Saturday, June 4, 2016

செக்கு

கழுகு மலையில் எண்ணெய் ஆட்டும் செக்கு உண்டு. கிட்டத்தட்ட 1979 வரை எள்ளில் இருந்து நல்லெண்ணெய் ஆட்டி எடுத்துதான் வீட்டில் பயன்படுத்துவது உண்டு. ஒரு சிலர் இதில் எஞ்சி வரும் புண்ணாக்கைக் கூட ருசித்து சாப்பிடுவார்கள். இந்த புண்ணாக்கை பசுவிற்கு கொடுத்தால் அந்தப் பசுவின் பால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும் என்று சொல்வார்கள். அக்காலத்தில் மூட்டைகளில் இந்த புண்ணாக்கை சேமித்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு பயன்படுத்துகின்ற பசுமாடுகளுக்கு மட்டும் இந்த எள் புண்ணாக்கை கொடுப்பது உண்டு.

கழுகுமலை வழியாக திருநெல்வேலிக்கு சென்றபோது, கழுகுமலையில் ஒரு நண்பரை பார்க்க அவர் வீட்டிற்கு போகும்போது அக்காலத்தில் இருந்த செக்கடி கண்ணில் பட்டது. கடந்த காலங்களில் செக்கில் எண்ணெய் ஆட்டும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு வடையும், சேவும், கடலைமிட்டாயும் கொறித்துக்கொண்டு 6, 7 மணி நேரமாவது அருகில் உள்ள கல்லில் உட்கார்ந்துகொண்டு பொழுதை போக்கியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment