Thursday, October 26, 2023

*காவேரி* #*பூட்டிக்கிடக்கும் நீதியின் வாயிலில்...* - Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை.. (தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)

#*காவேரி*

#*பூட்டிக்கிடக்கும்
நீதியின் வாயிலில்...*
- Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை..



(தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)
•••••


குடமலையில் தோன்றிய
குணவதியாள்
தலைக்காவிரியாய்
புறப்பட்ட தவழ்கொடியாள்
தான்பாய்கின்ற வழியெங்கும்
பசுமை வளர்த்து
நிலமகளின் தாகங் தீர்க்கும்
காவிரித் தாயானாள்

எம்மாநிலமாயினும்
எம் பாரதத் தாயின் திருமண்ணே
என்பதை மறந்த
பாரபட்ச அரசியலாளர்களால்
பாசிச எண்ணங் கொண்டவர்களால்
மனமிருந்தும்
தவழ்ந்தோட வழியின்றித்
தோங்கிக் கிடக்கிறாள்
தாய்மையைத் தனக்குள்
பூட்டிக்கொண்டு
மனம் வெதும்பிக் கிடக்கிறாள்

நீரின்றிப் பயிர்களெல்லாம் 
வாடிக்கிடக்க
உழுது விதைத்து காத்துநின்றவர்
கண்ணீர் உகுத்து உகுத்து
அவர்தம் கண்விழிகளும்
காய்ந்து போயின

முளைத்த பயிர்கள் 
வேரூன்றி 
தன்மீது தழைத்துவளர வழியின்றி
தவியாகத் தவிக்கிறாள்
தலைவிரித்தாடும் வறட்சியின்
நீள்குழல் ஏந்திய
காவிரி டெல்டாவின்
மண்மகள்

பரவசமாய்ப் பாய்ந்தோடி
பயிர்கள் செழிக்கப் பார்த்து 
மகிழ்ந்திருந்த காவிரித் தாயோ
கனத்துக் கிடக்கிறாள்

அடைத்து வைத்து
அகங்காரங் காட்டும் மூடர்களின் 
மூளையின் மூலையில்
சிறுவெளிச்சம் பாய்ந்து
தன் ஆன்ம ஓட்டம்
தாழ்திறவும் கணங்களுக்காக
காத்துக் கிடக்கிறாள்

நீதியுணர்த்தி 
அநீதி களைந்திட
நீதிமன்றக்கதவைத் தட்டினர் 
எண்பதுகளின் தொடக்கந்தொட்டு
இன்றுவரை
மன்னை ரங்கநாதன்
கருப்பையா மூப்பனார்
முரசொலி மாறன்
கோ. சி. மணி
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
போன்ற பெருமகனார்கள் பலர்
பேதங்கள் ஏதுமின்றி

தேங்கிக் கிடக்கும் காவிரி போலவும்
ஏங்கிக் கிடக்கும் பயிர்களைப் போலவும்
ஏக்கங்களை ஏந்தி 
வறுமையைத் தாங்கி
தேங்கிக் கிடக்கிறது
காவிரி டெல்டா விவசாயிகளின்
வாழ்வாதாரம்

பூட்டிக் கிடக்கும்
நீதியின் வாயிலில்
காலங்கள் பல கடந்தபின்பும்!

- வானதி சந்திரசேகரன்
@vanathichandrsekaran




No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...