Wednesday, January 18, 2023

#தமிழ்நாடுஅமைந்தது... #1950களில் #எல்லைப்போராட்டம்... #9பேரை காவுகொண்ட….. தியாகிகள்!(2)

#தமிழ்நாடுஅமைந்தது... #1950களில் #எல்லைப்போராட்டம்... #9பேரை காவுகொண்ட….. தியாகிகள்!(2)
————————————
   அ.முத்துக்கிருஷ்ணன்Muthukrishnan எழுதிய ‘#போராட்டங்களின்_கதை’   என்ற Vikatan PublicationsVikatan Prasuram நூலைப் பற்றி நேற்று பதிவிட்டிருந்தேன். அதில் சி.நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகளின் போராட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், தமிழக விவசாயிகள் இன்றைக்கு இலவச மின்சாரம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு நாராயணசாமி நாயுடு அவர்கள் நடத்திய போராட்டங்கள்தாம்  காரணம் என்றும் சொல்லியிருந்தேன். 
 நாராயணசாமி நாயுடு தலைமையில் வீரியமாக விவசாய சங்கம் போராட்டம் நடத்தியபோது, அன்றைய ஸ்தாபன காங்கிரஸ், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தாங்கள் நடத்தும் விவசாயிகள் சங்கம் மட்டும்தான் விவசாயிகள் பிரச்னைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைத்ததால் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்  பிரிவு இந்தப் போராட்டத்தை ஆதரித்து உண்டு. பசுவந்தனை குருசாமித் தேவர் இந்த இயக்கத்தின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் நாராயணசாமி நாயுடுவுக்கு வரவேற்புக் கொடுத்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்  பிரிவில் இருந்த டி.எஸ்.எஸ்.மணி  இதற்கு சாட்சி. 




1984 - இல் நடந்த கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சோ.அழகர்சாமிக்கு ஆதரவாக நாராயணசாமி நாயுடு பிரச்சாரம் செய்ததும்,  பிரச்சாரம் பின் உடல்நலம் சரியில்லாமல் போய் அதற்குப் பிறகு இரவில் அவர் கோவில்பட்டி பயணிகள் விடுதியில் என் கண் முன் மரணமடைந்ததெல்லாம் அன்றைய காலத்தின் நிகழ்வுகள்.
  
விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பல போராட்டங்கள் இந்த நூலில் இடம் பெறவில்லை என்பது வருத்தமான செய்தி.

அதேபோன்று இன்றைய எல்லைகளாக உள்ள தமிழ்நாடு 1956 நவம்பர் 1 ஆம் தேதி அமைந்தது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தில் எல்லைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. குமரி மாவட்டம் புதுக்கடையில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 9 தியாகிகள் மறைவில் அமைந்ததுதான் இந்த மாநிலம். தெற்கெல்லைப் போராட்டங்கள் பி.எஸ் மணி-ஏ.நேசமணி தலைமையிலும் வடக்கெல்லை போராட்டங்கள் ம.பொ.சி. தலைமையிலும் நடந்தன. வடக்கெல்லைப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கவில்லை என்றால்,  திருத்தணி நமக்குக் கிடைத்திருக்காது. ‘மெட்ராஸ் மனதே’   என்று ஆந்திரர்கள் போராட்டம் நடத்தி சென்னையையும் கைப்பற்றியிருப்பார்கள். 
 
அதேபோன்று தமிழகத்தின் தெற்குப் பகுதியில் குமரி மாவட்ட இணைப்பு- எல்லைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கவில்லை என்றால், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்காது. 

இன்றைய செங்கோட்டை அன்றைய நெல்லை மாவட்டத்தில் இணைந்ததற்கு சட்டநாத கரையாளர் போராட்டம் நடத்தியது, அப்போது  அவர் கைது செய்யப்பட்டது என அவரைப் போன்ற  பலருடைய சர்வபரி தியாகங்களும் காரணமாகும். அவர்கள் போராடியிருக்கவில்லை என்றால்,  இந்தப் பகுதிகளை எல்லாம் நாம் இழந்திருப்போம்.
 
இந்த எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு பல தியாகங்களைச் செய்த ம.பொ.சி., நேசமணி, பி.எஸ்.மணி, சாம் நதானியெல், குஞ்சன் நாடார், ரஸாத் ஆகியோரை மறந்துவிட்டு தமிழக வரலாற்றை எழுத முடியாது. 

இன்றைய தமிழகம் அமைந்த 25  ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கலைவாணர் அரங்கில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நெடுமாறன் தலைமையில்  இயங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தி.சு.கிள்ளிவளவனும் நானும் கலந்து கொண்டோம். நெடுமாறன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நான் எடுத்த தமிழ்நாடு 50 - ஆம் ஆண்டு விழாவில்( 1-11-2006) பழ.நெடுமாறன், இரா.நல்லகண்ணு, இரா.செழியன், வைகோ, நீதிபதி ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். எல்லைப் போராட்டம் குறித்தான எனது வரலாற்று தொகுப்பு நூலும் அப்போது வெளியிடப்பட்டது.
‘போராட்டங்களின் கதை’   நூலாசிரியருக்கு தமிழகத்தில் நடந்த இந்த எல்லைப் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1935 - இல் சாத்தான்குளத்திலும் தூத்துக்குடியிலும் தொடக்கத்தில் நட
ந்தது. 1965 - இல் நடந்த இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தை  தமிழக மாணவர்கள்  முன்னெடுத்தபோது, அன்றைக்கு அண்ணா தலைமையில் இருந்த திமுக அக்கறையோடு, ஆதரவோடு அதைக் கவனித்தது. கலைஞர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மாணவர் தலைவராக இருந்த பெ.சீனிவாசன் இந்தப் போராட்டத்தை அகில இந்திய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார்.  திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் மாணவர்களைச் சந்தித்து இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டினார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த மேற்கு வங்கத்துக்குச் சென்று கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடம்  போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான பயணத்தை அவர் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில், அன்றைக்கு எல்.கணேசன் போராட்டம் நிறுத்தப்பட்டதாக  அறிக்கைவிட்டதாக செய்திகள் உண்டு. இதுகுறித்து ஷியாம் நடத்திய தராசு இதழில் பெ.சீனிவாசன் எழதிய தொடர் கட்டுரையில் குறிப்பிட்டதும் உண்டு.
 
இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த இந்த செய்திகள் எல்லாம் இந்த போராட்டங்களின் கதை  நூலில் இடம் பெறவில்லை.
 அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம், பெர்லின் சுவருக்கான போராட்டம், சீன மாணவர்கள் தியானென்மென் சதுக்கத்தில் நடத்திய போராட்டம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் எழுதத் தெரிந்த நூலாசிரியருக்கு,  அவர் வாழும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க இந்த போராட்டங்கள் கண்ணில் படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
 
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்புப் போராட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் எனத் தொடங்கி காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்க எதிர்ப்பு போராட்டங்கள் வரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில்  நடத்தப்படும் போராட்டங்கள் எண்ணற்றவை. சரிதான்….

  1988 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கூடங்குளம் அணுமின்நிலைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று அடியேன், நெல்லை மாவட்ட திமுக செயலாளர் டிஏகே.லக்குமணன், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்,  நாகார்ஜூனா போன்ற பலர் முன்னெடுத்த  விடயங்கள் எல்லாம் உண்டு. 1987 இறுதி -88 காலகட்டங்களில் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கையும், பின்பு 2010 இன் இறுதியிலும் இன்னொரு பொது நல வழக்கையும் அதற்காக நான் தொடுத்திருந்தேன்
 
1988 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம், 2012 - இல் மிகவும் தீவிரமடைந்தது. கூடங்குளத்தில் படைகளைக் குவித்து மக்களுக்குப் பீதியூட்டும் வேலையை மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டன.
 
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடிந்தகரையில் இருந்த சுப.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் பெரும் மக்கள் திரளுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.  ஆனால் அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் பற்றி இந்த நூலில் ஒரு வரி கூட இல்லை!     
 
அமெரிக்காவின் இனவெறி, கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறை, இந்தியாவில் சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றை குறித்துப் பேசும் கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘இடிந்தகரை போராட்டம்: தலைகுனிந்த அணு உலைகள்’ என்று உள்ளது. வாசகர்களை முட்டாள்கள் என்று நூலாசிரியர் நினைக்கிறாரா என்று தெரியவில்லை.  
 போராட்டங்களின் வரலாற்றை எழுதும்போது, குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த போராட்டங்கள் எவையும் விட்டுப் போகாமல் எழுத வேண்டும். அந்தப் போராட்டங்களினால் கிடைத்த நற்பயன்களையே இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். போராட்டங்களில் ஈடுபட்டு தியாகம் செய்தவர்கள், போராட்டங்களின் களப்பணிகளுக்காக தங்களுடைய வாழ்க்கையில் பலவற்றை இழந்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவுமில்லாமல் எழுதப்படும் இத்தகைய வரலாறுகள், உண்மையான வரலாறாக ஒருபோதும் இருக்க முடியாது. நூலாசிரியரின் மனவிருப்பம் சார்ந்த தகவல்களின் தொகுப்பாகவே இருக்க முடியும். வரலாறு என்பது உண்மையின் நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே இருக்க வேண்டும். அதுதான் உண்மையான வரலாறு. அப்படியில்லாமல் எழுதப்படுகிறவை வெறும் கதைகளாகவே இருக்க முடியும். போராட்டங்களின் ‘கதை’ என்ற இந்த நூலின் தலைப்பும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
18-1-2023.

மீள்……

#அன்றைய_மெட்ராஸ்_ராஜதானி, #சென்னை_ராஜதானி, 
#பின்_சென்னை_மாகாணம்_என்றும்;  #இன்றைய_தமிழ்நாடு_66*
——————————————————-
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளை யொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத் தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையா மல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத் தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ண மூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார்.
ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒருமணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத் தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப் பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றிய தாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப் பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு 6 மாத சிறைத்தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 

ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகிய வற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியா குமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமை யில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்த பொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களு டைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச் சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறை வேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. 

இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினை யிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 

1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.

கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. 

இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன.

காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

விதியே விதியே என் தமிழச் சாதியை
என்செயக் கருதியிருக்கின் றாயடா?
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் 
பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவயிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்தில…

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
என்று ஒரு நூற்றாண்டுக்க முன்னர் மகாகவி பாரதி பாடியது இன்றும் சரியாகவே இருக்கிறது!
****
தமிழ்நாடே வாழ்க- 
எம்தாய்நா டே வாழ்க.
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய.
தாய்நாடே வாழ்க!
இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுக்க
தமிழ்நாடே வாழ்க!
குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்!
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
தமிழ்நாடே வாழ்க!
-பாவேந்தர் பாரதிதாசன்-

                        (2)
(தமிழகம் இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிறது).தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 66 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
‘தமிழகம் 50’ விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்பட வில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 66 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.1. ஏ. தேவசகாயம், மங்காடு,2. தி. செல்லையா, கீழ்க்குளம்,3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்க முடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து  66 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
1-11-2022.
9.30 -காலை.


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...