Wednesday, July 11, 2018

அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்.

அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்.
-------------------------------------

பிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய ஞானமும் தெரியாத, காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களைப் பற்றி பிரம்மிப்பாக அப்போது பேசி வந்தார். 

உடனே மிஸ்டர், நீங்கள் எத்தனை வருடம் இந்த பத்திரிக்கைத் தொழிலில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்றார். மகிழ்ச்சி என்றேன். நான் அடுத்து அவரிடம், சென்னை ராஜதானியின் அன்றைய பிரிமீயர் (அதாவது முதலமைச்சர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பணிகள் தெரியுமா? என்றேன். தெரியாது. பெரைக் கேள்விப்பட்டுள்ளேன் என்றார். அவர் தானய்யா சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதற்காக அன்றைய பிரதமர் நேருவையே எதிர்த்து பேசினாரே. 

அதுமட்டுமல்லாமல், தனது பதவியையே துச்சமென்று தூக்கியெறிந்துவிட்டு வடலூர் வள்ளலார் மடத்திற்க்கு சென்றுவிட்டார். சரி. தமிழ்நாட்டு அணைகளை எல்லாம் திட்டமிட்டது  ,தமிழில் கலைகளஞ்சிய தொகுதிகளை,தமிழ் பயிற்சி மொழி அறிமுகம் படித்தியது ரெட்டியார் தானய்யா. விவசாய முதல்வர், சமூகநீதியின் முதல்வர், பாட்டாளியின் முதல்வர் என பெயர் பெற்றவர்களுடைய சாதனைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெயர் மட்டும் தான் தெரியும்னு பேசறீங்களே நீங்களெல்லாம் என்றேன். 
அடுத்து முதல்வராக இருந்த 

இராஜபாளையம் குமாரசாமி ராஜாவைப் பற்றி தெரியுமா? என்றேன். தெரியாது என்றார். அவர் நேர்மையின் முதல்வர். தனது கோடிக்கணக்கான சொத்துக்களை பொதுநலத்திற்காக அர்ப்பணித்தவரய்யா. அவர் ஒரிசாவின் கவர்னராகக் கூட பொறுப்பில் இருந்தாரய்யா. பண்டித நேரு அவரை அணுகிய போது அவரிடமே மறுத்து தனது ஊரில் பெரிய நூலகமும், கலைக் கூடமும், வேறு பணிகள் இருப்பதால் எனக்கு வேண்டாமென்று மறுத்தும், நேருவின் சலியாத வேண்டுகோளால் அந்த பதவியை ஏற்றார். தமிழறிஞர்களான கி.வா.ஜெகந்நாதன், மு.வரதராசனார், பெரியசாமி தூரன், ஜெகந்நாத ராஜா மற்றும் இசைவாணர்களோடு விவாதித்துக் கொண்டே இருப்பது இவருடைய வாடிக்கை. கவர்னராக இருந்த போது ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பிறமாநிலத்தில் தமிழில் உரை நிகழ்த்திய ஒரே மாமனிதர் குமாரசாமி ராஜா. 
ஓமந்தூர் ரெட்டியாரையும், குமாரசாமி ராஜாவைக்கூட எதிர்த்த கபோதிகளும், பொது வாழ்வில் அன்றைக்கு இருந்தார்கள். 

சரி, வஉசியைப் பற்றித் தெரியுமா? என்றேன். தெரியும். படித்துள்ளேன் என்றார். அவரைப் பற்றி சொல்ல வேண்டியதை பத்திரிக்கையாளர் சொல்லவில்லை. நான் கோபமாக பெரிய செல்வந்தர் வீட்டு புதல்வரய்யா. தன் சொத்துக்களை எல்லாம் விற்று தூத்துக்குடியில் வேலை நிறுத்தத்தில் ஆங்கில அரசால் பாதிக்கப்பட்டு பசியில் இருந்தவர்களுக்கெல்லாம் பசிப்பிணி நீக்கும் மருத்துவர் இல்லம் போல அவர் வீடு இருந்தது தெரியுமா? அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் சீமான் வீட்டு பிள்ளை பருத்திக் கொட்டை, பிண்ணாக்கின் எண்ணெயை விற்று தன்னுடைய ஜீவனத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். கோவில்பட்டியில் காலில் செருப்பில்லாமல், கிழிந்த கோட்டை ஊக்கியை வைத்து தைத்து வக்கீலாக கோர்ட்டுக்குச் சென்ற துயரக் காட்சிகளை எல்லாம் தெரியுமா? என்றேன். 

