Wednesday, December 12, 2018

நேற்று(11/12/2018) எட்டையபுரம் பாரதி விழா - சில நினைவுகள்.

நேற்று(11/12/2018) எட்டையபுரம் பாரதி விழா - சில நினைவுகள்.
-----------------------------
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டபோது டிசம்பர் 6ம் தேதி என்னுடைய தேர்தல் பணிகளை ஆரம்பித்தேன். அப்போது டிசம்பர் 11ஆம் தேதி பாரதியின் பிறந்தநாளன்று எட்டையபுரத்தில் உள்ள பாரதி மண்டபத்திற்கும் அவர் பிறந்த இல்லத்திற்கும் செல்லத் துவங்கினேன். இடையிடையே 2, 3 வருடங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. அன்றைக்கு எல்லாம் பாரதி பிறந்தநாள் என்றால அதிக பட்சம் 25 பேர் வருவார்கள். பாரதி சிலைக்கு மரியாதை செய்வதோடு அந்த நிகழ்வு காலை 11 மணிக்கெல்லாம் முடிந்து விடும். இதில் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் மறைந்த சோ. அழகர்சாமி அவர்களின் பங்களிப்பு அதிகம்.
கடந்த 20 ஆண்டுகளாய் எழுத்தாளர் விக்ரமன், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் நிறுவனத்தின் தலைவர் தினகரன், ம. நடராஜன் ஆகியோர் வருகைதர ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.
அந்த நாட்களிலில் 1950 களிலிருந்து தமிழக அரசின் சார்பில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் எட்டையபுரத்தில் பாரதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார். 1984ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் 1984லிருந்து அந்த மரியாதையை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் செய்கிறார் .

பாரதி மண்டபம் கல்கியின் சீரிய முயற்றியால் கட்டப்பட்டது. ரசிகமணி டி.கே.சி, நடிப்புலகத்தை சார்ந்த சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற கலையுலகினர் என சகலரும் பாரதி மண்டபம் நிறுவ பங்களித்தனர்.

எட்டையபுரத்திலஇந்த பாரதி மண்டபத்திற்கு 03/06/1945இல் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மண்டபத்தின் பணிகளும் சிறப்பாக நடந்தது. எட்டையபுரம் சமஸ்தானம் இதற்கு துணையாக இருந்தது.

பாரதி மட்டுமல்லாமல் உமறுப்புலவர் இசைவாணர் முத்துசாமி தீட்சிதர், நாவலர் சோமுசுந்தர பாரதி போன்றவர்கள் எட்டையபுரத்திற்கு சம்மந்தமானவர்கள்.

கடந்த 1980 களில், அந்ந காலக்கட்டத்தில் முத்துசாமி தீட்சிதர் பெயரில் அரங்கம் கட்டுவதற்காக என்னைப் போன்றவர்கள் பலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்ததெல்லாம் நினைவில் வருகிறது.

எட்டையபுரம் பாரதியார் இல்லத்தை தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த வேளையில், அப்போதைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் எட்டையபுரத்தில் 12/05/1973இல் பாரதி பிறந்த இல்லத்தினை நாட்டுடமையாக்கி அறிவித்து அதை நினைவில்லமாக திறந்தும் வைத்தார். அந்த நிகழ்வில் கூட்டுறவு அமைச்சராக இருந்த சி.பா.ஆதித்தனார், உணவு அமைச்சராக இருந்த மன்னை பா. நாராயணசாமி, அன்றைய அகழ்வராய்ச்சி இயக்குநர் நாகசாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ரா. சண்முகசிகாமணி, இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர் இந்த இல்லத்தை திறந்துவைத்து நினைவுப் கல்வெட்டையும் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1982இல் பாரதியின் நூற்றாண்டு விழா எட்டையபுரத்தில் நடந்தபோது கலைஞர் திறந்துவைத்த நினைவு கல்வெட்டுப் பலகையை பாரதியார் நினைவில்லத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காணாமல் செய்துவிட்டனர்.
திமுக 1989இல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போது கோவில்பட்டி தொகுதியில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்வது எனது வாடிக்கை. ஒரு முறை எட்டையபுரத்திற்கு 1990களில் சென்றபோது, பாரதியின் நினைவில்லத்திற்கு சென்றேன். பாரதி நினைவில்லத்தில் இருந்த நண்பர்கள் இந்த நினைவில்லத்தினை திறந்துவைத்த கலைஞர் பெயர் அடங்கிய கல்வெட்டினை எம்.ஜி.ஆர் ஆட்சியில் எடுத்துவிட்டார்கள். அதை வைக்க வேண்டுமென்றும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்கான பணிகளை நான் மேற்கொண்டபோது 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அந்த முயற்சியை மேலும் தொடர்ந்து என்னால் எடுக்க இயலாமல் போய்விட்டது.
இந்த நிலையில் ஒன்றை அழுத்தமாக சொல்லவேண்டும். அந்த பகுதியில் வலம் வந்த கட்சி முக்கியப் பிரமுர்களுக்கு இதைப் பற்றிய அக்கறை இல்லை. 1990இல் இந்த முயற்சியில் நான் இறங்கியபோது, வெட்டிப் பேச்சை பேசிய சவுடல் நாட்டாமை செய்த ஒருவர் பாரதியார் வீட்டிற்கு இந்த கல்வெட்டு தேவைதானா என்று அவர் பேசும்போது, இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்தேன். அவர் இன்றைக்கு இல்லை. அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய எங்களுக்கான அரசியலில் மரியாதை இருந்தது.
பாரதி நினைவில்லத்தில் 29 ஆண்டுகளாக கலைஞருடைய கல்வெட்டினை அப்புறப்படுத்தப்பட்டதை அறியாதவர்கள் எல்லாம் அந்த வட்டாரத்தில் வெற்று சவடால் அடித்து கொண்டு வலம்வந்தது தான் வேடிக்கையான செய்தி. இந்த ‘போர்டு’ (கல்வெட்டு என்று சொல்ல தெரியாத பிரகஸ்பதி) எதற்கென்று சொல்பவர் தான் நல்லவராக பிற்காலத்தில் திகழ்ந்தார்.

