Sunday, May 15, 2016

தமிழக தேர்தல் வரலாறு - சில குறிப்புகள்

"ஓட்டு போட்டு எதையாவது மாற்றிவிடலாம் என்பது உண்மையானால் அவர்கள் நம்மை அதற்கு அனுமதித்திருக்கவே மாட்டார்கள்"

- மார்க் ட்வெய்ன்

நாளை விடிந்தால் தேர்தல். நம்முடைய ஜனநாயக கடமையை சரிவர ஆற்றவேண்டிய நாள். ஓட்டுக்கு பணம் வாங்குவது வேசித்தனமான தொழிலுக்கு ஒப்பானது என்று சொல்வதற்கும் மனம் ஒப்பவில்லை. ஈனத்தனமாக நம்முடைய சுயமரியாதையை விற்று வாக்களிப்பதை தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி இதய சுத்தியோடு நமது கடமையை செய்வது நம் அனைவருக்கும் நல்லது.

"தினமணி தேர்தல் 2016" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தினமணியின் தேர்தல் மலருக்கு நான் எழுதியுள்ள தேர்தல் குறித்தான கட்டுரை வருமாறு:


தமிழக தேர்தல் வரலாறு - சில குறிப்புகள்

(தினமணி தேர்தல் மலர் 2016)

ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல். குடியாட்சியின் ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய மக்களாட்சியின் தத்துவம் கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரில் நேரடியாக மக்களே பங்கேற்ற நகர அரசுகள் கி.மு.500ல் துவங்கியது. இதுதான் குடியாட்சியின் தொட்டிலாகும். கிரேக்கத்தில் Demokratia (Greek: δημοκρατία) நேரடி ஜனநாயகம் என்ற முறையில் தொடங்கியது. இந்த நாற்றாங்கால் வலுவடைந்து இத்தாலியிலும், பின் பிரான்ஸ் என பரிணாம வளர்ச்சி அடைந்து நாடாளுமன்ற ஜனநாயகம் என்று பிரிட்டனில் கால் ஊன்றி அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சி என்ற முறையில் வடிவெடுத்தது.  இருப்பினும் மக்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களை ஆதியில் கண்டது தமிழ் கூறும் நல் உலகம் ஆகும்.  பரபரப்பான தேர்தல் களத்தில் பிரச்சார சத்தங்களும், சுவரொட்டிகளும், வாதங்களும், எதிர்வாதங்களும், வாக்குக்கு பணம் என்ற நிலையும் இன்றைக்கு உள்ளன. நம்முடைய பண்டைய காலத்து தேர்தலை பின்னோக்கி கவனித்தால் அப்போது நேர்மையாக நடந்துகொண்ட முறைகள் தேர்தல்களில் நமக்கு பாலபாடங்களாக அமைந்துள்ளன.

தமிழ் மண்ணில் 1200 ஆண்டுகளுக்கு முன் முடியாட்சி காலத்தில் மக்களாட்சியின் அடிப்படை கூறான தேர்தல் குடவோலை மூலமாக 9ம் நுற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை நடந்ததாக உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்கின்றன. கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட வீரநாராயண பராந்தகதேவ பரகேசரிவர்ம சோழமன்னர் என்ற முதலாம் பராந்தகன் காலத்திய கல்வெட்டுகள் உத்திரமேரூரில் உள்ளது. குடவோலை முறையைப் பற்றிய கல்வெட்டுக்கள் 12 வரிகளும், இரண்டாவது கல்வெட்டு 18 வரிகளும் தெளிவாக நெறிமுறைகளை சொல்லியுள்ளது.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ, சிவன்கோவில் கல்வெட்டுக்கள் இதை தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இருவிதமான அந்த கல்வெட்டுக்களில் முதல் கல்வெட்டு சுருக்கமாகவும், இரண்டாவது கல்வெட்டு சற்று விரிவாகவும் இதைப் பற்றி குறிப்பிடுகின்றது. உத்திரமேரூர் கல்வெட்டை விட 50 ஆண்டுகளுக்கு பழமையான தஞ்சை அருகே உள்ள செந்தலை என்ற சந்திரலேக சதுர்வேதிமங்கலத்தில் முதலாம் ஆதித்ய சோழன் கல்வெட்டுக்களில் தேர்தல் எப்படி நடத்தவேண்டும், அதன் முறைகள் "குடும்பு" என்ற வார்டு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக செய்திகள் அந்த கல்வெட்டில் உள்ளன.  மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறில் குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில் கல்வெட்டுக்கள் தேர்தல் நடைமுறைகள் பற்றியும் சொல்கின்றன. இப்போது இருப்பது போன்ற கிராம சபை போன்று அப்போது ஊர் சபைகள் இருந்தன. ஆயக்காட்டு வாரியம், விவசாய வாரியம், ஊர்ப் பாதுகாப்பு என்று பல துறைகளாக பிரிக்கப்பட்டு அதை பரிபாலனம் செய்ய தங்களுடைய பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டனர் என்று சொல்கின்றது.  சதுர்வேதிமங்கலத்திலும் இம்மாதிரி நடைமுறை அப்போது இருந்ததாகவும், ஆதாரங்கள் உள்ளன.

