Wednesday, March 4, 2015

மன அழுத்தமும் தற்கொலைகளும்... ( Suicide )


விஞ்ஞான ரீதியாக பலமுன்னேற்றங்களும், பல மாற்றங்களும், வசதியான வாழ்க்கையையும் கைவரப்பெற்றிருக்கின்றோம். என்றாலும் மன அழுத்தம் என்பது உலகளவில் பலரையும் பீடிக்கின்ற துயர நோயாக இருக்கின்றது. கடந்த 30ஆண்டுகளாக பலருக்கும் தூக்கமாத்திரை போட்டால் தான் தூக்கமே வருகின்ற நிலைமையில் இருக்கின்றது.
எல்லாவற்றிலும் அதிகமான எதிர்பார்ப்பு, பேராசை என்ற நிலையில் மானிடம்டம் போட்டிபோட்டுக் கொண்டு உழைத்தாலும், பலவகையில் இந்த மன அழுத்த நோய் ஒவ்வொருவரையும் தாக்குகிறது.
குடும்பவாழ்க்கை, வேலையின்மை, வேலைகிடைத்தும் பணியில் திருப்தியின்மை, கிடைக்கும் ஊதியத்திற்குமேல் வீடுவாசல், ஆடம்பரத்தேவைகள் வாங்கிச்சேர்த்துக் கொண்டு மாதக்கடன்கள் கட்டமுடியாமல் தவிப்பது, போட்டிநிறைந்த உலகில் தன்னை நிலைநிறுத்தவும், வெகுவிரைவில் முன்னேறவும் நடக்கின்ற போராட்டங்கள் எக்கச்சக்கம்.

அதுமட்டுமல்லாமல் இன்றைக்குக் கையிலிருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களான கைப்பேசியே பலரையும் மன அழுத்தத்தில் தள்ளிவிடுகின்றது. தகவல் தொழில்நுட்பம் என்ற மாயச்சுழலிலும்,  வேலைப்பளுவில் சிக்கித்தவிப்பதும் என்று மனஅழுத்தங்களுக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒருகாலத்தில் ஆட்டுஉரலில் மாவு அரைப்பதும், அம்மியில் மசாலாக்கள் அரைப்பதும், தொலைபேசியில் அழைத்து அவசரச் செய்தியைச் சொல்வதும், கடிதங்களால் உறவு வளர்த்ததும்,  இருந்த காலங்களில் இவ்வளவு அழுத்தங்கள் யாருக்கும் வந்ததில்லை. இன்றைக்கு ஸ்விட்சைத் தட்டினால் எல்லா வேலையும் சுலபத்தில் முடிகிறது. 
கிரைண்டர், மிக்ஸி, கைப்பேசி, மடிக்கணினி, டிஜிட்டல் மின்பொருட்கள் என வந்தபின்பும் சந்தோஷங்களுக்கு நேரமற்று மானிடம் தவிக்கின்றது.
அன்றைக்குக் கூட்டுக்குடும்பங்களாக, பத்துபேருக்குமேல் மூன்று வேலையும் உணவு சமைத்தார்கள்.  இன்றைக்கு சமைப்பதைவிடுங்கள் சாப்பிடுவதற்கே  நேரமில்லை என்று துரித உணவகங்களில் வாங்கிச் சாப்பிடுவதே அதிகமான வாடிக்கையாகிவிட்டது. இப்படி வேலைப்பழுவை எளிதாக்கும் சாதனங்கள்  நம்மைச் சுற்றி இருந்தும், சமூக சூழல்கள் நம் வசதிக்காகவும், வளர்ச்சிகண்டிருந்தும் மனஅழுத்தங்கள் பெரும்பாலானவர்களையும் வாட்டவேண்டிய காரணம் என்ன?.  

