Monday, December 14, 2020

 #சங்கராபரணி_ஆற்றில்_தடுப்பணை!

———————————————————



மழைநீரை சேகரிக்கும் பொருட்டு, சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டங்களில் ஆங்காங்கே குன்றுகளும், அதனையொட்டிய பகுதிகளில் சின்ன பாறைகளும் உள்ளன. இப்பகுதியில் ஆற்றுப்பாசனமும், வாய்க்கால் பாசனமும் இல்லாததால், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
அதற்கேற்றவாறு ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான ஏரிகள் அழிந்துவிட்டன. செஞ்சி, மேல்மலையனூர் தாலுகாவில் 338 ஏரிகள் உள்ளன. வல்லம் ஒன்றியத்தில் உள்ள 93 ஏரிகள் மூலம் 12 ஆயிரத்து 92 ஏக்கர் நிலமும், செஞ்சி ஒன்றியத்தில் 131 ஏரிகள் மூலம் 11 ஆயிரத்து 566 ஏக்கர் நிலமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 114 ஏரிகள் மூலம் 10 ஆயிரத்து 471 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரிகளுக்கு மழைநீர் வருவதற்கும், ஏரி நிரம்பும்போது உபரி நீர் வீணாகாமல் அடுத்துள்ள ஏரிக்கு செல்லவும் திட்டமிட்டு வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன.
பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரும் வீணாகாமல் உபரி நீர் ஓடை வழியாக ஆற்றில் கலக்கும்படி வாய்க்கால்கள் அமைத்தனர். அதன்பின்னர், வாய்க்கால்களும், ஏரிகளும் ஆக்கிரமிப்பினால் அழிந்து ஏரி பாசனம் குறைந்து வருகின்றன.
இந்த பகுதி ஏரிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பாக்கம் மலைக்காடுகள் உள்ளன. இங்கு உருவாகும் வராக நதியும், மேல்மலையனூர் ஏரியின் உபரி நீர் வெளியாகும் இடத்தில் உருவாகும் சங்கராபரணி ஆறும் முக்கியமான நீர் ஆதாரங்கள். ஏரிகளுக்கு தண்ணீரை திருப்புவதற்காக வராக நதி மற்றும் சங்கராபரணி ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இதில், கூடப்பட்டு, செவலபுரை, அணைகள் முக்கியமானவை. கூடப்பட்டு அணையில் இருந்து சிங்கவரம், மேலச்சேரி, சிறுகடம்பூர், குப்பத்து ஏரி, நாட்டேரி ஏரிக்கு தண்ணீர் செல்லும்படி 13 கி.மீ தொலைவில்வாய்க்கால்அமைத்துள
ளனர்.இதன்மூலம் 510 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. செவலபுரை அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியத்தில் உள்ள மேல்கால்வாய், நெகனூர், பெரும்புகை உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்கு 16 கி.மீ தொலைவில் வாய்க்கால் அமைத்துள்ளனர். இந்த 15 ஏரிகள் மூலம், 1440 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மழை காலத்தில் வெள்ளம் திரண்டு ஓடும் சங்கராபரணி ஆறு அடுத்த சில மாதத்தில் வறண்டு போகும். அதிக மழை பொழிந்தும் அடுத்த சில மாதங்களிலேயே ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள கிணறுகளும் தண்ணீர் இன்றி வற்றிப்போகும். செஞ்சி பகுதியின் நீர் வளத்தை பாதுகாக்க சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுப்பணித் துறை நீர்பாசனப் பிரிவினர் கடந்தாண்டு சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்தி பல மாதங்கள் ஆகியும், தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.
13-12-2020.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...