சேலம் வரதராஜுலு நாயுடு பற்றித் தெரியுமா என்றேன். அவர் தெரியாது என்றார். கேட்டுக்கோங்க. பெரிய பணக்காரர். பஸ் கம்பெனி வைத்து நடத்தினார். பிரிட்டிஷ்காரர்களுக்கு வரி கட்டவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பஸ்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் பறிமுதல் செய்தது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய சொந்த பெரிய பங்களாவும் பறிமுதலுக்குள்ளானது. திருநெல்வேலி சதி வழக்கில் வஉசியை வழக்கில் இருந்து விடுதலை செய்ய இவர் தான் காரணக்கர்த்தா. பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் தேவர் போன்றோருக்கெல்லாம் வழிகாட்டியவர். வரதராஜுலு நாய்டு ஓர் இதழாளரும் கூட. தமிழ் நாடு பத்திரிகையை நிறுவியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட அவர் ஆரம்பித்ததுதான். காரமான நடையில் எழுதுவார். 
காந்தி ஒரு முறை சொன்னார். தமிழ்நாடு சுதந்திர போராட்டம் நாயுடு, நாயக்கர், முதலியார் கைகளில் உள்ளது என்று ஜாதிப் பெயரோடு கூறினார். அவர்கள் யாரெனில் நாயுடு என்றால் சேலம் வரதராஜுலு நாயுடு, நாயக்கர் என்றால் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (பெரியார்), முதலியார் என்றால் திரு.வி.கலியாணசுந்தரம் (திரு.வி.க). அப்படிப்பட்டவர் இறுதிக் காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் விழுப்புரத்தில் விஸ்வ ஹிந்து பரிசத் தயவில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 

எல்லாம் சரி. காயிதே மில்லத் யாரென்றாவது தெரியுமா என்ற போது அவருடைய கம்மியான குரலில் தெரியும் சார் என்றார். அவரைப் பற்றி சொல்லுங்க என்றேன். சார், அவரு திருவல்லிக்கேணியில தான குடியிருந்தாரு என்றார். நான் அவருடைய நினைவிடம் வேண்டுமானால் அங்கிருக்கலாம். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி பேட்டை. கேராளாவில் மலப்புரத்தில் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர். அவர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு இப்போதிருப்பதைப் போல வீடு வீடாகச் சென்று நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்க மாட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் கூட்டங்களில் மக்களைச் சந்தித்து, இந்த தொகுதியில் போன முறை போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்தந்த பணிகளைச் செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். தமிழகத்தில் பிறந்து கேரளத்தில் தடங்கல் இல்லாமல் அவருடைய வெற்றி செய்தி மட்டுமே வரும். வெற்றி பெற்ற பின் கயிற்றுக் கட்டிலில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தனது தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம். அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவர் என்ற நிலையில் டெல்லியில் ஒரு நாள் இருப்பார். சென்னையில் ஒரு நாள் இருப்பார். சொந்த ஊரான திருநெல்வேலி பேட்டையில் இரண்டு நாட்கள் இருப்பார். இப்படித் திட்டமிட்டு பொது வாழ்க்கையில் இருந்தவர் தான் காயிதே மில்லத். திருநெல்வேலி கல்லூரியில் படிக்கும் போது, திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையத்தில், கருப்பு குல்லாயும், கருப்புக் கோட்டும் போட்டு பேருந்திற்காக காத்திருப்பார். பல முறை பார்த்திருக்கிறேன், ஒரு சில முறை அவரிடம் பேசியும் உள்ளேன். அவர் அகில இந்தியத் தலைவர். அவரைப் போய் திருவல்லிக்கேணியில குடியிருந்தவர் தான என்று சாதாரணமாகச் சொல்லிட்டீங்களே என்றேன். 

அடுத்து கம்யூனிஸ்ட் ஆளுமை ஜீவாவைப் பற்றித் தெரியுமா? அற்புதமான பேச்சாளர், சட்டமன்றத்தில் முழங்கியவர். மாற்று உடை கூட இல்லாமல் தாம்பரத்தில் குடிசையில் வாழ்ந்தவர். கன்னித் தமிழை நன்கறிந்தவர். 

