Sunday, March 30, 2025

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே #ராபர்ட்கிளைவ் #வரலாறு

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே
#ராபர்ட்கிளைவ்
#வரலாறு 
————————————
அன்று மொகலாயருக்கு அடிமையாக இருந்த கதையினையும், அந்த மொகலாயருக்கு முன் யார் யார் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள் என்பதையும் சொல்கின்றது

ஆற்காடு நவாப் மொகபாய பிரதிநிதியாக இருந்ததையும், அவுரங்கசீப்புக்கு பின் பலமிழந்த, மராட்டியரால் நொறுக்கபட்ட மொகலாயத்தால் மொத்த இந்தியாவினையும் ஆளமுடியாமல் போக, அங்கே ஆற்காடு நவாப் இனி தமிழகம் தன் சுல்தானியம் என அமர்ந்ததையும், மொகலாயமே இல்லை உனக்கேன் வரி என தமிழக நாயக்கர்களும் இந்து மன்னர்களும் எழுந்த வரலாற்றை சொல்கின்றது







இனி இந்தியாவில் மொகலாய ஆட்சி இல்லை இனி இந்துக்கள் ஆட்சி என்ற நிலை வந்தபோது தமிழக கடற்கரையில் அன்று கோவா பக்கம் வீரசிவாஜியால் ஒடுக்கபட்ட தனி கிறிஸ்தவ ராஜ்ஜியம் இனி தமிழக கடற்கரையில் சாத்தியம் என திட்டமிட்ட பிரெஞ்ச் டூப்ளே காலத்து கதையினை சொல்கின்றது

ஆம், ஆனந்தரங்கம் பிள்ளையின் நூல் வரலற்று சாட்சி

17ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த ஆப்கானியரான ஆற்காடு நவாபின் குடும்பம் வாரிசு சண்டையில் ஐரோப்பிய கம்பெனியார் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

பிரிட்டிசாருக்கு சென்னையிலும்  கடலூரிலும் கோட்டைகள் இருந்தன, ப்ரெஞ்சுகாரருக்கு பாண்டிச்சேரியில் கோட்டை இருந்தது

முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது ஓடிய பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு , இந்த டூப்ளேதான் முதலில் ஐரோப்பிய அரசை தமிழகத்தில் பரிசீலித்து பார்த்தவன்

அவர் ஒரு கம்பெனியின் கவர்னர் என்பதால் அவன் திட்டம் சரியாக இருந்தது , பலவீனமான குழப்பமான தமிழக பக்கம் ஒரு அரசு சாத்திய்ம் என எண்ணினான்

ஆனால் களத்தில் அவனால் சாதிக்கமுடியவில்லை தந்திரசாலி சிப்பாயாக இருந்த பிரிட்டிஷின் ராபர்ட் கிளைவ் அதை சாதித்தான்

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை,

அன்றே சில மொழிகள் படித்தவர். சொந்தமாக கப்பல் இருந்த வியாபாரியும் கூட, இதனால் ஐரோப்பியர் பழக்கம் உருவாகி அப்படியே சென்னை கோட்டையில் திவானாக இருந்தவர்.

அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

நாமும் பழைய வரலாறுகளை ஊன்றி படிக்கின்றோம், அரசர்களின் ராஜ வாழ்க்கை மிக கொண்டாட்டமாய் இருந்திருக்கின்றது

சாதி என்பது அரசனை பாதுகாக்கவே வகுக்கபட்டிருகின்றது, அவனுக்கே எல்லோரும் பணியாளாய் இருந்திருக்கின்றனர்

அக்கால அரசவைகள் அப்படி இருந்திருகின்றன, இந்தியா என்றெல்ல ரஷ்ய ஜார் மன்னனின் அரசு வரை அப்படித்தான் இருந்திருக்கின்றது, சுல்தான்கள் அவையிலும் இந்த பேதம் இருந்திருக்கின்றது

அதில் பிரிட்டிசார் வந்த காலம், அவன் ஆட்சி இங்கு துளிர்விட்ட காலம் எல்லாம் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை.இன்று அவருக்கு பிறந்தநாள்.



பிரெஞ்சு அரசின் துவிபாஷ்
அதாவது இரு மொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளராக கவர்னர் டூயூப்ளெக்சிடம் பணிபுரிந்தவரும் 
பீரங்கி என்ற போர்த்துக்கீசியச் சொல்லைத் தீக்குடுக்கை என்று தமிழில் ஆக்கியவரும் 
பதினெட்டாம் நூற்றாண்டு தமிழக பிரெஞ்சு ஆங்கிலேய அரசுகளுக்கிடையே நடைபெற்ற அதிகாரச் சண்டைகள், கடிதப் போக்குவரத்துகள், போர்கள், தளவாடப் பரிமாற்றங்கள், சமூகப் பழக்க வழக்கங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள், அதிகாரப் படிநிலைகள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருப்பவரும் 
பன்மொழி வித்தகரும்
நவீன தமிழ் இலக்கியத்தில் நாட்குறிப்பு இலக்கிய வகைமையின் முன்னோடியுமான 
ஆனந்தரங்கம் 
( 1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10 )
பிறந்தநாள் இன்று.

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள் #அத்தியாயம்8

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் 
—————————————
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’  என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்
#அத்தியாயம்8

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-3-2025 
@kovilpatti1876 
•••• நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 8

மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும்.  ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு வியாபாரிகளுக்கு அத்துப்படி. மாட்டு சுழிகளையே 10 வகையாகச் சொல்வார்கள். 
அதேபோல் மாட்டின் வயதையும் விவசாயிகள் சரியாகக் கணித்து விடுவார்கள். ‘பல்ப் போட்டுருச்சா?’ என்று கேட்பார்கள். இது மாட்டின் பிராயத்தைக் குறிப்பது. கீழ்வாயில் பால் பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் ‘பல்ப்’ என்றார்கள். வருஷத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். 4 வருடங்களில் 8 பற்கள் போட்டு விடும். இதை ‘கடைத்தேர்ச்சி’  அதாவது ‘கடைசி பல் போடுதல்’ என்பார்கள். 
மாட்டுத்தாவணியில் மாடுகளை விற்போரும் வாங்குவோரும் தரகர்களை வைத்துக் கொண்டு கையில் துண்டைப் போட்டு விலை பேசுவார்கள். ஒவ்வொரு விரலைப் பிடிப்பதற்கும் ஒவ்வொரு விலை உண்டு.  ஐந்து விரலை கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய் என்று அர்த்தம். அதை ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய்.
விரல்களில் உள்ள ஒவ்வொரு வரையை அழுத்தினால் 10 ரூபாய் கூடுதல் என அர்த்தம். இந்த முறைகளைப் பின்பற்றித்தான் மாடுகள் விலை பேசப்படும். 
நாட்டுக் கோழிகளும் ஏறத்தாழ 10 வகை உண்டு. ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு, கருப்பு ஆடு மட்டுமல்ல... அவற்றிலும் கிட்டத்தட்ட 25 வகைகள் உள்ளன.
கடிகாரம் இல்லாத  காலத்தில் கிராமங்களில்  விடியல் பொழுதுகளை பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள்.  ஒரு கண்ணுக்கு உறங்கி, சாம ஏமத்திலே, சாமக்கோழி கூப்பிட, தலைக்கோழி கூப்பிட என்பார்கள். வெள்ளி முளைக்க, முத்தம் தெளிக்கிற நேரம் - இது காலை 6 மணியை குறிக்கும் சொற்கள்.
காலம்பற, நிலங்கரை, விடிஞ்சி இது  8 மணிக்கான சொற்கள். பொழுது புறப்பட, முந்திக் கற்காலை இது மாலை 4 - 5 மணியை குறிக்கும் வார்த்தைகள். கருக்கால, மம்மல்ல என்பது இரவு 7 மணியைச் சொல்கின்ற வார்த்தைகள். அதேபோல் சாயங்காலம், ஊரடங்க, இரவை, நிலாப் புறப்பட, நடுச் சாமம், அர்த்த ராத்திரி என்றெல்லாம் சொல்வதுண்டு.
கிராம மக்களின் உரையாடல்களில் சொலவடைகள் சரளமாக இருக்கும். அவை ஆயிரக்கணக்கில் உண்டு. அர்த்தமுள்ளதாக அவை இருக்கும்.
கரிசல் மானாவரியில் விளைவிக்கப்படும் நவதானியம் என்பது நெல் மட்டுமல்ல, கம்பு,  குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, செஞ்சோளம், திணை, நாத்துச் சோளம், மாப்பிள்ளை மினுக்கி சோளம், வரகு என பல வகைகள் உள்ளன. சில தானியங்கள், நாம் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால், விவசாயிகள் அதை பல்வேறு வகையில்  பிரித்து வைத்திருந்தார்கள்.
நதிநீர் இணைப்பு கோரி வழக்கு
எங்கள் ஊர் பக்கம் அதாவது திருவேங்கடம் அருகே  இருபுறமும் வடாறில், வைப்பாறு, நிட்சேவ நதி என இரண்டு நதிகள் கலக்கின்றன. காந்தியார் விரும்பிய வண்ணம், அவரது அஸ்தி எங்கள் பகுதியில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில்  நிட்சேவ நதியில் கரைக்கப்பட்டது ஒரு முக்கியமான வரலாற்று செய்தியாகும்.  காந்தியாரின் அஸ்தி கரைக்கப்பட்ட 7 நதிகளில் இந்த நதியும் ஒன்று.
திருவேங்கடத்தைத் தாண்டி, ஒரு தரைப்பாலம் உண்டு. மழைக்காலங்களில் இரண்டு நதிகளும் சேர்ந்து பெருக்கெடுத்து, வெம்பக்கோட்டை அணை பக்கமாகச் சென்று, சாத்தூரில் வைப்பாறாக இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வங்கக் கடலில் கலக்கின்றது. 
தேசிய நதி நீர் இணைப்பில்  கங்கை மற்றும் வடபுல நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி, வைகையை அடுத்து இந்த வைப்பாறு உள்ளது. வைப்பாறைத் தாண்டி தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாற்றோடு கலக்க வேண்டும்  என்று நான் வழக்கு  (WP. No. 6207/1983) தொடுத்தேன். அந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் இறுதியாக  2012 பிப்ரவரியில் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 38 - 39 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கு தொடர்ந்ததற்கான முக்கியமான காரணம், வடக்கே உள்ள ஜீவநதியான கங்கை, தென் குமரியைத் தொட வேண்டும் என்பதுதான்.

