Wednesday, August 24, 2016

நீதித்துறையில் மாற்றம் தேவை!

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் நடத்தியப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து இன்றைய (24.8.2016) தினமணி நாளிதழில் "நீதித்துறையில் மாற்றம் தேவை!" என்ற தலைப்பில் தலையங்கப் பக்கத்தில் வந்துள்ள எனது பத்தி....

நீதித்துறையில் மாற்றம் தேவை!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

வழக்கறிஞர் தொழிலை நோபல் புரொபஷன் என்ற ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்கறிஞர்களை லேனர்ட் ஃபிரெண்ட் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இன்றைக்கு சிக்கல். துலாக்கோல் நிலையில் இயங்க வேண்டிய நீதிமன்ற வளாகத்தில் வேலை நிறுத்தங்கள். மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களே இயங்கவில்லை என்றால், ஜனநாயகத்தில்தான் கோளாறு. நெடிதுயர்ந்த கம்பீரமான நீதிமன்ற கட்டிடங்களில் டவாலிகள் முன் செல்ல, கருப்பு அங்கிகளோடு காலனிய காலத்து பந்தாவோடு பவனிவந்த நீதிபதிகள், நீதிமன்ற அரங்கங்களுக்கு செல்லாமல் கோர்ட்டில் உள்ள தங்கள் அறையிலேயே எந்த பணியும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார்? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சில நீதிபதிகள் குழுவின் அறிக்கையால் பிரச்சினைகள் வந்தன. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டாலோ, ஊர்வலம் சென்றாலோ, நீதிபதிகள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை சுமத்தினாலோ, அவர்களுடைய வழக்காடும் உரிமையை திரும்பப் பெறலாம் என்று சட்டத்தில் சில விதிகளை திருத்தி அரசு இதழில் வெளியிடப்பட்டது. அவ்வாறு வழக்கறிஞர்கள் தவறு செய்தாலும் கூட முறைப்படி நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதை நீதிபதிகள் கையில் எடுத்துக்கொண்டு சிக்கலை உருவாக்குவது நியாயமற்ற செயலாகும். இதற்காக கடந்த 60 நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் போராடினர். 168 வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு அந்த உத்தரவு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு நீதித்துறையில் ஊழல்கள் நடக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதையும் கூட வழக்கறிஞர் வெளிப்படுத்தினால் பணியிலிருந்து நீக்கம் செய்கின்ற அவல நிலை. நீதித்துறையில் வெளிப்படையாக தெரியக்கூடிய அளவில், ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஊழல். இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகளின் ஊழல் என்பதெல்லாம் தெரிந்தும் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுகின்றனர்.  இந்திய சட்டங்களுக்கு முழுமையான வியாக்ஞானம் செய்யும் ஏகபோக உரிமையும், தகுதியும் தங்களுக்கே உண்டு என்று நீதிபதிகள் நினைப்பது சட்டத்தின் ஆட்சியில் மமதையான பேடித்தனமாகும். நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதற்கு உரிய நிலைமைகளையும் சட்டத்தின் நிலையையும் எடுத்துக் கூறுவது வழக்கறிஞர்கள்தான். இந்த இருவருடைய கடமை, ரயில் பயணிக்க இரண்டு தண்டவாளங்களைப் போன்றது ஆகும். வழக்கறிஞர்களும், நீதிபதிகளும்தான் நீதித்துறையின் மாண்பை பாதுகாக்கவேண்டிய இரண்டு கண்களாகும். 

போராடும் வழக்கறிஞர்களை அழைத்து பேசி நீதித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்காமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

வழக்கறிஞர்களாக இருந்த சி.பி.ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஆசாரியார், ராஜா ஐயர், எஸ். மோகன குமாரமங்கலம், வி.கே. திருவேங்கடஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எல். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ்.செல்லசாமி, டி.செங்கல்வராயன், பி.ஆர். டோலியே இப்படி கீர்த்திப் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையை தமிழகத்தில் மேம்பட செய்தார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய – மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை பெற்றவர்களும் உண்டு. இப்படியான ஆளுமைகள் உலாவிய சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றது.


