Monday, March 30, 2020

கரானா #சில_எதார்த்தங்களை_புரிந்து #தெளிவாகினால்_நல்லது.

#கரானா

#சில_எதார்த்தங்களை_புரிந்து #தெளிவாகினால்_நல்லது. 
————————————————-

பயங்களையும் கவலைகளையும் ஒரு வைரஸும் தொற்றி விடாது.....
-Tk Kalapria

கரானா வைரஸ் சூழலில் மூன்று வாரம் தனிமைபடுத்துதல் என்பதோடு நிற்கப் போவதில்லை. மேலும் இது நீடிக்கலாம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு அதன் பின்பும் இதனுடைய தாக்கம் after effect இருக்கும். இயற்கையின் விதியை யாரும் மீற முடியாது. அதற்கேற்ப எதையும் எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த  ஆறு  மாதங்களுக்கான சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய அளவில் அரசுகளும் நாமும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இந்த மூன்று வார காலம் நன்கு சிந்தித்து நம்மை நாமே பாதுகாக்கக் கூடிய அளவில் முன்னேற்பாடுகளை செய்துக் கொள்வது நல்லது. இந்த புதிய வைரஸ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழிந்து விடுமா என்பது தெரியவில்லை. அது தொடரக் கூடாது.  இதற்கான திட்டங்களுக்கு அரசுகள் என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. பொருளாதார ரீதியாக மேலும் நெருக்கடிகள் சகல தளங்களிலும் ஏற்படும். இந்தியாவினுடைய வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் 5.3 சதவிகிதம் என்பது 2.6 சதவிகிதமாக குறையலாம். ஆனால் பங்குச் சந்தையின்  ஏற்ற இறக்கத்தை மட்டுமே கவனிக்கின்றோம். அது வெறும் நமது மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பங்களிப்புதான்.. அதை வைத்துக் கொண்டு எதையும் நிர்ணயிக்க முடியாது. எதிர்கால செலவுக்கு கையில் பணயிருப்பை பாதுகாத்து வைத்துக் கொள்வது முக்கிய கடமையாகும்.




தேவையான  அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள்.  சிறுதொழில்கள் பாதிக்கப்படலாம். வேலைகள் சில இடங்களில் இல்லாமலும் போகலாம். மத்திய நிதியமைச்சர் 1.7 லட்சம் கோடிகள்நிவாரணமாகஅறிவித்
துள்ளார். அந்தந்த மாநிலங்களும் இது போன்ற அறிவிப்புகளை செய்துள்ளன. ஒரு பக்கம் அரசு இது  போன்ற அறிவிப்புகளை செய்தாலும் நீண்ட காலமாக போராடி இந்த கொடிய நோயிலிருந்து  விடுபட  வேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை  ஆகிய இரண்டு அடிப்படை கடமைகள் உள்ளன. இது உலகம்  முழுவது நிலவுகின்ற அசாதாரண நிலைதான்.

தனித்திருங்கள் வீட்டிலிருங்கள் என்று சொன்னாலும் நேற்று மதுரையில் நடந்தது என்ன? வட மாநிலங்களில் நடந்தது என்ன? இன்னமும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்து நலம் விசாரிக்கும் போது  அங்குள்ள மக்களும் தனித்திருக்காமல் வெளியே நடமாடுவது வேதனையாக கூறினர். ஸ்பெயின் நாட்டு ராணி இந்த கொடிய நோயினால் மரணமடைந்தார்.  பிரிட்டிஷ் பிரதமருக்கும் இளவரசருக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டது. ஜெர்மனி நிதியமைச்சர் தற்கொலை போன்ற கவலையளிக்கக் கூடிய செய்திகள் வந்துக் கொண்டே இருக்கிறது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப் பட்டு விட்டது என்ற செய்தி உண்மைதானா என்பதும் இன்னும் சரியாக தெரியவில்லை. சீனாவில் 2019 இறுதியிலேயே இந்த நோய் பரவியதும் இந்த நோயினுடைய கொடுமையை ஏன் சீனா உலகிற்க்கு வெளிப்படுத்தவில்லை. அப்படி வெளிப்படுத்தியிருந்தால் எச்சரிக்கையாக இருக்கவோ அந்த நோயைத் தடுக்க மருத்துவ வழிகளைச் செய்திருக்கலாம். இந்த கமுக்கமான நிலையில் சீனா இருந்தது நல்லதல்ல. இந்தியாவில் இருந்துக் கூட நிவாரணப் பொருட்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்ட போது இந்தியாவும் விழித்திருக்க வேண்டும்.  சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் கரோனா எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்
தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. சீனாவினுடைய இந்த தவறான அணுகுமுறையால் இன்று உலகம்  பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியா போன்ற  ஜனநாயக நாட்டில் இதுபோன்றவிஷயங்கள்வெளிச்சத்திற்கு வரும் சீனாவில் வெளிச்சத்திற்கு வராது. 

இரண்டாம் உலகப் போரின் பின்பு இந்த தொற்று  நோய்  போர்  அரசுகள் மட்டுமல்ல மக்களும் சுயநலமற்ற கடமையோடு முன்னெடுத்தால் தான் தீர்வை நாம் எட்ட முடியும். நமக்கான அடிப்படையில் இந்த வைரஸ் அறியும் சோதனையை செய்யக் கூட வசதிகள் இல்லாமல் திண்டாடுவதாக செய்திகள் வருகின்றன.  

வெறும் கோஷங்களும், விவாதங்களும் என்பது இதற்கு தீர்வாகாது. சிந்திப்போம்...
பொறுப்பை உணர்வோம்...
கடமை ஆற்றுவோம்...

நாடு என்ற தேர் இன்றைக்கு சேரில் சிக்கியுள்ளது. ஒட்டு  மொத்த சமுதாயமும்  நிறைகுறைகள் சொல்லாமல்  நம்மை  நாமே பாதுகாக்கின்ற கடமை எனும் தேரினை இழுப்போம். இது ஒரு இருண்ட காலம். ஒளியேற்ற வேண்டும். இனிமேலாவது ஓரளவுக்கு  காசு வாங்காமல் வாக்களித்து  நல்லவர்களை தகுதியானவர்களை அடையாளப் படுத்துங்கள்.  ஓட்டுக்கு வாங்கிய காசினால் இந்த கரானாவை சமாளித்து விடலாமா? இதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள். 

இன்றைக்கு ஒரே  கடமை உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதை செய்யாமல்  ஜனநாயகம் கம்யூனிசம், ரைட்,  லெஃப்ட், செண்டரிஸ்ட் என்று பேசி எந்த பயனும் கிடையாது. ஏனென்றால் தகுதியே தடை என்ற நிலையில்  தகுதியற்ற மக்கள் பிரதி நிதிகள் அவர்களுடைய கடமையை உணர்ந்து பொது தளத்தில் செயல்படுவார்களா?என்று நினைத்துப் பாருங்கள். இதற்கெல்லாம் காரணம் நாம் தான்..... இந்த சமுதாயம் தான்......

what is the reason for this evil?
it is because of our own commission and omission.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...