Monday, January 15, 2024

பொங்கல் திருநாள் (3)

#பொங்கல்நல்வாழ்த்துக்கள்.
———————————————————
                             (3)

மார்கழிப் பனிவிலக மண்ணெல்லாம் ஒளி படர  சீர்கொழிக்கும் தைப்பாவை சிரித்தபடி வருகின்றாள்!  
பேர் சிறக்க வாழ்ந்திடுக! பெருமை எல்லாம் பெற்றிடுக!

#பொழி_கட்டுதல் 
அதிகாலை விடியலில்,ஆவாரம்பூ- கன்னிப் பிளை பூ,வேப்பிலை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வீட்டின் கதவு ஜன்னல்கள் என்று வீட்டைச் சுற்றிலும் பொழி(காப்பு)கட்டுதல் கட்டும் பழக்கம் எங்கள் கரிசல்  மண்   பக்கம் உண்டு. காடுகளிலும்,  தோட்டத்திலும் கட்டுத்தரையிலும்,  மோட்டார் பம்பு ஷெட்களிலும் கோழிகூப்பிடும் போதே பொழி  கட்டுவாங்க.  இது கிருமிகளிடமிருந்து  நம்மை காக்கும்.




தமிழர்கள் அதிகம் குளிர் தாங்குவதில்லை.
முன் மற்றும் பின்  பனிக்காலங்களில்,
கார்த்திகை -மார்கழியில் குளிரில் முடங்கிக்கிடந்தவர்கள் தையில் வந்த வெயிலை" பொங்கலோ பொங்கல் " என ஆரவாரமாக  வரவேற்கிறார்கள். 
 சூரிய வெயில் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்வியலோடு பின்னிப்  பிணைந்தது..  கதிரவனோடு சேர்த்து உழவுக்கு சுவாசமான விலங்குகளையும் ஒரு சேர மதிக்கும்  தை பொங்கல் பண்டிகை.

திருவளர்வாழ்க்கை,கீர்த்தி ,தீரம்,நல்லறிவு,    வீரம்,   மருவுபல் கலையின் சோதி,வல்லமை,யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள்பெருமைதா னிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு.
 
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம்,வறுமைத்துன்பம்அவலமா மனைத்தைக்
காட்டில் அவலமாம் புலைமையச்சம்,
இவையெலாம்  அறிவிலாமை என்பதோர்இருளிற் பேயாம்,
நவமுறு ஞானபாநு நண்ணுக:தொலைக பேய்கள்.
- பாரதி

தை மாச மதிய வெயிலில் மணல் தெரிய தெளிந்தோடும் காவிரி….
தை நினைவுகள்…..
- குபராவின் எழுத்து….
*****
தை பிறப்பு உண்மையிலேயே உயிரின் பிறப்பு. அதனால்தான் அது பிறக்கும்  நாள் நமக்கு அவ்வளவு அழகான நாள். தெருக்களெல்லாம் கோலம், திண்ணைகளெல்லாம் சுண்ணாம்பு, செம்மண், சுவர்களெல்லாம் வெள்ளை, வீடுகள் மேலெல்லாம் வெள்ளை வெய்யில், வயல்களிலெல்லாம் கதிர் – கிராமத்தில்தான் தை பிறந்த வனப்பு தெருத் தெருவாகத் தோன்றும்.

கதிர் அறுவடை,  கரும்பு அறுவடை, மஞ்சள் இஞ்சி பூரண கர்ப்பத்திலிருந்து பொன்மேனியுடன் வெளிப்படும் காலம். நீரும் நிலமும் கலந்து கலவி புரிந்து பெரும் பேறு - இவையெல்லாம். தை மாதம் இயற்கையின் பேறுகாலம். குடியானவனும் மாடும் மருத்துவம் செய்கிறவர்கள்.

குடியானவனும் மாடும் இல்லாவிட்டால் என்ன இருக்கிறது? அவர்கள் தை பிறப்பில் தலை நிமிர்கிறார்கள். அவர்கள் பட்டபாடு கதிர்வாங்கிப் பழுத்து தலை சாய்ந்து நிற்கிறது.

பொங்கல் அவர்களுக்குத்தான். பொன்  போலப்  புதுவெயிலில் மின்னும் கதிர்கள் அவர்களுடைய உள்ளம் பொங்கி நிற்கும் நிலையில் தென்படுகின்றன. அவர்கள் வயிற்றில் பால் - புதுப்பானையின்  பாலுடன்! ஆறு மாதங்கள் ஆடியோடி உழைத்த  உழைப்பிற்கு தையில் பலன் - தை பிறக்கும் நாள் தூயநாள்  தான்.

அந்தத் திருநாளில் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்பது உண்மை. செந்நெல்லும் கரும்பும் உள்ளே வந்து தித்தித்திப்பைத் தருகின்றன. உழைப்புக்குப் பிறகு இன்பம் - உழைப்பின்றி உயிர் வாழ முடியாது என்ற தேர்ச்சி உணவாகச் சமைந்து விடுகிறது.

பட்டணவாசிகள் தை பிறப்பை கொண்டாடுவதில் பொருளில்லை. குடியானவன்தான் அதைக் கொண்டாட வேண்டியவன். அவனுக்குத்தான் அந்த உரிமையுண்டு; அவன் போடும் சோறு நாம் உண்பது; அவன் கை  உழைப்பைக்  நாம் உண்டு களிக்கிறோம்; அவன் பெறுவது வாரம் ; நாம் பெறுவது மேல் வாரம். நிலம்  நம்முடையது !

