Thursday, September 4, 2014

குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்த பிரச்சினை

குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன்
இணைந்த பிரச்சினை குறித்த வரலாற்று விவாதம்

----------------------------------------------------------------------------
கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டம் குறித்து, மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் பேசிய பேச்சுக்கு தற்போது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து எனது ‘தமிழ்நாடு 50’ நூலில் பதிவு செய்துள்ள குமரி மாவட்ட மீட்புப் போராட்ட வரலாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
------------------------------------------------------------------------------------------
தெற்கு எல்லை (குமரி)
மீட்புப் போராட்டம்


இந்திய விடுதலைக்கு முன்பு திருவிதாங்கூர் அரசும், மலையாள ஆதிக்க வெறியர்களும் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வந்த கொடிய ஆட்சியில் தமிழர்களை முற்றிலும் புறக்கணித்தனர். தமிழ்க் கல்வியும் மறுக்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் மலையாளிகள் குடியேறுவதை அரசே ஊக்குவித்தது. இதனால் தமிழர்களிடையே அச்ச உணர்வும், தமிழ்த் தாயகம் பெறவேண்டும் என்ற உணர்வும் உருவானது.
மலையாளப் பிரதேச காங்கிரஸ், மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவாகச் செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி ‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும்’ என்று தீர்மானம் செய்தனர்.
இதை பி.எஸ். மணி கடுமையாக எதிர்த்தார். “நாஞ்சில் நாட்டையும் சேர்த்து கேரள மாநிலம் அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். திருவாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடுதான் இணைக்கப்பட வேண்டும்” என்று அவர் குரல் கொடுத்தார்.
இருப்பினும், மாநிலப் பிரிவினையின்போது, தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது. ஆனால், நாஞ்சில் நாட்டு மக்கள் தாய்த் தமிழகத்துடன் சேரவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, போராட்டங்களை நடத்தினர்.

நாஞ்சில் மண்ணில் தமிழர் இயக்கங்கள்
சுந்தரம் பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ நாடகமும், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் கவிதைகளும், ஆராய்ச்சி அறிஞர் கே.என்.சிவராஜா பிள்ளை எழுதிய ‘வஞ்சி கேசரி’ இதழ் மூலமும், பி. சிதம்பரம் பிள்ளை ‘தமிழன்’ என்ற பத்திரிகை மூலமும் நாஞ்சில் நாட்டு மக்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டினார்கள்.

நெய்யூர் காஞ்சான்குழி எம். குஞ்சன் நாடார் 1923இல் திருவிதாங்கூர் மக்களின் துயர் கண்டு ‘தமிழர் விடுதலைக் காங்கிரஸ்’ என்னும் இயக்கத்தைத் துவக்கி, மலையாளிகளையும் எதிர்த்தார். எம். சுப்பிரமணிய நாடார், ஏ. பொன்னம்பல நாடார், கல்லங்குழி பாக்கியநாதன், பரமானந்தம், கருத்துடையான், மாசான முத்து, தாளக்காவிளை செறியான், சிவஞானம், குளச்சல் பண்டாரவிளை நாராயணன் நாடார் போன்றோர் இவ்வியக்கத்தை நடத்தினர்.

1935இல் அப்பாவு ஆசான் தலைமையில், காளிக்காவிளையைத் தலைமையகமாகக் கொண்ட ‘தமிழர் கட்சி’ துவக்கப்பட்டது.
1938ஆம் ஆண்டு அக்டோபரில் இராஜாக்கமங்கலத்தில் நடந்த கூட்டத்தில், தமிழர்களுக்கெனத் தனி மாவட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அவருடைய பேச்சு எடுபடாததால், ‘நாஞ்சில் தமிழர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழ் அறிஞரான பி. சிதம்பரம் பிள்ளை அறிவுரையின் பேரில், “அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்” என மாற்றப்பட்டது. 14.12.1945இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் அலுவலகம், நாகர்கோவிலில் பி.எஸ். மணியின் பனிமலர் நிலையத்தில்தான் செயல்பட்டது. இந்த அமைப்பு 1946ஆம் ஆண்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு முதல் தலைவராக எஸ். நத்தானியல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கேரளத்தில் காங்கிரஸ் தலைவர் கோளப்பன், பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றனர். டில்லியில் பிரதமர் நேருவின் சகா வி.கே. கிருஷ்ணன் மேனன், வெளி உறவுத் துறைச் செயலாளராக இருந்த கே.பி.எஸ். மேனன், உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி. மேனன், துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன் மற்றும் டில்லியில் மலையாள அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் கேரள மாநிலத்தை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் தீவிரமாக பணிபுரிந்தனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர்கள் ஒன்றுபட்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற அமைப்பின் கீழ் மொழி உணர்வுடன் போராடினார்கள். 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பணியால் அரசியல் கட்சிகள் திசைமாறி எல்லைப் பகுதிகளை மீட்க வேண்டும் என்கிற உணர்வு மங்கிப் போனது.





