Wednesday, October 16, 2019

*#தமிழகத்தின்_எட்டுத்திக்கிலும் #ஆதிச்சநல்லூரகளும் #கீழடிகளும்.

————————————————
இன்றைய தினமணியில் *(16.10.2019)* கீழடி ஆதிச்சநல்லூரை தவிர்த்து பலபகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தி என்னுடைய பத்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். கீழடியைப் போன்று ஆதிச்சநல்லூர் போன்ற பல கீழடிளும் ஆதிச்சநல்லூர்களும் கண்டறியலாம். அந்தப் பத்தி வருமாறு.
•••••••••••
ஆற்றங்கரையோரத்தில் நாகரிகங்களும், மனிதநேயமும் தழைத்தது என்று தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை கூறுவார். பேரறிஞர் அண்ணாவும் ஆற்றங்கரை நாகரிகத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார். வைகை ஆற்றங்கரையில் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கொடைகள் மிகவும் தொன்மையானவை. கிழக்கே மணலூரும், தென்கிழக்கில் அகரமும், மேற்கில் கொந்தகையும் அமைந்துள்ளன. ஹரப்பா – மொகஞ்சதாரோ, சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் வேறு நாகரிகங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாக 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் இருந்ததென்று கீழடியின் அடியில் தோன்றிய போது தமிழருடைய பண்டைய நாகரிகத் தொன்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆதிச்சநல்லூர், ஈரோடு மாவட்டம் கொடுமணல் என பல ஆய்வுப் பணிகள் நடந்தாலும் கீழடி ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சங்க கால மக்களின் வாழ்க்கை முறைகள், சங்க இலக்கியப் பாடல்களில் சொல்லப்பட்ட பொருட்கள் யாவும் கீழடியின் அகழாய்வில் கிடைத்துள்ளன. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக் காஞ்சி போன்ற சங்க கால இலக்கியங்களில் சொல்லப்பட்ட கல்மணிகளும் கிடைத்துள்ளன. முத்துமணிகள், பெண்கள் பயன்படுத்தும் கொண்டை ஊசிகள், விளையாடிய சில்லாங்குச்சி, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், விளையாட்டு மண் பொம்மைகள் போன்றவை எல்லாம் கிடைத்துள்ளன. ஆடை நெய்யும் தக்ளி, பட்டினப்பாலையில் கூறும் சுடுமண், உறைகேணிகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் என்பதெல்லாம் அறியப்பட்டுள்ளன. வீடுகளில் ஓடுகள் வேயப்பட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன. வீட்டின் பின்புறம் உறை கிணறுகள், சங்ககால வாழ்க்கை முறையைச் சார்ந்தவாறு இவை அமைந்துள்ளன. பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனாரின் ‘உறை கிணற்றுப் புறச்சேரி’ வரிகளும் நினைவிற்கு வருகின்றன.
குஜராத்தின் பவள மணிகள், ரோம நாட்டு ஓடுகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரசட் கலவையில் வெள்ளை வர்ணம் கொண்ட மண் பானைகள் கிடைத்துள்ளன. இவை கொங்கு மண்டலத்தில் உள்ள அரச்சலூரிலும் கிடைத்தது. இதுவரை நடந்த அகழ்வராய்ச்சியில் செங்கல் கட்டிடத்தின் தரவுகள் ஏதும் கிடைத்ததில்லை. ஆனால், இங்கே கிடைத்துள்ளதாக தகவல். மதுரையில் இருந்து இராமாநாதபுரம் அழகன் குளம் துறைமுக நகரத்திற்கு திருப்புவனம் வழியாக பாதையும் இருந்துள்ளது. அழகன் குளத்திற்கு ரோமானிய வணிகர்கள் வந்ததாக தகவல். எனவே பாண்டியனின் தலைநகர் மதுரையும், அழகன் குளத்தை இணைக்கும் மையப்புள்ளியாக கீழடி இருந்திருக்க வேண்டும். அக்காலப் பயணத்திற்கு சென்றபோது, கீழடியில் வெளிநாட்டு பயணிகள் தங்கி சென்றிருக்கலாம். கீழடியில் முதற்கட்ட ஆராய்ச்சியைக் காட்டிலும், இரண்டாவது கட்டத்தில் அதிகமான தரவுகள் கிடைத்துள்ளன. இன்றைய ரப்பர் ஸ்டாம்பு என்று சொல்கின்ற சுடுமண் முத்திரை கட்டைகள், எழுத்தாணிகள், செம்பு ஆயுதங்கள், அம்புகள், இரும்பு பொருட்கள், 18 வகையான தமிழ் எழுத்துகள் கொண்ட ஓடுகள், அணிகலன்கள் என 5,300க்கும் மேற்பட்ட தொல்லியல் தரவுகள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற இடங்களில் கிட்டியதைவிட இங்கே அதிகமாக கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நீர்வரத்து செல்கின்ற கால்வாய்கள், தொட்டிகள் என திட்டமிட்டு அப்போதே அமைத்துள்ளனர். கடந்த டிசம்பர் 2018இல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்று அமைப்பின் மாநாட்டில் கீழடி அகழாய்வு பணி தொய்வில்லாமல் நடக்க வேண்டுமென்றும், அப்படி நடந்தால் இந்தியாவினுடைய வரலாறு ஒரு முக்கியக் கட்டத்தை நோக்கி நகருமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தற்போது மெய்யாகிவிட்டது. தற்போது கீழடியில் 50 சென்ட் நிலத்தில் மட்டும்தான் இந்த ஆய்வு நடந்துள்ளது. இன்னும் 110 ஏக்கர் செய்யப்பட வேண்டும். இங்கு எடுக்கப்பட்ட ஆறு தரவுப் பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா அனலட்டிகல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்ட்டது. அந்த ஆய்வின்படி இந்த பொருட்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும், கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினை சார்ந்ததென்று அறியப்பட்டது.