கிராமங்களில் ஒருகாலத்தில்  ‘புரத வண்ணார்கள்’ என்று அழைக்கப்பட்ட  ஒரு பிரிவினர் மீது கட்டுப்பாட்டை விதித்து ஒதுக்கி வைத்தார்கள். அவர்களின் தனிமனித உரிமையை மீறக் கூடிய வகையில் பகலில் அவர்கள் வெளியே வரக் கூடாது; இரவில்தான் நடமாட வேண்டும் என்ற அவலமான நிலை இருந்தது. அதேபோல், ராக்கூத்தாடிகள்,  ராப்பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என இரவில் உலா வருபவர்களும் இருந்தார்கள். ‘நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது’ என்று கூறியபடி நடுச் சாமத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் தெருக்களில் செல்வார்கள்.  சிறு வயதில் உள்ளவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று கொண்டு குறி சொல்வார்கள்.  மறுநாள் காலையில் வீடுகளுக்கு வந்து  நெல் மற்றும் தானியங்கள்  பெற்றுக் கொள்வார்கள். அதேபோல், பகலில் பூம்பூம் மாட்டுக்காரர்கள், அலங்கரிக்கப்பட்ட காளையுடன் வருவார்கள். அவர்களின் சொற்படி காளை தலையாட்டும். 
பத்தமடை பாய், அம்பையில் மரக்கடைசல், காருக்குறிச்சியில் கலை நுணுக்கத்துடன் செய்யப்படும் பொருட்கள், வாகைகுளம் குத்துவிளக்குகள் என்பதெல்லாம் பிரசித்தி பெற்றவை.
ஆழ்வார்திருநகரில்  அவதரித்தவர் நம்மாழ்வார். பிறப்பெடுத்த நாள் முதலே பேசாமல் இருந்தார். பின்னர்   திருக்குருகூர் நம்பி கோயிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் 16 ஆண்டுகள் தவம் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து, இறை அருளால் பல்வேறு பாசுரங்களை இயற்றி, பாடினார். அவரைப்போன்று, ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர்  சைவத்தில் முக்கியமான ஆளுமையாக இருந்தார்.
புளிய விருட்சத்தின் அடியில் தவமிருந்து இறைஞானம் பெற்றவர் நம்மாழ்வார் என்பதால்தான், வைணவர்கள் புளியோதரையை பெரிதும் விரும்புகிறார்கள் என்றும்கூட சொல்வார்கள்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நாயக்கர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் உன்னதமான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள சிலையைத் தட்டினால், இனிய சுர ஒலிகள் வெளிவரும். இத்தகைய சிறப்புகளுடன் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 
குறத்தி ஒருவள், தன் அழகால்  ஒரு அரச குமாரனை மயக்கி கவர்ந்து செல்வது, நடன நங்கை, ரதி தேவி, வீரபுத்திரன் போன்ற சிற்பங்கள் அழகிய கலைநயத்தோடு வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் சிறப்புகளை வரலாற்று அறிஞர் ஆனந்த குமாரசாமி  விரிவாக விளக்கியுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளரான கோமல் சுவாமிநாதனின்  நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படமாக வெளியானது.  கரிசல் மண்ணின் எட்டையபுரத்தின் தெற்கே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தில்  அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினை அந்த அளவுக்கு அங்கே தலைவிரித்தாடியது.  
திருநெல்வேலி சதி வழக்கில் பொதுவுடைமைவாதி நல்லகண்ணுவுடன் கைதான வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் சொல்வார், ‘‘கரிசல் பூமியில் குடி தண்ணீருக்கு கூப்பாடு உண்டு. ஆனால் அதுக்குன்னு ஒரு பெருமை உண்டு. உப்புத் தண்ணி எங்க ஊரில் பிரசித்தம். நெறைய இறவைக் கிணறு இருக்கும். எல்லாவற்றிலும்  உவர் தண்ணீர்தான். குளத்துக்குள் ஊத்து தோண்டி ஊற ஊற தண்ணீர் எடுத்து குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டு சொட்டாக அங்கே தண்ணீர் சுரக்கும். அதை சிரட்டையில் வழிச்சு, மண் குடத்தில் ஊத்துறது தனிக் கலை. கரிசல் மண்ணுக்கு தனி மணம் உண்டு. ஆண்டுக்கு 3 மழை பெய்தாலும் வானம் பார்த்த பூமிதான். அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களுக்கு இல்லை. உவர்  தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும். எள்ளுச் செடியும் துள்ள வரும். எங்க மொழியே தனி. என்னலே, என்னவே... எப்படி இருக்கீங்க... இப்படி பேச்சு வழக்கும் கொச்சையாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்குள் இருக்கிற நாட்டுப்புற இலக்கியம் கொஞ்சி விளையாடும்’’ என்று கரிசல் மண்ணின் சிறப்பைக்  குறிப்பிடுகிறார்.
கடந்த காலத்தில் கிராமத்தில் விவசாயத் தொழில்தான் பிரதானமாக இருந்தது. பின்னர்  தீப்பெட்டி தொழிலிலும் பரவலாக ஈடுபட்டார்கள். இப்போது விவசாயம் தேய்பிறையாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 100 நாள் வேலை என்று அலுவலகத்துக்கு செல்வதுபோல இன்றைக்கு கிராம  மக்கள் அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் கிராமத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.
தற்போது பெரும்பாலான விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  முன்பெல்லாம் நெற்கதிர் அறுக்க 20 - 25 பேர் வருவார்கள். கதிர் அறுத்து கட்டு கட்டி தலைச்சுமையாக  களத்து மேட்டுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கதிர் அடித்து, முறத்தால் வீசி பதர்களை நீக்கி,   மலைபோல் நெல்லை குவிப்பார்கள்.  அதை அளந்து மூட்டைகளில் கட்டுவார்கள். இதற்கெல்லாம் 2 - 3 நாட்களாகும். ஆனால் இப்போது  கதிர் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு ஒருசில மணி நேரங்களில் நெல் வேறு, வைக்கோல் வேறு என பிரித்து எடுத்து விடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் கட்டைப் பேனாவை க்விங்க் மையில் தொட்டு, காகிதங்களில்  எழுதுவதை நான் பார்த்துள்ளேன். அதற்குப் பிறகு சாத்தூரில் செய்யப்பட்ட நிப்புகள் கொண்ட பேனாக்கள் பயன்படுத்தப்பட்டன. பேனாவில் மையை நிரப்பி எழுத வேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளையும் அந்த பேனாவில்தான் எழுத வேண்டும். தற்போது, பால்பாயின்ட், ஜெல் பேனாக்கள் என வந்து விட்டன. 

அப்போதெல்லாம் நெல்லையில் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தாமிரபரணி ஆற்றின் கரையில்தான் நடத்துவார்கள்.  அங்கு, காந்தி, வ.உ.சி, பாரதியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் தேவர், காயிதே மில்லத், காமராஜர் போன்ற பெரிய ஆளுமைகள் எல்லாம் பேசியதுண்டு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர்  கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது, அண்ணா அவரைப் பார்த்துவிட்டு, இதே தாமிரபரணி கரையில்தான் பேசினார்.  
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நெல்லை மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையின்  கல்லறை பாளையங்கோட்டையில் உள்ளது. கால்டுவெல் போப்பின் கல்லறை இடையான்குடியில் உள்ளது. அவரது கல்லறையில் ‘இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி கலெக்டராக இ.பி.தாமஸ் இருந்தபோது, 800 அடி நீளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பாலம் கட்டப்பட்டது. இப்போது சுலோச்சனா முதலியார் பாலம் என்று  அழைக்கப்படுகிறது. இந்த பாலம் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கின்றது.
இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதுவரை எந்தவித பழுதும் இல்லாமல் ஸ்திரமாக உள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் கட்டப்பட்டுள்ள வாட்டர்லூ பாலம் போன்ற உருவ அமைப்பை அப்படியே கொண்டு இந்தப் பாலம் கட்டப்பட்டது. 
டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’
திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கிய கர்த்தாக்கள் பலர் தோன்றி. தங்களது அரும்பெரும் பணிகளால் தமிழுக்கும், கலை, பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்தார்கள்.
அந்த வகையில், ‘டி.கே.சி.’ என்று அன்புடன் அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார், வழக்கறிஞராக நெல்லையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1924-ம் ஆண்டில் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் அவருடைய நண்பர்கள் பலரும் இணைந்தார்கள். வண்ணாரப்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஒன்று கூடுவார்கள். 
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான வீடுகளில் பெரும்பாலும் உள்முற்றம் இருக்கும். சூரிய வெளிச்சத்துக்கும், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முற்றங்கள் அமைக்கப்படும்.  இந்த முற்றத்தைச் சுற்றி வட்டமாக அமர்ந்து நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ‘வட்டத்தொட்டி’ என்று அழைக்கப்பட்டது.  இந்த இலக்கிய அமைப்பு 1924 முதல் 1927 வரை தொடர்ந்து நடைபெற்றது. அதற்குப் பிறகு 1935 முதல் 1939 வரை சென்னை, திருநெல்வேலி மற்றும் தென்காசியிலும் நடைபெற்றது.
திருநெல்வேலியில் நடைபெற்ற வட்டத்தொட்டி நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், மு.அருணாசலம் , வித்வான் கு.அருணாசலக் கவுண்டர்,  பி.ஸ்ரீ.ஆச்சார்யா, மீ.ப.சோமு, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் , அ.சீனிவாசராகவன் போன்றவர்கள்  தொடர்ந்து பங்கெடுத்து வந்தனர். 
அதேபோல், ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெ.நா.அப்புசாமி , பாலசுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள்  அவ்வப்போது வந்து  கலந்து கொள்வார்கள். பிற்காலத்தில் படைப்பாளிகளான கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவர்களின் வேடந்தாங்கல் மரியா கேண்டீன்
பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் நான் படித்தபோது, மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தும் மரியா கேண்டீன் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது. கிட்டத்தட்ட  30 ஆண்டுகளுக்கு முன் அந்த கேண்டீனை இடித்து விட்டு, வேறு கட்டிடம் கட்டி விட்டார்கள். இந்த மரியா கேண்டீன்  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஏராளமான மாணவர்கள் தங்கள் தோழர்களோடு சந்தித்து மகிழும் வேடந்தாங்கலாக விளங்கியது. அன்றைக்கு மாணவர்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தமிழ் அறிஞர்களாகவும், பல்வேறு ஆளுமைகளாகவும் உயர்ந்தார்கள்.
இந்த கேண்டீனில் அமர்ந்து, உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை  மாணவர்கள் அலசுவார்கள். தமிழக, இந்திய அரசியல்  சூழ்நிலைகள், தலைவர்களின் செயல்பாடுகள் விரிவாகப் பேசப்படும். அதேபோல், குடும்பச் சூழ்நிலைகள், எதிர்காலக் கனவு என தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் சில மாணவ - மாணவிகளிடையே ஏற்பட்ட அன்பு, காதலாக மலர்வதும் உண்டு. அந்த காதல், திருமண பந்தத்தில் இணைவதற்காக நிச்சயிக்கப்பட்ட தருணங்களும் இந்த மரியா கேண்டீனில் நடைபெற்றன.
சில திருமணங்களுக்கு நானே சாட்சி கையெழுத்திட்டதும், இதனால், அவர்களின் குடும்பத்தினர் என்னை துரத்தியதும், அவர்களிடம் இருந்து தப்பி ஒளிந்து கொண்டதும் உண்டு. இன்றைக்கும் அந்த தம்பதிகள் பேரக் குழந்தைகளோடு வயதான காலத்திலும் காதல் ஜோடியாக ஏகாந்தமாக சுற்றி வருகின்றனர். 
காவல் துறையினரின் தடியடியால் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த லூர்து நாதன் என்ற கல்லூரி மாணவரின் சிலை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ளது. அந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர்  காமராஜர், நெடுமாறன், செல்லப்பாண்டியன், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெப்பின் பெர்னாண்டோ, எஸ்.கே.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இடங்களாக மரியா கேண்டீனும், பாளையங்கோட்டை தெற்கு பஜாரும் விளங்கின.
(தொடர்வோம்...)

Saturday, March 29, 2025

‘அத்தியாயம்7 நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள் #எனது  பயணங்கள் 
——————————————————-
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’  என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்
#அத்தியாயம்7