24.1.1946இல் நத்தானியல் தலைமையில் இரா. வேலாயுதம் பெருமாள், பி.எஸ். மணி, வி. தாஸ் ஆகியோர் கொண்ட தூதுக்குழு சென்னைக்குச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான காமராஜர், எம். பக்தவத்சலம், தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், துணை ஆசிரியர் ஏ.என். சிவராமன், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.கே.எஸ். சகோதரர்கள் ஆகியோரைச் சந்தித்து திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் நத்தானியல் தலைமையில் ஒரு தூதுக்குழு சென்னை சென்று தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரையும் சந்தித்தது.
தியாகி பி.எஸ். மணியின் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். எம். நத்தானியல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை உருப்பெற்று, வலு அடைந்தது. பி.எஸ். மணி, அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்குச் சென்று, குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். மணியின் கோரிக்கையை பலர் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரைத் தவிர்த்தபொழுதும் கூட அதற்காகச் சற்றும் கவலைப்படாமல் அவர் தொடர்ந்து போராடினார். மணிக்கு, ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவும் கிடைக்கப் பெற்றது.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லைச் சிக்கலில், சிமோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை ‘தினமணி’ கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு , அதேபோல் ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரசத் திட்டத்திற்கும் தயார் இல்லை என்றும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்டத் தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று பதினாறு தமிழர்கள் போலிஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.

நேசமணி கைது
1954ஆம் ஆண்டில் தேவிகுளம் - பீர்மேடு பகுதியில் திட்டமிட்டு வெளியேற்றும் நிலைமையை ஆராய நேசமணி தலைமையில் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்தும் குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடந்தன. குஞ்சன் நாடார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சிறைப்பட்டனர். கேரள அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. இந்தப் போராட்டத்தின்போது 8.8.1954 அன்று நாகர்கோவில் செங்கோட்டை நீதிமன்றங்களின் முன்பாக தி.மு.க. தொண்டர்கள் அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
குமரி பகுதிகளில் 11.8.1954 அன்று தமிழர் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று தமிழர் பகுதிகளில் முழு கடை அடைப்பு நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசு அலுவலங்களின் முன்னால் மறியல் போராட்டம் தொடர்ந்தது. புதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, கலைந்து ஓடிய மக்களை வழிமறித்துக் காவல் துறையினர் வெறிகொண்டு தாக்கினர். போராட்டத் தளபதியான குஞ்சன் நாடார் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். அதனாலேயே அவர் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் மீறி, ‘திரும்பி வந்தால் மகன்’ என்று பச்சை இரத்தத்தால் எழுதி வைத்துவிட்டு, இரண்டு மாத காலம் வீட்டை விட்டுத் தலைமறைவாக இருந்த குமரி மாவட்ட இளைஞர்களும், மாணவர்களும் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும், போராட்டத் தளபதிகள் போலிஸாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த பி.எஸ். மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலிஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டடங்கள் நடத்திய கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழ்ப் பகுதிகளைத் திரும்பவும் தமிழகத்தில் சேர்க்க அனைத்துக் கட்சி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. முதல் நாள் ஜீவா கைது செய்யப்பட்டார். சென்னையில் காவல் துறை கண்ணீர் புகை வீச்சு, கல் வீச்சு என்று பதட்ட நிலையில் சென்னைக் கடற்கரைக்கு மக்கள் பேரணி சென்றதும் பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். அண்ணா கலந்து கொண்டார்.
இன்றைய தமிழக - கேரள சிக்கல்கள்
தமிழ்நாட்டுக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. தொலைவு ஆகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரை தாலுக்கா, கொல்லங்கோடு வரையிலும் இந்த எல்லை உள்ளது.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் உருவாகி 40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட சாலைகள் இன்னமும் முடிவு ஆகவில்லை என்பது உண்மை ஆகும்.

இரு மாநில அதிகாரிகளும் எல்லையைக் கூட்டாக சர்வே செய்து வரையறுக்கவில்லை. இதுவரையிலும் 203 கிலோ மீட்டர் தொலைவு எல்லையைத் தான் நிர்ணயித்து இருக்கிறார்கள். மீதமுள்ள 627 கிலோ மீட்டர் தொலைவு எல்லை இன்னும் நிர்ணயம் செய்யவில்லை. இதற்குக் கேரள அரசின் ஒத்துழையாமை நிலைதான் காரணம் ஆகும். அப்படி வரையறை செய்யப்படாமல் இருக்கிற இடங்கள் பெரும்பாலும் மலைப் பகுதியாக இருப்பதால், கேரளா ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பின் மூலம் தமிழகத்தின் பகுதியை விழுங்கிக் கொண்டு வருகிறது.