கீழடியில் 353செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு. 580 ஆண்டையும், 200செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு.205 ஆண்டையும் சார்ந்தது என்று அறியப்பட்டுள்ளது. எனவே கீழடியில் கால நேரம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு வரையாகும். இங்கு 70 எலும்புத் துண்டுகள் எடுக்கப்பட்டன. இவை பசு, ஆடு, காளை, எருமை போன்ற விலங்கினங்களை சார்ந்தது தான் அதிகம். எனவே ஆடு, மாடுகள் இங்கே வளர்க்கப்பட்டன. கடந்த காலத்தில் கொடுமணல், அழகன் குளத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்து வகைகள் கி.மு.3ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். கீழடியில் கிடைத்ததோ கி.மு. 6ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். எழுதுகின்ற பழக்கமும், எழுத்தறிவும் முழுமையாக இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள். களி மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி நமது தொன்மையை சொல்கின்ற கீர்த்திமிகு கீழடியைப் போன்ற தமிழகம் முழுவதும் இதேபோல, பல பகுதிகளில் நமது நாகரிகங்கள் பூமிக்கு கீழ் உள்ளன. இதுவரை அகழாய்வு செய்ததெல்லாம் கிடப்பிலேயே உள்ளது என்பது வேதனையான விடயம்.
இப்படி தமிழக அகழாய்வுகளெல்லாம் கேள்விக்குறிகளாகி இருக்கின்றன. நெல்லை அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் குறித்தான சத்தியமூர்த்தி அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் காலந்தாழ்த்துகிறது. கீழடியும் ஆமை வேகத்தில் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் நியாயமாக இல்லை.
தமிழகமெங்கும் பல வட்டாரங்களில் அகழாய்வு செய்யக் கூடிய தரவுகள் உள்ளன. திருநெல்வேலி அருகே செய்துங்க நல்லூர் அருகேயுள்ள வசவப்புரத்தில் முதுமக்கள் தாழியைக் கண்டுபிடித்து ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் அதற்கான அறிக்கையும் கொடுத்தும் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. இதன் அருகே தான் ஆதிச்சநல்லூர் இருக்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மா சாலையின் தரைக்குடி - கொக்கரசன் கோட்டை பகுதிகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலான இரும்பு உருக்கு பொருட்கள் கண்டிறியப்பட்டது. அது மட்டுமல்லாமமல் கருப்பு, சிகக்வு, பழுப்பு நிற பானை ஓடுகள், தெய்வ மண் சிலைகளும் பயன்பாட்டுப் பொபருட்களும் கிடைத்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள இரவிமங்கலம் என்ற கிரமத்தின் அருகே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பழைய பயன்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன. இந்த பய்ன்பாட்டு சின்னங்கள் 200 முதல் 500 ஏக்கர் நிலத்திற்குள் புதையுண்டு இருக்கலாம் என்ற தகவல்கள். இரும்பு அச்சுத் தடைகள், கல் திட்டைகள் போன்ற பொருட்கள் இந்த பகுதியின் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையின் அருகேயிருந்து 55 கி.மீ உள்ள பட்டரைப் பெரும்புதூர் கிராமத்தில் கற்கால தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் அருகேயுள்ள நத்தமேடு, ஆனைமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கி.மு. 3 முதல் கி.மு. 1 வரை வாழ்ந்த மனிதர்களின் பயன்பாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளதாக செய்தி. இங்கு கிடைத்த மட்பாண்டங்கள் யாவும் ரோமன் சாயலை கொண்டது. ரௌலட் மட்பாண்ட ஓடுகள், 23 உறைகளைக் கொண்ட கிணறு., கல்மணிகள், யானைத் தந்தத்தால் செய்த பொருட்கள், செம்பு பொருட்கள், பிராமி எழுத்துள்ள பனை ஓடுகள், கூம்பு வடிவில் ஜாடிகள், இரு பக்க முனையுள்ள கத்தி ஆகியன கிடைத்துள்ளன. ரோமானிய பயன்பாட்டுக் கருவிகள் இதுவரை கடற்கரைப் பகுதியில் தான் கிடைத்தது. ஆனால் இப்போது கடலைவிட்டு தாண்டி சென்னையில் இருந்து தொலைதூரப் நிலப்பகுதிகளிலும் ரோமானியப் பொருட்கள் கிடைத்துள்ளது. ரோமானியர்கள் தென் தமிழகத்தில், குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் தான் வணிகம் செய்ய வந்திருப்பார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இங்கு கிடைத்த பொருட்களை கவனத்தில் கொள்ளும் போது திருவள்ளுர் மாவட்டத்தில், ரோமனியர் பொருட்கள் கிடைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். திருவள்ளூர் - திருத்தணி செல்லும் சாலையில், கொற்றலை ஆற்றோரத்தில் மண்பாண்டங்கள், கல்லால் ஆன பயன்பாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளன. ஆதிகாலத்தில் கல் பயன்பாட்டு பொருட்களும் கிட்டியுள்ளன. இப்படி தமிழகம் எங்கும் நிறைவாக ஆய்வு நடத்தப்படாமல் அரைகுறையாகவே அகழாய்வுப் பணிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகளோ இதை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது தான் வேதனையான விடயமாகும்.
