Monday, May 1, 2023

‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்’

'#பாஞ்சாலங்குறிச்சி வீர
சரித்திரம்’ 
————————————-
 எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் அடங்கிய குழு  ஆய்வு செய்தபோது, கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்தது குறித்தான வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வரலாற்றுத் தகவல்களில் 20.10.1799 தேதியிட்ட செப்புப் பட்டயம் ஒன்று உள்ளது. இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் கும்பினியரின் ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன் என்பவர்.




அதில், 
‘கும்பினியார் உத்தரவுப்படி திருநெல்வேலி சீமைகளில் எனது பாளையத்தை இழக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான் கும்பினியாரிடமிருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததால், இவர்களின் பாளையப்பட்டுகளை கும்பினியார் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும் காரியஸ்தனுமான சவுந்தர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது. 
நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களையும், சில முக்கியமான மனிதர்களையும் அவரவர் பாளையப்பட்டுகளில் இருந்து நீக்கி சென்னை பட்டணத்துக்கு அனுப்பும்படியான சூழலும் உண்டானது. 
இந்த பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்து, அதில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், குடியானவர் கைகளில் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்யும் சூழலும் உண்டானது. இது குறித்து முன்பே விளம்பரம் செய்து சனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேஜர் பானர் மேன் துரையவர்கள் நிமித்தமாக இன்னுஞ் சில காரியங்கள் இந்த விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. 
அதாவது, இனிமேல் எந்த பாளையக்காரனும் கோட்டை கொத்தளங்கள் போட்டாலும், பீரங்கிகள், ரேக்குலா வெடிமருந்துகள் வைத்திருந்தாலும், இத்தியாதிகளைச் சம்பாதித்தாலும் அவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளை இழப்பர். அவர்களின் பாளையப்பட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தோணியபடி தண்டிக்கப்படுவர்.

சீமைக்கு நலம் ஏற்படும் வண்ணம் மேலே எழுதப்பட்டிருக்கக் கூடிய சட்டங்களைச் சகல சனங்களும் இனிமேல் என்றென்றும் அறிந்து மனதில் வைத்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் செப்புத் தகட்டிலே எழுதப்பட்டு அந்தந்த பாளையப்பட்டுகளின் தலைமையான கிராமங்களில் பிரபலமான இடங்களில் அடித்து வைக்க உத்தரவிடப்படுகிறது’  
 என்பன போன்ற வாக்கியங்கள் அந்த செப்பு பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன. இச்செப்பேடு வழியாக ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

இதை குறித்த சில குறிப்புகள் நான் தொகுத்த ஜெகவீரபாண்டியனாரின் 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்’ த்தில் சொல்லியுள்ளேன்.

#ஜெகவீரபாண்டியனாரின் '#பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம் ‘

#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட், 
#ksrpost
1-5-2023.


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...