Wednesday, March 9, 2016

The Handbook for my lover



சமீபத்தில் ரோஸலின் டி மெல்லோ எழுதிய The Handbook for my lover என்ற புதினத்தை படிக்க முடிந்தது.  வித்தியாசமான கோணத்தில் நடையும், அணுகுமுறையும் இருந்தது.  இதில் இச்சைகளை தவிர்த்து சொல்லாடல், கதையாடலை கவனிக்கவேண்டும்.  ஓரளவு மறைந்த கமலதாஸ் பாணியில் ரோஸலினுடைய எழுத்துக்கள் ஒத்துள்ளன. 

படைப்பாளிகள் மத்தியில் இந்த புதினம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரோஸலின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் இதில் சொல்லப்பட்டுள்ளது.  அவரே தன்னுடைய புதினத்தை பற்றியும் குறிப்பிடுவது,

‘‘இந்தப் புத்தகத்துல நான் விவரிச்சிருக்கிற சம்பவங்கள் எல்லாமே உண்மை. என் வாழ்க்கையில் நடந்தது. என் வாழ்க்கையில் நடந்ததை வெளி உலகத்துக்குச் சொல்றதுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும். நான் நேர்மையானவள்!"

தடாலடியாக ஆரம்பிக்கிறார் ரோஸலின் டி'மெல்லோ. ‘வோக்', ‘ஓப்பன்', ‘ஆர்ட் ரிவ்யூ' போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் கலை தொடர்பான விஷயங்களை எழுதிவருபவர். தன் எழுத்துக்காக ஓவியர்கள், ஒளிப்படக்காரர்கள் மத்தியில் பரவலாகக் கவனிக்கப்பட்டவர் தற்போது ஒரு புத்தகத்தின் ஆசிரியர்.

‘எ ஹேண்ட்புக் ஃபார் மை லவ்வர்' இவரின் முதல் புத்தகம். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பித்த இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகி ஆங்கில இலக்கிய வட்டாரத்தில் மெல்லிய அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. காரணம், இந்தப் புத்தகம் ‘எரோட்டிக் மெம்வா'. ஒரு பெண்ணின் பாலுணர்வுகளை, பாலுணர்வு நடவடிக்கைகளை வெளிப்படையாக, முகத்தில் அடித்தாற்போலப் பட்டவர்த்தனமாகப் பேசும் புத்தகம் இது.

‘கதையில் வரும் எந்த ஒரு கதாபாத்திரமும் உண்மை மனிதர்களுடன் ஒத்துப்போனால் அது தற்செயலானது அல்ல. இந்தப் புத்தக உருவாக்கத்தில் எந்த ஆண்களும் பாதிக்கப்படவில்லை' என்ற அறிமுக வாசகங்களுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. அதற்குப் பிறகு புத்தகத்துக்குள் நுழைந்தால் காதலும் காமமும், ஒரு புத்தகம் உருவாவதைப் பற்றியதான கதையாடலும்தான் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

கதை ரொம்பவும் ‘சிம்பிள்'. 23 வயது கொண்ட இளம் பெண். அவள் ஒரு நாள் உலகளவில் பிரபலமான ஒளிப்படக் கலைஞனைச் சந்திக்கிறாள். அவருக்கு வயது 52. நள்ளிரவுக்குப் பின் ஒயினும், பேச்சுமாக அவர்கள் சந்திப்பு நீள்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் காமத்தில் ஒன்றிணைகிறார்கள். ‘இது ஒரு நாள் கூத்துதான்' என்று அவள் நினைக்கிறாள். அவரும் அப்படியே. ஆனால் அது ஒரு நாளில் மட்டுமே முடிந்துவிடுகிற உறவாக இருக்கவில்லை. எட்டு வருடங்கள். திருமணம் செய்துகொள்ளாமல், ‘லிவ் இன்' உறவாகவும் இல்லாமல்... வெவ்வேறு பாதையில் பயணிக்கிற இருவரை இணைக்கும் பாலமாகக் காமம் இருக்கிறது.

இது ரோஸலின் வாழ்க்கையில் நடந்தது. அந்தப் பிரபல ஒளிப்படக் கலைஞர் யார், அந்த உறவு என்னவானது என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது ரோஸலினுடன் கொஞ்ச நேரம் பேசுவோம்...

உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. இந்தப் புத்தகத்தை கற்பனைன்னு சொல்லி நீங்க தப்பிச்சிருக்கலாம். ஆனா, ஏன் இந்த ரிஸ்க்?

உங்க முதல் கேள்விக்குப் பதில் சொல்லிடுறேன். பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாமே மும்பை. ரைட்டர் ஆகணும்னுதான் கனவு கண்டேன். ஆனா, நான் எதைப் பத்தி எழுதப்போறேங்கிறது தெரியாது. சின்ன வயசுல கவிதைகள் எழுதிப் பார்த்தேன். செட் ஆகலை. சரி, நாம ஏன் நம்ம வாழ்க்கையில நடந்த, நடக்கிற விஷயங்களை எழுதி ஒரு ‘எக்ஸ்பெரிமென்ட்' பண்ணிப் பார்க்கக் கூடாதுன்னு தோணுச்சு.

அந்த டைம்ல கமலா தாஸ் புத்தகங்கள்தான் எனக்கான போதை. அவை தந்த ஊக்கத்துலதான், ஒரு பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ‘செக்ஷுவல் என்கவுன்ட்டர்ஸ்' பத்தி எழுத முடிவு செஞ்சேன். அதுக்கு கற்பனை கதாபாத்திரம் எல்லாம் தேவைப்படலை. அந்த ‘ஒரு பெண்' நானேதான்! ஸோ, இந்தப் புத்தகத்தை ‘நான் ஃபிக்ஷன் எரோட்டிக் மெம்வா'னு சொல்வேன்.

பாலுணர்வு நடவடிக்கைகள் பத்தியெல்லாம் ‘கிராஃபிக் டீட்டெய்லா' கொடுத்திருக்கீங்க. அதுவும் இந்தியாவுல இன்னைக்கு கலாச்சாரக் காவலர்கள் அதிகமா இருக்கிற நேரத்துல...

‘தைரியத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையில ஒரு மெல்லிய கோடு இருக்கு'ன்னு சொல்வாங்க. இந்தப் புத்தகத்தைப் படிச்ச பலரும் ‘நீ தைரியமா பல விஷயங்களைச் சொல்லியிருக்க'ன்னு பாராட்டுறாங்க. ‘கிராஃபிக் டீட்டெய்லா இருக்கு'ன்னு நீங்க சொல்றீங்க. ஆனா நான் அதை ‘டிஸ்கிரிப்டிவ்'னு (விளக்கமானது) சொல்வேன். தன்னோட பாலியல் வேட்கைகளைப் பத்தி எந்த ஒரு வெட்கமும் இல்லாம ஒரு பெண் பேசுறது அப்படித்தான் இருக்கும். மத்தவங்களுக்காகப் பயப்பட்டா எதையுமே எழுத முடியாதே!

உங்க புத்தகத்தைப் படிச்ச பிறகு, அந்த 'போட்டோகிராஃபர்' யார்னு 'கெஸ்' பண்ண முடியுது. (அவரின் பெயரைச் சொன்னதும் ரோஸலின் புன்னகைத்துக்கொண்டே ஆமோதிக்கிறார்). அவர் பெயரை எழுதலாமா...?

நோ வே! உங்களை மாதிரி சில பேர்தான் கண்டுபிடிக்க முடியும். அவர் யார்னு தெரியணும்னா, வாசகர்கள் அந்தப் புத்தகத்தைப் படிச்சு தெரிஞ்சுக்கட்டும். ஆனா, மீடியாவுல வேண்டாமே!

உங்க புத்தகத்தை அவர் படிச்சாரா?

நான் எழுதிக்கிட்டிருந்தபோது சில ‘சேப்டர்ஸ்' படிச்சார். முழுசா படிக்கலை. ‘இதையெல்லாம் எழுதாதே'ன்னு எந்த ஒரு கட்டுப்பாட்டையும் அவர் விதிக்கலை. அவரோட ஃப்ரெண்ட்ஸ் சில பேர் புத்தகத்தைப் படிச்சிட்டு அவரை சும்மா ‘டீஸ்' பண்ணியிருக்காங்க. அவ்ளோதான்!

புத்தகத்துல ஒரு இடத்துல உங்க அப்பாவின் கோபம் பத்தி சொல்றீங்க. அந்த சம்பவங்களைப் படிக்கும்போது உங்கள் குழந்தைப் பருவம் ரொம்பவும் போராட்டமானதா இருந்திருக்குமோன்னு படுது...