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
29-3-2025 
••••  

நம்பமுடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 7

இன்றைக்கு போக்குவரத்துக் கழகம் அரசுடமையாக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தனியார் கைகளில் இருந்தது. அன்றைக்கு  மிகவும் பிரபலமாக இருந்த டிவிஎஸ், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ், லயன், ஏவிஆர்எம், சந்திரா பேருந்துகள், மோட்டார் யூனியன் பேருந்துகள் போன்றவை எங்கள் பகுதியில் இயக்கப்பட்டன. குறிப்பாக டிவிஎஸ் பேருந்துகள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டதாகக் கூறுவார்கள். அந்தப் பேருந்து வருகையைக் கொண்டே நேரத்தை கணித்ததும் உண்டு.
பேருந்து வசதி இல்லாத காலத்தில், வசதி படைத்தவர்கள் வில் வண்டியில் பிரயாணம் மேற்கொள்வார்கள்.  கூண்டு கட்டப்பட்ட வில் வண்டியில் வைக்கோலை பரப்பி, அதன்மேல் ஜமுக்காளம் விரித்து  அதில் அமர்ந்து செல்வார்கள்.  குடிப்பதற்கு திருகு செம்பில் தண்ணீர், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம் பொட்டலம், வடகம், மோர் மிளகாய், நார்த்தங்காய் ஊறுகாய் மற்றும் சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்கள் சகிதமாகப்  புறப்படுவார்கள். இரவு நேரப் பயணத்தின்போது வண்டியின் கீழ் பகுதியில் மண்ணெண்ணெய் அரிகேன் விளக்கு எரியும். ஒருசிலர் நீண்ட டார்ச் லைட்டை எடுத்துச் செல்வார்கள். அதில் 8 முதல் 10 எண்ணிக்கையிலான அன்றைக்கிருந்த எவரெடி பேட்டரிகள் போடப்பட்டிருக்கும். இத்தகைய பயணங்கள் எல்லாம் பேருந்து போக்குவரத்து வந்ததும் படிப்படியாக காணாமல் போய்விட்டன.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தின்பண்டங்கள் பிரபலமாக இருந்தன.  அந்தந்தப் பகுதிகளின் தண்ணீர், மண்ணின் வளத்தைப் பொருத்து அவற்றின் சுவை தனித்துவமாக இருக்கும். 
அந்த வகையில்,  தூத்துக்குடி மக்ரூன் பிஸ்கெட், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா, சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் லாலா கடை அல்வா, மைசூர்பா, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே பஜாரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண விலாஸ் புராதன லாலா கடை அல்வா,  குற்றாலம் - செங்கோட்டை பார்டர் கடை  புரோட்டா  பிரபலமாக இருந்தன.
கடலை மிட்டாய்க்கு கோவில்பட்டி பேர்போனது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடம்பூர் போளி, கழுகுமலை பட்டறை சேவு, சாத்தூர், செவல்பட்டி சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, அருப்புக்கோட்டையில் தமிழ்மணி தியேட்டர் அருகே உள்ள லாலா கடையில் கிடைக்கும் ஓமப்பொடி, திருவேங்கடத்தில் சீனி மற்றும் கருப்பட்டி மிட்டாய், முட்டைக்கோஸ் போன்றவை  பிரசித்தம். ராஜபாளையத்தில் ஆனந்தா கடையில் லட்டு, பூந்தி, மிக்சர் சுவையாக இருக்கும்.
திருநெல்வேலியில் சந்திர விலாஸ், துவாரகா லாட்ஜில் இருந்த சைவ ஓட்டல், ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே  நியாஸ் அசைவை ஓட்டல், திமுகவைச் சேர்ந்த சூர்யநாராயணன் மற்றும் நம்பி நடத்திய உணவு விடுதிகள் இவையெல்லாம் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது நினைவில் உள்ளது. 
கோவில்பட்டியில் அன்றைக்கு  பாலமுருகன் என்ற ஓட்டலும், விடுதியும் இருந்தது. மற்றொரு ஓட்டலான சரஸ்வதி, பேருந்து நிலையம் எதிரில் இருந்தது. இன்றைக்கு உள்ள கோவில்பட்டி பேருந்து நிலையம் ஒரு காலத்தில், பழைய பாலமுருகன் ஓட்டலுக்கு எதிரில்தான் அமைந்திருந்தது.
இந்த பாலமுருகன் ஓட்டலில் குறிப்பாக திமுக கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் தங்குவதுண்டு. அதேபோல் கல்யாணி லாட்ஜில் சுதந்திரா கட்சி, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தங்குவார்கள்.
சங்கரன் கோவிலில் போத்தி ஓட்டல், நாடார் ஓட்டல், சுல்தான் பிரியாணி கடை முக்கியமாக இருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு ஐயங்கார்  உணவு விடுதி ஒன்று பிரபலமாக இருந்தது. அதன் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை. விருதுநகரில் நாடார் ஓட்டல்,   பர்மா ஓட்டல் அசைவ உணவுக்கு அன்றைக்கு பிரபலம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாளங்களில் ஒன்றாக,  ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட பென்னிங்டன் லைப்ரரி விளங்கியது. அங்கு ஏராளமான அரிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பகுதியில் பெண்களுக்கென்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிறித்துவ போர்டிங் பள்ளி இருந்தது. அதேபோல்,  பாளையங்கோட்டை இக்னீசியஸ் கான்வென்டும் இருந்தது. அங்கு பெண்கள் தங்கிப் படிப்பார்கள்.
ரசிகமணி டி.கே.சி.க்கு தொடர்பு உள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இலக்கியவாதி ஜஸ்டிஸ் மகாராஜனும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றினார்.  
வீரமாமுனிவரும், தேவநேயப் பாவாணரும் இந்த பகுதியில் உலவியவர்கள். கோவில்பட்டியில் குருமலை சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். குருமலையில் மூலிகை கலந்த காற்று தவழ்ந்து வரும். இந்தக் காற்றை சுவாசிப்பதால் காசநோய் குணமாகும் என்று அன்றைக்கு சொல்வார்கள். 
கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்றவை தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கும், அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றவை. சிவகாசியில் தீப்பெட்டி தொழிலுக்கு முன்னோடியாக விளங்கியவர் தொழிலதிபர்  அய்ய நாடார் ஆவார். அவர் கல்கத்தா வரை சென்று தீப்பெட்டி தொழிலைப் பற்றி அறிந்து வந்து சிவகாசியில் தொழிற்சாலையை நிறுவினார். கோவில்பட்டியில் காதிரியா மேட்ச் ஃபேக்டரி, கோபாலகிருஷ்ண யாதவ், எவரெஸ்ட் மேட்ச் ஃபேக்டரி என்று பல தீப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தன. 
சிவகாசி,  ஆயிரக்கணக்கான பட்டாசு, அச்சு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியதால், அதை ‘குட்டி ஜப்பான்’ என்பார்கள்.
எங்கள் பகுதி கரிசல் நிலப்பகுதி என்பதால் பருத்தி அதிகமாக விளையும். பருத்தியை அரவை செய்யும் ஜின்னிங் ஆலைகள் விளாத்திகுளம், எட்டையபுரம், கடம்பூர், கயத்தாறு, கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பந்தல்குடி போன்ற பகுதிகளில்  அதிகமாக இருந்தன.
இந்த ஆலைகளில் இருந்து, துணிகளை உற்பத்தி  செய்யும் கோவை லட்சுமி மில்ஸ், மதுரை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரத்தில் செயல்பட்ட  மதுரா கோட்ஸ், கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்த லாயல் மில்ஸ், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளுக்கு பஞ்சு அனுப்பப்படும். இந்த ஆலை நிர்வாகத்தினர் ஆந்திராவில் உள்ள ராயலசீமாவிலும் பஞ்சு வாங்குவார்கள்.
அதுமட்டுமின்றி, பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர்  பக்கிங்காமில் உள்ள துணி உற்பத்தி ஆலைகளுக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டன. பஞ்சு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்காகவே தூத்துக்குடியில் சாலை அமைக்கப்பட்டது. அதற்கு ‘கிரேட் காட்டன் சாலை’ என்று பெயர்.
ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்துதான் பஞ்சு மூட்டைகளை கப்பலில் அனுப்ப முடியும். இதற்காக தூத்துக்குடியில் மட்டக்கடை பகுதியில் வண்டிகளை நிறுத்தி விட்டு தங்குவார்கள்.  அவர்களுக்காகவே சிறுசிறு சாப்பாடு கிளப்புகள் அங்கு திறக்கப்பட்டன.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கூட, அன்றைக்கு இங்கிருந்து பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டது என்பதெல்லாம் செய்திகள்.
கிராமங்களில் விஸ்வகர்மா பணிகள் செய்வதற்காக இரண்டு வகையினர் இருந்தனர். ஒருவர் தச்சு ஆசாரி, மற்றொருவர் கொல்லாசாரி.
தச்சு ஆசாரி என்பவர்கள் வீடு, கட்டிடங்களுக்கான மரவேலைகள் செய்வார்கள். சுத்தியல், ரம்பம், உளி, கொட்டாப்புளி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மரக்கட்டைகளை இழைத்து,  ஜன்னல், கதவுகள், கட்டில், அலமாரி போன்றவற்றை செய்வார்கள்.
கொல்லாசாரி என்பவர்கள் மாட்டுக்கு லாடம் கட்டுவது, ஏர் கலப்பைகளில் ஏர் கொழுவு, வெட்டரிவாள், பன்னரிவாள், கோடாரி, அரிவாள்மனை, கத்தி போன்றவற்றை செய்வார்கள். இவர்கள் பட்டறை அமைத்து இருப்பார்கள்.  இதற்கு கொல்லுப்பட்டறை என்று பெயர். அங்கு ஒரு சிறிய குழியில் மரக்கரியைப் போட்டு நெருப்பு மூட்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஒரு குழாயை மண்ணில் பதித்து மறுமுனையில் ரப்பரால் ஆன ஒரு பையுடன் இணைத்திருப்பார்கள். அந்த பையின் வாய் பகுதி கைபிடியுடன் இருக்கும். இதை விட்டு விட்டு அழுத்தும்போது குழாய் வழியாக காற்று உள்ளே புகுந்து குழியில் இருக்கும் தீக்கங்குகளை பிரகாசமாக்கும். அதன் மேல் இரும்பு துண்டுகளை வைத்து பழுக்கக் காய்ச்சி, பின்னர் சுத்தியலால் அடித்து தேவையான கருவிகளைச் செய்வார்கள். இப்போதெல்லாம் இவை மின்சார மயமாகி விட்டன.
எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் ஊரில் தச்சாரியாக காந்தாரி, கோதண்டராமன் ஆகியோரும், கொல்லாசாரியாக கருப்பையாவும் இருந்தனர். 
அதேபோல் எங்கள் ஊரில் பொன்னு டெய்லர் மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் தையல் கடைகள் வைத்திருந்தனர். தீபாவளி, பொங்கல் நேரத்தில் புது துணிகள் எடுத்து ஆடைகள் தைக்க வேண்டும் என்றால் இவர்களிடம்தான் செல்ல வேண்டும். பொன்னு டெய்லர் துணிகளை வேகமாக தைப்பார். ஆனால் அவரது மகன் கருப்பையா சோம்பேறி. அன்றைக்கு  அவர் என்னுடைய வயதுதான். தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு, புது ஆடையை வாங்குவதற்காக ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போல, டெய்லர் கடை முன்னே நின்றதெல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.
‘இதோ தைத்துவிட்டேன், காஜா வைக்க வேண்டும்... பட்டன் வைக்க வேண்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் வெட்டிய துணி தைக்கப்படாமல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.  ஒருமுறை எனக்கு கோபம் வந்து விட்டது. வீட்டில் இருந்த சட்டைக் கம்பை எடுத்துப் போய் அவரை வெளு வெளுவென் று வெளுத்து விட்டேன். ஆனாலும் அவர் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பார். இத்தனைக்கும் அவர் எனக்கு நல்ல நண்பர்.
‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்களை அப்படியே பேசி ஒப்பிப்பார். நான் அவரைப் பார்த்து,  ‘‘கருப்பையா... இப்படி வசனம் பேசியே வீணாகப் போய்விடாதே... உன் குடும்பத்தைக் கவனி’’ என்று சத்தம் போடுவேன். அப்போது நான் காங்கிரஸில் இருந்தேன்.
ஒருமுறை, தென்னை மரத்தில் இருந்து தேங்காயை தெரியாமல் பறித்து விட்டதற்காக கருப்பையாவை ஊரை விட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். பின்னர் கலிங்கப்பட்டி ஊரில் தையல் கடை வைத்து அங்கேயே தங்கிவிட்டார்.  பின்னாளில் வைகோவின் அதிதீவிர பக்தராக மாறிவிட்டார்.
விடுமுறை காலங்களில்  நான் சொந்த கிராமத்துக்குச் செல்லும்போது திருவேங்கடத்தில் என்னை வந்து பார்ப்பார். என்னிடம் ஏதாவது பணம் வாங்கிச் செல்வார். அப்போதுதான் அவருக்கு திருப்தியாக இருக்கும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. ஒருமுறை கோவில்பட்டியில் இரவு இரண்டாம் காட்சி சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. திடீரென்று ஒரு சிலேடு போட்டார்கள். அதில், ‘‘கடம்பூர் குருமலை பக்கம் போகிறவர்களுக்கு ஓர் அறிவிப்பு. கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை பாசஞ்சர் ரயில் வந்துவிட்டது. அந்த ரயிலில் செல்ல இருப்பவர்கள் உடனே செல்லுங்கள்’’ என்று எழுதியிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தது.
அப்போதெல்லாம் இரவுக் காட்சி சினிமா  நள்ளிரவைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கும். பெரிய படங்கள் என்றால் இன்னும் தாமதமாகி விடும். கடம்பூர் செல்பவர்கள் மதுரை பாசஞ்சர் ரயிலில்தான் செல்ல முடியும். ஏனென்றால் அப்போதெல்லாம் அந்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. அதற்காக படம் முடிவதற்குள்ளேயே எழுந்து அவசரம் அவசரமாக ஓடுவார்கள்.
இரண்டாம் காட்சி படத்துக்கு செல்வதென்றால் மாலை 4 மணிக்கு கடம்பூரில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயிலில் கோவில்பட்டி வருவார்கள். அங்கு பிச்சைக்கனி கடையில் புரோட்டாவையும், மட்டன் சுக்காவையும் ஒரு பிடி பிடித்துவிட்டு  படம் பார்க்கச் செல்வார்கள்.  
 ‘தினத்தந்தி’ நாளிதழின் தலைமை ஆசிரியராக தற்போது இருக்கும் சுகுமாரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்தான். 
கோடங்கால் கிருஷ்ணசாமி நாயக்கர் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார்.  எனக்கு மிகவும் நெருங்கியவர்.  ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், சோ.அழகிரிசாமி, நல்லகண்ணு, தா.பாண்டியன், எஸ்.எஸ்.தியாகராஜனுக்கு உற்ற தோழராக இருந்தார். எந்நேரமும் கையில் ‘ஜனசக்தி’ பேப்பரை வைத்திருப்பார்.
ஒருமுறை பகலில் பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாக சைக்கிளில் சென்றவர் தவறி கீழே விழுந்துவிட்டார்.  பின்னர் அவரை,  கோவில்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று கட்டு போட்டு அனுப்பி வைத்தோம்.  அந்த மருத்துவமனை நாகர்கோவிலைச் சேர்ந்த  ஜான் பான் என்ற டாக்டருடையது. 
கிருஷ்ணசாமி நாயக்கரிடம், ‘‘ஏங்க மெதுவா போயிருக்கலாமே? ஏன் இந்த அவசரம்?’’ என்றேன்.  அதற்கு அவர்,  ‘‘என்ன செய்யுறது? நான்  அந்த ரயிலைப் பிடிக்கவில்லை என்றால், மறுநாள் காலையில் பஸ் ஏறி கயத்தாறு இறங்கிப் போகணும். அதனால்தான் அவசரமாகப் போனேன். தவறி கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார். அந்த அளவுக்கு அப்போது பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்தது.
மதுரை பாசஞ்சரைப் பற்றி  சொல்லும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது.
 1950 - 60களில் கு.அழகிரிசாமி எழுதிய ‘குருமலை ரயில் நிலையம்’ என்ற சிறுகதை மிகவும் பிரபலமாகி அதிகம் வாசிக்கப்பட்டது. இது ஆங்கிலத்திலும், ரஷ்ய,  சீன, பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கரிசல் வட்டாரம் தொடர்பான  கதை. ஒரு கிராமத்து மாணவன் தன்னுடைய கிராமத்தில் படித்துவிட்டு, அடுத்த வகுப்புகளுக்காக கோவில்பட்டி வ.உ.சி. கழக உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும்போது,  அந்த மாணவனுக்கும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் நடந்த  உரையாடலாக இந்த சிறுகதை விரியும். ஆனால், இவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று அந்த மாணவனுக்கும், தந்தைக்கும் தெரியாது. பள்ளிக்குச் சென்றபின், ‘ஆஹா... இவர்தான் தலைமையாசிரியரா?’ என்று வியப்புடன் மாணவரும் தந்தையும் பேசிக் கொள்வார்கள். இந்தக் கதை எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்தக் காலத்தில் முதன்முதலாக தனிச்  சிற்றிதழ்களாக ‘தமிழன்’,  ‘ஊஞ்சல்’ என்ற இரண்டு இதழ்களை கி.ரா. தொடங்கினார். புதுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வேங்கட சுப்பிரமணியம், ‘தினத்தந்தி’ செளந்தர பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் இதை விரும்பிப் படித்ததுண்டு.
இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராகும் விதமே சுவாரஸ்யமானது.
ஒரு கொயர் நோட்டில் முதலில் கி.ரா. சில பக்கங்களை எழுதி, கு.அழகிரிசாமிக்கு தபாலில் அனுப்புவார். அவர்  சில பக்கங்கள் எழுதிய பின்னர் சுற்றுக்கு விடுவார்.  முதலில் நா.பார்த்தசாரதிக்கு செல்லும். அடுத்து தி.க.சிவசங்கரனுக்குச் செல்லும். தொடர்ந்து சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி, டிகேசியின் பேரன் தீப நடராசனிடம் செல்லும்.  சில சமயம் கவிஞர் நகுலனும் பங்கு பெறுவார். ஒவ்வொருவரும் தங்களது படைப்புகளை எழுதிய பின் இறுதியாக கி.ரா.வுக்கு வரும்.  அவரிடம் வந்தவுடன்  இதழ் முழுமை அடைந்து விடும். 
பின்னர், மேற்குறிப்பிட்ட அனைவரின் கைகளுக்கும் சென்று சேரும். இவ்வாறு ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராக  3 மாதங்களாகி விடும்.  இது கையால் எழுதப்பட்ட காலாண்டு தனிச்சுற்று இதழாகும். முதலில் ‘தமிழன்’  என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ‘ஊஞ்சல்’ என்று நிலைத்து விட்டது. இது ஒரு வித்தியாசமான தனிச்சுற்று.
இது ‘சரசுவதி’ மற்றும் ‘கிராம ஊழியன்’ இதழ்கள் காலத்துக்குப் பின்னும் ‘கணையாழி’, ‘கசடதபற’ காலத்துக்கு முன்னும் வெளிவந்தது. இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழை  மணிக்கொடி சீனிவாசன் வெகுவாகப் பாராட்டியது உண்டு.
இவரைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
அந்த காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக மணிக்கொடி சீனிவாசனை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அப்போது அவர், ‘‘நான் கும்பகோணத்துக்காரன்... இந்த திருநெல்வேலி மாவட்டத் தொகுதியில் எப்படி போட்டியிட முடியும்?’’ என்று கூறி பின்வாங்கிவிட்டார்.
அதைத்தொடர்ந்து சினிமா தணிக்கைக்குழு  தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இவர்தான், கலைஞர் வசனம் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தை தணிக்கை செய்தவர். இதற்காக சென்னை பாரகன் தியேட்டரில் (கலைவாணர் அரங்குக்கு எதிரில்) 3 நாட்கள்  தணிக்கை செய்தார். அப்போதெல்லாம் 3 நாள் தணிக்கை என்பது அரிதானது. திரைப்படத்தில் பல காட்சிகளை வெட்டுவதற்குப் பரிந்துரைத்தார். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ‘பராசக்தி’ படம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