குடவோலை முறை என்பது கிராமத்தில் 30 குடும்புகள் அதாவது வார்டுகளாகப் பிரித்து தகுதியானவர்களை மக்கள் கூடி ஓலைச் சுவடிகளில் எழுதி குடம் ஒன்றில் போட்டு இறுதியாக அதிகமான ஆதரவு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கும் முறையாகும். அந்த ஓலையை யாதும் அறியாத சிறுவரையோ, சிறுமியையோ அழைத்து அந்த ஓலையை எடுக்கச் சொல்லவேண்டும். பின் நடுநிலையானவர் அந்த ஓலையில் உள்ள பெயரை வாசிப்பார். இவ்வாறு 30 ஓலைகளில் 30 பெயர்கள் எடுக்கப்பட்டு 12 பேர் சம்வத்தசாரா தலைவர்களாகவும், 12 பேர் தோட்டவாரியர் தலைவர்களாகவும், 6 பேர் ஏரி பாதுகாப்பு வாரிய தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேர்களில் வயதிலும் கல்வியிலும் மூத்தவர்கள் 12 பேர் மேலாட்சி செய்ய அதாவது சம்வத்தசாரா வாரிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முழு பரிபாலனம் செய்யக்கூடிய பொறுப்பு அவர்களிடம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரிவர செய்யவேண்டும். பொன் வாரியம் என்ற வாரியமும் அப்போது இருந்தது.  வரிகளுக்கு பதில் நெல் வசூலிக்கும் பணியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு. பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ளவும் தனியாக அமைப்பும் அப்போது இருந்தது. குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பணி காலம் ஓராண்டுதான். அந்தப் பதவி காலம் முடிந்தபின் அடுத்த தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் கிராமத்தில் முக்கிய பெரியவர்கள் இடைக்காலமாக அங்குள்ள நிர்வாகத்தை கவனித்துக்கொள்வார்கள். அதற்கு கிராம தர்ம கிருத்திய சபை என்று பெயர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு.

கல்வெட்டுக்களில் தேர்தலில் போட்டியிடும் தகுதிகள் என்னவென்று குறிப்பிடுகிறது என்றால்;

1. போட்டியிடுபவர்களுக்கு கால் வேலி நிலம் இருக்க வேண்டும்.
2. சொந்தமான வீடு அவசியம்.
3. வயது 35 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
4. கல்வி அவசியம். எழுத, படிக்க தெரிய வேண்டும். அதாவது சாஸ்திரம், வேதங்கள் அவசியம்.
5. வேதங்கள் கற்கவில்லையென்றால் ஒரு வேலி நிலம் வேண்டும்.
6. கட்டவேண்டிய வரியை சரியாக செலுத்தியிருக்க வேண்டும்.
7. உடல் ஆரோக்கியமும், மன வலிமையும் வேண்டும்.