நிலம் எப்படி நம்முடையதாயிற்று ? அவன் ஏன்  அந்த நிலத்தை இழந்தான்! அது வேறு கதை.

நிலத்தை இழந்தான் குடியானவன்; நிலம் அவனை இழக்க முடியாது. குடியானவனும் மாடும் மிதித்த பூமிதான் விளையும். அவன் கால் பட்ட இடம் கதிர்; கைப்பட்ட இடம் கரும்பு; ஏர் பிடித்த இடம் களஞ்சியம்; வாய்க்கால் பிடித்த இடம் வளப்பம்; குடியான மகளிர் குளித்த இடம் நாற்றங்கால்; நிமிர்ந்த இடம் நெஞ்சுக்கதிர்; நடக்குமிடம் நவ தானியம்; இந்த வளப்பத்தில் வாழ்ந்தும் வாடுகிறார்கள்.

ஆனால் அதுதான் இயற்கை விதியோ? தேன் சேகரித்த தேனீக்களா அதை அனுபவிக்கின்றன? பொருள் சேகரிப்பவனா பொருளை அனுபவிக்கிறான்? ஈட்டுகிறவன் அனுபவிக்க மாட்டான் என்பது சாபம் போலிருக்கிறது.

நினைவு எப்படிப் போகிறது! பொங்கலிலிருந்து 
பொருளாதாரத்திற்கு வந்துவிட்டேன்!

பொங்கலன்று புதுநினைவு வர வேண்டும்; புது நினைவு புதுவாழ்வு கொடுக்க வேண்டும். தொண்டைக் கதிர் கிளம்பி வெளியே வருவது போல் நமது நல்லெண்ணம் வெளியாகட்டும்! பழுத்தப்பயிர் தலை சாய்வது போல் நமது உள்ளம், கனிந்து படியட்டும்.

•••

மகர சங்கராந்தி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

  கால வர்த்தமானத்தின்படி இப்பண்டிகை சூரியன் மகர ராசிக்கு மாறுவதைக் குறிக்கிறது (அதாவது ஹிந்தியில் 'மகர்'). இந்தியா முழுக்க குறிப்பாக வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த சங்கராந்திப் பண்டிகை இந்து மரபுகளில் தன் ஆதி வேர்களைக் கொண்டுள்ளது . அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்படியான விழாக்கள் தொடர்ந்து ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்டு வருவதன் மூலமாகத்தான் அந்த நாட்டு மக்களின் பண்பாடு கலாச்சாரம் போன்றவை எதன் அடிப்படையில் இணைந்து ஒற்றுமை கொள்கின்றன என்பதை பார்க்க முடியும்.

  அடிப்படையில் மனித குல ஒற்றுமை அதன் வரலாற்று வேர்கள், கலாச்சார முக்கியத்துவம்  விவசாயத்தின் தாத்பரியம் அது சார்ந்த குடிமை வாழ்வு யாவும் இணைந்து மார்கழிக்கும் தைக்கும் இணையான இப்பனிக்காலக் கொண்டாட்டம் இந்தியா முழுக்க மேய்ச்சல் நிலங்களில் நிகழ்வது எவ்வளவு முக்கியமானது.

மகர சங்கராந்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்த முறை அது ஜனவரி 15, 2024 அன்று கொண்டாடப்படும் முறையில் அமைந்துள்ளது.
2024ல் மகர சங்கராந்தி
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு ஜனவரி 15, 2024 (திங்கட்கிழமை) அன்று. த்ரிக் பஞ்சாங்கம் கூறியுள்ளபடி, நாளின் மங்களகரமான நேரம் இப்படியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
"மகர சங்கராந்தி சிறப்பான மங்களகரமான நேரம் - 07:15 முதல் 17:46 வரை
கால அளவு - 10 மணி 31 நிமிடங்கள்
மகர சங்கராந்தி காலை - 07:15 முதல் 09:00 வரை
கால அளவு - 01 மணி 45 நிமிடங்கள்.

 இந்துக்களின் இத்தகைய சிறப்புமிக்க சங்கராந்திப் பண்டிகை நம் தமிழகத்தில் தைப்பொங்கல் என்கிற பெயரில் வருடம் தோறும் வீட்டிற்கு வர்ணம் அடித்து வாசல் தெளித்து மாக்கோலம் இட்டுபுத்தாடைகள் உடுத்தி புது பொலிவுடன் பச்சரிசி வெல்லம் நெய் சேர்த்து பொங்கலோ!!  பொங்கல்!! எனக் குலவையிட்டு முன்னோரும் சின்னஞ்சிறாரும்  வாழ்த்திப் பாடி நிலத்தை வணங்கும்  விழாதான் இன்றைய தைப்பொங்கல் நாள்! தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அல்லது கோவை பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் இரவிலே  கலவை சாதம் செய்து விடியல் வரை வழிபாடு செய்வது இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது.

 இந்திய நிலமெங்கும் வாழும் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ  இத்தைத்திருநாளில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்தி மகிழ்கிறேன்!!.
#pongal2024
#magarasankaranthi
#பொங்கல்

#ksrpost
15-1-2024.


No comments:

Post a Comment