திருநெல்வேலியில் பிரபலமான ம.தி.தா. இந்துக் கல்லூரி ஒருசமயம் நிதிப்பற்றாக்குறையினால் திணறியது. கல்லூரியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிர்வாகத்தினர் மிகவும்  சிரமப்பட்டனர். கல்லூரியின் முதல்வராக அலெக்சாண்டர் ஞானமுத்து இருந்தார். அவர் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் பகுதிகளில் தன்னுடைய தொப்பியை கையில் ஏந்தி பொதுமக்களிடம் நன்கொடைகள் பெற்றார். அதோடு, மதுரை திரவிய தாயுமானவர் அறக்கட்டளையின் உதவியோடு இந்துக் கல்லூரியை நிதி சிக்கலில் இருந்து மீட்டார்.
வரலாற்று அறிஞர் பத்மபூஷண் நீலகண்ட சாஸ்திரியும், தமிழறிஞர்கள் வெங்கடராஜூலு, சிதம்பரம், ராமலிங்கம் போன்றவர்கள் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளாகும்.  அன்னி பெசன்ட் அம்மையார் உரையாற்றிய பெருமை பெற்றது இந்துக் கல்லூரி.
தமிழ்நாட்டிலேயே முதல் பெண்கள் கல்லூரி நாசரேத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அது பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு இன்றைக்கு இருக்கின்ற சாராள் டக்கர் பெண்கள் கல்லூரியாக அமைந்தது.  பாளையங்கோட்டை செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முதல்வர் வேதசிரோன்மணி கல்லூரி முதல்வராக மட்டுமல்லாமல், மாணவர்களின் முதல்வராகவும் விளங்கினார். அவர் பேன்ட், முழுக்கை சட்டை, டை கட்டிக் கொண்டு எளிமையாக சைக்கிளில்தான் கல்லூரிக்கு வருவார். அதேபோல் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய  ஃபாதர்ஸ், பிரதர்ஸ் லாட்ஜ்களுக்கு சென்றால் அருமையான வெளிநாட்டு சாக்லெட்கள் கொடுப்பார்கள். வெள்ளை அங்கியோடு ஜெபமாலையை உருட்டிக் கொண்டும் பைபிள் படித்துக்  கொண்டும் இருப்பார்கள்.
1972 காலகட்டத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வந்தேபோது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து, பி.காம். மாணவன் லூர்து நாதன் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஃபாதர்ஸ் தங்கியிருந்த அறைகள் சூறையாடப்பட்டன. அப்போது நடந்த ஒருசில விஷயங்களையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துப் போடும்போது சஞ்சிகைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.

முதல் உலகப் போரின்போது கோவில்பட்டி, கயத்தாறு, சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் சோழாபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் இன்றைக்குப் பயன்பாடில்லாமல் உள்ளன. இவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கலாம்.
1940களில் இந்த மாதிரியான விமான நிலையம் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி அருகேயும் இருந்தது. அங்கு விமானம் இறங்கப் போகிறது என்ற தகவல் வந்தவுடன் நெல்லை நகர் மக்கள் கூடி விட்டனர்.
இன்றைக்கு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடம்  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு தனவானுடையது. முதல்வர் காமராஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெருந்தன்மையாடு அந்த இடத்தை இலவசமாகக்   கொடுத்தார். இன்றைக்கு அது விரிந்து பரந்த மருத்துவமனையாகத் திகழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
அன்றைக்கு எல்லாம் அப்பகுதி காடுபோல் இருக்கும். கலெக்டர் பங்களா, மாவட்ட நீதிபதி பங்களா மட்டுமே அங்கு இருந்தன.
இந்த மாவட்டத்தினுடைய இலக்கிய கர்த்தாக்கள் அனைவரையும் குறித்து  என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் பதிவு செய்துள்ளேன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், தமிழறிஞர்கள், புலவர்கள் என 500-க்கும் மேற்பட்ட ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அனைத்தையும் இங்கு எழுதுவது சற்று கடினம்.
அதேபோல், அந்த காலத்து ஆண்டாள், நம்மாழ்வார் முதல் இன்றைக்குள்ள நவீன எழுத்தாளர்கள்  வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகள் உள்ளனர். அத்தனை பேரும் தமிழுக்கும், கல்விக்கும் இலக்கியத்துக்கும் தங்களை அர்ப்பணித்த பெருமக்கள். இந்த  கட்டுரை நூல் வடிவமாக வந்தால் இந்த விவரங்களை நிச்சயம் இணைப்பேன்.
இசையிலும் நெல்லை மாவட்டம் முன்னோடியாக இருந்தது.
எஸ்.ஜி. சுப்பையா அய்யர், செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா), பாடல்கள் எழுதிய சுப்பையா நாயுடு, முத்தையா பாகவதர், விளாத்திகுளம் சுவாமிகள், அருகேசநல்லூர் பாகவதர், நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இசை வரிசையிலும்  நீண்ட பட்டியல் உண்டு. 
 எட்டையபுரம் அரசருடைய ஆதரவோடு முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வசித்து வந்தார். அவருக்கு தற்போது ஒரு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
நடிகமணி டி.வி.நாராயணசாமி எட்டையபுரம் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் பிறந்தவர். இவர்தான் எம்ஜிஆரை அண்ணாவுக்கு அறிமுகம் செய்தவர். கலைஞர் நாடகம் நடத்துவதற்கும் இவர்தான் உதவி செய்தார். ஆலோசனைகளையும் வழங்கினார்.
திரைப்படத் துறையில் இருந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அந்த காலத்து பிரபலமான நடிகை. ‘பவளக்கொடி’ படத்தில் நடித்தவர். நடிகர் டி.எஸ்.பாலையா, சந்திரபாபுவும் (தூத்துக்குடி) இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். 
அப்போதெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில் பாவைக் கூத்துகள் நடத்துவதுண்டு.  ஒன்றுபட்ட தென் ஆற்காடு,  வடஆற்காடு மாவட்டத்தில்  நடத்தப்படும் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளுக்கும், நெல்லை மாவட்டத்தில் நடத்துகின்ற பாவைக் கூத்து நிகழ்ச்சிகளுக்கும் வேறுபாடு உண்டு.
அதேபோல் தேவராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வகையறாக்கள் ஆடுவார்கள். கலைமாமணி குமாரராமன், அப்பண்ண சாமி போன்றவர்கள் ஒயிலாட்டம், தேவராட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். 
சோழவந்தானில் பிறந்து, எங்கள் ஊர் பக்கம் திருவேங்கடத்தில் இடதுசாரி ஆதரவு பாடல்களை கிராமியக் கலைஞர் முத்துமாரி, கனத்த குரலோடு பாடுவார். அந்த வட்டாரத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 
அதேபோல் பிரபல ஓவியர் கொண்டையராஜு கோவில்பட்டியில் வாழ்ந்து  புகழ் பெற்றவர். 
(தொடர்வோம்)

