ஏசுவின் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதுதான் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் பேராலயம், இரண்டாவது ஸ்பெயினின் புனித யாகப்பர் பேராலயம். மூன்றாவது சாந்தோம் பேராலயம். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால், 2006ஆம் ஆண்டு இது தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டது.
போர்த்துகீசியர்களைப் போலவே ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்த பகுதியில் வலம் வந்தவர்கள் ஆர்மீனியர்கள். இவர்களை இன்றும் நினைவுபடுத்தியபடியே நீண்டு கிடப்பதுதான் பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மீனியன் வீதி. இங்குள்ள பழமையான தேவாலயத்திற்குள் நுழைந்தால், திடீரென கால எந்திரத்தில் ஏறி 3 நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டதைப் போல இருக்கிறது.
16ஆம் நூற்றாண்டில் கல்கத்தா வந்த ஆர்மீனியர்கள் சென்னைக்கும் வரத் துவங்கினார்கள். அப்படியே மெல்ல மெல்ல பதினேழாம் நூற்றாண்டில் #சென்னையின் புகழ்பெற்ற வணிகர்களாக மாறிவிட்டனர். மதத்தில் அதிக பற்றுள்ள அவர்கள் பிராட்வே பகுதியில் புனிதமேரி தேவாலயத்தை எழுப்பினர். 1772ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் உள்ளே சென்னையில் வாழ்ந்து இறந்துபோன சுமார் 350 ஆர்மீனியர்களின் சமாதிகள் இருக்கின்றன. அந்த சமாதிக் கற்களில் ஆர்மீனிய மொழியில் அவர்களை பற்றிய விபரங்கள் விரிவாகவே எழுதப்பட்டிருக்கின்றன.
ஆர்மீனியர்கள் மெட்ராசில் தங்களின் முதல் தேவாலயத்தை 1712ல் எஸ்பிளனேட் பகுதியில்தான் கட்டினார்கள். புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் உயரமான கட்டடங்கள் இருப்பதை அப்போதைய ஆங்கிலேய அதிகாரிகள் விரும்பாததால், அந்த தேவாலயம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1746ல் பிரெஞ்சுப் படைகள் மெட்ராஸை கைப்பற்றியபோது, அந்த தேவாலயம் இடிக்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு சொல்கிறது. இதனால் பிராட்வே பகுதியில் ஆகா ஷமீர் என்ற ஆர்மீனியர் தனது மனைவியை புதைத்திருந்த கல்லறைத் தோட்டத்தில், இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் புனித மேரி தேவாலயம்.-#madrastochennai
No comments:
Post a Comment