Thursday, September 19, 2019

#காவேரி -#நீர்_மேலாண்மை

இன்றைய(19-9-2019)தினமணியில் 
#காவேரி -#நீர்_மேலாண்மைகுறித்த எனது
பத்தி.....
••••
தண்ணீருக்கு தவிப்பு, புரிதலற்ற நீர்மேலாண்மை
————————————————
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
காவிரியில் வந்த வெள்ளத்தை சேமித்து அதை பயன்படுத்தக் கூடிய அளவில் நமக்கான திட்டங்கள் ஏதுமில்லாமல் உள்ளது. ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது இந்த குறையை சொன்னாலும் அதை நிவர்த்தி செய்ய நம் மாநில அரசுக்கு அக்கறையில்லாமல் இருக்கிறது. கடலுக்கு செல்ல வேண்டிய நீர் அவசியம் ஆறுகளில் பாய்ந்தோடி தான் ஆகவேண்டும். அது சுற்றுச் சூழல் பாதுகாப்பு. அதை மறுக்கவில்லை. ஆனாலும் வெள்ளக் காலங்களில் அதிகமாக நீர் வீணடிப்பதை சேமிக்க நீண்டகால திட்டங்களை நாம் நிறைவேற்றவில்லை என்பது தான் வேதனையான விடயம்.
காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் ஏக்கர்களுக்கு விவசாயத்திற்கு பயன்படுகின்றது. மேலும் 15 மாவட்டங்களுக்கு குடிநீருக்கும் காவிரி நீர் பயன்பட்டு வருகிறது.
டெல்டா பகுதியில் குறுவை (ஜூன் 12 முதல் 26 வரை) மற்றும் சம்பா (), தாளடி () என மூன்று போகத்திற்கு காவிரித் தண்ணீர் தான் விவசாயத்திற்கு கை கொடுக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட 340 டி.எம்.சி நீர் தேவைப்படுகிறது. இது சுமார் 8 மாதத்திற்கு தேவையான நீராகும். ஆனால், குடிமராமத்து பணிகள் மட்டும் சரியாக நடத்துவது இல்லை. ஆக்கிரமிப்புகள், தூர்வாரும் பணிகள் என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் ஒப்புக்கு நடப்பதாகத்தான் தெரிகின்றது. ஒரு பக்கம் குடிமராமத்துக்கான பணிகள் செய்யப்படாமல் நீர்நிலைகளும், வாய்க்கால்களும் பாதிக்கப்பட்டு சரியான நீர் பாசனம் இல்லை. மற்றொரு பக்கம் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதை சேமித்து வைக்கும் சூழல்களும் இல்லை. காவிரி நதிதீரத்தில் மட்டுமல்லாமல், ஏனைய பாலாறு, அமராவதி, வைகை, தாமிரபரணி போன்ற 17 நதிப்படுகைகளிலும் இதே நிலைமை தான். தமிழகத்தில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் வரும் தண்ணீரை கடலுக்கு சென்றது போக ஓரளவிற்கு சேமிக்கலாம். அதை சரியாக கவனிப்பதும் இல்லை.
மேட்டூர் அணை நிறைந்து அதை திறந்துவிடும் போது ஏற்படும் வெள்ளத்தை காவிரியிலும், கொள்ளிடத்திலும் திறந்துவிடுவதால் தேவைக்கு அதிகமான நீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொள்ளிடத்தில் மட்டும் 227 டி.எம்.சி தண்ணீர் வங்கக் கடலுக்குச் சென்றுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மட்டுமல்ல காவிரி தீரத்தில் ஒரு 20, 25 தடுப்பணைகள் கட்டலாம். அப்படி கட்டும்போது மேட்டூரில் வெள்ள காலத்தில் வரும் தண்ணீரை சேமிக்க ஏதுவாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து வெள்ள வரத்து வரும்போது காவிரி  தண்ணீர், கல்லணை நீர், வெண்ணாறு, கொள்ளிடம் என நான்காக பிரிந்து அரசலாறு, வெட்டாறு, மண்ணியாறு, பாமினியாறு என இறுதியில் 36 கிளை சிற்றாறுகளாக பிரிந்து நீர்வரத்து செல்கிறது. இதனால் தஞ்சை டெல்டா மட்டுமின்றி இன்னும் சொல்லப் போனால் தெற்கே புதுக்கோட்டை மாவட்டமும் வடக்கே கொள்ளிடம் வட்டாரம் வரை பயன்பெறுகிறது. காவிரி நதிதீரத்தில் எப்படி பாசன வாய்க்கால்களை முறைப்படுத்தலாம் என்று அன்றைய ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் திட்டமிட்டதால் சில வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. பின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் ஆயக்காட்டு, குடிமராமத்து திட்டங்கள் தஞ்சை மாவட்டத்தில் தான் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த வாய்க்கால்கள் மூலமும் தண்ணீரை தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் சேர்த்து வைக்கலாம். நிலத்தடி நீரும் உயரும், பம்பு செட்டுகளுக்கும் நீராதாரங்கள் இதனால் பெருகும்.
