Sunday, March 15, 2020

அரசியல்-அரசியல் வேறு #ஓட்டு_வங்கி அரசியல்,#வணிக_அரசியல் என்பது வேறு.

#அரசியல்-அரசியல் வேறு #ஓட்டு_வங்கி அரசியல்,#வணிக_அரசியல் என்பது வேறு. 
------------------------------------
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் ? அதாவது பொது வாழ்க்கை   என்று வந்துவிட்ட ஒரு சாதா அரசியல் வாதி கூட  கண்களில் மிளிரும் அறிவோடு ,   கம்பீரமாக, கொஞ்சம் அதிகார தொனியுடன்  இருக்கவேண்டும் .அதே சமயம் பொது மக்களிடம் பழகும் பொழுது உள்ளார்ந்த வாஞ்சையோடும்  ,  உதிர்க்கும் சொல்லில் நம்பக தன்மை கலந்தும்  இருக்க வேண்டும் . சட்ட மனற உறுப்பினர்கள் என்று ஆகிவிட்டால்  தனது தொகுதி மக்களின் நலன் சார்ந்த விஷயம் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . எதன் மீதும் பற்றில்லாத அதே சமயம் மக்களிடம் செல்வாக்கு உள்ள எவரையும் ஆட்டு மந்தையைப்போன்று  நடத்த முடியாது .ஒரு நேர்மையான அரசியல்வாதியிடம் அதன் தலைமை கட்டளை இட முடியாது கோரிக்கை தான் வைக்க வேண்டும். அந்த கோரிக்கை கூட சொல்ல  அஞ்ச வேண்டும். அப்படி இருக்க  வேண்டும் அந்த அரசியல்வாதியின் குணாதிசயம் . 

 இத்தகைய  குணம் உடையவர்களை நாம் தேர்ந்தெடுக்க தவறி விடுகிறோம் . படித்த,  விஷயம் தெரிந்த மக்களை விட பாமர மக்களின் ஒட்டு வங்கிகளை குறி வைத்து எப்படியோ ஓட்டுகள் வாங்கி விடுகிறார்கள் இந்த  காம சோமா அரசியல்வாதிகள் . மொத்த மாநிலமும் படித்து முன்னேறி , வேலை வாய்ப்பு, தொழில் என்று பன்முகத்தன்மையோடு சுயமாக நிற்கும் நிலை  சிறந்தால் மட்டுமே  இது போல இல்லாமல் நல்ல  தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம் . சின்ன சின்ன விஷயங்களையும் அது நியாயமாக இல்லாத பட்ஷத்தில்  நாம் எதிர்க்க வேண்டும் .பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியோ அல்லது நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணியோ  இருந்தோமானால் அதன் பாதிப்பு  மிக மோசமாக இருக்கும்.

அரசியல்  வேறு  ஓட்டு வங்கி அரசியல்,வணிக அரசியல் என்பது வேறு. இன்றைக்கு அரசியல் இல்லாத வணிக - பணம், குறுகிய நோக்க அரசியல் நடக்கின்றது.

இது ஒரு வகை வணிக தந்திரம்.அரசியல் அல்ல ஆட்சியல்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் அடுத்த பத்து வருடத்தில் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும். படித்த இளைஞர்கள்  அனைவரும் முன்பு போல் இல்லாமல்  அரசியலை நன்றாக புரிந்துக்கொண்டுள்ளனர் . இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது . விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நீர் நிலை பாதுகாத்தல் ஆகிய  விஷயங்களுக்கு பொது மக்கள் கூட்டாக சேர்ந்து மிக முக்கிய இந்த இரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் . இது விரைவில்  நடக்க வேண்டும் .ஏனெனில் ஒரு மாநிலத்தில் முழு வளர்ச்சி இந்த இரண்டோடு பின்னி பிணைந்துள்ளது .

#போலிகளை_நம்புகிறாய்_போ_போ!
 -#கவிஞர்_மீரா
————————————————-
சரி, போ! போ! எக்கேடுங் கெட்டுப் போ! போ!
சமுதாய மே! அடுப்பில் மூட்டத் தக்க
எரிவிறகு தருமரமாய்ப் பட்டுப் போ! போ!
எனக்கென்ன எக்கேடுங் கெட்டுப் போ! போ!
நரிஊளைச் சத்தத்தைக் கேட்டு விட்டு
‘நாதசுரம்! யாழோசை’ என்றே உண்மை
புரியாமல் பிதற்றிக் கொண்டி ருக்கும் உன்றன்
போக்கையா ரல்மாற்ற முடியும்? போ! போ!
 
குடிலர்கள் கூடாரம் ஆய்விட் டாய் நீ!
கோட்சேக்கள் குகையாக மாறி விட்டாய்!
படிக்காத பேதைகளின் விமர்ச னத்தைப்
‘பார்அடடா!’ என்றியம்பத் தொடங்கி விட்டாய்!
தடியெடுத்த கயவர்க்குத் தாளம் போடும்
சமுதாய மே!உன்மேல் பற்றிக் கொண்ட
கொடியபிணி கொல்லவந்த மருந்து வர்தம்
குரல்வளையைப் பிடிப்பதற்கும் துணிந்து விட்டாய்!
 
தறிபார்த்து நெய்ததுணி போன்ற மென்மைத்
தத்துவத்தைத் தணல்மேலே வீசு கின்றாய்;
வெறிபோர்த்த சதைத்திமிரைக் காட்டு கின்றாய்;
வீரத்தைத் தியாகத்தைச் சத்தி யத்தைக்
குறிபார்த்துச் சுடுகின்றாய்; சமத்து வத்தைக்
குழிதோண்டிப் பிதைக்கின்றாய்! முள்ளில் லாத
‘நெறிபார்த்து வா’ என்னும் நல்லோ ரைநீ
நெஞ்சினிலே மிதிக்கின்றாய்; இதுவா நீதி?
 
வேடமிட்டுத் தழைப்போரை, ஞானி போல
வெளிச்சமிட்டுப் பிழைப்போரைப், பொருள் உடம்பைக்
கூடமட்டும் கூடிப்பின் ஒழுக்கம் பற்றிக்
கூசாமல் உரைப்போரை, மதுவ ருந்தி
ஆடமட்டும் ஆடிப்பின் அருள்பா லிக்க
ஆண்டவனை அழைப்போரை எல்லாம் நன்றாய்ச்
சாடமட்டும் சாடாமல் தழுவு கின்றாய்;
சமுதாய மே! நீதி வழுவுகின்றாய்!
 
காட்டுப்பூ மணம் வீசும் என்றால், இல்லை
காகிதப்பூ மணம் வீசும் என்பாய்; வீட்டு
மாடுப் பால் சுவைகொடுக்கும் என்றால், கள்ளி
மரத்தின் பால் சுவைகொடுக்கும் என்பாய்; நல்ல
மேட்டுநில மயில்நடனம் நன்றென் றால் நீ
மிகநன்று வான்கோழி நடனம் என்பாய்;
ஏட்டுக்காய் கறிக்குதவும் என்று வீணாய்
எண்ணுகின்றாய்; போலிகளை நம்பு கின்றாய்!......
 

......நாதியற்ற பிணமாக விரும்பும் உன்னை
நான்தடுக்க வாமுடியும்? நாச மாய்ப் போ!
 
-(#தமிழ்நாடு_தினசரி_இதழ்(மதுரை)
-1963)

 #ksrpost
13-3-2020.


கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
15.03.2019.
#ksrpost


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...