Thursday, August 27, 2015

ஈழப்பிரச்சனையில் அமெரிக்காவின் கபட நாடகம். SrilankaTamilsIssue

ஈழப்பிரச்சனையில் அமெரிக்காவின் கபட நாடகம். -SrilankaTamilsIssue
__________________________________________________




ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2009ல் ஈழத்தில் நடந்த இன ஒழிப்புப் போருக்கு சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என்று 2014வரை அமெரிக்கா தீர்மானங்களை தாக்கல் செய்து முன் மொழிந்தது. கடந்த 2014ம் ஆண்டு தீர்மானத்தில் அமெரிக்காவுடன் 23நாடுகள் வாக்களித்தன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உட்பட 12நாடுகள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். பட்டும் படாமல் இந்தியா இந்த வாக்கெளிப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா போலவே 12நாடுகள் பங்கெடுக்கவில்லை. 23நாடுகளின் ஆதரவோடு அமெரிக்காவின் தீர்மானம் அப்போது நிறைவேறியது.

ஆனால் தற்போது அமெரிக்கா 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பிரச்சனைகள் வரைக்குமான உள்ளக விசாரணையை இலங்கையே நடத்தலாம் என்று இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவர இருக்கின்றது.

இதுவரைக்குமான தன் நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா திடீரென்று அந்தர் பல்டி அடித்திருப்பதன் மூலம் அதன் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. சீனா ராஜபக்‌ஷே காலத்தில் இலங்கைக்கு நெருக்கமாக இருந்த காரணத்தினால், அதை மிரட்டுவதற்காகத்தான் அமெரிக்கா சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான, புலனாய்வு விசாரணை வேண்டும் என்று போலியானஅணுகுமுறையைக் கையாண்டது என்பது இப்போது அம்பலப்பட்டுவிட்டது.

இதயசுத்தியோடு, உண்மையாக மனித உரிமைகள் மீது அக்கறை இருந்தால் அமெரிக்காவின் போக்கில் ஏன் திடீரென்று இந்த மாற்றம் ? இந்தப் போக்கு சர்வதேச அளவில் அமெரிக்கா மீதுள்ள நம்பிக்கையை தகர்த்தது மட்டுமில்லாமல் கேள்விக்குறியும் ஆக்கிவிட்டது.

ஈழத்தமிழர்கள் என்றைக்கும் பகடைக்காய்களாக, பாவப்பட்ட மனிதர்களாக துரோகத்தால் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகத்தான் இலங்கையில் வாழ்கின்றனர். கொழும்பு ராஜ்ஜியம், கண்டி ராஜ்ஜியம், யாழ்ப்பாண ராஜ்ஜியம் என்று மூன்று தமிழ் பேரரசுகள் ஆண்ட அந்த மண்ணை, அந்த மண்ணின் பூர்வ குடிகளை புறக்கணிக்கத்து இரண்டாம்தர மக்களாக சிங்கள அரசு நடத்துகிறது.

17ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள், உல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என பலதரப்பின் ஆட்சிக்குப் பின், 1948 பிப்பிரவரியில் இலங்கை விடுதலை பெற்றது. அப்போது தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிகள் யாவும் மதிக்கப்படாமலும், அங்கீகரிக்கபடாமலும் இருந்த காரணத்தினால் தந்தை செல்வா தலைமையில் ஈழத்தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற நிலையில் உரிமையோடு வாழ பல காந்திய வழிப் போராட்டங்கள் நடத்தினார்கள், ஆனால், இராணுவ அடக்குமுறையால் தமிழர்கள் நசுக்கப்பட்டனர்.

பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த காலகட்டங்களில் தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்குமிடையே ஏற்பட்டும் அவையாவும் குப்பைக்கூடைக்கே சென்றன. தமிழர்களை துச்சமென நினைத்து கொன்று குவித்தது சிங்கள இராணுவம். இதற்குப் பின் தான் பல்வேறு ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் போர்க்களத்துக்கு வந்தன. இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் வீறுகொண்டு சிங்கள அரசை திணறடித்தது. வீரத் திருமகன் பிரபாகரனைக் கண்டு சிங்களர்கள் அஞ்சினர். தமிழருடைய பழம்பெரும் கீர்த்தியை பிரபாகரன் மீட்டெடுத்தார். 

