Wednesday, January 16, 2019

மாட்டுப் பொங்கல் #மாடுகள்

மாட்டுப் பொங்கல் -1
———————-
'விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து 
இரு நில மருங்கின் மக்கட்கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்த தன் தீம்பால் 
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந்து ஊட்டும்
ஆவொடு வந்த செற்றம் என்னை'
பசுக்களை வேள்விக்காக இட்டுச்செல்வோரை வழிமறித்து...... (மணிமேகலை)

ஆபுத்திரன் (பசுவின் புதல்வன்), அவன் அனாதைக்குழந்தையாய் தெருவில் யெறியப்பட்டு #பசு வழங்கிய பாலில் வளர்ந்தவன். பசுமேய்ச்சலுக்கு விடப்பட்ட நிலத்தில் தன்னிச்சையாய் வளர்ந்து புல்லை உண்டு, தன்னுள் சுரக்கும் பாலைத்தன் கன்றுக்கு மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் ஊட்டும் பால் மாடுகள் . கிராமங்களில் வாழ்வியலாக இருந்தது #கால்நடை வளர்ப்பும்,பால்,தயிர், வெண்ணெய்  உயிர் உரங்களும் என சகலமும் 






முயற்சியின்றி எளிதாக கிடைத்தது.

மாட்டுப்பொங்கல்-2 -மாடுகளைப் பற்றியதான சில நாட்டுப்புறத் தரவுகள்.
———————————————

#மாடுகள்
———-—
(மாடு வளர்கிறதே வெட்டி திங்கதானா.......?)

#கழுகுமலை, (கோவில்பட்டி அருகே)
#மத்தியசேனை(சிவகாசிஅருகே)
மாட்டுச் சந்தைகளுக்குக் போனால் மாடுகளைப் பற்றியதான சில தரவுகளை பலர் கூறக் கேட்டது உண்டு. அதுகுறித்தான விவரங்கள்.

நிறம் வகைகள்
-------------------
அத்திக்காய்ப்புல்லை

கரிசமால்

கருஞ்சிவலை

கருத்தச்செம்பரை

கருப்பு

கருமயிலை

கருவெள்ளை

காரி

குரால்

சந்தனப்புல்லை

சுத்தவெள்ளை

செந்தாலை

கண்ணாடி மயிலை

கருங்குரால்

செந்தாரை மயிலை

செம்பரை

செவலைச்செம்பரை

செவலை

நாவெள்ளை

பஞ்சகல்யாணி

புல்லை

புளியம்போர்ச்செம்பரை

மயிலை

வெள்ளை

காளை மாட்டுக் கொம்பு வகைகள்
-------------------------------------
அலைகொம்பு

ஆட்டுக்கொம்பு

காடுபார்த்த கொம்பு

கிளிக் கொம்பு

குத்துக் கொம்பு

கூடுகொம்பு

கொக்கரிக்கொம்பு

கொள்ளிக்கொம்பு

சுருட்டைக்கொம்பு

பூங்கொம்பு

பொத்தைக்கொம்பு

மட்டிக்கொம்பு

மாடக்கொம்பு

முன்கொம்பு

விரிகொம்பு

மாட்டின் லட்சணங்கள்
----------------------
சிறியவை ஐந்து - தலை, கொம்பு, தாடி, கோசம், வால்

பெரியவை ஐந்து - கண், நெஞ்சு, கழுத்து, எலும்புகள், கால்கள்

சுழிகள் (“சுழிசுத்தம்”)
--------------------------
அசைவுச் சுழி - சிமிளுக்கு திமில் உச்சியில் இருப்பது

அஞ்சி சுழி - முன்மண்டையிலிருந்து வால்வரை நடுமுதுகையொட்டி ஐந்து சுழிகள் இருப்பது விசேஷம்.

அஞ்சிசுழி மாடு கெஞ்சினாலும் கிடைக்காது.

இடிமேல்இடி கொடைமேல்க் கொடை - இந்தச்சுழி நெற்றியில் கீழும் மேலுமாக இருப்பது. இந்த மாடு வைத்துக்கொண்டிருப்பவர்கள் சிலருக்கு கஷ்டத்துக்கு மேல் கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது. சிலருக்கோ அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் வந்து குவிகிறது என்கிறார்கள்.

