Thursday, October 22, 2015

காங்கிரஸ் - “சினார் லீவ்ஸ்” : எம்.எல்.பொடேதார் - MLFotedar -Congress


காங்கிரஸ் - “சினார் லீவ்ஸ்” : எம்.எல்.பொடேதார் - MLFotedar -Congress ___________________________________________ காங்கிரஸ் தலைவர் பொடேதார் இந்திராகாந்தி அவர்களுக்கு நெருக்கமாக இருந்த முக்கியமான புள்ளி ஆவார். காங்கிரசின் இந்திராகாந்தி காலகட்டத்தில் நடந்த செய்திகளைத் தான் எழுதியுள்ள “சினார் லீவ்ஸ்” தன்னுடைய நினைவு நூலில் இதுவரை வெளிவராத செய்திகளை எழுதியுள்ளார். இந்த நூல் வருகின்ற 30ம் தேதி டெல்லியில் வெளியிடப்படுகிறது. அவசரநிலை காலகட்டம் முடிந்து, மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி நடக்கும்போது இந்திராகாந்தியுடன் இருந்த முக்கியத் தலைவர்களான பிரம்மானந்த ரெட்டி, சி.சுப்பிரமணியம் போன்றோர்கள் அவரைவிட்டு அகன்று திரும்பவும் காங்கிரஸ் பிளவுபட்டது. பின்பு இந்திராகாந்தி தலைமையில் ஒரு இயக்கம் புதிதாக கட்டமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து அன்றைக்கு இந்திராவை ஆதரிக்க பழ.நெடுமாறன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன், கே.டி.கோசல்ராம், எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தீர்த்தகிரி கவுண்டர், ஜீவரத்தின முதலியார், வி.ஜெயலட்சுமி போன்ற பல எம்.பிகள் மற்றும் அன்றைக்கு பழ.நெடுமாறன் அவர்களுக்கு ஆதரவாக இருந்த நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள், கா. பாரமலை, பொறையார் ஜம்பு, எம்.கே.டி சுப்பிரமணியம், தஞ்சை ராமம்மூர்த்தி, மணலி ராமகிருஷ்ண முதலியார், திண்டுக்கல் அழகிரிசாமி, தி.சு.கிள்ளிவளவன், அடியேன் (கே.எஸ்.இராதாகிருஷ்ணன்), மதுரை ஆ.ரத்தினம், நாகர்கோவில் முத்துக்கருப்பன், சிவகங்கை கு.சுப்பிரமணியம், மெர்சி கிரேசி, மதுரை ஒத்தக்கடை. முத்துக்கருப்பண்ண அம்பலம், திருச்சி. சாமிக்கண்ணு, கடலூர் பூவை ராமானுஜம், நாமக்கல் பீ.ஏ.சித்திக், முனுவர் பாட்சா, திருவல்லிக்கேணி திருமாறன், பூதலூர் முருகேசன், கயிலை இராமமூர்த்தி, தொட்டியம் செல்வராஜ், , வேடசந்தூர் வீரப்பன், போன்றவர்கள் கடுங்குளிரில் டெல்லி மாநகரில் முகாமிட்டு இந்திரா தலைமையிலான இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்றிருந்தோம். தமிழ்நாட்டின் சார்பில் நெடுமாறன் இந்திராைகாந்தியை ஆதரித்து, “ராமன் இருக்கும் இடமே அயோத்தி; இந்திரா இருக்குமிடமே காங்கிரஸ்” என்று வலியுறுத்திப் பேசினார். கவிஞர் கண்ணதாசன், துளசி ஐயா வாண்டையார் போன்ற பல தமிழகத்தின் முக்கியமானவர்கள் அன்றைக்கு இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தார்கள். மரகதம் சந்திரசேகர் அவர்களும் இந்திரா காந்திக்கு துணையாக நின்றார். மத்திய அமைச்சராக இந்திரா அமைச்சரவையில் இருந்த ஆர். வெங்கட்ராமன் பின்னாட்களில் குடியரசுத் தலைவரானார். அவர் நடுநிலை வகித்தார். இந்திராவை ஆதரிக்கவில்லை. சி.சுப்பிரமணியம் இந்திராகாந்தியின் தலைமையை எதிர்த்தார். அன்றைக்கு கருப்பையா மூப்பனார், சிவாஜி கணேசன், குடந்தை ராமலிங்கம் போன்றோர் அப்போது இந்திராவை ஆதரிக்கவில்லை. அச்சமயத்தில் அவர்கள் டெல்லியில் இந்திரா காந்தி கூட்டிய மாநாட்டுக்கும் வரவில்லை. இந்தமாநாட்டிற்கு டெல்லியிலிருந்து பொடேதார் , பகத், வசந்த சாத்தே , நரசிம்மராவ் போன்றவர்கள் இந்திரா காந்தி நடத்திய மாநாட்டுப் பணிகளைக் கவனித்தனர். