Friday, March 30, 2018

ஸ்டெர்லைட் குறித்து மின்னம்பல இணைய இதழில் வெளியான என்னுடைய கட்டுரை.

ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்?
------------------------------------

ஸ்டெர்லைட் ஆலைக்கு 1994இல் அனுமதி கொடுத்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து, 1996இல் மேலும் சில அனுமதிகள் மாநில அரசிடமிருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. 2007இல் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் அனுமதி பெற்றுவிட்டனர். கிராம மக்களிடம் இருந்து 1,616 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அதில் 600 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு கொடுத்தாகிவிட்டது. ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 2009ஆம் ஆண்டே மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற்றுவிட்டனர். இந்த அனுமதியெல்லாம் டிசம்பர் 31, 2018 ஆம் தேதியோடு முடிகிறது.


ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும்போதே தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். இப்போது 8 லட்சம் டன் என்றால் மக்களின் பாடு திண்டாட்டம் தான். இப்போதே 20 எம்.ஜி. திட்டத்தின் கீழ் ஸ்ரீ வைகுண்டம் அணையில் இருந்து குடி தண்ணீரை உறிஞ்சிக் கொண்டுள்ளார்கள். விரிவாக்கப் பணி முடியும் பட்சத்தில் தாமிரபரணி தண்ணீர் ஸ்டெர்லைட் ஆலைக்கே போதாது என்ற நிலை வரும். அப்போது கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
ஸ்டெர்லைட் என்ற தாமிரத் தொழிற்சாலையினால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் மட்டுமல்லாது மக்களுக்கு பல நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக புற்று நோய், நுரையீரல் நோய்கள், சிறுநீரகம் பாதிப்பு என சகலவிதமான நோய்களை இந்த செம்புத் தொழிற்சாலையின் நச்சுப் புகையினால் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் உள்ள புற்று நோய் மருத்துவமனையில் நிச்சயம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள். ஏனெனில் அதற்கு காரணம் ஸ்டெர்லைட்  ஆலை. சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய், ஒவ்வாமை (Allergy), சி.ஓ.பி.டி – க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ், சுவாச நோய், தோல் நோய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மக்களுக்கு சீதனமாக நோய்களை தருகிற ஸ்டெர்லைட் ஆலை இதை பற்றியெல்லாம் சற்றும் அக்கறைப்படுவதில்லை.
வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் குஜராத், கோவா, கேரள மாநிலங்களில் தாமிர உருக்காலை அமைக்க முயன்றார். ஆனால் மகாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரியில் 1989ஆம் ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மண் சுவையான மாம்பழம் விளையும் மண். தாமிர உருக்காலை இங்கு வந்தால் தங்களின் விவசாயம் பாதிக்கும் என்று விவசாயிகள் போராடியதன் விளைவாக அப்போதைய அந்த மாநில முதல்வர் சரத் பவார் 01/05/1994இல் இந்த தாமிரத் தொழிற்சாலை அமைய தடைவிதித்தார்.
30/10/1994இல் இந்த ஆலை தூத்துக்குடியில் அமைய முயற்சி எடுக்கப்பட்டது. 18/03/1996இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்லும் நாட்டினார்.
அப்போதே இதற்கான எதிர்ப்பு தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டுவந்த எம்.வி.ரீசா என்ற கப்பலைத் தூத்துக்குடி மீனவர்கள் விரட்டியடித்தனர். நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் கொண்ட 500 மீனவர்கள் இந்த ரீசா கப்பலை விரட்டியடித்தனர். அந்தக் கப்பல் கொச்சிக்குச் சென்று அங்கிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கடுத்து 10/04/1996இல் இரண்டு பெண்கள் உள்பட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் கடலில் கலக்காது எனத் தமிழக அரசின் சார்பில் 18/04/1996 அன்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தமிழ் மாந்தன் தலைமையில் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு 20/07/1996இல் மக்கள் பெரும் எதிர்ப்பு மாநாடாக நடந்தது. திரும்பவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எம்.பி. பரங்கவி கப்பலில் தாமிரத் தாதைக் கொண்டவந்தபோது மீனவர்கள் அதை எதிர்த்து அக்கப்பலை முற்றுகையிட்டனர். நவம்பர் 1996இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதற்கு மத்தியில் 05/07/1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுவால் ஆலையில் இருந்த ரமேஷ் பிளவர் நிறுவனத்தில் இருந்த 165 பெண்கள் மயங்கி விழுந்தனர். அகில இந்திய ரேடியோவில் பணியாற்றிய 11 பேரும் நச்சு வாயுவால் மயங்கி விழுந்தனர். நீதிமன்றங்களில் வழக்காடியும் பயனில்லை.
வேதாந்தா நிறுவனம் சுற்றுச் சூழல் பாதிப்பை பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை. நீரி போன்ற அமைப்புகள் தான் காற்று மாசுபடுதல் அளவீடுகளை நிர்ணயம் செய்துள்ளது. அதை குறித்து அறிய கருவிகளும் அமைக்கப்படுகிறது. வெறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்து விட்டாலே எந்த தொழிற்சாலையும் ஆபத்தில்லை என நினைப்பது தவறான நோக்கமாகும். சில இடங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் கூட சரிவர இயங்குவதில்லை. அதன் அளவீடுகளையும் நமது விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் ஆலையில் புதியதாக இரண்டாம் அலகு நிறுவுவதற்கு சுற்றுச் சூழுல் பாதுகாப்பிற்காக தேவையான கருவிகளை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறியுள்ளது. 