இப்படியான நிலையில் 2009ல் முள்ளிவாய்க்காலில் 1.5லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. பலரை கைது செய்து இன்றைக்கும் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பலர் காணாமல் போனார்கள். 2009ல் ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தப் பிரச்சனையை ஜெர்மனி முதன்முதலில் கிளப்பியது. இந்தியாவும், கியூபாவும் இராஜபக்‌ஷே செய்த கொடூரங்களை பாராட்டியது.

இந்நிலையில் இலங்கையில் நடந்த கொடுமைகளைக் கண்டித்து 2014வரை தீர்மானங்கள் கொண்டுவந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கான காரண காரியங்கள் என்ன? சம்பந்தம் தலைமையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பும் உள்ளக விசாரணைக்குத் தலையாட்டி, “ஆமாம்சாமி” போடும் நிலைக்குத்தான் போவார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே ராஜபக்‌ஷே ஆட்சிகாலத்தில் உள்ளக விசாரணைகள் நடத்தி, எல்.எல்.ஆர்.சி அறிக்கைகள் கொடுத்தும், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு புணர் ஜென்மம் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அமெரிக்கா உள்ளக விசாரணை என்று சொல்வது கொடுமையிலும் கொடுமை.

வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி துவங்க உள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தொடரில் ஏதேனும் நீதி கிடைக்குமா என்று ஏங்கிய ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு பேரிடி.

இலங்கைக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்மணி நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்காவின் இலங்கைக்கு ஆதரவான இந்த முயற்சியை தெளிவாக தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துவிட்டார். இதை மனதில் கொண்டுதான் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா வழங்குவதற்கு செயில்ட் அல் ஹூசைன் இலங்கை வரவிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனுக்கு எப்படி நீதி கிடைக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் சர்வதேச தலையீடுகளும், தங்கள் சொந்த லாபங்களுக்காக உலக அரசியல் சதுரங்கத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, சுவீடன், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை மனதில் வைத்துக்கொண்டு காய்களை நகர்த்துகின்றன.

ஆனால், இந்தியாவோ இந்த சூட்சமங்களைச் சற்றும் சிந்திக்காமல், ஈழப்பிரச்சனையில் எதிரிகளின் வளையிலே மாட்டிக்கொள்கிறது. இந்திராகாந்தி காலம் வரை ஈழப்பிரச்சனைகள் ஒருமுகமாக ஈழத்தமிழர் நலன்களில் அக்கறைகொண்டு நகர்ந்தது. ராஜீவ்காந்தி பிரதமரானவுடன் இதன் பரிமாணம் மாறி வேறுதிசையினை நோக்கி சிங்களர்களுக்கு ஆதரவாக திரும்பியது.

ராஜீவ் காந்தி காலத்தில் ரமேஷ் பண்டாரியும், ஜே.என்.தீட்சத்தும் இந்தியாவின் இலங்கையோடான வெளியுறவுக் கொள்கையை இந்திராகாந்தி அணுகுமுறைக்கு விரோதமாகத் திருப்பிப் போட்டார்கள். வங்க தேசம், பாலஸ்தீனம் என்றெல்லாம் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, ராஜீவ் காந்தி காலத்தில் அருகாமையில் உள்ள இந்திய நாட்டின் சொந்தக்காரர்களான ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படுவதை பாராமுகமாக இருந்தது டெல்லி .

ஒரு தேசிய இனம் தன் விடுதலைக்காகப் போராடுவதும், சுயநிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடிப்படை உரிமைகளாகும். அவ்வாறான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அந்த இனத்தை அடக்க நினைத்து, படுகொலை செய்வது சாதாரண குற்றமல்ல. அது நூரம்பெர்க் ஹிட்லரின் பாசிசத் தனமான போக்கு என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

இப்படியான இடியாப்பச் சிக்கலில் மாட்டியுள்ள ஈழத் தமிழர் பிரச்சனைக்கு விடியல் எப்போதோ? போர்குணத்தோடு இருக்கின்றவரை ஈழத்தின் தாகம் தனியாது.



புவிஅரசியலில் ஈழத் தமிழர் பிரச்சனைகளின் போக்கைக் குறித்து, கீழ்கண்ட பதிவுகள் நமக்கு மேலும் விளக்கத்தைத் தரும்.

