Tuesday, January 14, 2020

மார்கழியும், பாவை நோன்பும்

(இன்றோடு மார்கழி நிறைவு. 
பாவை நோன்பு முடிந்து )

மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன் என கீதையின்நாயகன் குறிப்பிடுவான். தொன்றுதொட்டு மார்கழி மாதம் புதினமானது எனக் கருதப்படுகிறது.  இம்மாதம் வைகறையில் துயிலெழுநது நீராடி இறைவனை வழிபடின் நினைத்தவை நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். 
மார்கழியில் சூரியன் தெற்கே மகர ரேகையில் பிரகாசிக்கின்றான். அவனுடைய தெற்கு நோக்கிய பயணம் (தட்சிணாயணம்) மார்கழியில் முடிவடைகிறது. தை முதல் நாளன்று வடக்கே கடக ரேகை நோக்கிய பயணம் (உத்திராயணம்) தொடங்குகிறது. தை மாதம் அறுவடைக் காலம்; உழவன் உழைப்பின் பலனை அடையும் காலம். ஒரு ஆண்டின் வளமான வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற அடிப்படையாய் அமைவது தைத் திங்களுக்கு முந்திய மார்கழியாகும். புனித நாட்களான இந்துக்களின் வைகுண்ட ஏகாதசியும், திருவாதிரையும் கிறித்தவர்களின் இயேசு பிறப்பும், புத்தாண்டுப் பிறப்பும் மார்கழித் திங்களில் தான் வருகின்றன. ஐயப்ப பக்தர்களும் மார்கழியில் நோன்புமிருக்கின்றனர்.
தட்சினாயணம் எனப்படும் ஆடி முதல் மார்கழி முடிய ஆறு மாதங்களும் உழவனுக்கு ஓய்வற்ற உழைப்பும், மழையும், குளிரும் மிகுந்த காலமாகும். மார்கழி முடிந்து தை பிறந்த பின்னரே உழைப்பின் பலனை அறுவடை செய்து அனுபவிக்கும் காலம். மங்கல நிகழ்ச்சிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் வழிபிறக்கும் காலம். இரவின் கடையாமக் கனவு பலிதாகும் என்பர். 
தட்சினாயணயத்தின் கடையாமமாகிய மார்கழியில் இறைவனைத் தூய உள்ளன்போடு வழிபட்டு நல்லுணர்வுகளை மனதில் தேக்கினால் உத்திராயணத்தில் நினைத்தவை நிறைவேறி மகிழ்ச்சியான வாழ்வு அமையுமெனக் கருதினர். 
உலகு செழிக்கவும் தங்களக்கு நல்ல மண வாழ்வு கிட்டிடவும் கன்னிப் பெண்கள் மார்கழித் திங்களில் பொழுது புலரா முன்னர் பொய்கையில் நீராடி மணலில் பாவை செய்து பூச்சூடி வழிபாடு செய்வர். இது மிகவும் தொன்மையான மரபாகும் என்பதை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாம். இவ்வழிபாட்டினை,

“அரிமயிர்க திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும்” (புறம். 11)

“...... திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத்தைஇத்
தண்தயமாடு மகளிரொடு”    (புறம். 241)

எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. பரிபாடலிலும் பாவை வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
“வெம்பாதாக, வியனில வரைப்பென
அம்பா கடவினாய் தொடிக் கன்னியர்
முலித்துறை முதல்வியர் முறைமை காட்ட
பனிப் புவர்பாடி”  (11:80-83)

"தாய் அருகா நின்று தவத்தைந் நீராடுதல்" (11:91)