அப்படி முழுமையா சொல்லிட முடியாது. அப்பாவின் கோபம் எப்படிப்பட்டதுன்னா, என்னோட குரலை நான் உயர்த்த முடியாது. எனக்குன்னு தனியான‌ கருத்துகள் இருக்க முடியாது. மத்தபடி, எனக்கு இந்த அளவு சுதந்திரம் கிடைக்கக் காரணமே என் அப்பாதான்!

உங்க அப்பாவுக்கு உங்க‌ ‘ரிலேஷன்ஷிப்' தெரியுமா? உங்க புத்தகத்தை படிச்சாரா?

யெஸ்! அவருக்குத் தெரியும். ஆனா, இன்னும் புத்தகத்தைப் படிக்கலை!

புத்தகத்தோட ‘டைட்டிலே' வித்தியாசமா இருக்கே. இது விற்பனைக்காகத்தானே?

இல்லை. ‘இந்தப் புத்தகம் லவ் பண்றவங்களுக்கு ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவலா' இருக்குமோ'ன்னு பலர் எதிர்பார்ப்போட வாங்குவாங்க. அப்புறம் படிச்சதுக்கப்புறம்தான் தெரியும், ‘அட இது நம்மோட வாழ்க்கையில, நமக்குத் தெரிஞ்சவங்களோட வாழ்க்கையில நடக்கிற சம்பவமாச்சே'ன்னு. என்னை மாதிரி வாழ்க்கை வாழுறவங்க இந்தப் புத்தகத்தைப் படிச்சு தங்களோட வாழ்க்கையை ‘கனெக்ட்' பண்ணி பார்க்க முடியும். மத்தபடி ‘டைட்டில்' எல்லாம் மக்களை ‘டீஸ்' பண்றதுக்காகத்தான்!

புத்தகத்துல நிறைய இடங்கள்ல ரோலன் பார்த், ஆன் கார்ஸன், ஹென்றி மில்லர்னு நிறைய எழுத்தாளர்களோட வாசக‌ங்களை ‘கோட்' பண்ணியிருக்கீங்க...

இந்தப் புத்தகத்தை ஒரு ‘ரொமான்டிக் டிஸ்கஷனா' மட்டுமே எடுத்துட்டுப்போக நான் விரும்பலை. ரைட்டிங், லிட்டரேச்சர் பத்தியும் பேசணும்னு நினைச்சேன். அதனால என்னை பாதிச்ச ரைட்டர்ஸோட சிந்தனைகளை எல்லாம் ஒரு நேர்கோட்ல இணைக்க நினைச்சேன். அதான்!

இவ்ளோ வெளிப்படையா பேசுறீங்க. இந்தப் புத்தகத்தை ‘ஃபெமினிஸ்ட்' புத்தகம்னு சொல்லலாமா?

இது ஒரு விதத்துல ‘ஃபெமினிஸ்ட்' புத்தகம்னுதான் நான் நம்புறேன். கமலா தாஸ் மாதிரியான நபர்களுடைய புத்தகங்கள் ‘ஃபெமினிஸ்ட்' புத்தகங்கள்னு சொல்லப்படுறபோது, என்னோட புத்தகமும் அப்படி இருந்துட்டுப் போகட்டுமே!

சரி சொல்லுங்க... இப்ப உங்க ‘ரிலேஷன்ஷிப்' என்ன நிலைமையில இருக்கு?

நான் அவரை என்னோட ‘பாய் ஃப்ரெண்ட்'னு சொல்ல மாட்டேன். அவர் என்னோட ‘பார்ட்னர்'. ரிலேஷன்ஷிப் நல்லா போய்க்கிட்டிருக்கு. அவருமே ஒரு ஆர்டிஸ்ட்தானே. அதனால எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.

அடுத்து என்ன புத்தகங்கள்?

ஆணோ, பெண்ணோ... யாரையும் சார்ந்து நிற்காமல், தனியா வாழுறவங்களுக்காக ‘ஃபுட் புக்' ஒண்ணு எழுதிக்கிட்டிருக்கேன். அப்புறம் உலக இலக்கியங்கள்ல வர்ற கற்பனைக் கதாபாத்திரங்களுக்குக் கடிதம் எழுதற மாதிரியான ஒரு புத்தகம்!

(தி இந்து - 4.3.2016)

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...