________________________________________________


எந்த ஒரு நாடும் {குறிப்பாக அமெரிக்கா} த‌த்தமது நலன்கள் என்றகோண‌த்திலேயே எமது பிரச்சினையை அணுகுமே தவிர எமது மண்ணில் மனுநீதி நிலவ வேண்டும், தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல என்பது எமது மண்ணில் வாழுகின்ற அல்லது எமது மக்களில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவ‌ருக்கும் புரிந்த விடயம் ..அப்படி நீதிதான் நோக்கமெனில் , முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரும் மருந்துமின்றி இறந்து கொண்டிருந்தபோது, செய்மதிகளின் உதவியுடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்காது..

அதனால், எமது இனத்தின் விடிவிற்கான பயணத்தில் சர்வதேச அரசியலை சரியாக புரிந்து கொள்வதும், அதில் எமது முக்கியத்துவத்தை உணர்ந்து எமது மக்கள் சார்பாக முன்னெடுப்புகளை செய்வதும் முக்கியமானது.இது சர்வதேசத்துடன் முரண்படுவதென்பதாகாது .மாறாக , சர்வதேசத்தின் நலன்களுக்காக மட்டும், எமது மக்களின் நலன்களை விற்பதும், சர்வதேச அரசியலை மக்களுக்கு பிழையாக மொழிபெயர்த்தலும் ஒருபோதும் விடிவைத்தராது.

இங்கு,எமது மக்களின் இரண்டு அரசியல்வாதிகள் , அந்த சர்வதேச பூகோள அரசியலை எவ்வாறு விளங்கி வைத்துளார்கள் அல்லது அதை எப்படி மக்களுக்கு சொல்கிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தைகளினூடே பார்க்கலாம். அதன் பின் நீங்களே முடிவெடுக்கலாம்.

-------------------------------------------------------------------------------------
1}திரு சுமந்திரன் 12/14/12/2014 இல் சொன்னது :-

"2011 ஆம் அண்டு சம்பந்தன் தலைமையில் நாங்கள் அமெரிக்காவுக்கு சில சந்திப்புகளுக்காக விஜயம் செய்திருந்தோம். அதன் பின்னரே தமிழர் தொடர்பான சர்வதேசத்தின் பார்வை {எமக்கு சார்பாக} மாற்றமடைந்தது. :-அதன் பின்னரே அமெரிக்கா இலங்கை மீது ஐநாவில் தீர்மானங்கள் கொண்டு வந்தது.அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளருடனான மிக முக்கியமான சந்திப்பில் , 45 நிமிடங்கள் எந்த வித தடங்கலுமின்றி சம்பந்தன் தமிழர்கள் மீதுய் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக பேசினார். அமெரிக்காவை விட்டால் எங்களுக்கு வேறு யார் உளர் என்றும் சம்பந்தர் கேள்வி எழுப்பி இருந்தார்.

, அதன் முடிவில் " இப்படியாக, கேட்பவர்களினை மாற்ற‌க்கூடிய உங்களை கொண்டிருப்பது தமிழ‌ர்கள் பெற்ற பெரும் பேறு என்றும் அமெரிக்க உதவிச்செயலாளர் கூறியிருந்தார்.

அந்த ஒரு சந்திப்பிலேயே, அமெரிக்காவிற்கு - அதாவது உலகின் அதியுன்னத சக்திகொண்ட அமெரிக்காவிற்கு, தமிழர்களுக்கு உதவ வேன்டிய தார்மீக அறம் சார்ந்த கடப்பாடு உடையது என்பதை அவர்க்ளை ஏற்றுக்கொள்ள வைத்தார்.அதன்பின்னரே ஐநாவில் தமிழ‌ர்கள் சார்பாக தீர்மானங்கள் வர ஆரம்பித்திருந்தது./:- திரு சுமந்திரன் 2014.

