Wednesday, December 6, 2017

கன்னித் தமிழுக்கு ஓர் கொடை - க்ரியா



கடந்த 02/12/2017 அன்று க்ரியா நிறுவனர் திரு. இராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் நெல்லை அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். அன்போடும் மென்மையாக பேசும் ஆளுமைமிக்க பதிப்பாளர் மட்டுமின்றி கற்றறிந்தவர். தமிழ் அகராதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியமான கர்த்தாவாக சமகாலத்தில் விளங்குகின்றார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பல அரிய செய்திகளை அறிய முடிந்தது.

1857-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்திலிருந்த டிக்சனரிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக ஃபிலோலாஜிகல் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன், நியூ இங்கிலீஷ் டிக்சனரி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. டிக்சனரி பற்றாக்குறையை நிவர்த்திப்பதோடு ஆங்கிலோ சாக்ஸன் காலத்திய மொழிகளின் சரித்திரத்தையும் கூடவே அறிமுகப்படுத்தலாமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இத்திட்டத்தை முழுமையாக்கி ஒப்புதல் பெற இருபதாண்டுகள் ஆயின. 1879-ஆம் ஆண்டில் இப்பணிக்காக ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸýடன் ஒப்பந்தம் செய்து கொண்டதோடு ஜேம்ஸ் முர்ரே என்பவரை ஆசிரியராகவும் அமர்த்தியது. பத்தாண்டிற்குள் நான்கு தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்பது முதல்கட்ட திட்டமாகும். ஆனால் முர்ரேவும் அவரது உதவியாளர்களும் ஐந்தாண்டு காலத்தில் அ அசப வரை மூன்று பகுதிகள் மட்டுமே முடித்திருந்தார்கள். 352 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுதியைப் புத்தகமாக வெளியிட்டு 12 ஷில்லிங் 6 டாலர் என விற்பனை செய்தார்கள். நாம் திட்டமிடுவதைச் செயல்படுத்துவது கடினமென்பதை இந்த டிக்சனரி தயாரிப்பு உணர்த்தியது. "ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் டிக்சனரிஎன்ற பெயரில் தயாரித்து முடிக்க மேலும் பல ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். 1928-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசித் தொகுப்பு வரை முழுமையாக வெளியிட 44 ஆண்டுகள் ஆயின. பன்னிரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட இந்த டிக்சனரியின் மொத்த பக்கங்கள் 15 ஆயிரத்து 487. இதில் இடம்பெற்ற மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 825. இந்தப் பகுதிகளைத் தவிர துணைப்பகுதியொன்றும் 1933-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1957-ஆம் ஆண்டு பர்ச்ஃபீல்ட் தலைமையில் மீண்டும் புதிய தொகுப்புகளை உருவாக்கும் குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினரின் முயற்சியால் 1972 மற்றும் 1986 ஆண்டுகளிலும் 1993-ஆம் ஆண்டில் வெளிவந்த துணை தொகுப்பு உள்பட நான்கு தொகுதிகள் வெளியிடப்பட்டன. 732 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்புகளில் சுமார் 70 ஆயிரம் புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. கடைசித் தொகுப்பு வெளியாவதற்கு முன்பே இரண்டாவது பதிப்புக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணகர்த்தாவான முர்ரே, இந்த டிக்சனரி தொகுப்பில் ஈடுபடுவதற்கு முன்பு மற்றவர்கள் தொல்லை இருக்கக் கூடாதென்பதற்காக தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ரகசிய அறையொன்றை அமைத்துக் கொண்டார். அந்த அறைக்குள் அவரும் அவரது மகள்களும் அமர்ந்து வேலை செய்வது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட தெரியாது. மற்றவர்கள் இடையூறிலிருந்து தப்பிக்க இவர்கள் அமைத்த அறை, குளிர்காலத்தில் அதிக ஈரத்தையும் கோடையில் அதிக வெப்பத்தையும் தரவே அது, காற்று வசதியின்றி மாட்டுத் தொழுவம் போலாகிவிட்டது. இதனால் முர்ரேவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குளிர்காலங்களில் கதகதப்பாக இருக்க அறைக்கு நடுவே ஸ்டவ் ஒன்றை வைக்க வேண்டியதாயிற்று. எங்கே தீப்பிடிக்குமோ என்ற பயமும் இருந்தது. கனமான ஓவர்கோட் ஒன்றை அணிந்து ஈரம் காலில் படாதபடி மரப்பெட்டியொன்றை போட்டு அதன்மீது அமர்ந்து எழுதுவாராம். இப்படி வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் உழைத்து டிக்சனரி தொகுப்பைத் தயாரித்தார். ஓய்வின்றி தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டதால் நினைத்தபடி டிக்சனரியை முழுமையாக முடிக்க முடியாமல் 70-ஆவது வயதில் காலமானார். இவர் பெரிய படிப்பாளியும் அல்ல. ஸ்காட்லாந்தில் ஹாலிக் என்ற சிற்றூரில் தையல் தொழிலாளி ஒருவரின் மகனாகப் பிறந்த முர்ரே, தானே சொந்தமாக முயற்சித்து கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். பள்ளியைவிட்டு வெளியே வந்தவர் வங்கி ஊழியராகப் பணியாற்றினார். பின்னர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் டிக்சனரி உருவாக்கும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. தானே சொந்தமாக நியூ இங்கிலீஷ் டிக்சனரி ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவர், முதல் பதிப்பில் பாதி டிக்சனரிவரை தானே எடிட் செய்தார். அதையும் முழுமையாக முடிக்க முடியாமல் காலமாகிவிடவே அவரது உதவியாளர்கள் அதை முழுமைப்படுத்தி வெளியிட்டனர்.

