Tuesday, April 10, 2018

முன்னாள் பிரதமர் போல் பேசாமல் தெரு சண்டை போடும் வாட்டாள் நாகராஜ் போன்று பேசும் தேவகவுடா.


முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் வகித்த பொறுப்புக்களுக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு சரியாக காவிரி பிரச்சனையை கையாண்டு இருக்கலாம். மூத்த அரசியல்வாதியாக நடந்துக் கொள்ள வேண்டிய அவரோ வாட்டாள் நாகராஜ் மாதிரி அல்லவா நடந்துக் கொள்கின்றார்? 


தமிழகத்தில் காவிரிநீர் பிரச்சனை பூதாகரம் எடுக்கும் போதெல்லாம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் கன்னட மக்களை தூண்டும் வகையில் பேசுவது கவுடவின் இயல்பு. நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில்" தமிழகத்தின் மிரட்டலுக்கு கர்நாடகம் படியக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்திற்கு இழப்பு என்று குறிப்பிடாமல் கன்னடர்களுக்கு இழப்பு என கன்னடர்களை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.

தேவேகவுடா, காவிரிப் பிரச்சினையில் 1995 வாக்கில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு எதற்கென்றால், நடுவர்மன்ற தலைவர் நீதிபதி *சித்த கோஷ் முகர்ஜி* தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஆய்வு நடத்தும் போது அவருக்கு தஞ்சை மாவட்ட கோவில்களில் பூர்ண கும்ப மரியாதையும், பரிவட்டமும் சூட்டினார்கள் என்ற நிலையில் அவரிடம் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்காதென்றும் சித்த கோஷ் முகர்ஜியை நடுவர் மன்ற தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேன்டி வீண் ஒப்பாரி வைத்து ஒரு அவசியமற்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 1996இல் பிரதமர் பொறுப்பையும் ஏற்றார். இந்தியப் பிரதமராக உறுதிமொழி எடுத்த தேவேகவுடா தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை எதிர்ப்பிரதிவாதிகளாக சேர்த்தவர். இந்தியப் பிரதமராக எப்படி உறுதிமொழி எடுக்க முடியும்? இது அரசியலமைப்புச் சாசனத்திற்கு விரோதமானது. 

இந்நிலையில்,நான் அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவேகவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என *Quo Warranto* ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஏன் என்றால் தமிழகத்தினையும் கேரளத்தையும்,புதுவையை எதிரிகளாக பாவிக்கும் ஒரு நபர் எப்படி இந்திய பிரதமராக இருக்க முடியும் என்ற வினாவை என்னுடைய ரிட் மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவேகவுடாவுக்கும், மத்திய அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பினார். 
இதை அறிந்தவுடன் அலறியடித்து பிரதமர் தேவேகவுடா நிலுவையில் இருந்த தனது மனுவை பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் இருந்து உடனே திரும்பப் பெற்றார்.

தேவேகவுடாவை 1996 டிசம்பரில்,உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் எல்லாம் ஒரு மனிதரா என்று நினைக்கத் தோன்றியது. என்னை நீக்கச் சொல்லி வழக்கு போட்டவர் நீங்கதானே என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார். 
மென்மையும், அடிப்படை நாகரிகமும் தெரியாதவர் ஒரு பிரதமராக உயர்ந்தார் என்ன செய்ய? 

மாநிலத் தலைமைச் செயலராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வு வட்டாட்சியர் போல நடந்து கொள்கின்ற பாணி தான் இவர் பாணி. அடிப்படை மனிதநேய குணங்கள் இல்லாத மனிதரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 

காவிரிப் பிரச்சனையில் ஒரு கட்சித் தலைவராகவோ, ஒரு முன்னாள் பிரதமராகவோ நடந்து கொள்கின்ற பாங்கு இல்லாமல் தரமற்ற முறையில் நடந்து கொள்கிறார். 

தேவேகவுடா முன்னாள் பிரதமர் என்ற அனைத்து சலுகைகளை பெற்றுக் கொண்டு கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜ் நடந்து கொள்வதைப் போன்று நடந்து கொண்டால் மத்திய அரசு தரும் சலுகைகளை பறித்து, திரும்ப பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்றன.
இனிமேலாவது தேசத்தின் முன்னாள் பிரதமர் என்பதையும் கட்சி தலைவர் என்பதையும் கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-04-2018

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...