கிட்டத்தட்ட 77 ஆண்டுகளின்படி (அதாவது 1936 முதல் 2013 வரை) உள்ள தரவுகளின் வழியாக சுமார் 40 முறை கொள்ளிடம் அணை திறக்கப்பட்டு சுமார் 3,025 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. கடந்த 1971லிருந்து 2018 வரை 48 ஆண்டுகளில் 27 ஆண்டுகள் 1,198.76 டி.எம்.சி நீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது (சராசரியாக 47 டி.எம்.சி நீர் சராசரியாக கடலுக்கு சேர்கிறது). கிட்டத்தட்ட அந்த 27 ஆண்டுகளில் வெள்ளமாக சென்றது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 12 மடங்கிற்கு கூடுதலாக வீணடிக்கப்பட்டுள்ளது. வெண்ணாற்றிலிருந்து வெள்ளம் வந்தால் 55 டி.எம்.சி நீரும் கடலுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு டி.எம்.சி அளவு என்பது 28,317 மில்லியன் லிட்டர் ஆகும். இந்த தண்ணீரை பலகோடி மக்களுக்கு பயன்படுத்தலாம். இதை சேமித்து வைத்தால் பல ஆண்டுகளுக்கு பயன்படும். இந்த ஒரு டி.எம்.சி நீரில் பல கோடி மதிப்பிலான நெல்மணியை உற்பத்தி செய்யலாம்.
இறுதியாக கடந்த 2013இல் கொள்ளிடம் ஆற்றில் 12 டி.எம்.சி நீரும் சென்றுள்ளது. மேட்டூர் அணையில் 1.45 லட்சம் கன நீர் வெளியேறியதால் காவிரியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அணை உடைந்தது. இதே நிலைமை தான் இந்த ஆண்டும் அணைக்கு சேதாரம் ஏற்பட்டது. சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 30,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வெள்ளமாக எந்தவித பயன்பாடின்றி கடலுக்கு தான் சென்றது.
இப்படி எல்லாம் கணக்குகள் இருக்கும்போது தண்ணீரை சேமித்து வைக்க தவறுகிறோமே என்ற குற்றவுணர்வு நமக்கு ஏற்படுவதே இல்லையே. பிறகு தண்ணீர் வரவில்லை, தண்ணீர் வரவில்லை என்று தவிக்கின்றோம். இதற்கெல்லாம் காரணகர்தா யார்? ஆட்சியில் இருப்பவர்களுக்கு நதிநீர் குறித்தும், பூகோள அறிவும், புரிதல் இல்லாதவர்கள் தேர்தலில் பணம் செலவழித்து வாக்குகளை பெற்று அமைச்சர்களாகிவிட்டனர். என்ன சொல்ல முடியும்? ஒரு பக்கம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் கர்நாடகா மதிக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றது. வெள்ளம் வந்தாலும் அதை சேமித்து வைக்க தவறுகிறோம்.
மேட்டூர் அணையில் இருந்து வெளிவரும் நீரானது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள சோழசிராமணி மற்றும் ஜேடர்பாளையம் தடுப்பணையில் வந்து சேர்ந்தாலும் அந்த அணையிலிருந்தும் நீர் பிடிக்காமல் வெளியேறுகிறது. ஏனெனில் அந்த அணை முழுமையாக கட்டிப் பராமரிக்கப்படவில்லை. இப்படித்தான் மெத்தனமாக நமது திட்டங்களும் செயல்பாடுகளும் உள்ளன.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மேற்குறிப்பிட்டவாறு தடுப்பணைகள் மட்டுமல்லாமல் மாயனூர் அணையிலிருந்து நேராக கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெள்ளக் காலங்களில் கொண்டு செல்லலாம். மாயனூரிலிருந்து மற்றொரு கால்வாய் வெட்டி தெற்கு நோக்கி சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லலாம். இதற்கான திட்டச் செலவு சுமார் 6,000 கோடி வரை ஆகும். வானம் பார்த்த சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் கிராமங்களுக்கு இந்த வெள்ள நீர் பயன்படும். அதேபோல, கல்லணையில் வரும் வெள்ளத்தை கல்லணை கால்வாய் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வரை கொண்டு செல்லலாம். கல்லணைத் தண்ணீரை வீராணம் ஏரியில் செலுத்தி சென்னைக்கு குடிநீருக்கும் பயன்படும்.
காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாற்றுப் படுகையில் புதிய நீர்நிலைகளை அமைத்து வெள்ளநீரை சேமிக்கலாம். மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்ப திறந்துவிட்டாலும் சில கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராதது ஒரு வேதனையான விடயமாகும். ஆனால், வெள்ளநீர் கடலுக்கு மட்டும் அதிகபட்சமாக சென்றுவிடுகிறது. மேட்டூர் அணை நிரம்பினால் மாயனூர், முக்கொம்பு, கல்லணையில் இந்த நீரை சேமிக்கலாம் என்றாலும் விரிவான திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்னரே இதற்கான பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் வெள்ளம் வந்தால் தான் என்ன செய்வது என்று யோசிக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லை. ஆனால், காவிரி படுகையில் நீர்வளம் 311.86 டி.எம்.சியாகும் (இது தமிழக நீர்வளத்தில் 18.98% ஆகும்).
காவிரி நதிதீரத்தை பற்றி முழுமையாக புரிதல் இல்லாத அரசு காவிரியை பாதுகாக்கவும், அதன் தண்ணீர் நிர்வாகத்தை சீர்படுத்தவும் எல்லோரும் இணைந்தால் மட்டுமே முடியும். இது பொது அறிவான விடயமாகும். காவிரி நீர்வரத்து மனிதனின் அன்றாடத் தேவை, வேளாண்மை, மரபு ரீதியான கலாச்சாரம், தமிழ் நிலத்திற்கும் அதற்கும் உள்ள உறவு என்ற உயிரோட்டத்தோடு நாம் அணுக வேண்டும். நாம் காவிரியை வணங்குகின்றோம். வெள்ளம் வந்தால் உபரி நீர் என்றும், நீர் வரத்தே இல்லாவிட்டால் வறட்சி, பற்றாக்குறை என்றும் வெட்டிப் பேச்சுகளையே பேசுகிறோமேயொழிய அதை சமன்படுத்தக் கூடியளவில் நீர் மேலாண்மையை காவிரியில் நிலைநாட்டி, அதை நல்லவிதமாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
மேட்டூரில் தண்ணீர் திறந்தால் கல்லணைக்கு முதல்நாள் எட்டியதில் இருந்து கொள்ளிடம் என்ற படுகையில் செல்லும் நீர் 3,004 கனஅடி ஆகும். காவிரி, வெண்ணாறு பாசனப் படுகையில் செல்வது 2,600 கனஅடி ஆகும். இதுவொரு கூட்டுக் கணக்கு. வெறும் பூமியில் உள்ள வாய்க்கால் தானே என்று பராமரித்து தூர்வாராமல் நாம் விட்டுவிடுகிறோம். அதனால் நாம் ஏமாறுகின்றோம். நமக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீரையும் சேமிக்க வேண்டும், தூர்வாரி, பொது மராமத்தையும் ஊர் கூடி செய்ய வேண்டும். காவிரியில் மணலை அள்ளி கபளீகரம் செய்து இயற்கையின் அருட்கொடையை நாசப்படுத்தினோம். எப்போதும் காவிரியில் நீர்வரவில்லை என்ற பற்றாக்குறை கோசங்கள் தான் அதிகம். வெள்ளம் வந்தால் ஒரு சில நேரங்களிலேயே உபரி, பெருக்கு என்று சத்தம் போடுகிறோம்.
இதற்கெல்லாம் காரணம் யார்? கர்நாடகம் நியாயமாக வழங்க வேண்டிய நீர் வழங்குவதில்லை. வெள்ளம் வந்தால் நீரை அனுப்புகின்ற வடிகாலாகவே தமிழகத்தை பார்க்கிறது. ஆளவந்தார்களும் காவிரி வெள்ளத்தை கடலுக்கு செல்வது போக மீதமுள்ள தண்ணீரை எப்படி சேமிப்பது என்று அறிவியல் பூர்வமான புரிதலும் இல்லை. ஏன் காவிரி பாய்ந்தோடும் சேலம் மாவட்டத்திற்கு வெள்ளம் வந்தால் அதை தடுத்து சேமிக்கும் நீர்நிலைகளையும் புதிதாக உருவாக்கலாம்.
இப்படி காவிரி பிரச்சனை போல தான் தமிழகத்தில் உள்ள அனைத்து நீராதாரங்களை குறித்து சரியான அணுகுமுறை இல்லாமல் இருப்பதால் தண்ணீருக்கு தவிக்கிறோம். இனியாவது நதிநீர்ப் பிரச்சனைகளை குறித்து தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் முன்னெடுப்பார்களா?

#காவேரி #நீர்_மேலாண்மை

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-09-2019.


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...