பிரிட்டிஷ் தேசிய கார்பஸ் நிறுவனமும், அமெரிக்க கான்டெம்பரரி ஆங்கில நிறுவனமும் சேர்ந்து 550 மில்லியன் வார்த்தைகளை சேகரம் செய்து வார்த்தை வங்கிகளை அமைத்துள்ளது. ஆங்கில மொழி இலக்கணம், இலக்கியத்திற்கு இவை அடிப்படை காரணியாக உள்ளது. சாமுவேல் ஜான்சனின் பங்கு ஆக்ஸ்போர்டு அகராதிக்கு இருந்தாலும் கூட ஜேம்ஸ் முர்ரேவின் பணிதான் பிரதானமானது போன்ற பல செய்திகளை இந்த சந்திப்பில் திரு. இராமகிருஷ்ணன் மூலம் அறிய முடிந்தது.
திரு. இராமகிருஷ்ணனால் 1974இல் துவங்கப்பட்ட க்ரியா பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம் தவிர சில இந்திய மொழிகளிலிருந்தும், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும் நேரடி மொழிபெயர்ப்புகள் பலவற்றையும், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் புத்தகங்களை வெளியிட்டு ருக்கிறது. இவ்வாறு மொழியைப் பல துறைகளிலும் பயன்படுத்திய அனுபவம் தற்காலத் தமிழ் அகராதி ஒன்று தேவை என்பதை உணர்த்தியதால் 1985இல் துவங்கப்பட்ட அகராதிப் பணிகள் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் முப்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மூன்றாவது பதிப்பாக இந்த அகராதி 2018 நவம்பரில் வெளிவருவதற்கான பணிகளில் அவருடைய குழு மும்முரமாக இருக்கின்றது.
1992இல் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' வெளியிடப்பட்டது. தமிழ்த் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அகராதியின் திருத்தி விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு 2008இல் வெளியாயிற்று. அகராதியின் இரண்டு பதிப்புகளும் தற்காலத் தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. புதிய இரண்டாவது பதிப்புக்குச் சுமார் 75 லட்சம் சொற்கள் கொண்ட சொல்வங்கி தளமாக அமைந்தது.
இந்தச் சொல்வங்கி, தற்காலத் தமிழின் பல கூறுகளையும் விளக்கும் ஒரு மூலவளம். இந்த மூலவளம் தமிழில் அக்கறை கொண்டவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது க்ரியாவின் இணையதளத்தில் 35 லட்சம் சொற்களுடன் தரப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், அற்புதமான பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், காவிரி நதியை  குறித்து, பொருளாதார ஆய்வுகளை குறித்த பல நூல்களை அற்புதமான கட்டமைப்புகளோடு பார்த்தாலே படிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது.
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிரியாவின் பணி மகத்தானது. லாப நோக்கில்லாமல் தமிழ் சேவை என்ற நிலையில் திரு. இராமகிருஷ்ணனின் பணி தமிழுக்கு ஒரு கொடை. கிரியாவின் பணி சிறக்க வேண்டுமென்று வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

#க்ரியா
#இராமகிருஷ்ணன்
#க்ரியா_அகராதி
#Cre_a
#KSRadhakrishnanPostings
#KSRPostings
@Radhakrishnan KS
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
06-12-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...