இப்படியான தகுதிகள் அன்றைக்கு தேர்தலில் போட்டியிட வரையறுக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் நினைப்பவர்கள் எல்லாம் அக்காலத்தில் குடவோலை முறையில் போட்டியிட முடியாது.  வேட்பாளர்களை அந்த ஊர் பெரியவர்கள் இவர் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் வேட்பாளர் யார் என்று பட்யலில் எழுதுவார்கள்.

தகுதியற்றவர்கள் யார் என்றால்,

1. பதவியில் இருந்த காலத்தில் வரி கட்டாமல், கணக்கு காட்டாமல் தவறு செய்தவர்கள்.
2. குற்றம் விளைவித்தவர்கள். குறிப்பாக கழுதை மேல் ஏறாதவர்கள். ஏனெனில் அன்றைக்கு குற்றம் செய்தவர்களை கழுதை மேல் ஏற்றுவது உண்டு. அது மட்டுமல்ல. அவரது உற்றார் உறவினர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இப்படியான பழைய நிலை நாட்டு விடுதலைக்குப் பின் 1952ல் நடந்த முதல் தேர்தலில் அன்றைய தேர்தல் ஆணையர் சுகுமார்சென் உழைப்பிலும், பன்னாட்டு தேர்தல் முறைகளை அறிந்தும் இந்தியாவின் தேர்தலை வடிவமைத்தார். தமிழகத்தில் 15வது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். 1952ல் சென்னை ராஜதானி என்று ஆந்திராவின் கடற்கரை ராயல்சீமா, கேரளாவின் மலபார், கர்நாடகாவின் பெல்லாரி, தெற்கு கன்னடா உடுப்பி வரை விரிந்து இருந்தது. அப்போது 1952 ஜனவரி 2 முதல் 25 வரை 9 கட்டங்களாக சென்னை ராஜதானியின் தேர்தல் நடந்து 1952 மார்ச் 1ம் தேதி முதல் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.  மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375.  இதில் இரட்டை உறுப்பினர் முறையும் இருந்தது. இந்த முறை 1961ல் நீக்கப்பட்டது. 375 தொகுதிகளில் 309 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 62ம் மலைவாழ் மக்களுக்காக 4ம் நடைமுறையில் இருந்தன.  1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் மட்டும் இரட்டை உறுப்பினர் தொகுதியாகும்.  காங்கிரஸ், டி பிரகாசத்தின்

கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாகாண முஸ்லீம் கட்சி, நீதிக்கட்சி, முத்துராமலிங்கத்தேவர் தலைமையிலான பார்வர்டு பிளாக், அம்பேத்கர் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு ஆகியவை சென்னை ராஜதானியில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் களத்தில் இறங்கின. கோஷ்டிப்பூசலில் சாதனை படைத்து வரும் காங்கிரசில் அன்றைக்கு நான்கு கோஷ்டிகள் இருந்தன. டி. பிரகாசம் தலைமையில் தெலுங்க பேசுவோர் ஒரு கோஷ்டியாக செயல்பட்டனர். இவர்கள் தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இருந்து விலகி கிருபளானி நிறுவிய கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியில் இணைந்து தனியாக போட்டியிட்டனர். தனி ஆந்திரா என்பது இவர்கள் கோஷமாக இருந்தது. காமராஜர் கோஷ்டி, ராஜாஜி கோஷ்டி மற்றும் பட்டாபி சீதாராமையா, காலவெங்கடராவ், பெசவாடா கோபால ரெட்டி பிரிவினர் என நான்கு கோஷ்டிகள் செயல்பட்டன.