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களை மாநாட்டில் அமரவைக்கவும், அதனை கவனிக்கவும் பொடேதாரோடு இரண்டுநாட்கள் சந்தித்துப் பேசவேண்டிய வாய்ப்புகள் கிடைத்தன. மெல்லிய குரலும், திட்டமிட்டு பணிகளைச் செய்பவராகவும், இளம்பச்சை, கரும்நீலம் என முழு கோட், பேண்ட்டுடன் காட்சி அளிப்பார். அவர் எழுதியுள்ள நூலில் இந்திராகாந்தியைப் பற்றி பல அறியப்பெறாத செய்திகள் உள்ளன. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் இந்திரா காந்தி காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு இந்து கோயில் மற்றும் மசூதிக்குச் சென்று வழிபாடு நடத்திய பின் காரில் ஓய்வு விடுதிக்கு திரும்பினோம். வருகையில், ‘‘கோயில் கருவறையில் இருந்தபோது வாடி வதங்கிய நிலையில் ஒரு மரம் காட்சி அளித்தது. அனேகமாக என் வாழ்நாள் எண்ணப்படுவதற்கான அறிகுறியாக கருதுகிறேன் என்று பெருமூச்சு விட்ட இந்திரா, பிரியங்கா காந்தி அரசியலில் ஈடுபட வேண்டும். எனது அரசியல் வாரிசாக பிரியங்கா உருவெடுத்தால், சக்தி வாய்ந்த தலைவராக அவரால் நீண்ட காலம் செயல்பட முடியும்’’ என்று என்னிடம் கூறினார். ‘‘நீங்கள் அரசியலுக்கு வருவதை இந்திரா ஒருபோதும் விரும்பியதில்லை’’ என்று சோனியா காந்திக்கு கடந்த 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், இந்திராவின் விருப்பத்திற்கு எதிராகவே சோனியா நடந்து கொண்டார். பிரியங்காவை அரசியலில் ஈடுபடுத்தும் நடவடிக்கையை 1991ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் எடுக்கவில்லை. கடந்த 1999ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததும், மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியை பிடிக்க சோனியா முயன்றபோது, அவ்வாறு நடந்து விடக்கூடாது என்று மறைந்த தலைவர் மாதவராவ் சிந்தியா மறைந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர் சிங்குடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். பழுத்த தலைவரான சீதாராம் கேசரியிடம், சோனியாவுக்கு வழிவிட்டு ஒதுங்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், காங்கிரஸ் தலைவராக சோனியா உருவானால், கட்சிக்காக கடுமையாக உழைத்த எனக்கு எந்த பலனும் இல்லை என்று சீதாராம் கேசரி வேதனையுடன் என்னிடம் கூறினார். அவர் கூறியது அப்படியே பலித்தது. அதேபோல், கடந்த 1990ஆம் ஆண்டு, மத்தியில் ஆண்ட வி.பி.சிங் அரசு கவிழ்ந்ததும், ராஜிவ் காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த வி.வெங்கட்ராமன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி, பிரதமராக ராஜிவ் பதவி ஏற்றார். உறவினர் அருண் நேருதான் ராஜிவ் காந்திக்கு மிகவும் பக்கபலமாக அப்போது விளங்கினார். அருண் நேரு தலையெடுப்பதை விரும்பாத சோனியாவும், சதீஷ் சர்மாவும் எடுத்த நடவடிக்கைகளின் பலனாக அருண்ங நேருவுக்கும் ராஜிவ் காந்திக்கும் இடையே பிளவு உண்டானது. அருண் நேரு நிச்சயமாக உங்களை பழி வாங்கியே தீருவார் என்று ராஜிவ் காந்தியை எச்சரித்தேன். அதுதான் போபர்ஸ் விஷயம் விஸ்வரூபம் எடுக்க காரணமாக அமைந்தது. பாபர் மசூதி மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நான் எச்சரிக்கை விடுத்தும், எனக்கும், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கும் முரண்பாடு இருந்ததால், எனது வார்த்தைகளுக்கு அவர் மதிப்பு அளிக்கவில்லை. இந்திரா கணித்தபடி அக்டோபர் 31ல் அவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு தகவல்களை பொடேதார், தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்து உள்ளார். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 22-10-2015 #KsRadhakrishnan #KSR_Posts #IndraGandhi #MLFotedar #CongressSplit #TamilNaduCongress

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...