Wednesday, February 21, 2018

தூக்கு தண்டனை குறித்த சமீபத்திய செய்திகள்

கடந்த 19/02/2018 தேதியன்று சென்னை போரூர் மதனந்தபுரம் நிகிதா பிளாட்ஸ் குடியிருப்பில் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை அதே குடியிருப்பில் இருந்த கொடூரன் தஷ்வந்த் என்ற கணிப்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்து போர்வையை கொண்டு சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்தது மட்டுமல்லாமல், முட்புதரில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்து தடயங்களை அழித்தான். இந்த வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. 
இந்நிலையில் தூக்கு தண்டனை குறித்தான கடந்த கால நிகழ்வுகள் சில. 
மரண தண்டனை என்பது விசாரனை நீதிமன்றம் அறிவித்தவுடன் நடைமுறைக்கு வராது. உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்ய வேண்டும். விசாரணை நீதிமன்றத்திற்குப் பின் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் கருணை மனு என்ற நிலையில் தண்டனைக் கைதிகளுக்கு கால அவகாசம் உள்ளது. இதை மனதில் கொண்டுதான்; உச்சநீதிமன்றத்தின் உறுதியும், அனுமதியும் பெற்ற பின்னே தூக்கிலிட முடியும்.
தமிழகத்தில் தூக்கு தண்டனை விதிப்பது என்பது அரிதாகவே நடைபெறுகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு நீண்ட காலமாகிவிட்டன. 
நாடு விடுதலைக்குப் பின், இந்தியாவில் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது, சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. 
1947க்குப் பின், 52 பேர் துாக்கிலிடப்பட்டதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 1975- - 91ம் ஆண்டுகளுக்கு இடையில், 40 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். 'அம்னஸ்டி' அமைப்பு கணக்கின் படி, 2001ல், 33 பேருக்கும், 2002ல், 23 பேருக்கும், 2005ல், 77 பேருக்கும், 2006ல், 40 பேருக்கும், 2007ல், 100 பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1991க்குப் பின், இதுவரை, 26 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பபட்டுள்ளது. 2017, டிச., 31 வரை, 371 கைதிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கீழாண்மை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்கின்றனர். அதிலும் உறுதி செய்யப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். அதிலும், தண்டனை உறுதி செய்யப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்கின்றனர். அதிலும் உறுதியானால், ஜனாதிபதிக்கு கருணை மனு விண்ணப்பிக்கின்றனர். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால், குற்றவாளி இறுதியாக, துாக்கிலிடப்படுகிறார்.
சுதந்திரத்துக்குப்பின் தூக்கிலிடப்பட்டவர்கள்
தேதி – குற்றவாளி
///////////////////////////////////
15/11/1949 - நாதுராம் கோட்சே
15/11/1949 - நாராயண் ஆப்தே
06/01/1989 - சத்வந்த் சிங்
06/01/1989 - கேஹர் சிங்
09/10/1992 - ஹர்ஜிந்தர் சிங் ஜிண்டா
09/10/1992 - சுகதேவ் சிங்க சுஹா
27/04/1995 - ஆட்டோ சங்கர்
14/08/2014 - தனஞ்ஜெய் சட்டர்ஜி
21/11/2012 - அஜ்மல் கசாப்
09/02/2013 - அப்சல் குரு
30/07/2015 - யாகுப் மேனன்
2009ல் டில்லியில் ஐ.டி., பெண் ஊழியர் கொலை வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனை, 2018ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு* ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனை, 2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.
வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு, 2004ல் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, கருணை மனு பரிசீலிக்க அதிக காலம் எடுத்துக் கொண்டதால், 2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.
திருப்பூரில், 2015ல் தந்தை, மகளை கொலை செய்த செல்வம் என்பவருக்கு, 2017 மே மாதம்விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, செப்டம்பரில் ஆயுள் தண்டனையாக குறைப்பு.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்கில், 11 பேருக்கு, 2011ல் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, 2017ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 
பல்வேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். 
ஊழல் வழக்கில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்று வந்த பேருந்து தருமபுரியில் எரிக்கப்பட்டது. அதில் 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நெடுஞ்செழியன், முனியப்பன், மது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கோவையில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 வயது சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தும், அவளது தம்பி ரித்திக் என இருவரையும் கொலை செய்த வழக்கில் மனோகர் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னையில் 10 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் மோகன், கோபி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அய்யாவு என்பவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற ராதாகிருஷ்ணன், ஷேக்மீரான், செல்வம் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செல்வம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கு சுந்தர்ராஜ், ஜெயகுமார் ஆகியோரும் தூக்கு தண்டனை பெற்றவர்கள்.
சமீபத்தில் உடுமலைப்பேட்டை பொறியியல் பட்டதாரி சங்கர் 2016ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சங்கர் மாமனார் சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
#தூக்கு_தண்டனை
#Hanging_Sentence
#Death_Sentence
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...