சென்னை உயர்நீதிமன்ற பிரமிக்க செய்யும் கட்டிடத்தை குறித்து செஞ்சி ஏகாம்பர முதலியாரால் ஐகோர்ட் அலங்கார சிந்து என்று பாடி,  1904இல் பூவிருந்தமல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்ட சிந்துவில் உள்ள வரிகள்:

“அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தை போல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதரும்படி தங்கத்திலூட்டி…”

சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக நித்தமும் போராட்டங்களும், கோஷங்களும் நடத்தி வருகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பதில் நியாயங்கள் இல்லை. பாதிக்கப்படுபவர்களுக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இன்றைக்கு பாதிப்பு. இது மட்டுமல்லாமல் நீதித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுக்கடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பாமல் ஆண்டாண்டு காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1016. இதில் கிட்டத்தட்ட 443 இடங்கள் காலியாக உள்ளன.  கீழமை நீதிமன்றங்களில் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன.  பின் எப்படி வழக்குகள் பைசல் ஆகும். வழக்குகள் தேங்கிதான் கிடக்கும். ஹைதராபாத்தில் தெலுங்கானா நீதிபதிகள் ஒரு நாள் சேர்ந்தே விடுமுறை எடுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராடினார்கள். 14 நீதிபதிகள் ஹைதராபாத்தில் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் தெலுங்கானாவில் நீதித்துறைப் பணியாளர்களும் இக்கிளர்ச்சியில் இணைந்து போராடினர்.  நீதிபதிகள் போராடுவது ஒன்றும் புதிதல்ல. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துக்கூட தஞ்சை மாவட்ட நாச்சியார்கோவில் நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர் தாவுத்ஷா ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியதெல்லாம் செய்திகள்.

அன்னா ஹசாரே போராட்டம் 2011ல் நடந்தபொழுது அஜய் பாண்டே என்ற சிவில் நீதிபதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் எந்த விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் வெளிப்படையாக கூறினார். 

நிர்பயா என்ற டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி 2013ல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீர் நானும் இந்தப் பிரச்சினையில் தெருவில் வந்து போராட நினைக்கின்றேன். என்னால் முடியவில்லை. மாணவி நிர்பயாவின் கொலைக்கு நியாயம் கேட்டு போராடுவதை வரவேற்கவேண்டும் என்று வெளிப்படையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியிருந்தார். இம்மாதிரியான போராட்டங்கள் துருக்கியிலும், ஏன் எகிப்திலும் கூட நடந்தேறியுள்ளது. எகிப்தில் 2750 நீதிபதிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதன் விளைவாக அவர்கள் நீதிபதிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

தமிழகத்திலும் நீதித்துறையில் போராட்டங்கள் தொடர்கின்றன. தவறான சட்டங்கள் வழக்கறிஞர்களின் உரிமைகளை மறுக்கும்பொழுது போராடிதானே தீரவேண்டும். அதுதான் தமிழகத்தில் நடக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பருச்சா, நீதித்துறையில் 20 சதவீத நீதிபதிகள் ஊழலுக்கு துணை போகின்றனர் என்று 23.12.2001ல் வருத்தத்துடன் தெரிவித்தார். 2005ல் செதல்வாட் சொற்பொழிவிலும் அன்றைய தலைமை நீதிபதி ஆர்.சி. லிகோடி நீதிபதிகள் நடத்தை விதிமுறைகளை மீறாதவர்கள் என்று சொல்ல முடியாது. நீதிபதிகளின் மனைவி, மகன், மகள், மருமகன் போன்றவர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணி செய்து ஏதோ ஒரு வகையில் நீதியை திக்குமுக்காட வைக்கின்றனர். இம்மாதிரி நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் தற்போது அதாவது 2005ல் 130 இடங்களுக்கு மாற்றவேண்டிய நிலை இன்றைக்கு உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கர்நாடகம், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றங்களில் இம்மாதிரியான நீதிபதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். லகோதி மேலும் லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டு, அதிகார வரம்பு மீறல் போன்றவற்றில் நீதிபதிகள் பலர் பதவிநீக்கம் செய்யப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பலர் கைது செய்யப்படுகின்றனர். நீதிபதிகள் கிளப் ஒன்றில் இலவச உறுப்பினராக சலுகைப் பெற்றதற்காக தலைமை நீதிபதி தட்டிக் கேட்டால் அனைத்து நீதிபதிகளும் கூட்டாக விடுமுறையில் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. இப்படியெல்லாம் வேதனையான காட்சிகள் நீதித்துறையில் நடந்தேறுகின்றன என்று லகோதி தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கையூட்டுத் தருவதாக கட்சிக்காரர்களை ஏமாற்று வேலையும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நீதிபதிகளை அணுகக்கூடிய நிலைமை வந்துவிட்டது என்றும் வெளிப்படையாக விவாதங்கள் நடக்கின்றன.  இப்படியான புரையோடிய நிலையில் நீதித்துறை.  120வது சட்டக் கமிஷன் அறிக்கையின்படி 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்றைக்கோ 10 லட்சம் மக்களுக்கு 14 நீதிபதிகள் என்ற அளவே உள்ளது. 3 கோடிக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 81 லட்சம் வழக்குகள் 5 ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு சொல்லாமலேயே தூங்குகின்றன. 