கக்கனைப் பற்றித் தெரியுமா என்றபோது மதுரை ஜில்லா தானே என்று அரைகுறையாகச் சொன்னார். அவருடைய பணிகள் ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு மதுரை வைத்தியநாதய்யர் பிரவேசம் செய்த முயற்சிக்கு முழுக்காரணமானவர் தான் கக்கன் என்பது தெரியுமா? என்றேன். மதுரை ராஜாஜி மருத்துவமனை, அன்றைய எர்ஸ்கின் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் ஒருவர், கட்டாந்தரையில் பாயில் படுத்து சிகிச்சைப் பெற்றதையெல்லாம் இந்த காலத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா? என்றேன். அப்படியா சார் என்றார். அப்படித் தான் என்றேன். 

கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே.டி.கே. தங்கமணியைத் தெரியுமா என்றதற்கு தெரியாது என்றார். நீண்டகாலமாக, தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். லண்டனில் சென்று பாரட் லா படித்தவர். பணக்காரக் குடும்பம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்து ஒரு மஞ்சள் பையில் 4 முழ வேட்டி, ஒரு வெள்ளைச் சட்டை, துண்டை வைத்துக் கொண்டு அவரே அதை பார் சோப்பில் துவைத்துக் கட்டிக் கொள்வார். சட்டமன்றத்தில் அவர் பேசிய வாதங்கள் எல்லாம் இன்றைக்கும் சட்டமன்ற ஆவணங்களில் உள்ளன என்றேன். ஒரு காலத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ‘கோவைக் கம்பன்’ கருத்திருமண் அவர்களைத் தெரியுமா என்றேன். தெரியாது என்றார். திமுகவைச் சேர்ந்த சி.பி.சிற்றரசைத் தெரியுமா என்றேன். தெரியாது என்றார். சரிய்யா. திருத்தணியை மீட்டுத் தந்த மா.பொ.சியை யாவது தெரியுமா என்றேன். தெரியும் சார். படித்திருக்கிறேன் என்றார். 

இதற்கு  மேல் ஏதாவது பேசினால் அந்த மனிதர் பொறுமையிழந்து பேசிவிடுவார் என்பதால், இவர்களைப் பற்றி எல்லாம் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தான் இன்றைய தமிழ்நாடு அரசியலைப் பற்றிய போக்குகளுக்கு எல்லாம் நீங்கள் வரலாற்று ரீதியாக கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும். அதுதான், உண்மையான பத்திரிக்கையாளருக்குரிய கடமையும், பொறுப்பும் ஆகும் என்றேன். இன்றைக்கு வியாபார அரசியலில் காசு கொடுத்து வெற்றி பெற்று எம்.பி., எம்.எல்.ஏ.,  tag தன் வசமிருந்தாலே ஏதோ கொண்டாடப்ட வேண்டியவர்களாக கருதுகிறார்கள். 

இந்த தறுதலைகளுக்கு தமிழ்நாடு வரலாறும் தெரியாது, பூகோளமும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது. இந்த ஞான சூனியங்களை நம்பினால் தமிழ்நாட்டிற்கு எல்லா கேடுகளும் வரத்தானே செய்யும். முட்டாள் அரசியல் வியாபாரிகளை நம்பி தமிழ்நாடு அழிந்து கொண்டு வருகின்றது. தகுதியே தடை என்று இருக்கும்போது ஆற்றலாளனும், நேர்மையாளனும் பொதுத் தளத்திற்கே வரமுடியவில்லையே? தளமும், களமும், மண்ணும் தகுதியற்றவர்களை ஆதரிக்கும் போது பேய் அரசாண்டால், பினந்தின்னும் சாத்திரங்கள் தானே. இப்படியான நிலையில் எவ்வளவு தான் போராடி உயிரை மாய்த்தாலும், நம்முடைய உரிமைகளை மீட்க முடியுமா?

இந்த அரைமணி நேர சம்பாஷனையில் அந்த பத்திரிக்கையாளர் நண்பர், சார் இந்த தகவல்களையெல்லாம் நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி சார் என்று சொன்னபோது, இந்த விழிப்புணர்வு அவருக்கு இப்போது ஏற்பட்டது மகிழ்ச்சியா? அல்லது நல்லவைகளை அறியாமல் இன்றைக்கும் உலகம் இப்படி இருக்கிறதே என்ற மனக் கவலையா? என்பதை எனது மனதால் உணர முடியவில்லை.

#அறிவாளிகள்
#புரிதல்
#அரசியல்
#politics
#understanding
#wisdom
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-7-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...