Friday, March 28, 2025

#*இன்றைய அரசியல்* #*சித்தாந்தம் கொள்கை* #*மரபுகள் நடைமுறைகள்*

#*இன்றைய அரசியல்* 
#*சித்தாந்தம் கொள்கை* 
#*மரபுகள் நடைமுறைகள்*
———————————
தியாகிகள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைபொறுத்தவரை அதில் பதவி வகிக்கும் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. விஞ்ஞானபூர்வமான சித்தாந்தம் மற்றும் கொள்கை அதன் நடைமுறை என்பது தான் அங்கே முக்கியம்.

அப்படிப்பட்ட தலைவர்களுக்கு அல்லது அந்த கட்சிக்கு இந்தியாவில் மக்கள் அதிகம் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் இதுவரை அமர வைக்க வில்லை.




என்றாலும் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இ எம் எஸ் நம்பூதிரி பாட் அவர்களின் காலத்தில் 1950 களில் கேரளாவில் அமைந்தது! அதன் பிறகு மேற்கு வங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி அமைத்ததும் வரலாறு. இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது மேற்குவங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் எல்லாம்  கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் வாய்ப்புகளை இழந்து அது இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் மட்டுமே இன்றளவும் தொடர்ந்து இருக்கிறது.




இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் இன்றைய கம்யூனிஸ்ட்கள்  மத்தியில் பாசிசம் மற்றும் நவ பாசிசம்  விவாதம் பரவி வருவது குறித்த கவனத்தைக் கோருகிறார்கள். அது குறித்து அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மதுரை மாநாட்டில் மேற்சொன்னதை  குறித்து விவாதிக்க இருக்கிறது.

அப்படியான கொள்கை விவாதங்களை  இந்தியாவின் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

அது ஒருபுறம் இருக்க இன்றைய சிபிஎம் கட்சியின் இந்தியத் தலைவர் பிரகாஷ் காரத் அடிப்படையில் காங்கிரசுக்கு எதிரானவர். மறைந்த சீதாராம் எச்சூரி அவர்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து அதனிடம் கை குலுக்கி கொண்டே இருப்பார். வாழ்நாள் முழுக்க காங்கிரஸின் தோழனாக அதைத் தாங்கி பிடித்து நடந்து கொண்டார். இந்தக் கருத்து  பரவலானது தான் என்றாலும் கூட அது குறித்து நமக்கு முழுமையாக தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் பாசிசம், நவ பாசிசம் என்று கம்யூனிஸ்டுகள் குறிப்பிடுவது பாஜகவை விமர்சிப்பதாகத்தான் குறிப்பாக  எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர்களது கட்சிகளுக்குள் விவாதம் நடந்து வருகிறது. இது எதை நோக்கிச் செல்லும் என்றும் இப்போதைக்குச் சொல்ல இயலவில்லை.

இந்திரா அம்மையாரின் அவசர நிலைப் பிரகடனத்தை ஆர் எஸ் எஸ்  போன்ற அமைப்புகளும் அன்றைக்கு இருந்த பாஜக போன்றவையும் கடுமையாக எதிர்த்தவை.  சிபிஎம் இவர்களுடன் இணைந்து எதிர்த்து போராடியத்து.ஆனால் அப்படிப்பட்ட எமர்ஜென்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டாங்கே தலைமையில் 
ஆதரித்தது என்பதையும்  நாம்மறந்து விடக்கூடாது. அப்போது தானே பாசிசத்தின் மூலக்கருத்து உண்டானது இல்லையா? 

மாற்றுக்கருத்துக்களுடன் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் ஒரு திட்டம் இருக்கிறது மற்றும் சோசியலிஸ்ட் கட்சிகள் அதாவது இன்றைக்கு காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கும் முலாயம் (அகிலேஷ் யாதவும்) இன்றைய லல்லு பிரசாத் யாதவும்  சோசியலிஸ்ட் கட்சியில் இருக்கும் போது எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராவுடன் கடுமையாக மோதினவர்கள்தான்!. அதேபோல் காஷ்மீர் தேசிய மாநில கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவும் 
எமர்ஜென்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான். ஆனால் காலங்கள் மாறுகின்ற போது சித்தாந்தங்களும் மாறுகிறது என்கிற கணக்கில் அவரவர் பிராந்தியங்களின் அணுகுமுறையும் மாறுகிறது எனும் அடிப்படையில் இந்திய அரசியலின் முகமே மாறிக் கொண்டிருக்கிறது!

தேச நலன்களுக்குரிய சித்தாந்தங்களே முக்கியம் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் நரேந்திர தேவ், லோகியா, போன்றவர்கள் எல்லாம் 
கூறுவார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட லல்லுபிரசாத்யாதவ் முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் இன்று மாறிக் கொண்டார்கள். இப்படியான நிலை தான் இன்று இருக்கிறது. 

இந்திய மார்க்சிஸ்ட்களிடம் குறிப்பாக இம்மாதிரியான பாசிசம் நவ பாசிசம் போன்ற விவாதங்கள் இதுவரை வந்ததில்லை. அவர்களுடைய கொள்கைகள் அடிப்படையில் பார்த்தால் ஒரு காலத்திலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸை ஆதரிக்க முடியாது!

காங்கிரஸின் கடந்த காலங்களில் இருந்து அவர்கள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை! காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போது 1950 களில் போராடும் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள்! கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தார்கள். எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ்  நாராயணன் உட்பட எத்தனை மூத்த கம்யூனிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட முடியாது. இதுதான் கடந்த கால வரலாற்றின் எதார்த்தம்! இன்றைக்கு அரசியலில் தனி நபர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டநிலையில் அதன் கொள்கைகள் நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கான சமூக அவலங்கள் தொடங்கி இருக்கின்றன. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் கட்சிகளின் பொதுக்குழுக் கூட்டங்களைப் பார்த்தால் அல்லது அதனுடைய மாநாடுகளைப் பார்த்தால் மாநாட்டுக்கு வரும் 2500 பேர்களுக்கு இன்னின்ன உணவுகள் வழங்கப்படும் என்று  மெனுப் பட்டியல்களை பிரச்சாரத் தட்டிகளாக அவர்களே ஊடகங்கள் தோறும் வைக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. அல்லது மக்களைத் தொண்டர்களை என்னவாக கணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
 பொதுக்குழுவில் என்ன கொள்கைகள் என்ன திட்டங்கள் என்ன எதிர்கால உண்மையான நடைமுறைகள்  என்பதுபற்றி எதுவுமே இவர்கள் சொல்வதும் இல்லை! அவற்றை முன் பெரியாக செயல் திட்டங்கள் வைப்பதும் இல்லை! இது வெறும் சம்பிரதாயம்தான். பதிலாக நீங்கள் பொதுக் குழுவிற்கு வந்தால் என்னென்ன வகை உணவுகள் கிடைக்கும்  என்று பட்டியலைப் போட்டு மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் 10 15 ஆண்டுகளாக கட்சிப் பொதுக்குழு மாநாடுகளில் நடந்து வருகிறது!

கோட்பாடுகளைப் புறம் தள்ளிவிட்டு 
குடும்ப வாரிசுகளின் அரசியலுக்கு தோதாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன்றி வேறென்ன! தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஹீரோ ஒர்ஷிப்பாக எக்காளமாக கிளர்ச்சியாக மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி மயக்கமூட்டும் இந்திய அரசியல் இப்படியாகத்தான் அதன் வழியில் போய்க் கொண்டிருக்கிறது! அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு பிறந்த வாரிசுகளுக்குமான அரசியலாகவும் இது தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை மன்னராட்சி என்று சொல்லாமல் வேறு என்ன வகையில் வகைப்படுத்துவது. இதெல்லாம் இன்றைக்கு மிக முக்கியமாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட  வேண்டிய அல்லது இத்தகைய போக்குகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டிய  நடைமுறையாகவும் அதற்கான புதிய அரசியல் மாற்றங்களும் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இங்கு கட்சிகள் உள்ளன. இரங்கல் தீர்மானம் ஒரே தீர்மானம் தனியாக முதலில் வாசித்து விட்டு சில எல்லோரும் எழுந்து நின்று அமைதி சில நொடிகள் அமைதி காக்க வேண்டும். பின் பொது தீர்மானங்களை முன் மொழிந்து பின் வழி மொழிய வேண்டும். இது மரபு. இவை 
எல்லாம் இன்றைய புதிய கட்சிகளுக்கு தெரிய வில்லை. இப்படி ஆலோசகர்கள், நிர்வாகிகள் அங்கு உள்ளனர்.

#இன்றையஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-3-2025.


Tuesday, March 25, 2025

#*ஒரு சொல்* ———————- ஜனநாயகம் என்பதை மக்கள் நலனுக்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதாக உணரும் பொழுது கட்சி என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு! என்கிற அடிப்படையைப் அரசியல் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்! அரசும் நாடும் ஒருங்கிணைந்தது! நிலையானது !




*கட்சி என்பது அதில் பிரதிநிதித்துவம் பெறுகிற ஒரு அமைப்பு தான்* . ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அரசும் நாடும் நம்முடையது என்று நினைத்துக் கொண்டு தங்களின் மனம் போன போக்கில் செயலாற்றுகின்றன. இது கட்சிகள் சொல்லுகிற கொள்கைக்கும்  நடைமுறைக்கும் பல சமயங்களில் பொருத்தம் இல்லாத ஒன்றாகவும் இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டபின் நாடு அரசு போன்ற நிலையான ஜனநாயக அமைப்புகளை தங்களுக்குத் தங்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக வளைத்துக் கொள்வதுதான் எப்போதும் அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகி விடுகிறது. இது அரசு நாடு போன்றவற்றின் மீது புரிதலற்ற ஒரு நிலை என்றும் சொல்லலாம். 

இன்றைக்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் எல்லோரும் இத்தகைய நிலையில் தான் இருக்கிறார்கள். இங்குதான் நேர்மையற்ற ஊழலும் அநீதிகளும் மற்றவர்களுக்கான மறுப்புகளும் நடக்கின்றன.  நன்றாக யோசித்தால் இது  மன்னராட்சி முறையைத்தான் இந்த நவீன காலத்திலும் புத்திசாலித்தனமாகப் பின்பற்றுகிறது! இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் போது நாடு மற்றும் அரசாங்கத்திற்குள்  அறம் புரையோடிப் புண்ணாகி விடுகிறது! 

நாளடைவில் அதன் விளைவுகளைத் தாங்க இயலாமல் பல கட்சி அமைப்புகள் சிதைந்து காணாமல் போகின்றன. இதுதான்   தொடர்ந்து வரும்   கட்சிகளின்ஆட்சி அதிகார வரலாறு! வாரிசு அளவான மன்னராட்சி முடிந்துவிட்டது என்று சொல்ல முடியவில்லை!.