கன்னியர் தம் தாயாருடன் பனிப்பொழுதில் சென்று குளிர் நீராடினர் எனப் பரிபாடல் கூறுகின்றது. அக்காலத்தில் பெண்டிர் தை மாதம் பாவை செய்து நீராடி வழிபடுவது “அம்பா ஆடல்” எனப்பட்டது.
சூரிய இயக்கத்தின் அடிப்படையில் இக்காலத்தில் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அக்காலத்தில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டின்படி பூர்ணிமையுடன் ஓரு மாதம் நிறைவு பெற்றது. ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு’ மார்கழி முடிந்துவிட்டது. அடுத்த நாள் தை பிறந்துவிடுகிறது. எனவே இக்கால மார்கழி நீராடலே அக்காலத்தில் தை நீராடல் எனப்பட்டது என்பது புலனாகும். பாவையை முன்னிறுத்தி வழிபட்ட பாடல்கள் “பாவைப் பாடல்கள்” எனவும் மார்கழியில் கன்னியர் இவ்வழிபாடடின்போது மேற்கொண்ட நோன்பு “பாவை நோன்பு” எனவும் பெயர் பெற்றன.

பாவை நோன்பினை சமண சமயக் கன்னியரும் மேற்கொண்டனர் என்பதை

“கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுங்
தாழியு ணீலத் தடங்கணீர் பேதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ விடியேத்திக்
கழை நனையக் குந்துங் குளிர்புனல்
ஊழி மன்னுவா மெற்லோ ரெம்பாவாய்”
எனும் யாப்பருங்கலச் செய்யுளால் அறியலாம். இந்நூல் சமண சமயத்தவரான அமிர்சாகரரால் இயற்றப்பெற்றது.
மார்கழி நோன்பு பற்றிய குறிப்பு வேதங்களில் காணப்படவில்லை என்பார் உரையாசிரிசயர் பெரியவாச்சான் பிள்ளை. இதனால், பாவை நோன்பு தொன்மையான தமிழ் மரபேயாகும் என்பதை உணரலாம். எனவே நல்வாழ்வு வேண்டி பாவையர் பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபடும் வழக்கம் தென்னகத்தில் நிலவியது புலனாகிறது.
‘தென்னகத்து மீரா’, ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி’ எனப் போற்றப்படும் ஆண்டாள் திருவில்லிப்புத்தூரில் கி.பி. எட்டாம் நூற்றாண்டு நள ஆண்டு திரு ஆடிப் பூர நன்னாளில் திருத்துழாயிடத்து அவதரித்தார். அவர் திருமாலிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடே திருப்பாவைப் பாசுரங்களாகும். ‘மானிடவர்ககு என்று பேச்சுப் படில் வாழ்கில்லேன்’ என உறுதிபூண்டு தீராதெய்வக் காதல் கொண்டு வாழ்ந்தவர். திருமாலின் வாய்ச்சுவை மனத்தின் தெய்வீகச் சிறப்பினை உணர விரும்பிய ஆண்டாள்,

“கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாயதான் தித்தித் திருக்குமோ
மருப்பெசித்த மாதவன்தான் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண்சங்கே”

என இறைவனின் வாயைத் தொடும் பேற்றினை பெற்று ‘பாஞ்சசன்யம்’ எனும் சங்கிடம் களிவிரக்கக் காதல் உணர்வுடன் கேட்கிறார் இப்பாடலில் அவர் மாலிடம் கொண்ட மையலும் பக்தியும் உணர்ச்சிப் பெருக்கெடுத்துப் பொங்கும் புதுப்புனலெனப் பாய்கிறது.
ஆண்டாள், திருமாலின் அவதாரங்களில் ஆழிமழைக் கண்ணனையே பெரிதும் போற்றிப் பரவுகின்றார். கண்ணனிடம் கொண்ட காதலால் தன்னை கோபிகையாகவும் திருவில்லிப்புத்தூரை கண்ணன் தோன்றி வடமதுரை ஆயர்பாடியாகவும் பாவித்துத் திருப்பாவைப் பாசுரங்களை பாகீன்றார்.
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள்”

