Friday, March 30, 2018

பல நதி நீர் மேலாண்மை வாரியங்கள் செயல்பாட்டில் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மட்டும் டெல்லி பாதுஷாக்களுக்கு மனமில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் (CMB) அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று 29-3-2018 மாலை சூரிய அஸ்தமனத்துடன் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாள்முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் கட்டுரைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று கவலையுடன் கூறி வருகிறேன். இன்று அது மெய்ப்பட்டுவிட்டது என்பதை நினைக்கும்போது மனது சற்று ரணப்படுகிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது.
கடந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் உத்தரவையும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் நிறைவேற்ற கர்நாடகா மறுத்ததும், இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உச்சநீதிமன்றம் வரை போயும் கர்நாடகம் திமிர் போக்கில் இருந்து வருகிறது. வழக்காடியதில் எந்த பயனுமின்றி போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஆணையிட்டும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் கர்நாடகா ஏற்க மறுக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பிலும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நியாயங்களை வழங்கவில்லை என்பது வேறு விசயம். இருப்பினும், மத்திய அரசு கர்நாடகத்திற்கு பாதுகாப்பாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலாகும்.

பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி ,கோதாவரி, கிருஷ்ணா ரணமே போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏன்?
காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது.
ஏற்கனவே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே 1966இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்லஜ்,, பியாஸ், ரவி ஆகிய நதிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு என ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்தி வரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் (Master Plan) என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும், முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த நவம்பர், 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில எல்லைகள் மறு சீரமைக்கப்பட்ட போது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதுவொரு அதிகாரம்பெற்ற சுயாட்சி வாரியமாகும். அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிந்து அதையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்து இதை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், புதுடெல்லி மற்றும் சண்டிகார் பகுதிகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் முறைப்படுத்தி வினியோகிக்கிறது. இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளை தடையில்லாமல் இன்று வரை நடந்து வருகிறது.
*பியாஸ் - சட்லஞ் இணைப்புத் திட்டம் - 1 (பிரிவு 1)*
*போங் அணை (பிரிவு 2)*
ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக இந்த வாரியம் கவனிக்கிறது. ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பிரச்சனை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது. 
இப்படியெல்லாம் சரிவர பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வடபுலத்தில் அமைக்கப்படுகிறது. ஆனால் நியாயமாக தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வஞ்சித்து, தற்போது கைவிரித்துவிட்டது. கடந்த 21/03/2018 அன்று மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்படவில்லை என்றும் ஒரு செயல் திட்டம் தான் வகுக்கச் சொல்லியுள்ளது என்று சொன்னபோதே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்ற துயர செய்தி தெரிந்துவிட்டது. 
பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அமைத்திட என்ன சிரமங்கள் உள்ளது. அங்கு அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. காவிரியில் மட்டும் இப்படி செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி ரணப்படுத்துவது போல உள்ளது.
*வடக்கே ஒரு நியாயம். தெற்கே ஒரு நியாயமா?*

#தமிழக_விவசாயிகள்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன் 
29-3-2018.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...