கால் விலங்கு - முன்முழங்காலின் அடிப்பாகத்தில் இருக்கும் சுழி

டமானச் சுழி - முதுகில் இரண்டு சுழிகள் இட வலப்புறமாக இரக்கும்

நச்சுழி - முதுகில் ஒரு சுழி, நல்ச்சுழி

பட்டரைச் சுழி - சிமிளக்குப் பின்பக்கம் இருக்கும்

பறவைச் சுழி - முன்கால்களின் தோள் புஜத்தில் இருபுறமும் இருக்கும். இந்த மாடு வேகமாய் இருக்கும்

பாசிபந்து - கொம்புக்கு பின்னால் பிடரியில் ஒரு சுழி இரப்பது இயற்கை. இதில் இரண்டு இருந்தால் பாசிப்பந்து சுழி

பாடைச் சுழி - முதுகில் இரண்டு சுழிகள் முன்னும் பின்னுமாக இருப்பது

பிடரிச் சுழி - கொம்புக்குப் பின்னால் இருக்கும் இயற்கைச் சுழி

பிடரி விலங்கு - கொம்புக்குப் பின்னால் இரு சுழிகள் முன்னும் பின்னுமிருப்பது.

பூரான் சுழி 1 - கொம்பு முதுகில் வலதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும் இருப்பது

பூரான் சுழி 12 - முதுகில் இடதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும்

பெண்டிழந்தான் - வாலின் அடியில் தானவாய் ஓரத்தில் இருக்கும் சுழி.

மண்டை விலங்கு - முன்நெற்றியில் இடவலமாக இரு சுழிகள் இருப்பது

முளை பிடுங்கி - முன்கால் ஒன்றிலோ இரண்டிலுமோ கும்பிற்கு மேலே சுழி சுழித்து மேல்நோக்கி இருப்பது

மேக்காச் சுழி - சிமிளுக்கு முன்பக்கமாக இருப்பது

நிர்க்குத்து - நீர்த்தாரைக்கு நேராக முதுகில்இருப்பது. இதை தட்டினால் மாடு நீர்விடும் என்பார்கள்

நெத்திச்சுழி - நெற்றியில் ஒரு சுழி இருப்பது.

மாட்டின் சுழிகளும், குணங்களும்.
————————————————
தலையெழுத்து நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்பது போல் மாடுகளை வாங்கும் பொழுது அவற்றின் சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்பது விவசாயிகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
 உழவுத்தொழிலுக்கு அச்சாணியாக விளங்குவது எருது மாடுகளே ஆகும். எனவே தான் உழவர்கள் தங்களிடம் உள்ள எருதுகளில் தீய சுழிகள் இல்லாமல் இருப்பவைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்ப்பர். மேலும் பால் மாடுகளிலும் சுழி பார்வைகள் உண்டு.

மாடுகளுக்கு நன்மை தரும் சுழிகள் :

கோபுர சுழி :

மாடுகளில் திமிலின் மேலும், திமிலுக்கு முன் புறத்திலும் (திமிலின் முன்புறம் எதிரே நின்று பார்த்தால் தெரியும் படியாக இருப்பது) அல்லது திமிலும், முதுகும் சேருமிடத்தில் இருப்பது கோபுரச் சுழியாகும்.
இதை ராஜசுழி என்றும் கூறுவர். இச்சுழி உள்ள மாடுகளை வளர்ப்போர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர் என்பர்.

லட்சுமி சுழி :
மாடுகளின் கழுத்தின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி காணப்படும் சுழி லட்சுமி சுழியாகும்.
இந்த சுழி உள்ள மாடுகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக் கூடியது என கூறுவர். ஆனால் இத்தகைய மாடுகள் கிடைப்பது அரிது.

தாமணி சுழி :
மாட்டின் முதுகுத்தண்டில் நீளமாக ஒரு கோடும், கோட்டின் இரு பக்கங்களிலும் இரண்டு சுழிகளும் இருந்தால் அது தாமணி சுழி எனப்படும். 
அல்லது முன்னங்கால்களுக்கும், கழுத்துக்கும் இடையில் அவை தாடியின் இருபுறங்களிலும் இருக்கலாம். 
இச்சுழி உள்ள மாட்டை வாங்குபவர்ககள் மேலும் ஏராளமான மாடுகளை வாங்கக்கூடும் என்று கூறுவார்கள்.

