Saturday, September 24, 2022

*கோவில்பட்டியில் உயிர் நீத்த தியாகியின் நினைவு வீரக்கல்கல்லின் நிலை....?*

*கோவில்பட்டியில் உயிர் நீத்த தியாகியின் நினைவு வீரக்கல்கல்லின் நிலை....?*
————————————
கோவில்பட்டி பயணியர் விடுதி வாயில் அருகே கேட்பாரற்று கிடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு 5-7-1972 காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகியின் நினைவு வீரக்கல்....
தமிழ்நாட்டில் விவசாய சங்கம் போராட்டம் எழுபதுகளில் வீரியமாக நடந்தது. அன்றைக்கு சி.நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர் முத்து மல்லா ரெட்டியார் என பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் போராட்டக் களங்கள் அமைந்தன. தமிழகமே கொந்தளித்து.  கிரா,நானும் போன்றோர் நெல்லை-



பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கபட்டோம். காமராஜர் எங்களை சந்திக்க சிறைக்கு வந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த வகையில் எங்கள் பகுதியில் கோவில்பட்டியில் 1972 - இல் விவசாயிகள் போராட்ட களத்தில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். பின் 1980 இல் எனது கிராமத்லே எட்டு பேர் பலி. 1972இல் அய்யனேரி கந்தசாமி நாயக்கர் முக்கியமானவர். அவருக்கு நினைவுக் கல்வெட்டு கோவில்பட்டி பொதுப்பணித்துறை பயணியர் விடுதி முன்பு எங்களைப் போன்றவர்களின் முன்முயற்சியின் விளைவாக அமைக்கப்பட்டது. அதை அகில இந்திய விவசாய சங்க தலைவர் பி.திம்மா ரெட்டி விவசாயிகள் திரள் மாநாடு போன்ற 5-7-1972 நிகழ்வில் திறந்தார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இரங்கல் தெரிவித்தார். அவரின் அமைச்சர் அவையில் இருந்த மோகன் குமாரமங்கலம் இரங்கல் ஆறுதல் கூற நேரில் வந்தார். அவர் அப்போது புதுச்சேரி தொகுதி மக்களவை உறுப்பினர்.






ஆனால் அது இன்றைக்கு இடிக்கப்பட்டு, கல்வெட்டுகள் எல்லாம் தனித்தனியாக எந்த மதிப்பும் இன்றி தரையில் சிதறிக் கிடக்கின்றன. அதன் பின் சாக்கடை வாய்க்கால்கள் செல்கின்றன. இது வேதனையான விடயம். என்னுடைய கிராமத்திலும், சாத்தூர் அருகிலே உள்ள வெத்தலையூரணி, விருதுநகர் மீசலூர் போன்ற இடங்களிலும் இதுவரை விவசாயப் போராட்டத்தில் ஏறத்தாழ 15 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், 1992 வரை - 22 ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 49 பேர் விவசாயப் போராட்டங்களின்போது காவல்துறையின் துப்பாக்கி ரவைக்கு பலியானார்கள். அந்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் வைத்தால் இப்படியான கவலையான நிலை. இது நாட்டுக்கு அவமானம் அல்லவா? 
இதற்கு என்ன பதில்?
பாரதி சொன்ன
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
என்ற வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
#KSR post 
25-9-2022

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...