In 2011 we visited the United States for a set of meetings. It is after these meetings that the international profile of the Tamil struggle changed. It is after these meetings that that the US government brought resolutions concerning Sri Lanka. At an important meeting with a Deputy Secretary of State Mr Sampanthan spoke for 45 minutes without interruption on the grievances of our people. When he ended, she stated “your people must be a privileged lot to have such an eloquent voice speaking on their behalf”. In that one meeting he was able to convince her that the United States of America – a global super power – had a moral responsibility to assist the Tamil people. He told her, ‘if even you let us down where else will we go?’. Upto that time the only resolution had been the resolution of 2009, which praised the Sri Lankan government. There had been nothing that was critical of the government.
https://www.colombotelegraph.com/…/the-relevance-of-soft-p…/

சர்வதேசத்துடன் அவர்க்ளுக்கு புரிய வேண்டிய மொழியில் பேசி , அவர்களுக்க்குஆதரவைப்பெறவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உள்ளது.

ஆனால், அந்த ஒரே சந்திப்பில் {45 நிமிடம்}அமெரிக்காவிற்கு அதனது "தார்மிக அற கடப்பாடு" பற்றி கூறி அதை அமெரிக்கா ஏற்று , அதன் அடிப்படையிலேயே தமிழர்கள் சார்பாக அமெரிக்க செயற்பட ஆரம்பித்தது என்று சொல்வதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

அப்படியான கேட்பவர்களை வசப்படுத்தும் பேச்சு வன்மையுடைய தலைவர் 2006 இலிருந்து 2009 வரை தமிழர்களின் பிரச்சினையை ஏன் அமெரிக்காவிற்கு விளங்கப்படுத்தி அவர்களின் "தார்மீகஅற கடப்பாட்டை" எமக்கு சார்பாக மாற்ற‌வில்லை என்று எவரும் கேட்க கூடாது. கேட்டால், நீங்களும் ராஜதந்திரம் தெரியாதவர்கள் எனும் நாமம் சூட்டப்படுவீர்கள்.

யதார்த்தமற்ற கதைகள் பேசுபவர்களை நிராகரிக்குமாறு அண்மையில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் அறிக்கை விட்டது இப்படியான பூச்சுற்றல் கதைகளை பார்த்து விரக்தியுற்றமையால்தான் என்று நினைக்கிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

2} கஜேந்திரகுமார் 2013 இல் சொன்னது - {இந்திய பத்திரிகை ஒன்றிற்கு 2013 இல் வழங்கிய செவ்வி- 2013 கால நிலையுடனும் இன்றைய நிலையுடனும் ஒப்பிட்டு, இப்பேட்டியை பார்க்கவும்.இதன் பின்பு நடந்தவற்றையும் இப்போது நடப்பவற்றையும் கவனியுங்கள். தெளிவான தூரநோக்கான பார்வை எது என்பது விளங்கும். }

//இலங்கையில் சீனா நுழைந்ததால், இன்று தமிழ் மக்களின் புவிசார் அரசியல் மதிப்பு வலுவடைந்திருக் கிறது. இலங்கை விவகாரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய் நகர்த்த வேண்டும் என்றால் அவை தமிழர்களின் அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும். இதனால்தான் தமிழர்களின் துய ரத்தை இன்று அவை ஜெனீவாவில் இலங்கையின் மீது நிர்பந்தம் தரப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

//தமிழக மக்களுக்கு இன்று கிடைத்துள்ள புவிசார் அரசியல் வெளியை நாம் எப்படிப் பயன் படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப் பது இனி நம் கையில்தான் இருக்கிறது. இந்திய, அமெரிக்க, சீனக் குழாம்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த, புவிசார் அரசியல் நலன் களை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் நம் மக்களுக்குப் பலனளிக் கக்கூடிய எந்த வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.
லங்கையில் ஷநல்லிணக்கமும் பொறுப்புச்சாட்டுதலும்| உருவாவதற்காக இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதே நாங்கள் ஆய்ந்தறிந்த கருத்து.

