Monday, May 22, 2017

வேட்பாளரின்தேர்தல்செலவு

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற பரிந்துரையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
------------------------------------
தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்கவும் , தகுதி வாய்ந்த ஒருவர் தேர்தல் செலவிற்கு பணம் இல்லாத காரணத்தால் அவர் போட்டியிட முடியாமல் போகின்றது. இவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவையும், அவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் செலவுகளையும் தேர்தல் ஆணையம் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும் என்று பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1998 கால கட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மறைந்த இந்திரஜித் குப்தா தலைமையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, தென் கொரியா போன்ற நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்கின்றது.
அதுபோன்று இந்தியாவிலும் செயல்படுத்த முடியுமா என ஆராய அமைக்கப்பட்ட குழு சென்னை வந்து, தலைமைச் செயலகமான கோட்டையில் அரசியல் கட்சிகளை சந்தித்து கருத்து கேட்டபொழுது, பல நாடுகளில் வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை விளக்கி விரிவான மனுவை அளித்தேன். அந்த மனுவில், மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தேர்தல் நடைமுறைகள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து சொல்லி இருந்தேன். இதனைப் படித்துவிட்டு, குழுவின் தலைவரான இந்திரஜித் குப்தா, விவரமான மனு இது என குறிப்பிட்டார்.
அக்குழு இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு, அரசியல் கட்சி, அறிஞர்கள், என பல தரப்பினரிடம் கருத்து கேட்டும் அறிக்கையை சமர்ப்பித்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்த அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தேன். ஏறத்தாழ 19 ஆண்டுகள் கழித்து  பதில் கிடைத்துள்ளது.

#இந்திரஜித்கமிட்டி
#தேர்தல்ஆணையம்
#வேட்பாளரின்தேர்தல்செலவு 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...