Friday, October 24, 2014

தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா

தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா
-------------------------------------------------------------------
நேற்று (02.10.2014) வெளிவந்த ‘தி இந்து’ தமிழ் பதிப்பில், திரு. எஸ்.இராமகிருஷ்ணன் ‘தி இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ ஆங்கில ஏடு பற்றி பதிவை செய்துள்ளார். இல்லஸ்டிரேட்டட் வீக்லி படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். மறைந்த குஷ்வந்த் சிங் போன்ற நாம் விரும்பும் படைப்பாளிகள் இந்த இதழின் ஆசிரியர்களாக பணியாற்றி உள்ளனர். இந்த ஏடு 1990களின் துவக்கத்தில் நின்று விட்டது. கடைசி பத்தாண்டுகளாக வெளிவந்த இதழ்களை பைண்டு செய்து வைத்துள்ளேன். அவற்றை எடுத்து திரும்ப படிக்கும்பொழுது, ஆர்.கே. நாராயணன் படைப்புகளை படிப்பது போல, ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.

இந்த இதழின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளேன். பிரிட்டிஷ் நந்தி இல்லஸ்டிரேட்டட் வீக்லியின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த காலத்தில், நண்பர் கே.பி. சுனில், தமிழ்நாடு சிறப்பு செய்தியாளராக இருந்தார். கே.பி.சுனில், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சசிகலா நடராஜனின் நடவடிக்கைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். இது நடந்தது 1992ம் ஆண்டு என நினைக்கின்றேன். அந்த கட்டுரையை எதிர்த்து மான நஷ்ட வழக்கு ஒன்றை சென்னை எழும்பூர் பெருநகர் முதன்மை நீதிமன்றத்தில் எம்.நடராசன் தொடுத்தார். அந்த வழக்கில் ஆஜராகி, நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு, நந்தி மற்றும் கே.பி.சுனில் விடுதலை ஆனார்கள்.


பிரிட்டிஷ் நந்தி சென்னைக்கு வந்தால் என்னை சந்திப்பதும் உண்டு. அவர் திரைத் துறையிலும், இலக்கியத் துறையிலும், ஆங்கில கவிதை உலகிலும் சிறந்து விளங்குகிறார். அவர் காலத்தில், இல்லஸ்டிரேட்டட் வீக்லி டேபிளாய்ட் சைசுக்கு மாற்றப்பட்டது. இந்த ஏடு வெளிவராமல் போனது, அதை வாசிக்கும் இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் இழப்பாக அமைந்தது.

No comments:

Post a Comment