Tuesday, April 25, 2017

தமிழகமனிதஉரிமைஆணையம்

தமிழகமனிதஉரிமைஆணையம்:
---------------------------
தமிழக மனித உரிமைகள் ஆணையத்திற்கு நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று சென்றிருந்தேன்.. மனித உரிமைகள் ஆணையத்தின் நிலை சற்று  பரிதாபமாக இருந்தது.  மக்களின் உரிமைகளை  நிலைநாட்ட வேண்டிய ஆணையம் அதன் உரிமைகளுக்காக அவர்களே போராடிக் கொண்டு இருப்பார்களோ என்ற ஐய்யப்பாடு எழுந்தது. 

தேசிய மற்றும் மாநிலங்களில் மனித உரிமை ஆணையம் அமைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் சட்டம் கொண்டு வந்தார். அந்த  உத்தரவை 1993ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கியது. ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. அவர் மனித உரிமை ஆணையம் அமைக்க விரும்பவும் இல்லை.தொடர்ந்து உத்தரவு கடிதங்களும் வந்தனை. அவையாவும் காகித அம்புகளைப் போல் இலக்கினை எட்டவில்லை. அதன் பின்னர் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார். அப்போது சென்னை ராயப்பேட்டை  சாலையில் ymia கட்டிடத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட தொடங்கியது.  

ஜெயலலிதா அமைக்க விரும்பாத மனித உரிமை ஆணையத்தை தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்ததின் பலனை அவரும், கழக உடன்பிறப்புகளும் பெற்றனர். 
ஜுன் 30, 2001 ஆண்டு உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்  அவர்களை மனித நேயமற்ற வகையில் நடு இரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்தது ஜெயலலித்தவின் ஏவல்துறை. 

தலைவர் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யபட்ட போது  தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம்  பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அடியேன் தான் மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜூலை முதல் நாள் மதியம்  இரண்டு மணி அளவில்  ஆணையத்தின் கதவை தட்டினேன்.
முன்னாள் சடட அமைச்சர் ஆலடி அருணா அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும்  உடன் வந்தனர்.  ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு கழிவறை வசதி இல்லாமலும், உணவு , குடினீர்  வழங்கப்படாமலும்  துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்தோம். 
அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் படத்துடன் செய்தி வந்தது. நீதிபதி சமிதுரை கடலூர்,சென்னைசிறைச்சாலைகள்-சென்று ஆய்வு செய்து நாங்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பதறிந்து   15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவை ரத்து செய்து 48மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.  என்  வாழ்நாளில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்றிய திருப்தி அளித்த நிகழ்வு இது என்றால் மிகையல்ல.  இந்த உத்தரவை நான் பெறும் வரை மனித ஆணையம் என ஒரு அமைப்பு இருப்பதும், அதன் செயல்பாடு குறித்தும் பல அரசியல் கட்சிகளோ, பொதுமக்களோ அறிந்திடவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று  பெருமைமிகு  பி.எஸ்.குமாரசாமி சாலையில் அமைந்திருந்தாலும்  செயல்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. எனக்கென்னவோ மனித உரிமை ஆணையம் அதன் உரிமைகளுக்காகவே ஒரு பனிப்போராட்டம் செய்து கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வியுடன் என் பணிகளை செய்துவிட்டு வந்திருக்கின்றேன்.

#ksradhakrishnanpostings
#ksrpostings 
#தமிழகமனிதஉரிமைஆணையம் 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
19-04-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...