மன அழுத்தம் எல்லைதாண்டிப் போகும் போது பலரும் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றார்கள். ஆழ்மனத்தின் அழுத்தம் அவர்களை அப்படிச் சிந்திக்க வைக்கின்றது. கடந்தகாலங்களில் விடிவதுமுதல் அடைவதுவரை எத்தனை பணிகள் இருந்தது. ஆனாலும் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தினார்கள். மன அழுத்தமென்பது அப்பொழுதெல்லாம் அறியாத ஒன்று. எப்போதாவது ஒன்றிரண்டு விஷம் குடித்து இறந்ததாகச் செய்திகள் வரும். கூட்டுக்குடும்பங்களின் சிதைவும் இந்த மன அழுத்தங்களுக்குக் காரணம்
இந்தியாவில் ஏறத்தாழ கடந்த ஆண்டு மூன்று இலட்சம் பேருக்குமேல் தற்கொலைசெய்துகொண்டு உயிர் விட்டவர்கள் என்று தகவல்கள் உள்ளது. இதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளும் அதிகம்.

உலகிலேயே இந்தியாவில்தான், தற்கொலைகள் அதிகமாக நடந்துள்ளது. கடந்தகாலங்களைக் கணக்கிட்டதில் இந்தியாவில் தற்கொலைகளின் சதவிகிதம் 9.2சதவிகிதம் தான் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேநேரம் சீனாவோ 59சதவிகதம் தற்கொலைகளை கடந்த 12 ஆண்டுகளில் குறைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
உலகநாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிக அளவில் இறப்புகளைக் கொண்ட நாடுகளின் பட்டியல்:

கயானா நாட்டில் 1,00,000பேரில்/44.2பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வடகொரியாவில் 38.5, தென்கொரியாவில் 23.9, இலங்கை 28.8, லித்துவேனியா 28.2, நேபாளம் 24.9, டான்சானியா 24.9, இந்தியா 21.1, தெற்கு சூடான் 19.8, ரஷ்யா 19.5 , உகாண்டா 19.5, ஹங்கேரி 19.1, ஜப்பான் 18.5, பெலாரஸ் 18.3 .
தற்கொலைத் துயரங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு இருக்கின்றது. மன அழுத்தத்தினால், தற்கொலை எண்ணம் பெற்றுள்ளவர்களை தனித்து விடக்கூடாது. அவர்களை மன அழுத்த நோயிலிருந்து விடுவிக்க தகுந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தேர்வுகளில் தேறவில்லை என்றால் பெற்றோர்கள் குழந்தைகளை திட்டுவதாலும், ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளாலும் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இந்தப்பிரச்சனை இந்தியாவில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் ஆகும்.

மன அழுத்தமும், தற்கொலையும் சமுதாயத்தை அழிக்கும் நோய்கள் இதைப் போக்குகின்ற வகையில் ஆக்கப்பூர்வமான நேர்மறை விழிப்புணர்வு பிரச்சாரங்களும், சிந்தனைகளும் நம்நாட்டில் அதிகப்படுத்தவேண்டும். பாதிக்கப்படுவோருக்கு ஆறுதலும் அக்கறையும் இருந்தாலே ஒருசிலரை தற்கொலையிலிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் கஷ்ட்டப்படுவோர் தங்களை ரணங்களைச் சொன்னால் அதை மேலும் சிக்கலாக்கி ரணப்பட்டோரை தற்கொலைக்கே தள்ளிவிடுகின்ற சில பொல்லாதவர்களும் நாட்டில் உள்ளனர்.

இந்த மானுடம் வாழ்வதற்கென்று படைக்கப்பட்டது. இது இயற்கையின் அருட்கொடை. இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வை திருப்தியோடும், நிம்மதியோடும் வாழ்ந்து களிக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் முடிவு என்றொன்று உண்டு.  பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சாதித்தோம் என்ற உயர்ந்த நோக்கங்களோடு நம் வாழ்க்கைப் பயணம் நடந்திட வேண்டும்.

பாரதியின் வரிகளில்...
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன்...
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
*
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க
*

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
*
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும்.. மேகத்தைப் போல.

ஆபாவாணன் வரிகளில்...
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

பா.விஜயின் வரிகளில்...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...

-          இந்த வரிகளை மனதில் நிலைநிறுத்தினாலே மன அழுத்தங்களும், தற்கொலை எண்ணங்களும் மாய்ந்து தன்னம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். துள்ளி வருகுதே வேல் என்பது போல இந்தவரிகள் மன அழுத்தம், தற்கொலை என்ற பகையை விலகிநில் என்ற நிலைக்குத் தள்ளிவிடும்.


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...