எற்கனவே முதல் அலகுக்கு அத்தகைய வசதிகளை செய்யவில்லை. ஏற்கனவே ஓடும் ஆலையினால் காற்று மாசுபடுகிறது. புதிதாக நிறுவும் இரண்டாவது பிரிவிற்கு மட்டும் 500 கோடி ரூபாய் செலவிடுதல் போதுமா? இரும்பு அல்லாத (Non-ferrous) உலோகங்களான அலுமினியம், செம்பு, ஈயம், துத்தநாகம், எவர்சில்வர், வெள்ளி போன்ற வேதிப் பொருட்கள் உற்பத்தியில் ஆபத்துகள் நிரம்பியுள்ளது. இதன் கருவிகளை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இப்படியான நிலைதான் ஸ்டெர்லைட்டில் உள்ளது. நோயை விலை கொடுத்து வாங்குகின்ற கதை தான்.
போபாலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசவாயு விபத்தை பற்றி இன்றும் அச்சத்தோடு பேசுகிறோம். ஆனால் ஸ்டெர்லைட்டில் அப்படி இல்லை. ஒரு விபத்து நடந்தபின்னர் ஒப்பாரி வைத்து, கூப்பாடு போடுவதால் என்ன பயன். போபால் வழக்கிற்கு பின்னர் தான் நச்சுக் கலக்கும் தொழிற்சாலைகள் பற்றிய சிந்தனையையும், விழிப்புணர்வையும், தரத்தை சோதிக்கும் ஐ.எஸ்.ஓ முறையும் நடைமுறைக்கு வந்தது. தூத்துக்குடியில்பல தொழிற்சாலைகள் இந்த ஐ.எஸ்ஓ முறைக்கு கட்டுப்படாமல் நடப்பதாக செய்திகள் உண்டு. இந்த தொழிற்சாலைகள் புகை ஒரு பக்கம், நச்சுப் புகை ஒரு பக்கம், விசக் கழிவுகள் அதிகப்படியாக சேருகின்றன. 
இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலை மனித இனத்தை அழிக்கும் தூக்கு மேடைகளாகும். பண்டித நேரு தொழிற்சாலைகளை வழிபாடு ஆலயங்கள் என்றார். இன்றைக்கு தொழிற்சாலைகள் மனித உயிர்களை காவு வாங்கும் கூடங்களாக அமைந்துவிட்டது. 
அதில் ஒன்று தான் இந்த ஸ்டெர்லைட்.
பல ஆலைகள் தமிழகத்தின் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன.
அந்த ஆலைகள் வருமாறு:
- அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை,
- மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை,
- தூத்துக்குடி சிப்காட்,
- கடலூர் சிப்காட்,
- திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் பாதிப்பு,
- சேலம் கஞ்சமலை தாது கம்பெனி,
- மேட்டூர் அனல்மின் நிலையங்கள்,
- மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ்,
- நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
- கெயில் திட்டம்,
- திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கவில்லை),
- ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை,
- கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை,
- நாகார்ஜுனா ஆலை
இப்படி நீண்ட பட்டியல் உண்டு.
அது போல தான், தேனியில் நியோட்னிரோ ஆராய்ச்சி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோகார்பன் கிணறுகள், மீத்தேன் எடுக்கும் ஆலைகள், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் துத்தநாகம், பிளாட்டினம் போன்றவற்றை உருக்கி எடுக்கும்போது வரும் நச்சுப் புகையால் ஏற்படும் பாதிப்புகள், நரிமனம் பெட்ரோல் ஆலை போன்ற பாதுகாப்பற்ற ஆலைகள் தமிழகத்தை என்றைக்கும் அபாயகரமான பகுதிகளாக்கும்.
தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவும் வந்துள்ளது.
காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்டவெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடி மருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 டன் பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் கரிசல் மண்பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்குச் சுவாசநோய், புற்றுநோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் விருதுநகர் பெ.சீனிவாசன் (காமராஜரைத் தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) நான் தாக்கல் செய்தேன். அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபோது 1986இல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையை விற்க முடியாமல் போனது.
மேலும், 2015ஆம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது.
கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைத் தமிழக எல்லைப் பகுதிகளான நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டிச் செல்லும் பிரச்சினையைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன்.
தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது மத்திய அரசு.
1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது.
ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. பல தமிழக திட்டங்கள் முடக்கப்பட்டன.
இப்படி, தமிழகத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.
இன்று பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவருகின்றன.
இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க தமிழகம் தன்னை பாதுகாக்குமா என்பது தான் வினா?

கே.எஸ்.இராதா கிருஷ்ணன் 
30-03-2018.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...