தமிழகம் முழுவதும் அகழாய்வு செய்ய வேண்டிய ஊர்களும், வட்டாரங்களும் கவனிக்கப்படாமல் உள்ளது.
அவை வருமாறு.
ஆனைமலை, கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
கோவலன் பொட்டல், மதுரை மாவட்டம், 1980
திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
தேரிருவேலி, இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
கொடுமணல் தொல்லியற் களம், ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002
வசவசமுத்திரம் தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
கரூர், கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
அழகன்குளம் தொல்லியல் களம், இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
கொற்கை அகழாய்வுகள், தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம், 1980
பல்லவமேடு தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
பனையகுளம், தர்மபுரி மாவட்டம், 1979 – 1980
பூம்புகார், நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
திருக்கோவிலூர், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
மாளிகைமேடு, கடலூர் மாவட்டம், 1999 – 2000
பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002
குரும்பன்மேடு, தஞ்சாவூர் மாவட்டம், 1984
கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
கண்ணனுர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம், 1984
பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
படவேடு, திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993
அண்மைய கால அகழ்வாய்வுகள்
ஆண்டிப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
மோதூர், தர்மபுரி மாவட்டம்,
மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
பரிகுளம், திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
நெடுங்கூர், கரூர் மாவட்டம், 2006-2007
மாங்குளம், மதுரை மாவட்டம், 2006-2007
செம்பிகண்டியூர், நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்
கீழடி அகழாய்வு மையம், சிவகங்கை மாவட்டம் 2015 - 2017
ஆதிச்சநல்லூர், பூம்புகார், அரிக்கமேடு, கொற்கை, தொண்டி, கங்கைகொண்ட சோழபுரம், மாங்குளம், உறையூர், முசிறி, குற்றாலம், வைகை ஓரத்தில் வருசநாடு, கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, தேரிருவேலி, பேரூர், பாடியூர், திருவில்லிபுத்தூர், பூசநாயக்கன்குளம், சிவகளை போன்ற தமிழகத்தின் பல இடங்களில் அகழாய்வில் பல தரவுகள் கிடைத்தன. இன்னும், பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல் – அரச்சலூர் மற்றும் அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது.
இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது.
அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொசற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது.
இதுபோன்ற முக்கியமான அகழாய்வுப் பணிகளும் ஒப்புக்குத் தான் நடந்துள்ளன. கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நவீன யுக்திகளையும், உரிய புதிய கருவிகளைக் கொண்டு ஆய்வுகள் நடத்தாமல் ஒப்புக்கு மத்திய அரசு ஏதோ செய்துள்ளது.
இதற்கு வேண்டிய நிதி ஆதாரங்களையும், அக்கறையான வேகமான நடவடிக்கைகளும் மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசும் இதை குறத்தான அருமை பெருமைகளை தெரிந்ததாக தெரியவில்லை. தமிழகத்தின் தொன்மையும் நாகரிக்தையும் பெருமை கொள்ள செய்பவை நம்முடைய அடையாளம் மட்டுமல்ல, நமது தன்மானமும் ஆகும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2019.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...