Thursday, August 10, 2023

#*1989 ஆம்ஆண்டு மார்ச் 25ஆம் தேதியில் ஜெயல்லிதாபுடவை*…… #*சட்டமன்றத்தில் நடந்தது என்ன*? *நேரில் பார்த்தது*….



—————————————
பிரதமர் ராஜீவ் அ.தி.மு.கவுடன், கூட்டு வைத்து நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்திருந்தத நிலை.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 23ம் தேதி இரவும் 24ம் தேதி  இரவும் கூட்டப்பட்டனர். 25ம் தேதி சட்டசபையை நடக்கவிடக்கூடாது என்று, கே.கே. எஸ்.எஸ்.ராமசந்திரன்,திருநாவுக்கரசும் பொறுப்பேற்று திட்டத்தை உருவாக்கினர்.



வட சென்னை மதுசூதனன், தென் சென்னை ஏ.வி. கிருஷணமூர்த்தி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
கறுப்பு நாளன்று கண்டது!
மார்ச் 25ம் காலை 9 மணிக்கே – கிட்டதட்ட 500 அ.தி.மு.க. கோட்டை வளாகத்தில் காணப்பட்டனர்.
தி.மு.கவினரும் இருநூறு பேர் 11 மாடிக்கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தயார் நிலையில் இருந்தனர்.
ஏ.வி. கிருஷ்ணமூர்த்தி – மதுசூதனன் நான்கு வேன்களிலும் இரண்டு கார்களிலும் நாலு ஆட்டோக்களிலும் மேலும் பல சரியாக 10 மணிக்கு கோட்டை வளாகத்தில் வந்திறங்கினர்.
அவர்களெல்லாம் “ஜெ.”வை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்று காவலர்கள நினைத்துவிட்டனர்.

ஏழெட்டுக் கார்கள் புடைசூழ, கான்டெசா காரில் தங்க ஜரிகை பார்டர் போட்ட கறுப்பு நிற சில்க் புடவை கட்டி, லேசாக புன்னகைத்தபடி வந்திறங்கினார் ஜெயலலிதா. அப்போது மணி 10.50. உடனே அவர் நேராக அவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தார். அவரது கட்சி எம். எல்.ஏக்களில் ஒருவரைத் தவிர – எல்லோரும் ஆப்சென்ட் ஆகாமல் முன்கூட்டியே வந்து அமர்ந்திருந்தனர்.
காலை 11 மணி..
சபாநாயகர் தமிழ்க்குடிமகன் தனது இருக்கைக்கு வந்தார். சபை அமைதியாக இருந்தது.  வழக்கம்போல குறள் ஒன்றை வாசித்தார், அவர். உடனே சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து “ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரத்தில் சென்னை நகர போலீஸ் கமிசனர் துரை, சபையின் உரிமையை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கலைஞரின் தூண்டுதல் பேரில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, முதல்வர் மீது உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா எழுந்து, “முதல்வர் மீதும், போலீஸ் கமிசனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொடுத்துள்ளேன். எனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. முதல்வரும் அவரது அமைச்சரவையும், பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்புத் தீர்மானத்தையும் கொண்டு வருகிறேன்” என்று பேசினார்.
உடனே பி.எச். பாண்டியன் எழுந்தார்.
கலவரம் நடக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்த பாண்டியன், “வேட்டி உருவல் – ஜட்டி நழுவல்” நடந்துவிடக்கூடாது என திட்டமிட்டு, வழக்கத்துக்கு மாறாக சபாரி உடையில் வந்திருந்தார்.
அவர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கியும், தி.மு.கவுக்கு ஆதரவாகவும் வாதத்தை அடுக்கி, ஆளும் கட்சியைச் சில்லிடவைத்து, ஜெயலலிதா தரப்பினரை படு சூடாக்கினார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபாநாயகர், பாண்டியனை உட்காரவைத்தார். சட்டசபையின் மொத்த குழப்பத்திற்கும் இதுவே துவக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள உரிமைப்பிரச்சினை குறித்து அலசி ஆராய்ந்து திங்கட்கிழமை கூறுவதாகவும், முதல்வர் பட்ஜெட் உரையை வாசிக்கலாம் என்றும் கூறினார் சபாநாயகர்.  முதல்வர் கருணாநிதி, “பட்ஜெட்” உரையை வாசிக்கத்துவங்கினார்.
உடனே ஜெயலலிதா எழுந்து ஏற்கெனவே எழுதி வைத்திருந்த ஒரு அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். “முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னவுடன், கருணாநிதி “மைக்”கைத் தனது கையால் மூடிக்கொண்டு ஏதோ சத்தமாககூறினார்.
கோபி அ.தி.மு.க. உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன், முதலமைச்சர் கையில் இருந்த பட்ஜெட் உரை காகிதத்தை தாவிச்சென்று பறித்து கிழித்து எறிந்தார்.
அந்த அமளியில் முதல்வரின மூக்குக்கண்ணாடி உடைந்தது. தி.மு.க. அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன். முத்துராமலிங்கம்,  கோசி.மணி, மு.கண்ணப்பன் இவர்களுக்கு பின்னடி இருந்த துரை முருகன் ஓடி வந்தார் மற்றும் தி.மு.க. எம். எல்.ஏக்கள் – அ.தி.மு.கவினர் பக்கம் ஆக்ரோசமாக வேட்டியை மடிததுக்கட்டி முஷ்டியை உயர்த்தினார்கள். அன்று
பார்வையாளர்கள் மாடத்திலிருந்து, கோவில்பட்டி தொகுதியில் 1989 இல் திமுக வேட்பாளராக வெற்றி வாய்ப்பு  இழந்து நிலையில் பார்த்தேன். இதுதான் அன்றைய நிலை. முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள், முரசொலி மாறன், மாறனின் துணைவியார் ஆகியோர் சபையின் பரபரப்பான நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ  35 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று கே.கே. எஸ்.எஸ்.ராமசந்திரன் திமுகவில் ஸ்டாலினின் நம்பிக்கை பெற்று நாட்டாமை செய்கிறார்.திருநாவுக்கரசும்  காங்கிரஸ் கட்சியில் ….. இன்று, தலைவர் கலைஞரின் நம்பிக்கையை பெற்ற எங்களை போன்றவர்கள் எங்கோ?
இதுதான் அரசியல்…..
இன்றும் பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் இதற்கு சாட்சி.

#ஜெயல்லிதாபுடவை……#1989இல்
#சட்டமன்றத்தில்_என்ன_நடந்தது? 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-8-2023

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...