திரும்பவும் கடந்த 2009இல் இதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். தமிழக அரசின் அனுமதியையும் பெற்று அப்புறப்படுத்தப்பட்ட கலைஞர் பெயரோடு இருந்த நினைவுக் கல்லை பாரதி இல்லத்தில் வைக்க தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று கடந்த 11/12/2009இல் பாரதி நினைவில்லத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டது.
அந்த சமயம் திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் இருந்தபோது, திரும்பவும் கல் வைக்கும் நிகழ்ச்சியில் நானும், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ச. தங்கவேலு மட்டும் கலந்து கொண்டோம். இந்த செய்திகள் அனைத்து ஏடுகளிலும் அப்போது வந்தது. தினமணி 12/12/2009லும், அந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பெட்டிச் செய்தியாக வந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 1982இல் பாரதியார் நூற்றாண்டு விழா நடந்தது. அப்போது பாரதியார் பெயரில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியும், அப்பகுதியில் நெசவாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. பாரதி மண்டபத்தின் பின்னால் உள்ள மைதானத்தில் கலையரங்கம் அமைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர் கொடுத்த உறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

திரும்பவும் வேதனையானதொரு ஒரு விடயம.தினமணி ஆசிரியரும் நானும், அந்த மண்டபத்தை சுற்றிப்பார்த்த போது 03/06/1945இல் ராஜாஜி அடிக்கல் நாட்டிய நினைவுக்கல்லும், வேறு சில கல்வெட்டுகளும் பாரதி மண்டபத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் அலட்சியமாக போட்டு வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியளித்தது.

நேற்று பாரதி விழா :
————————
வழக்கமாக பாரதி விழா 10, 11 மணிக்கு முடிந்துவிடும்.ஆனாலநேற்றைக்கு
(11/12/2018) எட்டையபுரத்தில் முழுநாள் விழாவாக தினமணி சார்பில் நடந்தது. பாரதியார் இல்லத்திலிருந்து பாரதி மண்டபம் வரை பெரும் கூட்டமாக வலமாக வந்து பாரதி மண்டபம் வந்து சேர்ந்தவுடன் நிகழ்வுகள் தொடங்கின. இந்த நிகழ்வில் தினமணி வைத்தியநாதன், இளசை மணியன், முனைவர், ம. இராசேந்திரன், ஹாஜாகனி யுகபாரதி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஜாகீர் உசேன், ஜி. ஆர். சுவாமிநாதன் போன்றவர்களோடு கலந்துகொண்டோம். விழா சிறப்பாக இருந்தது.

பாரதி படைப்புகளை இதுவரை 12 தொகுதிகளாக தொகுத்துள்ள சீனி விஸ்வநாதன்;தன்னுடைய கடும் உழைப்பால் 40, 45 ஆண்டுகள் பாடுபட்டு 12 தொகுதிகளை நூல்கட்டமைப்புடன் வெளிவரவிருக்கிறது. அவருக்கு தினமணி சார்பில் பொற்கிளி மற்றும் 1 லட்சம் ரொக்கமும் தமிழக ஆளுநர் கைகளால் வழங்கப்பட்டது. அவரது பணிகளை பாராட்டி நல்லி குப்புசாமி செட்டியார் பேசினார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். விழாவின் மதிய நிகழ்வாக ஜி.ஆர். சுவாமிநாதன் கலந்துகொண்ட கவியரங்கம் நடைபெற்றது.
விழா நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. ஒரேயொரு குறை என்னவென்றால், பாரதி மண்டபத்தை முறையாக பராமரிக்கவில்லை. தமிழக தலைவர்கள் ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, குமாரசமி ராஜா,பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் போன்றோரோடு ஜனாதிபதிகளாக இருந்த டாக்டர். ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் இலக்கிய கர்த்தாக்களாக இருந்த கல்கி, நா. பார்த்தசாரதி,. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், அ.சீனிவாசராகவன், ரா.பி.சேதுபிள்ளை, தொ.மு.சி.ரகுநாதன், அகிலன் ஆகிய பலர் வந்து மரியாதை செலுத்திய பாரதி இல்லத்தை சரியாக பராமரிக்க இயலாதது தான் வேதனையான விடயம்.
நான் கோவில்பட்டி தொகுதியில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போது எட்டையபுரத்தில் பாரதி அரசுக் கலைக் கல்லூரி அமைக்கவும், நாட்டுப்புறக் கலைகள் வளர்ச்சி மற்றும் ஆய்வு செய்யும் மையம் அமைக்கவும் வாக்குறுதி அளித்தேன். எனக்கு வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-12-2018

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...