருமாறு:

1) மரங்களை வெட்டுதல் கூடாது. அவற்றை தேசிய சொத்தாக அறிவிக்கவேண்டும். (மீறினால் 5 வருடம் கடுங்காவல்)

2) அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்டிப்பாக உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வேலை இழப்பு மற்றும் சொத்து பறிமுதல் செய்யப்படவேண்டும்.

3) டாஸ்மாக், சிகரெட், புகையிலை முழுவதுமாக தமிழ்நாட்டில் தடைசெய்யப்படவேண்டும். மீறினால் விற்பனை இடம் உடனடியாக ஜப்தி செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படவேண்டும்.

4) ஒருவருக்கு மேற்பட்டோர் ஒரு குடும்பத்தில் அரசு வேலையில் இருந்தால் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்படக்கூடாது. வருமான வரிச்சலுகைக்கு எந்த இன்சூரன்ஸ், இதர செலவுகள் காட்டமுடியாது. முழுவதுமாக கட்ட வேண்டும்.

5) நடனம், ஓவியம், கலை, இசை, விளையாட்டு போன்று 25 புதிய பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். மாணவர்களின் திறமை அறிந்து அதை முதன்மை பாடமாகவும், அதற்காக  சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படவேண்டும்.

6) அரசு தேர்வுகளுக்கு ஒரு பைசா கட்டணம் கட்ட தேவை இல்லை. கேட்கப்படும் கேள்விகள் துறை சார்ந்து மட்டுமே ஆழமாக கேட்கப்படவேண்டும். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்த பாடத்தை படிக்க வேண்டாம்.

7) போக்குவரத்து வருமானத்தை கருத்தில் கொண்டு பழைய பயணக்கட்டணம் கொண்டுவரப்பட்டு, தனியார் பேருந்துகள் முற்றிலும் தடைசெய்யப்படவேண்டும். அதே தனியார் பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் அரசு பேருந்துகளில் செய்யப்படவேண்டும்.

8) அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உருவாக்கப்பட்டு அதில் படித்தால் மட்டுமே சான்றிதழ் மதிப்பு பெரும். இல்லையேல் அறிவு வளர்ச்சிக்காக மட்டுமே தனியாரிடம் செல்லலாம்.

9) ஒவ்வொரு வீட்டின் முன் கட்டாயம் வேங்கை, புங்கை, ஆலமரம் கன்றுகள் இரு புறமும் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையேல் அந்த வீட்டின் மின்சாரம் நிரந்தரமாக துண்டிக்கப்படும்.

10) விற்பனை வணிக நிலையங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது, அந்த நிறுவனத்தின் பங்குகளை பிரித்து அரசுக்கு கொடுக்க வேண்டும்.

11) கிராமப்புற அரசு தொழில் தொடங்கப்பட்டு படிக்காத வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.

12) விவசாயிகளுக்கு தொழில் சார்ந்த பொருட்கள் வாங்க கடனை திருப்பி செலுத்தும் காலம் மட்டும் கட்டாயமாக்கப்படும். வட்டி முற்றிலும் கிடையாது.

13) நீர்வளத்தை பாதுகாத்து நதிநீர்களை இணைத்து, நிலத்தடி நீரை பெருக்க திட்டங்கள் உருவாக்கவேண்டும்.

14) இலவசங்கள் வேண்டவே வேண்டாம். கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு மட்டும் மானியங்களும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

இப்படியான பல கோரிக்கைகளோடு வாக்காளர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கையை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு வைக்க வேண்டும். நார்வே, சுவீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் நல அமைப்புகள் இவ்வாறான அறிக்கைகளோடு அனைத்துக் கட்சி வேட்பாளர்களை அழைத்து அரங்கக் கூட்டங்கள் நடத்துவது வாடிக்கை.

ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு சுரண்டும் உரிமைகளை பெறவும் அடிப்படை உரிமைகளை பறித்துக் கொள்ளவும் சமநீதியை மறுக்கவும்தான் என்ற நிலைப்பாடு இருந்தால் அது போலியான சுயநல ஜனநாயகம் அல்லவா?

உயர்ந்த நோக்கங்களோடு நெறி சார்ந்த உன்னதமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியலமைப்பு இயங்க வேண்டும். அப்படி செயல்படும் அரசு போற்றப்படும் என்று அரிஸ்டாட்டில் கூறினார். ஊழலின் ஊற்றுக்கண் அரசியல் என்ற நிலை இன்றைக்கு ஆகிவிட்டது. கால நடைமுறையில் ஊழலின் உற்பத்தி நிலையங்களாக பல உருவங்களாக உருமாறி நாளுக்கு நாள் விரிந்துகொண்டு வருகின்றன. அறிவார்ந்தவர்கள், சுயநலத்தை துறந்தவர்கள், நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள், தொண்டு ஊழியம் செய்பவர்கள் இப்போது அரிதாகிவிட்டனர்.  தியாகம், சேவை மனோபாவம், எளிமை, அடக்கம், சிறுமை கண்டு பொங்கி எழுதல் என்பதெல்லாம் பொதுவாழ்வில் தேவையில்லை என்று வெளிப்படையாக பேசப்படுகின்றது. அரசியல் அமைப்பில் ஏறி உள்ள அழுக்குகளை அகற்றி சுத்தப்படுத்த முடியாதவாறு புரையோடிவிட்டது. தூர்நாற்றம் வீசும் இந்த அமைப்பை எப்படி மாற்றப்போகிறோம் என்பதுதான் இன்றைக்கு முக்கிய வினா.  இன்றைக்கு எப்படியாவது ஒரு எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் இருந்தால்தான் மக்களும் மதிக்கின்றார்கள். நேர்மையாளர்களையும், களப்பணியாளர்களையும், நீங்கள் இந்தப் பதவியில் இல்லையா என்று பொதுமக்கள் கேட்கும்போது வேதனையாக இருக்கும்.  பதவியில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நேர்மையாளர்களா? என்று சிந்திக்காமல் அவர்களை சீராட்டுவதும், பாராட்டுவதும்தான் இந்த சமுதாயத்தில் உள்ளது. உண்மையாக சாதித்தவர்களைப் புறக்கணிப்பது, நீங்கள் எம்.பி. இல்லையா? எம்.எல்.ஏ. இல்லையா என்று கேட்பது நேர்மையாளர்களை சுரண்டிப் பார்த்து வேதனைப்படுத்துகின்ற செயலாகத்தான் உள்ளது.

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை...

இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. நேர்மையான அரசியலுக்கு யாராவது சிலுவையை சுமந்துதான் சமுதாயத்தை சுத்தப்படுத்தவேண்டும்.

வானுலகில் இருந்து பூமிப் பந்தில் மக்களை காப்பாற்றுவதற்காக கீழிறங்கி வந்த தேவர்கள், தேவதைகள் போன்று பாவனை காட்டும் போலி அரசியல் மாந்தர்களிடமிருந்து விடுதலைப் பெற ஒரு மௌனப் புரட்சி நிச்சயமாக எதிர்காலத்தில் எழும்.

No comments:

Post a Comment