அரசாங்கம் மற்றும் நாடு போன்ற நிலையான அமைப்புகளில் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் சம வாய்ப்பாகக் கிடைப்பதற்கென கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் வாக்குறுதிகள் யாவும் நடைமுறையில் வீணாக்கப்படுமேயானால் அக்கட்சிகள் நாளடைவில் கொள்கை இழப்பைச் சந்திக்கின்றன.மறுதலையில் மக்களின் ஏகோபித்த நம்பிக்கைகளையும் இழந்து விடுகின்றன. . கட்சி விசுவாசிகளின் அதிகார அமைப்பில் ஜனநாயகம் எப்போதும் கேலி செய்யப்படுகிறது.   
 
உண்மையில்  ஜனநாயகம் என்பது மக்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதற்கு இன்றைய அறிவுச் சமூகத்தில் அதிக விளக்கங்கள் வேண்டியதில்லை. 

தனக்கு பிடித்த தகுதி அற்றவர்களையும் அரசியல் தலைவர் உத்தமராகவும், அவர்கள் சார்ந்த கட்சியே ஒழுக்கமான கட்சி என்றும், மற்றவர்கள் முழு அயோக்கியர்கள் என்கிற போக்கில்
 ஜனநாயக விவாதம் எளிதாக பகைமையாக்கப்படுகிறது.

பொதுவெளியில் பேச கூசும் வார்த்தைகளை சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருவது வெட்கக்கேடு. அதிலும் மெத்த படித்த மேதாவிகள்தான் குற்றால அறிவி போன்று வசை சொற்கள் கொட்டுக்கிறார்கள் எவனோ ஒருவனுக்காக. இங்கு பொது வாழ்வில் #தகுதியேதடை. தலைமைக்கு அடிமையாக இருப்போருகளுக்கு மட்டுமே ( மந்தி)ரி…. திடீர் என மந்திரி எந்திரி என நாகரிகம்யற்று தலைமையின் சித்தம் போல சொல்லும் நிலை இந்த காலத்தில். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் பல்வேறு இனங்கள்.மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரம் போன்றவை ஆதிகாலம் தொட்டு இருந்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவை சுய ஆதிக்கத்தை அடைந்துள்ளன. இந்தியாவில் அதன் பாதுகாப்பிற்கு பல்வேறு நல்லிணக்க ஒருமைப்பாட்டிற்கு அதன் இயல்பு வாழ்க்கைக்கு அதன் நம்பிக்கைகளுக்கு  ஆபத்தற்ற தன்மையையும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு நிவாரணங்களையும் கொண்டு செலுத்துவதையே  முதன்மைக் கடமையாக  ஒரு அரசாட்சி மேற்க்கொள்ள வேண்டும்.
தொழில் வணிகம் விவசாயம் உழைப்பு வரி செலுத்துதல் என அதிக மக்கள் தொகை கொண்ட சமூகங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை நிர்வகிக்க ஒரு கட்சி வரும்போது அது எவ்வளவு ஆற்றல் மிக்கதாக சேவை மனப்பான்மை உடையதாய் சுயநலமற்றதாய் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். 

ஒரு சில தனிநபர்களுக்காக அதிகார மோகத்திற்காக பதவிச் சுகங்களுக்காகக் கட்சியை நடத்துவது எப்போதும் மோசமான நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.  நான் ஏற்கனவே பலமுறை சொல்லி வருவது போல மிகையான வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியப்படாத இலவசங்கள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை போன்றவற்றால் ஒரு சமூகம் நாகரிகமற்ற பிற்போக்கு நிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது! 

மக்கள் நலம்,மிகுந்த கவனமாக ஆட்சியை நடத்த வேண்டும். அத்தகைய தன்னலமற்ற தலைவர்களை எந்தக் கட்சி கொண்டுள்ளது என்பதுதான் என் போன்றோரின் கேள்வி?

#இன்றையஅரசியல்
#PoliticsToday

@highlight 
@Everyone 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-3-2025.

Sunday, March 23, 2025

டி.வி.சுந்தரம் ஐயங்கார் (T.V.Sundaram Iyengar)

டிவிஎஸ் நிறுவனர், பிரபல தொழிலதிபர்

இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் (T.V.Sundaram Iyengar) பிறந்த தினம்  (மார்ச் 22). சிறப்பு பகிர்வு.

தி.வே. சுந்தரம் ஐயங்கார் ஒரு மகா விருட்சமாய்... -

தி.வே. சுந்தரம் அய்யங்கார் (திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம்) அவர்கள், இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மாமனிதர். இவர் எல்லோராலும் T V சுந்தரம் அய்யங்கார் என அன்பாக அழைக்கப்பட்டார்.












பல ஆண்டுகளாக நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். வாகனங்களில் செல்வதே கனவாக இருந்த போது, மதுரையில் முதன்முதலில் கிராமப்புற பேருந்து சேவையை தொடங்கினார். தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911-ல் தொடங்கி, தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் 1912-ல் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு முன்னோடியானார். பிறகு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஒரு அடித்தளத்தை அமைத்தார். தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், தொடங்கிய நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மோட்டார் தொழில், மோட்டார் சேவைகள் மற்றும் நிதி என பல துறைகளில் பரந்து விரிந்தது. இப்போது டிவிஎஸ் குழுமத்தை சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைலே இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி கொண்டுள்ளது.







தி. வே. சுந்தரம் ஐயங்கார் ஆரம்ப கால வாழ்க்கை:

தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், இன்றைய தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி என்ற ஊரில் 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தார். திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின், சட்டக் கல்லூரியில் சேர்ந்து. சட்டக்கல்வியில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இவர் ஒரு வழக்கறிஞராக தனது தொழில்துறையைத் தொடங்கினார். பின்னர் இந்திய ரயில்வேயிலும், அதன் பின் ஒரு வங்கியிலும் வேலை செய்தார். தொடக்கத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே.

டிவிஎஸ் வளர்ச்சி:

இளமையிலேயே சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த டிவிஎஸ் அவர்களின் ஆர்வத்தை, திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் நடைபெற்ற லாயர் நார்டன் எனும் ஆங்கிலேயரின் உரை மேலும் தூண்டியது. இவர் தன் வங்கி வேலையை விட்டுவிட்டு, தொழில் துறைக்கு திரும்பினார். 1911 ஆம் ஆண்டு, மதுரையில் முதல் பஸ் சேவையை துவக்கினார். தொடர்ந்து 1923 இல் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மற்றும் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். 1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிபாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதால், டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு திருப்பம் ஆரம்பமானது. 1939-ல் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட் என்ற பெயரில், லாரிகள் மற்றும் பேருந்துகளுடன் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு... பிறகு, ‘தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார்ஸ் லிமிடெட்’ போன்ற தொழிற்சாலைகளை தொடங்கினார்.

1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, சென்னை மாகாணத்தில் பெரும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் ‘டி.வி.எஸ் கரி எரிவாயு ஆலையை’ வடிவமைத்து உருவாக்கினார்.

1950-களில், ஜெனரல் மோட்டார்ஸின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ‘மெட்ராஸ் ஆட்டோ சர்விஸ் லிமிடெட்’ விரிவடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்களால் மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப் பெரும் உதிரி பாகங்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்த பின், “டி.வி.எஸ்” என்ற பெயரின் கீழ் நான்கு தனித் தனி கிளைகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் விநியோக நிறுவனம் என்ற பெருமை டி.வி. எஸ். குழுமத்தையே சேரும். இந்தக் குழுமம் தானியங்கி பாகங்கள் உற்பத்தி, வாகன விற்பனை, மின்னணு, ஐ.டி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 50,000 பேரை பணியில் அமர்த்தி செயல்படுகிறது. இப்பொழுது டிவிஎஸ் குழுமத்தில் சுமார் 40 நிறுவனங்களும் மற்றும் ஆட்டோமோட்டிவ் பிரிவில் துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

டி.வி.எஸ் குழுமத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் சில:

வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, சுந்தரம் ஃபாஸ்டநெர்ஸ், டி.வி.எஸ் இன்ஃபோடெக், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, இஸட்எஃப் எலெக்ட்ரானிக்ஸ் டி.வி.எஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சுந்தரம் ஃபைனான்ஸ், டர்போ எனர்ஜி லிமிடெட், ஆக்சல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், லூகாஸ் டி.வி. எஸ், சுந்தரம் மோட்டார்ஸ், சுந்தரம் பிரேக் லைனிங், டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ், டி.வி.எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட், மற்றும் சுந்தரம் ஹைட்ராலிக்ஸ் லிமிடெட்.

“டி.வி.எஸ்” பற்றி காஞ்சி மகா பெரியவர்:

காஞ்சி மகா பெரியவர் புதுக்கோட்டையில் ஒருமுறை முகாமிட்டிருந்தார். எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுவார். அவரது சீடருக்கு ஒரு சந்தேகம்... பெரிவா எப்படி சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து விடுகிறார்... பெரிவா சீடரை கூப்பிட்டு, அவரது சந்தேகத்தை தீர்த்து வைத்தார். புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு தாண்டிப் போகும் போது பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே எழுந்து விட்டேன்…’’ என்றார். காஞ்சி மகா பெரியவர் கூறியது, இவரது பேருந்து நிறுவனத்தின் நேரம் தவறாமைக்கு நற்சான்று!

“டி.வி.எஸ்” தொழிலாளர்களுக்கு செய்த வசதி:

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்தினார். ஊழியர் குடியிருப்புகள், அவர்களது குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தார். இன்றும் இவைகள் தொடர்கின்றன.

நானும் ஒரு தொழிலாளி:

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளில் தொழிலாளர்களையும் பங்கேற்க வைத்தார். தொழிலாளர்களில் சிறந்த ஆலோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் கொடுத்தார்கள். டி.வி.எஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள். அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இவரது 5 மகன்களும் தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கினர். வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார். காந்தியக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றினார். தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். நிர்வாக யோசனைகளில் தொழிலாளர்களைப் பங்கேற்க வைத்தார். தாத்தா அப்பா பேரன் - கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற குடும்பங்கள் பல உண்டு.

•••••

திருக்குறுங்குடி வெங்காராம் சுந்தரம் ஐயங்கார். 

T. V. Sundaram Iyengar 

( 22.3.1877- 28.4.1955) 

" The group has sometimes been called conservative, for sticking to the automotive space and passing up opportunities everywhere. 

" We are not after money, " 

says Suresh Krishna, Chairman and Managing Director of Sudaram Fasteners. 

"Our dharma is to... add value to the nation and to the stakeholders in it. "

Perhaps it is this approach that has kept the group free from controversy. '

From '100  Years  - Old Companies / TVS -

Business Today July 10- 2011

திருக்குறுங்குடி அழகியநம்பி எந்தளவுக்கு நமது மனதில் உறைகிறாரோ அந்தளவுக்கு - ஏன் அதற்கும் மேல் திருக்குறுங்குடி என்றவுடன்  டி. வி. சுந்தரம் ஐயங்கார் நினைவுக்கு  வருகிறார். 

வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அதனைவிட்டு விட்டு,ரயில்வேயிலும் வங்கியிலும் பணியாற்றினார்.

திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம் என்ற அமைப்பில் ஒரு வெள்ளைக்காரத்துரை ஆற்றிய உரையைக் கேட்ட ஐயங்கார், சொந்தமாகத் தொழில் தொடங்கக் கருதி, 1911 ஆம் ஆண்டு மதுரையில் T. V. S. & Sons என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 

1912 ஆம் ஆண்டு மேற்படி நிறுவனம் தனது பேருந்து சேவையைத் தொடங்கியது. 

1919 ஆம் ஆண்டு ஐயங்கார் வாகனங்கள், உதிரிப்பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் சேவையிலும் ஈடுபடத் தொடங்கியது. 

1929 : அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விநியோக உரிமையைப் பெற்றது! 

இந்த நிறுவனத்தின் FARGO வாகனங்களே ஸதர்ன் ரோட்வேஸ்  பேருந்துகளாகவும் சுமையூந்துகளாகவும் ( Parcel service) வலம் வந்தன. 