இது மேற்குலகு மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப் படையிலேயே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நினைக்கிறோம். தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப் படுகொலையைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் மீது போதுமான அளவுக்கு நிர்பந்தம் செலுத்தி, ஆட்சி மாற்றத்தை இலங்கையில் நிகழ்த்திக்காட்டுவதே மேற்குலகின், இந்தியாவின் நோக்கம். அதாவது சீனாவின் சார்பாக அல்லாமல், தங்கள் சார்பான அரசு அங்கே இருக்க வேண்டும் என்பதே அவற்றின் நோக்கம். அப்படி அவர்கள் எதிர்பார்க்கும் நேச அரசுக்கு நாளை நெருக்கடி வரக் கூடாது என்பதற்காக, மோதலின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்கக்கூடிய எந்தக் கடினமான சூழலையும் உருவாக்க இந்தியாவும் மேற்குலகமும் விரும்பவில்லை.//

// தமிழர்களைத் தனித் தேசிய இனமாக சிங்களர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை. தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதாகச் சிங்களத் தலைவர் ஒருவர் கூறுவாரேயானால் சிங்களர் கள் அவரை நிராகரித்துவிடுவார்கள். ஆனால் இனப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தமிழ்த் தேசியத்தை அங்கீகரிப்பதுதான் என்பதை நாம் அறிவோம். மேற்குலகமும் இந்தியாவும் இதை அறியும். ஆனால் இதை அவர்கள் தங்கள் அதிகாரபூர்வக் கொள்கையாக அங்கீகரிக்கமாட்டார்கள்.

அப்படி ஏற்றால் இலங்கையில் அவர்களால் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவோ தங்களுக்கு நேசமான அரசாங்கத்தை உருவாக்கவோ முடியாது. சீனாவுக்கு ஆதர வான (இந்திய, அமெரிக்க நலன்களுக்கு எதிரான) ராஜபட்சே அரசின் கொள்கைகளைச் சிங்கள மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதால், தங்களுக்கு ஆதரவான அரசை இலங்கையில் நிறுவ முடியாது என்னும் உண்மை உரைக்கும்போதுதான் மேற்குலகும் இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினையைக் காத்திரமாக அணுகும். எவ்வளவோ நிரூபணங்கள் குவிந்தபோதும் இப்படிப்பட்ட தீர்மானத்தை அவை கொண்டுவந்ததற்கு இதுவே காரணம்.//
////இலங்கையின் தோல்வி என்பது மட்டும் தமிழர்களின் வெற்றியாகிவிடாது. இதில் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும்.///:- கஜேந்திரகுமார் 2013
http://www.globaltamilnews.net/…/language/ta-IN/------.aspx…

{இங்கு ஈழம் என அந்த பத்திரிகை குறிப்பிட்டிருந்தது தமிழ் தேசம்{nation} என்பதையே குறிக்கிறது }


ஒரு பிரச்சினையை வெற்றி கொள்ள‌வேண்டுமாயின் பிரச்சினை என்ன என்கிற புரிதல் வேண்டும். இங்கு அந்த புரிதல் தெளிவாக வெளிபடுகிறது.

{அத்தோடு அவர் எமது இனப்பிரசினை என்ன என்று விளாங்கப்படுத்தும் விதமும் அவரின் தெளிவான நோக்கை சுட்டிக்காட்டுகிறது https://www.facebook.com/friendsofgajen/photos/pb.1607426422808347.-2207520000.1437072776./1610760319141624/?type=3&theater }

வெறுமனே "போராட்டம்வெடிக்கும்" கதைகள் அவர் பேசுவதேயில்லை .

---------------------------------------------------------------------------------------

இந்த இரண்டு கருத்துகளையும் பார்த்தபின்னர் , பூகோள அரசியல் சம்பந்தமான சரியான புரிதல் யாரிடம் உள்ளது என்பதையும், யார் மக்களை தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக சிந்திக்க வைத்து மக்களை அரசியல் மயப்படுத்துகிறார் என்பதையும், யார் வெறும் உணர்ச்சியூட்டும் பேச்சுகளை பேசி மக்க்ளுக்கு உண்மையை மறைக்கிறார் என்பதையும் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------------------------
1993 மாவீரர் நாள் உரையில் தலைவர் “இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன.

இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்குத் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும்.”

{குறிப்பு:- தலைவர் ஆங்கிலமும் படிக்கவில்லை சட்டமும் படிக்கவில்லை . அவருக்கு தெரிந்தது , மக்கள் நலனும் அதற்கான உறுதியும் நேர்மையும் அர்ப்பணிப்பும் மட்டும்தான்}


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-08-2015. 

#SrilankaTamilsIssue #UNHRC #KsRadhakrishnan #KSR_Posts 

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...