Saturday, September 12, 2015

கதைசொல்லி - KathaiSolli




கதைசொல்லி கிடைத்தவர்கள் தொலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டிவருகின்றனர். கடந்த இதழைத்தாண்டியும் இந்த இதழுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களுடைய வாழ்த்துகள் இதயப்பூர்வமாகவும், மேலும் ஊக்கத்தை அளிப்பதாகவும் அமைந்தது.

கதைசொல்லி அட்டைப்படத்தில் உள்ள மதுரைமாவட்டம் எழுமலை கிராமத்தைச் சேர்ந்த செங்கல்ச்சூளை அதிபர் ராமர் இதைப் பார்த்துவிட்டு தலைகால்புரியாமல் தவித்தாராம். பின் அட்டையில் உள்ள சிறுவன் மதுரை சோழவந்தான் கிராமத்தைச் சேர்ந்தவன். இதழின் பின் அட்டையில் தன்னுடைய படம் வந்திருப்பதைப் பார்த்தவுடன் தன் தான் மேய்க்கும் ஆடுகளுக்கும் காட்டி சந்தோசத்தின் உச்சிக்கே போய்விட்டானாம்.

புகைப்படம் எடுத்த மதுரையைச் சேர்ந்த ரெங்காவிடம் சட்டைப்பையிலிருந்து பத்துரூபாய்த் தாளைக் கொடுத்து, “அண்ணே படம் போட்டதுக்கு செலவாகி இருக்கும் இதை வச்சிக்கோங்கண்ணே” என்று ஆனந்தக் கண்ணீரோடு சொன்னதும் கதைசொல்லியின் உயிரோட்டமான அதிர்வை உணரமுடிந்தது.

இந்த இதழ் கிடைத்த அரசியல்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கவிஞர்கள், இலக்கிய கர்த்தாகள், கிராமத்தில் வாழும் விவசாயிகள், நாட்டுப்புறவியல் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் படித்துவிட்டு தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சொல்லியது செய்த பணிக்கு அங்கீகாரம் கிடைத்ததைப் போல இருந்தது.

குசேலன் தயக்கத்தில் கொடுத்த அவலைப் போல, சிறிய அளவில் இருக்கின்ற வாய்ப்புகளைக் கொண்டு கதைசொல்லியை நாட்டுக்குப் படைப்பதில் பெரும் மகிழ்ச்சியே ஏற்படுகின்றது.
கதைசொல்லி படைப்புகளை அறிந்தவர்களோ, அறியாதவர்களோ என்று பார்க்காமல் படைப்பின் தன்மையையும், சிறப்புகளையும் அறிந்து வெளியிடுவது என்ற அடிப்படையில் இயங்குவதுதான் இந்த இதழுக்குச் சிறப்பு.

படைப்புலகம் அறியாத ஏகலைவன்களை உருவாக்கும் களம் தான் கதைசொல்லி. அடுத்த இதழின் பணிகள் துவங்கிவிட்டன. இந்த இதழ் கிடைக்காதவர்கள் தெரியப்படுத்தினால் அனுப்பி வைக்கப்படும். மின்னிதழாக வாசிக்க www.kathaisolli.in தளத்தினைச் சொடுக்கலாம்.

கதைசொல்லி என்றைக்கும் நாட்டுப்புறத்தின் சிறப்பைச் சொல்கின்ற பாமரனின் இலக்கியம்.

rkkurunji@gmail.com

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2015.

#kathaisolli #KsRadhakrishnan #KSR_Posts

Kazhaneeyuran Kazhaneeyuran | மணா மணா | Raveendran Ramasamy | Manonmani Pudhuezuthu | Venkada Prakash | Kanavup Priyan | Vijaya Rajeswari | ஸ்ரீதேவி செல்வராஜன் | Gayathri Devi | கார்த்திக் புகழேந்தி | Radha Ramachandran

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...