எனப் பாவை நோன்பு நோற்கத் தன் தோழியரை ஆய்பாடிச் செல்வச் சிறுமிகளாகக் கருதி அழைக்கிறார் ஆண்டாள். அவர்களிடம் பாவைக்கு எவ்வாறு கிரீசைகள் செய்ய வேண்டுமென்பதை வருமாறு விளக்குகிறார். திருப்பாற்கடலில் அனந்தாழ்வான் மீது பையத் துயின்ற பரமானகிய திருமாலின் திருவடிகளை போற்றிப் பாடி நோற்போம். அவ்வாறு நோற்கையில் இவ்வுலகில் நிலையற்ற இன்பத்தைத் தரும் நெய்யையும் பாலையும் உண்ணாது ஒதுக்குவோம். விடிகாலையில் நீராடிப் புறத்தூய்மை செய்வோம். கண்ணுக்கு மையிடாது கூந்தலில் பூச்சூடாது செயற்கை அழிகினைத் தவிர்ப்போம். சன்றோர் கடிந்தனவற்றைச் செய்யோம். பொய்யும் புறங்கூறலையும் விடுத்து இயன்றவரை பிறருக்கு உதவி இரப்போருக்கு ஈந்து அகத்தூய்மையுடன் கோர்போம். இங்கு பாவை நோன்பிற்கு புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையின் இன்றியமையாமையும் வலியுறுத்தப்டுகின்றது.

தூய மனத்துடனும் தீதற்ற செயல்களுடன்

“ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்”

இவ்வுலகில் மண்ணுயிருக்கும் மண்ணுக்கும் தீங்கு நேராதபடி நாடெங்கும் மாதமும்மபாரி பொழியும்; வயல்களில் ஓங்கிச் செழித்து வளர்ந்த நெற்பயிர்களிடையே கயல்கள் துள்ளியாடும்; குவளைப்பூக்களில் வண்டுகள் மது உண்டு மயங்கிக் கிடக்கும்; குடங்குடமாய்ப் பால் சுரக்கும் வள்ளல் தன்மையுடைய பெரும் ஆநிரைச் செல்வமும் நீங்காது நிறைந்தோங்கும் என்பார் கோதை நாச்சியார். திருமாலின் புகழ்பாடி அவனைச் சரண் புகுந்து தூய மனத்துடன் மார்கழி நோன்பு நோற்றால் இவ்வுலகில் மகிழ்ச்சியும் வளமும் பொங்கும் என்பதைத் திருப்பாவை உணர்த்துகிறது.

இராமானுஜருக்கு திருப்பாவைப் பாசுரங்களில் அளவற்ற ஈடுபாடிருந்தது. உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார் மங்கை ஆண்டாளின் சிறப்பினை, “ஸம்ஸாரத்திலே உறங்குகிறவர்களை எழுப்பி எம்பெருமான் தானே தன்னைக் கண்டார்கள் ஆழ்வார்கள்” இவள் தானே சென்று எம்பெருமாளை எழுப்பித் தன் குறையை அறிவித்தாள். ஆகையாலே அவர்களிலும் இவள் விகஷணை எனப் போற்றிப் புகழ்வார்.