இவை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கவேண்டும் என்ற சட்டக்கமிஷனின் பரிந்துரை நிலுவையில் உள்ளது.  கபாலி, சல்மான்கான் பிரச்சினைகளில் உடனுக்குடன் தீர்வு ஏற்படுகின்றது. ஆனால் ராஜீவ் படுகொலையில் 7 பேர் விடுதலை 25 ஆண்டுகள் ஆகியும் தீர்வு எட்டாமல் சிறைக்கோட்டத்தில் வாடுகின்றனர். தீர்வும் நிவாரணமும் எட்டப்படவேண்டிய பலப் பிரச்சினைகளை நீதித்துறை புறக்கணிக்கின்றது.

நீதித்துறைக்கு தேவையான ஒதுக்கீடு தொகையும் மத்திய மாநில அரசுகள் ஒதுக்குவது இல்லை.  டெல்லியில் சமீபத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உரையாற்றும்போது, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை அரசுகள் நியமிக்காததை கண்ணீரும் கம்பளையுமாக எடுத்துரைத்தார்.

நீதிபதி கிருஷ்ணய்யர் இதைப்பற்றி குறிப்பிடும்போது "நாம் இன்றைய நீதிபதிகள் அமைப்பை முற்றிலும் மாற்றவேண்டும். அதன் தீர்ப்புகள் மாற்ற முடியாத புனிதம் கொண்டவை என்ற மூட நம்பிக்கையை அகற்றவேண்டும். நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பெரிய புனிதப் பிறவிகள் அல்ல. அச்சுறுத்தும் ஆடை, அடைமொழி, புறத்தோற்றம் ஆகியவற்றை புனிதத்தோற்றம் என்று கட்டமைக்கப்படுகின்றது. இவையும் சாதாரண மக்களை அச்சுறுத்தவும் செய்கின்றன. இன்னும் பிரிட்டிஷ் மகாராணி காலத்தின் மதிப்பீடுகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்மைகளை உறங்க வைப்பது நியாயம் கிடையாது. சட்ட விதிமுறைகளும், சிவில், கிரிமினல் சட்டங்களும், சிறை விதிகளும், காவல்துறை செயல்பாட்டு விதிகள் அனைத்தையும் டென்னிசும், மெக்கலேயும் உருவாக்கியது. இவை நாட்டு விடுதலைக்குப் பின் நம்முடைய தேவைக்கேற்ப நாம் மாற்றிக்கொள்ளவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நீதித்துறை பல புரட்சிகரமான நியாயமான மாறுதல்களுக்கு உட்படுத்தவேண்டும். பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்து நீதிக்கு நாம் மரண சாசனம் எழுதும் துணிவைப் பெறவேண்டும். அதற்கு பதில் உயிர்துடிப்புமிக்க மக்கள் நல புதிய புரட்சி நீதியை நிலைநாட்டுவோம்" என்று கூறியுள்ளார்.

இதுதான் இன்றைய நீதித்துறை.  யாரும் புனிதர்கள் அல்ல.  எல்லோரும் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்தான். எல்லாவற்றிலும் மாற்றங்கள் உண்டு. அந்த மாற்றம் நீதித்துறையிலும் வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் உள்ள வழக்கறிஞர்களை அழைத்து பேசி தீர்வுகளை காணவில்லை என்றால் மக்களுக்கான நீதிகள் மறுக்கப்படும். இதை உணர்ந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கடமையாற்றவேண்டும் என்பதுதான் அனைவரின் அவாவாகும். 

நீதியை பரிபாலிக்கும் நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்களே நீதிக்காக போராடுகின்றனர்.

நீதித்துறைக்கே நீதியை வழங்குக!



No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...