விரிசுழி :
மாட்டின் முதுகுத்தண்டின் இடது பக்கத்தில் மட்டும் இருக்கும் சுழி விரிசுழி எனப்படுகிறது.
இதை வாங்கியவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறுவார்கள்.

இரட்டைக் கவர் சுழி:
மாட்டின் முன்னங்கால் முட்டியின் இருபக்கத்திலும் இரண்டு பிளவுபோல் இருப்பது இரட்டைக் கவர் சுழியாகும். 
இது வாங்குபவர்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும்.
இரண்டு பிளவு இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் பிளவு இருந்தால் வீட்டில் இருக்கும் எல்லா மாடுகளுக்கும் இது தீமையாக அமையும் என்பர்.

பாசிங் சுழி :
மாட்டின் இரு கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டைச் சுழியாக இருந்தால் அது பாசிங சுழி அல்லது ஜோடி சுழி எனப்படுகிறது. இச்சுழி உள்ள மாடுகளை வளர்ப்பவர்களுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தால் விரைவில் கல்யாணம் ஆகிவிடும் என்பர்.
மனைவியை இழந்தவராக இருந்தால் மறுமணம் செய்து கொள்ள நேரிடும் என்று கூறுவார்கள்.

ஏறுபு ரான் சுழி :
மாட்டின் முதுகின் மத்தியில் பு ரான் போன்று முடி பிளவு இருக்கும். அந்த சுழி முன்பக்கமாக வந்து முடிந்திருந்தால் அது ஏறு பு ரான் சுழி எனப்படும். 
இச்சுழி உள்ள மாடு வளர்த்தால் சகல செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்படுகிறது. 

மாட்டின் வயது பற்றி
--------------------

காளைக்கன்று மூன்று வருடங்கள் கழித்துப் பல்ப்போடும். பல்ப் போட்டிருச்சா? என்று கேட்பார்கள் இது காளையின் ஒரு பிரயாத்தைக் குறிப்பது.

கீழ்வாயில் பால்ப்பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் பல்ப் போட்டிருக்கிறது என்பது. பிறகு அதை ஒட்டி வருசத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். நாலு வருசங்களில் 8 பற்கள் போட்டுவிடும். இதை கடை தேறீச்சி என்பார்கள்.

இதன்பிறகு, ஒவ்வொரு வருடத்தையும் ஒருசோடு அல்லது உழவு என்று குறிப்பிடுவார்கள். ஒங்க மாட்டுக்கு இப்போ வயசு ரெண்டு உழவு இருக்குமா? என்று வினவுவார்கள்.

சந்தையில் மாட்டை விலை பேசும்போது,,,
-------------------------------------

சம்சாரிகளின் மாட்டை தரகர்களும் வியாபாரிகளும் கைபோட்டு விலை பேசுவார்கள். கைகளை துணியால் மூடிக்கொண்டு

ஐந்து விரல்களைக் கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய், அதையே ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய் என்றும், விரல்களிலுள்ள ஒவ்வொரு வரையும் 10 ரூபாய் என்றும் அவர்களுக்குள் ஒரு நிர்ணயம் உண்டு.

இவ்வளவுண்ணா கொடுத்துறலாமா

இல்லெ; இதுக்கு குறைஞ்சி முடியாது

சரி; இதே இப்பிடிவச்சி முடிங்க

இந்த மாதிரி பேச்சொலி தான் மற்றவர்களுக்கு கேட்குமே தவிர விலை தெரியாது.

இப்படி இவர்கள் மாட்டின் விலையைப் பேசும்போது உச்சரிக்கும் சில ஒலிக்குறிப்புகள்
தட்டை
தாளு
சவடு
இவைகள் என்ன தொகையைக் குறிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
மாடு வளர்கிறதே வெட்டி திங்கதானா.......?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-1-2019

#KSRPostings
#KSRadhakrishnanPostings

#நாட்டு_மாடுகள்
#மாட்டுப்பொங்கல்

விவசாயிகளுக்கு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...