திருப்பாவை ஆந்திர கன்னட நாடுகளில் அவ்வவ்மொழி எழுத்துகளில் எழுதிப்பாடப்பெறுகிறது. தாய்லாந்து நாட்டு அரசால் நடத்தப்பெறும் விழாவொன்றில் சொற்கள் சிதைந்த திருப்பாவைப் பாடல்கள் பாடப்பெறுகின்றன. சோழர்கள் ஆட்சியின்போது இப்பாடல்கள் அங்கு பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் கப்பாமே பாடிப் பரவுவோர் திருமகள் கேள்வனின் திருவருளான் நிலைத்த மகிழ்ச்சியும் வளமும் பெற்று இன்புற்ற வாழ்வர்எனப் பூதேவியின் அவதாரமாகக் கருதப்படும் ஆண்டாள் அருளிச் செய்கிறார். தனம், துறவு, யோகம், யாகம் போன்ற கடுமையான நோன்புகளின்றி தூய மனத்துடன் இறைவனைத் துதித்து சரணடைந்தால் அவன் அருளை எளிதில் பெறலாம் என்பதை திருப்பாவை பாசுரங்கள் உணர்த்துகின்றன.
மார்கழி, இயற்கையிலும் கலாச்சாரக் களத்திலும் மார்கழி விட்டுச்செல்லும் தடயங்கள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. கிராமங்களில் வெள்ளி முளைப்பதற்கு முன்பே தாதர் சேமக்கலம் வாசித்து சங்கு ஊதுவார். அப்போது அருணாச்சல கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனைகள் சிலவும் அவர் பாடுவது உண்டு. தாதர்கள் குறைந்துவிட்டதால், இருக்கும் இடங்களில் ஒருவரே இரண்டு மூன்று கிராமங்களுக்கு ஊதி நெல் வரும்படி பெறுகிறார். கோயில்களிலும் பஜனை மடங்களிலும் கம்பசேவை மடங்களிலும், தெருவுக்கு ஒன்றிரண்டு இடங்களிலும் இப்படி ஊதுவார்கள்.
அறிவிக்காத போட்டியாக மாதம் முழுவதும் பெண்கள் வாசலில் கோலம் போடுவார்கள். வெள்ளிக் கோடுகளாகத் தீட்டியிருக்கும் கோலத்தில் பரங்கியின் மஞ்சள் பூக்களையும் சாண உருண்டையில் செருகிவைப்பார்கள். நிலைப்படி அருகில் அகல் விளக்கு ஏற்றியிருக்கும். வைக்கோலைக் கருக்கி, சாணமும் வண்டலும் கலந்து வீட்டில் தரையை மெழுகித் தீத்துவார்கள். தரையை வழவழப்பாகத் தீத்துவதற்குத் தீத்தாங்கல் என்ற கை கொள்ளும் அளவில் ஒரு கல் புழங்கியது. தீத்திய தரையின் கருப்புப் பின்னணியில் மாக்கோலம் கண்ணைப் பறிக்கும்.
காலையில் கேட்கும் ஓசைகளில் குயவர்கள் மண் பாண்டங்களைத் தட்டித் தயாரிக்கும் ஓசையும் ஒன்று. அப்போது நெய்த கோரைப்பாய், புதிதாகக் கோத்த அகப்பை, பிரிமணை, மூங்கில் கூடைகள் சந்தைக்கு வரும். தெருத்தெருவாக ஒட்டடைக் குச்சி விற்பார்கள். மாடுகளுக்குக் கொம்பு சீவி விடுவார்கள். தலைக் கயிறு, கழுத்துக் கயிறு, நூல் கயிறாகவே மூக்குக் கயிறு, கழுத்துச் சலங்கை, நெட்டி மாலை எல்லாம் மும்முரமாக விற்கும். பொங்கல் நெருங்கி வரும்போது கரும்புக் கட்டும், வாழைத் தாரும் கடைத்தெருவில் குவிந்துவிடும். அப்போது நாமக் கரும்பு என்று ஒரு வகைக் கரும்பு கருநீலத்தில் இளம் பச்சைக் கோடுகளோடு வரும்.
கோயில்களில் காலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது வழக்கம். பெருமாள் கோவிலில் வெண்பொங்கலோடு சுக்குவெல்லமும்கூட வழங்கப்படும். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாட்களும், அதற்குப் பின்பு பத்து நாட்களும் பெருமாளும் ஆழ்வார்களும் கேட்க திவ்யப் பிரபந்த சாற்றுமுறை நடக்கும். முதல் பத்து நாட்களான பகல் பத்தில் வல்லாள ராஜா மண்டபத்திலும், இராப்பத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலும் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒரு வேடத்தில், ஆடையில், கிரீடத்தில் தேன்றுவார்
இப்படியான மார்கழி நிகழ்வுகள், நம்பிக்கைகள் என வருடந்தோறும் நடக்கின்றன. இன்றோடு மார்கழி இந்த வருடம் நிறைவடைகிறது. தீந்தமிழில் மார்கழியில் பாடுகின்ற பக்திப் பாசுரங்கள் தமிழுக்கு கிடைத்த அருட்கொடையாகும்.

#ஆண்டாள்
#மார்கழி
#திருப்பாவை
#திருவெம்பாவை
#பாசுரங்கள்

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...