கண்ணகி கோட்டம்
இதற்கு எடுத்துக்காட்டு, சேரன் செங்குட்டுவனால் அமைக்கப்பட்ட ‘மங்கலாதேவி கோவில்’ என வழங்கப்படும் ‘கண்ணகி கோட்டம்’ பிரச்சினை ஆகும். அந்தக் கோவில் நம் தமிழக எல்லையில்தான் இருக்கிறது. ஆனால், அது தனது எல்லைக்குள் இருப்பதாகக் கூறிக் கொண்டு கேரள அரசு தமிழர்கள் அங்கு வழிபடச் செல்வதைக் கூட தடுத்துக் கெடுபிடி செய்கிறது.

மதுரை மாவட்டம், உத்தமபாளையம் தாலுக்காவில் உள்ள வண்ணாத்திப்பாறை காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இதற்குள்தான் கண்ணகி கோவில் உள்ளது. இதைக் கேரள அரசு ஆக்கிரமித்து உள்ளது. கண்ணகி கோவில் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறித் தாக்கப்படுகின்றனர். இதைப்போல இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லை நெடுகிலும் மலையாளிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புகுந்து ஆக்கிரமித்து உள்ளனர். இன்னமும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். எனவேதான், எல்லையைக் கூட்டு சர்வே செய்து நிர்ணயிக்க முன்வராமல் கேரள அரசு வேண்டுமென்றே இந்த வேலையைக் கிடப்பில் போட்டு இருக்கிறது.
கேரளாவின் இரு சமஸ்தானங்களாகிய திருவாங்கூரும், கொச்சியும் 1949 ஜூலை 1ஆம் தேதி ஒன்றாக இணைந்து ஐக்கிய கேரளத்திற்காக சென்னை மாகாணத்தில் இருந்து மலபார் மற்றும் அதனுடன் இருந்த தமிழ்ப் பகுதிகளையும் சேர்த்து இணைக்கப்பட்டு, 1956 நவம்பர் முதல் தேதி இன்றைய கேரளா உருவானது.

அது திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியமாக இருந்தபோது அதன் தமிழ்ப் பகுதிகள் 2,000 சதுர மைல்கள் என வரையறுத்து, அவற்றைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று, திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டமே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய மாகாணக் கமிட்டிகள் மொழிவழியாகத் திருத்தி அமைக்கப்பட்டு, சென்னை மாகாண காங்கிரஸ் ‘தமிழ்நாடு காங்கிரஸ்’ என்றும், ‘ஆந்திரப் பிரதேச காங்கிரஸ்’. ‘கருநாடகப் பிரதேச காங்கிரஸ்’. ‘கேரளப் பிரதேச காங்கிரஸ்’ என்றெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டபோது, திருவாங்கூர் - கொச்சிப் பகுதியில் இருந்த தமிழ்க் காங்கிரஸ்காரர்கள் தங்களைத் தமிழ்நாடு காங்கிரசில் சேர்த்துக் கொள்ளக் கோரி, அது மறுக்கப்பட்டதால், அவர்கள் ‘திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற பெயரால் தனிக் கட்சியாகவே இயங்கி வந்தனர். அவர்கள் நடத்திய போராட்டத்தால் தான் கன்னியாகுமரி மாவட்டம் நமக்குக் கிடைத்தது.

நம்மிடம் இருந்த மலபார் மாவட்டத்தையும், காசர்கோடு வட்டத்தையும் அப்படியே கேரளாவுக்குக் கொடுத்தும்கூட, அந்த 2,000 சதுர மைல் பரப்பளவு உள்ள தமிழ்ப் பகுதியை தமிழகத்திற்குப் பெற அன்றைக்கு இருந்த தமிழக ஆட்சியாளர்கள் முயலவில்லை.
சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணைக்கட்டுப் பகுதி உள்பட மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய்கள் இங்குதான் உள்ளன.

எனவே, மத்திய அரசுடன் பேசி தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே இன்று வரையிலும் வரையறுக்கப்படாமல் உள்ள 60 விழுக்காடு எல்லையை வரையறை செய்ய தமிழக அரசு உடனடியாக முயற்சிகள் மேற்கொண்டு தமிழக எல்லையை மீட்க வேண்டும்.
1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் - பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளத்தில் முறைகேடாக சேர்த்துவிட்டனர். இதுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு வித்திட்டது.

நம்மிடம் அரிசி, மின்சாரம், உப்பு போன்ற பல அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்கும் கேரளா, தமிழகத்தோடு எதிலும் ஒத்துப் போகவில்லை. முல்லைப் பெரியாறு, கேரளாவில் மேற்கு நோக்கிப் பாம் நதிகள் பிரச்சினை, கண்ணகி கோவில் என்று அனைத்திலும் கேரளம் முரண்டு பிடிக்கிறது.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...