படங்கள்:- பழைய பார்கோ  வாகனங்களின் படங்கள் அகப்படவில்லை. ஒன்றே ஒன்றைப் பாதுகாத்து வைத்திருந்தேன். ஆனால் அதில் பார்கோ முத்திரை எதுவும் இல்லை. மதுரையில் பழைய பேருந்து ஒன்றை காட்சிக்காக வைத்திருந்தார்களே என்று அங்கு பொதுமேலாளராகப் பணிபுரியும் நண்பரைக் கேட்டேன். இப்போது அந்த இடத்தில் எதுவும் இல்லை என்றறிந்தபோது ஏமாற்றமாக இருந்தது.) 

இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ள டி. வி. எஸ். குழுமம் நான்காவது தலைமுறையினரால் அதன் மரபார்ந்த வழிமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிநடை  போடுகிறது. 

குக்கிராமமான ' 'குறுங்குடியில் ' பிறந்த ஐயங்கார் அன்று விதைத்து வளர்த்த விருட்சம் இன்று விழுதுகளைக் கொண்டு விரிந்து நிற்கிறது. 

சென்ற வாரம் திருக்குறுங்குடி சென்றிருந்த நான் வடக்குக் கிராமத்தில் ( அக்ரஹார வீதியை மற்றவர்கள் 'கிராமம்' என்றே கூறுவார்கள்.) சுந்தரம் ஐயங்கார் பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

நான்கு வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. அவையனைத்தும் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளன. 

 ஏற்கனவே சென்றிருந்தாலும் மீண்டும் சென்று பார்க்கத் தூண்டியது சுந்தரம் ஐயங்காரின் ஸதர்ன் ரோட்வேஸ் சாதனைகள்! 

Fargo சேஸ்களில் டி. வி.எஸ். நிறுவனம் கட்டுகின்ற பாடி அத்தனைக் கச்சிதமாக இருக்கும். 

அந்த இன்ஜின் எழுப்பும் ஒலி தனித்துவமானது! 

டி. வி. எஸ். நிறுவனம் தனது வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட ஒரு வாகனத்தை இயக்கும். 

அந்த வாகனத்தின் அடிப்பகுதியில் காந்தம் பொருத்தப்பட்டிருக்கும். 

அவை சாலைகளில் ஆங்காங்கே கிடக்கும் ஆணிகள், குதிரைகள்  மாடுகள் போன்ற கால்நடைகளின் கால்களிலிருந்து கழன்று விழுந்த லாடங்கள் ஆகியவற்றை இழுத்துக் கொள்வதால் சாலைகளில் செல்லும் டிவிஎஸ் வாகனங்களில் டயர்கள் பங்ச்சர் ஆவதில்லை; அதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவை செல்லுமிடங்களுக்குப் போய்ச் சேர்வது மட்டுமல்லாமல், அவை வருகிற நேரத்தைக் கொண்டு தங்கள் கடிகாரத்தைச் சரிசெய்து கொள்வார்கள் என்று நாம் இன்று கேள்விப்படுவது மிகையல்ல! 

அரசுப் பணிகளுக்கு ஈடான கௌரவத்தைப் பெற்றிருந்தது டிவிஎஸ் நிறுவனங்களில் பணியாற்றுவது! 

CSR என்றழைக்கப்படும் ( Corporate Social Responsibility) நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வை அந்தக் காலத்திலேயே நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை இந்த நிறுவனத்துக்கு உண்டு. 

பின்தங்கிய பகுதியான நாங்குநேரியில் ( திருக்குறுங்குடி அருகில் உள்ளது.) பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதற்காக தங்களுக்குச் சம்பந்தமில்லாத நூற்பாலை ஒன்றை நிறுவியது. திருக்கோயில் மேனிலைப்பள்ளியையும் ஒரு வேளாண் பண்ணையையும் நடத்தி வருகிறது. 

சுந்தரம் ஐயங்காருடைய மகள் செளந்தரம் அம்மையார் ஒரு காந்தியவாதி. கணவர் இறந்த பிறகு சமூகத்தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவருக்கு மறுமணம் செய்து வைக்க சுந்தரம் ஐயங்காரின் சம்மதத்தைப் பெறுவதற்கு துணையாக நின்றவர் மகாத்மா காந்தி! 

அந்த நாளில் அது ஒரு புரட்சித் திருமணம் 

மறுமணம் மட்டுமல்ல; கலப்புத் திருமணமும் கூட! 1/2

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தனது 78வது வயதில் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலையில் கொடைக்கானலில் காலமானார். இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் 1957-ல் ஆகஸ்டு 7ஆம் தேதி அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய டிவிஎஸ் குழுமம் ஆல விருட்சம் போல் தழைத்து விழுதுகளாகி, அவரது நான்காம் தலைமுறை வாரிசுகள் டி.வி.எஸ் குழுமத்தில் இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களும் கொண்ட மகா விருட்சமாய் வளர்ச்சி அடைந்துள்ளது.


இந்த அம்மையாரின் அயராத உழைப்பினால் உருவானதுதான் திண்டுக்கல் காந்தி கிராமம் மற்றும் பல்கலைக்கழகம்! 

செல்வாக்கு மிகுந்த தொழிலதிபரின் மகளாகப் பிறந்தாலும் காந்திய நெறியில் நின்று எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார் சௌந்தரம் அம்மையார் அவர்கள்! 

இவையெல்லாம் 148 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிறந்த ஒரேயொரு மனிதரின் சிந்தனையில் எழுந்து விரிந்து சமூகத்துக்குக் கிடைத்த நன்மைகள். 

 நியூமராலஜி கிறுக்கு என்னைப் பிடித்திருந்த காலத்தில் TVS என்ற மூன்றெழுத்தைக் கூட்டிப் பார்த்தபோது 13 என்ற எண் வந்ததில் மிகுந்த வியப்பில் ஆழ்ந்தேன்.

ஏனென்றால் இந்த 13 எனும் எண் அதிர்ஷ்டமில்லாததாகக் கருதப்படுவது! 

இந்த எண்ணைத் தனக்குள்ளே கொண்ட TVS நிறுவனம் தழைத்தது எதனால்? 

நியூமராலஜி மீதான நம்பிக்கையும் ஈடுபாடும் இதைத் தற்செயலாக அறிந்து கொண்ட பிறகு போயே போய்விட்டது! 

" We have not after money "

Says Suresh Krishna.. 

Perhaps it is the approach that has kept the group free from controversy.. 



நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்……. #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #அத்தியாயம்6

