Tuesday, September 9, 2014

திரும்பவும் கதை சொல்லி வெளிவருகிறது






திரும்பவும் கதை சொல்லி வெளிவருகிறது

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் திரு. கி.ரா. அவர்கள் ஆசிரியராகவும், நான் இணையாசிரியர் மற்றும் வெளியீட்டாளரகவும், திரு. கழனியூரான் அவர்கள் துணையாசிரியராகவும் பணியாற்றி கொண்டு வரப்பட்ட ‘கதை சொல்லி’ இதழ்,
கடந்த 1 1/2 ஆண்டுகளாக வெளிவரவில்லை.

இதற்கு காரணம் அடியேன்தான். பல்வேறு அரசியல் பணிகளாலும், 42 ஆண்டுகள் அரசியலில் ஏற்பட்ட அனுபவங்களாலும், நன்றி என்ற அங்கீகாரம் இல்லாததாலும் ஏற்பட்ட அலுப்பின் காரணமாக, கதைசொல்லி வெளியீடு வேலை மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளும் முடங்கிவிட்டது. 

கடந்த காலங்களில் நமக்கு கீழ் பணியாற்றியவர்களும், நம் உதவியினால் வளர்ந்தவர்கள், பொதுவாழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல பொறுப்புகளில் வருவது வேதனை தருகின்ற அனுபவங்களாக இருந்தது.




சிலரை நம்பி, பயணித்ததினால் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்லாமல் அவமானங்களும்தான். உழைப்பை வாங்கிக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். 

20 ஆண்டுகளுக்கு முன்னால் ஐ.நா.வில் பணி கிடைத்தும் அங்கு செல்லாததும், சகாக்கள் எல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகும் என்ற நிலை இருந்தும், எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற கடமை இருக்கின்றது.

தகுதியே தடையாக இருக்கின்ற காலத்தில் போராளிகள் சிரமப்பட்டுதான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை. இதை அனுதாபத்திற்காக சொல்லவில்லை. தகவலுக்காக சொல்லுகின்றேன்.


நதி நீர் இணைப்புக்காக 30 ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்குத் தொடுத்தும், கைதிகளுக்கு வாக்குரிமை கோரியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் கண்ணகி கோவில் தமிழகத்திற்கு சொந்தமென்றும் தமிழகத்தில் மேலவை அமைய, கூடங்குளம் சுற்றுச்சூழல் பாதிப்பும், சிவகாசி அருகே ஆலங்குளத்தில் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் விவசாயம் பாதிக்கப்படுவதும், தடுப்பு காவல் சட்டம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது என்றும், 


ஈழத் தமிழர் பிரச்சினையில் தம்பி. பிரபாகரன் உள்பட பல மனித உரிமை வழக்குகளில் தீர்வு கண்டதும், கர்நாடக காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டு மைசூர் சிறையில் பல மாதங்களாக வாடும் தமிழர்கள் எவ்வித தீர்வுமில்லாமல் இருப்பதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு கண்ட பல வழக்கு நடவடிக்கைகள் போன்றவை மனதிற்கு ஆறுதலை தருகின்றது. 

வருகின்ற 16ம் தேதி, கி.ரா.வின் 93ஆம் பிறந்த நாள் அன்று கதை சொல்லி இதழ் திரும்பவும் வெளிவரும்.



கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கி சூட்டில் மரணமைடந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை, நாளை (10.09.2014), சுப. உதயகுமார் அவர்கள் நடத்துகிறார். அந்நிகழ்வில் பங்கேற்க தலைவர் கலைஞர் அவர்களின் அனுமதி பெற்று கூடங்குளம் செல்ல இருக்கின்றேன்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...