கம்யூனிஸ்டுகள் இயக்கம் தடைசெய்யப்பட்டு சதி வழக்குகள் அவர்கள் மீது புனையப்பட்டு சிறையில் இருந்த பி. ராமமூர்த்தி தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் சிறையிலிருந்தே வெற்றி பெற்றது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தி.மு.க. 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை. அப்போது கம்யூனிஸ்டுகளை தேர்தலில் ஆதரித்தது உண்டு.  திராவிட நாடு கொள்கையை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலையில் காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி என சில சுயேட்சைகளையும் தி.மு.க. ஆதரிக்கும் என்று அண்ணா அறிவித்தார். இப்போதைய தமிழ்நாட்டில் 190, ஆந்திராவில் 143, கர்நாடகாவில் 11, கேரளாவில் 29 தொகுதிகள் உள்ளடங்கியதுதான் அன்றைக்கு சென்னை ராஜதானி. அப்போது 58 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. காங்கிரஸ் 152 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 96, கர்நாடகாவில் 9, ஆந்திராவில் 43, கேரளாவில் 4 தொகுதிகளில் வெற்றி கிட்டியது. ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி 62, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19, கிரிஷ்கார் லோக் கட்சி 15, பொதுவுடைமைக்கட்சி 13, காமன் வீல் 6, சென்னை மாகாண முஸ்லீம் லீக் 5, பார்வர்ட் பிளாக் 3, தாழ்த்தப்பட்டோர் பட்டியல் கூட்டமைப்பு 2, நீதிக்கட்சி 1, சுயேச்சைகள் 62 ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிட்டாத நிலையில் மற்ற கட்சிகளில் இருந்து 166 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி டி. பிரகாசம் தலைமையில் ஆளுநர் ஸ்ரீ பிரகாசை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஏனெனில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைவதை அன்றைய மத்திய அரசு விரும்பவில்லை. அரசியலில் இருந்து விலகிய ராஜாஜியை அழைத்து முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கோரியது. இதற்கு ஆதரவாக டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், கோயங்கா போன்றவர்கள் ஆதரவாக இருந்தனர். சட்டமன்ற உறுப்பினரல்லாத ராஜாஜியை மேலவை உறுப்பினராக்கி 14.4.1952ல் முதல்வர் பொறுப்பை ஏற்றார். ராஜாஜி பதவியேற்ற இரு மாதங்களிலேயே மாணிக்கவேல் நாயக்கருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து காமன்வீல் கட்சியை பிளவுபட செய்தார். ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சியும் தனக்கு ஆதரவை தெரிவிக்கும்படி செய்துகொண்டார்.  கிரிஷ்கார் லோக் கட்சி பிளவுண்டு 4 உறுப்பினர்கள் காங்கிரஸில் சேர்ந்தார்கள். பல சுயேட்சைகள், 5 முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டமன்றத்தில் ராஜாஜி அவர்கள் 3.7.1952 அன்று 200 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார்.  பி. ராமமூர்த்தி எதிர்கட்சித் தலைவரானார்.

இந்நிலையில் ராஜாஜி மேலவை உறுப்பினராக இருந்துகொண்டு முதல்வராக இருப்பது செல்லாது என்று பி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடுத்தார்.  தலைமை நீதிபதி ராஜமன்னாரும், வெங்கட்ராம ஐய்யரும் அடங்கிய அமர்வு இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநருடைய திருப்திதான் பிரதானம் என்று ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.

இப்படியான தமிழக தேர்தல்களில் பண்டை கால வரலாறும், விடுதலைக்குப் பின் நடந்த முதல் தேர்தலும் ஆகும். அப்போது சின்னங்கள் கிடையாது. வர்ணப் பெட்டியில் வாக்களிக்க வேண்டும். பின்னால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, 145 உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு திரும்பினர். நீதிபதி கிருஷ்ணய்யர் அப்போது சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர்.  தமிழ்நாட்டுக்கு அப்போது 230 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 234 உறுப்பினர்களாக உயர்ந்தது. இதையெல்லாம் அரசியலில் மலரும் நினைவுகளாக இன்றைக்கும் உள்ளன.

இன்றைய நிலையில் அரசியலில் ஜாதி, மதம், பணம், குண்டர்கள், ஏவலாளர்கள் என தேர்தல் நடப்பதையும் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் குறிப்பிட்டவாறு தேர்தல் நடைபெற்ற முறைகளை கவனித்தால் ஒரு பக்கம் பிரமிப்பு, ஒரு பக்கம் ஏமாற்றம், வேதனை, ஆத்திரம், ரௌத்திரம் என சொல்லிக்கொண்டே போகலாம்.


No comments:

Post a Comment