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 6

அன்றைக்கு வீடுகள் எல்லாம் பெரும்பாலும் கற்கள் வைத்துதான் கட்டப்பட்டன. மலையில் இருந்து கற்களைக் கொண்டு வந்து, பின்னர்  அதை சதுர கற்களாக வெட்டி அதைக் கொண்டு வீடு கட்டினார்கள். ஒருசிலரே  செங்கலைப் பயன்படுத்தினார்கள். அதேபோல் காளவாசலில் இருந்து சுண்ணாம்பு வாங்கி வந்து, அதனுடன் சரியான விகிதத்தில் மணலைக் கலந்து  கட்டிடப் பணிக்கு பயன்படுத்துவார்கள். அப்போதெல்லாம் சிமென்ட் பயன்பாடு அவ்வளவாக இல்லை.
சுவரைப் பூச வேண்டுமென்றால், பெரிய அம்மியில் சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையைப் போட்டு அரைப்பார்கள். சாந்து போன்று வரும். அதைக் கொண்டு பூசி விடுவார்கள். சுவர்களில் சன்னல் அமைப்பார்கள்.  அதேபோல் மேற்கூரைக்கு கீழே சின்ன சின்ன பாட்டு சன்னல்களை  வைப்பார்கள். அதில் இருந்து காற்றும் வெளிச்சமும் வரும்.
மேல் தளத்துக்கு மர உத்திரங்கள் மீது தேக்கு மரக் கட்டைகளை மேலோட்டமாக இடையிடையே வைத்து தளம் போடும் செங்கற்களை அடுக்கி வைப்பார்கள். பின்னர், கடுக்காய் நீரோடு சுண்ணாம்பு, மணல் கலவையைச் சேர்த்து மேல் தளத்தை  போடுவார்கள். ஒரு சிலரின் வீட்டில் மட்டும்தான் மாடிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் மர ஏணிதான் இருக்கும்..
பொதுவாக ஒரு வீட்டில் பெரிய ஹால் ஒன்று  இருக்கும். அதை பட்டாசால் என்று அழைப்பார்கள். அதேபோல், சின்ன  அறைகளாக இரண்டு மூன்று  இருக்கும்.  சமையல் அறையில் அடுப்புக்கு மேலே, புகை போவதற்காக புகை  போக்கியும் கட்டுவார்கள்.
மேலும், பருத்தி, மிளகாய், தானியங்கள் போட்டு வைக்க தனித்தனி அறைகள் இருக்கும். பருத்திக்கான அறையில் கீழே ஈரமில்லாமல்  இருப்பதற்காக மணல் பரப்பி அதன் மேல் பருத்தியை  இருப்பு வைப்பார்கள். அதேபோல் மிளகாய் வத்தலையும் வைப்பார்கள். தானியங்கள், உளுந்து மற்றும் பருப்பு வகைகளை மட்டும் மூட்டைகளில் கட்டி தனி அறையில் வைப்பார்கள்.
வீடுகளுக்கே வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் நல்ல விலை கிடைத்தால்  விற்பார்கள். இல்லையெனில் இவர்களே சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர் கமிஷன் கடைகளுக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வந்துவிடுவார்கள்.
தானியங்களை பெரும்பாலும் மாட்டு வண்டிகளில்தான் கொண்டு போவார்கள். மாட்டு வண்டிகள் குறிப்பாக கயத்தாறு ஆசாரி செய்து கொடுக்கும் வண்டிகளுக்கு  அந்த காலத்தில் மவுசு அதிகம். நல்லாட்டின்புதூரிலும் வண்டிகள்  செய்வதுண்டு. அதன் அடையாளமாக பட்டறை பேருந்து நிலையம் என்று ஒன்று இன்றைக்கும்  உள்ளது.  ஒரு வீட்டில் இரண்டு மூன்று ஜோடி உழவு மாடுகள், இரண்டு மூன்று பசுமாடுகள், எருமை மாடுகள் இருக்கும். மாடுகள் கட்டுவதற்காக தொழுவம் இருக்கும். அங்கு சேகரமாகும் கழிவுகள் விவசாயத்துக்கு எருவாகப் பயன்படும்.
நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை பக்குவப்படுத்துவார்கள். அதற்கு தண்ணீர் கட்டிய தொழி என்பார்கள்.  வயலில் கொளிஞ்சி இலைகளைப் போட்டு நன்றாக மிதித்து சேறும் சகதியுமாக நிலத்துக்குள் மூழ்கிய  பிறகு நாற்றுகளை நடுவார்கள். இந்த தொழி முறையால் மண்ணில் நைட்ரஜன் சத்து கிடைக்கும். இதனால் நெற்பயிர் எளிதில் வளரும்.
பருத்தியைப் பொருத்தவரை, முதலில் பருத்தி விதைகளை சாணத்தில் தோய்த்து, அதை வரிசையாகத் தோண்டப்பட்ட உழவுக்குழியில் விதைப்பார்கள். மிளகாய் என்றால் நாற்று பாவி நட வேண்டும். மானாவாரிப் பயிர்களான எள், துவரை, நிலக்கடலை இவற்றையெல்லாம் மழை பொழிந்தவுடன் உழுது விதைகளை விதைப்பது உண்டு. கரும்பை துண்டு துண்டாக வெட்டி அதை உரத் தண்ணீரில் நன்றாகக் கழுவி, வரிசையாக நடுவார்கள்.
இப்படியாக விவசாய முறைகள் இருந்தன.
எங்கள் ஊர் பெரும்பாலும் கரிசல் மண் நிறைந்த பகுதியாகும். ஒரு சில இடங்களில் ஆங்காங்கே செவல் தரையும் உண்டு. கொய்யா , மா, எலுமிச்சை, நார்த்தங்காய், தென்னை போன்றவற்றை சுருக்கமாக ஒரு ஏக்கருக்குள் சாகுபடி செய்வது உண்டு.
மழை பெய்தால் கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து மேல் பகுதி வரை வந்து விடும். கோடை காலங்களில்  நீர் வற்றி விட்டால், கிணற்றை திரும்பவும் ஆழப்படுத்த வேண்டும். அன்றைக்கு ஜிஇசி பம்ப் செட்கள்தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தன.  இது உயர் தரமான மோட்டார்  என்று கூறுவார்கள். மின் மோட்டார் இல்லாத விவசாய நிலங்களில் ‘கமலை’ என்று சொல்லக் கூடிய ஏற்றம் இறைத்து  நீர் பாய்ச்சுவார்கள்.
சில நேரங்களில் மோட்டாரில் காயில் கருகிவிடும். அதை சரிப்படுத்துவதற்காக மோட்டாரை எடுத்துக் கொண்டு, எங்கள் பண்ணையில் வேலை பார்க்கும் ராமன், சீனியோடு கோவில்பட்டி, சங்கரன்கோவிலுக்குப் போவோம். அப்படி செல்லும்போது மாட்னி ஷோ சினிமா பார்த்து விடுவோம். கோவில்பட்டி என்றால் தூத்துக்குடியில்  இருந்து வரும் மீனில் செய்யப்படும் வறுவலைச் சாப்பிடுவோம். எங்கள் ஊரில் குளத்து மீன்களான அயிரை, விறால்தான் கிடைக்கும். மேலும் அங்கே உள்ள நாடார் கடையிலும், திமுகவில் இருந்த கலைமணி காசி கடையிலும் சாப்பிடுவதுண்டு. அங்கு மீன், மட்டன் சுக்கா வறுவல் மிகவும் ருசியாக இருக்கும்.
சங்கரன்கோவில் என்றால், எங்கள் குடும்ப நண்பர் சுல்தான் கடையில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விடுவோம். இதனால் மோட்டார் காயில் பழுதடைந்து விட்டால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் ஒரு மோட்டார் காயில் கட்டுவதற்கு 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும். அன்றைக்கு அது  பெரிய தொகை. 
அன்றைய திருமண விழாக்களைப் பற்றி ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 
எங்கள் ஊர் பெண்ணை திருமணம் செய்து, விருந்துக்கு வரும் புது மாப்பிள்ளைகள் குறைந்தது 2 வாரமாவது மாமனார் வீட்டில் தங்குவார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்கும். விருந்து தடபுடலாக நடக்கும். எங்கள் ஊரில் இளவட்டக்கல் என்று ஒன்று பந்து வடிவில் பெரிதாக இருந்தது. விருந்து முடிந்து மனைவியோடு மாப்பிள்ளை சொந்த ஊர் திரும்பும்போது, அந்த இளவட்டக் கல்லைத் தூக்கி  தோள் புறமாகக் கொண்டு வந்து பின்னால் போட வேண்டும். அப்படி  போடவில்லை என்றால் மாமனார் வீட்டில்  மாப்பிள்ளையை சரியாகக் கவனிக்கவில்லை, அல்லது மாமனார் வீட்டு சாப்பாட்டை மாப்பிள்ளை சரியாகச் சாப்பிடவில்லை என்று கிண்டல் செய்வார்கள். இவ்வாறு மாப்பிள்ளையை விருந்துக்கு அழைப்பதை ‘இஞ்சி வைத்து விட்டீர்களா?’ என்று கூறுவார்கள். இப்படியான பழக்கம் அன்றைக்கு இருந்தது.
அந்தக் காலத்தில் கழிவறைகள்  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அரசாங்கம் சார்பில்  கட்டப்பட்டிருந்தன.  ஆனால் கழிவறையை எப்படி பயன்படுத்துவது என்று கிராம மக்களுக்குத் தெரியாது. இதனால் பராமரிப்பின்றி அவை வீணாகி விட்டன.
1960 காலகட்டத்தில்  கழிவு நீர்  செல்வதற்காக சிமென்ட் வாறுகால்கள் தெருவோரமாகக் கட்டப்பட்டன. 
இன்றைக்கு நடைபெறும் மணல் திருட்டு, கனிம வளக் கொள்ளைகளைப் பற்றியெல்லாம் அன்றைக்கு யாருமே எண்ணிப் பார்க்கவில்லை. 
எங்கள் கிராமத்தில் சலவை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வருஷத்துக்கு  கூலியாக இத்தனை மூட்டை என்று கொடுத்து விடுவோம். அதேபோல் முடிதிருத்துபவர், செருப்பு தைத்துத் தருபவர்களுக்கும் தனித்தனியாக கூலியாக நெல் மூட்டைகள் கொடுப்பது வாடிக்கை. 
இன்றைக்கு வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. பேராசிரியர் சீனிவாசராகவன், வெம்பக்கோட்டை பகுதியிலும் ஆதி மக்களுடைய அடையாளங்கள் இருந்தன என்று அப்போதே சொன்னதுண்டு. ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு, சிவகாசியில் நடந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது,  இதை சொன்னார் என்று கேள்விப்பட்டேன். 
எங்கள் கிராமத்தில் உழவு மாடு வாங்க வேண்டுமென்றால் கழுகுமலை மாட்டுத் தாவணிக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிக்கு செல்ல வேண்டும். பாம்புகோவில் சந்தை எங்கள் வட்டாரத்தில்  விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் முக்கியமான சந்தையாகும். அதேபோல் எங்கள் ஊர் அருகில் உள்ள திருவேங்கடத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை கூடும். 
கழுகுமலையில் அப்போது முதன்முதலாக கட்டுமானத்தோடு தியேட்டர் வந்தது. அதற்கு முன்னால் டென்ட் கொட்டகைதான் இருந்தது. பாலசுப்பிரமணியம் என்ற தியேட்டரை அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வந்து திறந்து வைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன. ஒருசில வீடுகளில் மட்டும்தான் மண்ணெண்ணெய் ஸ்டவ் இருக்கும். அதற்கு மண்ணெண்ணெய் வாங்குவது பெரிய பாடாக இருக்கும்.
வீடுகளில் குடி தண்ணீரை தாமிரம், பித்தளை பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். அதில் டம்ளர், போனி அல்லது செம்பு வைத்திருப்பார்கள். அதைக்கொண்டு  தண்ணீர் எடுத்து  அருந்த வேண்டும். அதேபோல் அன்றாட பயன்பாட்டுக்கான தண்ணீரையும் குடங்கள், தவலைகள், தொட்டிகளில் நிரப்பி வைப்பார்கள். அப்போதெல்லாம்  தண்ணீர் குழாய்கள் வீடுகளில் அமைக்கப்படவில்லை.
ஒரு சம்சாரி வீட்டில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 4  - 5வேட்டி, சட்டைகள் இருக்கும். பெரும்பாலும் கிராமத்தில் சட்டை அணிய மாட்டார்கள். மேல் துண்டு மட்டும் அணிந்து கொள்வார்கள். உழவுப் பணியின்போது கோடுபோட்ட அண்டர்வேரை விவசாயிகள் அணிந்திருப்பார்கள். அதேபோல், கோவணம் மாதிரி லங்கோடு என்று சொல்லப்படும் துணியை கட்டிக் கொள்வார்கள்.
மருத்துவமனை என்றால் குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போக வேண்டும். கொஞ்சம் வசதியானவர்கள்  கோவில்பட்டி துரைராஜ் டாக்டர், சாமுவேல், சங்கர அய்யர் மருத்துவமனைக்கும் செல்வார்கள். சங்கரன் கோவில் என்றால், லைசாண்டர் மருத்துவமனைக்குச் செல்வார்கள்.
அந்த காலகட்டத்தில் அதிகமானோர் பாம்பு கடிக்கு ஆளானார்கள். பாம்பு கடித்துவிட்டால் விஷம் பரவாமல் இருக்க, பாம்பு கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறால் கட்டி விடுவார்கள். பாம்பு கடி பட்டவர் இரவு முழுவதும் தூங்கக் கூடாது என்று சொல்வார்கள். அதனால்,  அவர் தூங்காமல் இருப்பதற்காக அவரைச் சுற்றி 10 பேர்  அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்போதெல்லாம் கொஞ்சம் வசதியான ஒருசில வீடுகளில்தான் சைக்கிள் இருந்தது. ஒரு கிராமம் என்றால் 10 - 15 பேரிடம் மட்டும்தான் சைக்கிள்கள் இருந்தன. அதேபோல் ஒருசில வீடுகளில்தான் ரேடியோ இருக்கும். பெரும்பாலும் வீடுகளில் டேபிள் ஃபேன்கள்தான் பயன்பாட்டில் இருந்தன. அபூர்வமாக ஒருசில வீடுகளில் சீலிங் ஃபேன் அகலமான பிளேடுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும்.
சைக்கிள்களுக்கு தனியாக வரி கட்ட வேண்டும். வரி கட்டியதற்காக சின்ன அலுமினிய தகட்டில் நம்பர் போட்டு கிராம அதிகாரி தருவார். அதை சைக்கிளில்  மாட்டிக்கொள்ள வேண்டும். சைக்கிளில் டைனமோ லைட் பொருத்தியிருக்க வேண்டும். இரவில் லைட் இல்லாமல் போனால் போலீஸார் பிடித்துக் கொள்வார்கள். அதேபோல்,  மாட்டு வண்டிக்கும் சதுரமான அலுமினிய தகட்டில் நம்பர் போட்டு லைசென்ஸ் கொடுப்பார்கள். 
வீட்டு வரி கட்டும்போது நூல் நிலைய வரியும் கட்ட வேண்டும். கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிட்டத்தட்ட 300  புத்தகங்கள் வரை இருக்கும். காந்திய சிந்தனைகள், அகிலன், மு.வ., நா.பார்த்தசாரதி போன்றார் புத்தகங்களை சிறு வயதில் நான் அங்கு பார்த்ததாக நினைவு. பெரும்பாலான புத்தங்கள் பாரி நிலையம் வெளியிட்டவையாக இருந்தன. ஒவ்வொரு புத்தகத்துக்கும் எண் போடப்பட்டிருக்கும். புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அலுவலகத்தில் உள்ள லெட்ஜர் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். இது 1957 - 58-ம் ஆண்டு காலகட்டம்.
சமையல் என்பது ஒரு அற்புதமான கலை. எங்கள் வட்டாரத்தில் வைக்கப்படும் வத்தக் குழம்பு மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். சுண்ட வத்தலோடு அதற்கு தேவையான மசால் வகைகளையும், நல்லெண்ணெய்யும் சேர்த்து,  ஓரளவு கெட்டியாக வைப்பார்கள்.  குழம்பு கொதிக்கும்போது அந்த தெருவே மணக்கும். இந்தக் குழம்பை நீண்ட தூர பயணத்துக்கு 2 - 3 நாட்கள்கூட வைத்துக் கொள்ளலாம். குழம்பு கெட்டுப்போகாமல் இருக்கும்.
கொங்கு மண்டலத்தில்  பச்சப்புளி ரசம் பிரபலம் போல், எங்கள் வட்டாரத்தில் வைக்கப்படும் ரசமும் பிரபலம். இந்த ரசம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். அந்த ரசத்தில் சேர்க்கப்படும் மசாலாக்கள், சுவையைத் தருவதோடு, குடலில் உள்ள புழுக்களையும் சாகடித்து விடும்.
நாட்டுக் கோழியை எப்படி சமைப்பார்கள் என்றால், முதலில் இறகுகளை அகற்றிவிட்டு, முழு கோழியாக நெருப்பில் வாட்டுவார்கள். பின்னர் நல்லெண்ணெய்யோடு மஞ்சளை சேர்த்து குழைத்து கோழி முழுவதும் பூசுவார்கள்.  சிறிது நேரம் கழித்து தேவையான அளவில் அருவாமனையில் அறுத்து, பின்னர் மசாலாக்கள் கலந்து சமைப்பார்கள். நாட்டுக்கோழி சமையலுக்கு நல்லெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவார்கள். சுவை அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
அதேபோல், ஆட்டுக்கறி என்றால் வெள்ளாட்டு கறிதான் எடுப்பார்கள். வெள்ளாட்டின் கால்களை வாங்கி வந்து, மஞ்சள் தேய்த்து  வெயிலில் காயவைத்து, பின்னர் சூப் வைப்பது தனி சுவையாகும்.
வீடுகளில் அன்றன்றைக்கு உருக்கிய நெய்யைத்தான் பயன்படுத்தினார்கள். அதை பருப்புடனோ, சாம்பாருடனோ கலந்து சாப்பிடுவது வழக்கம்.
அதேபோல் கூழ்வத்தல், வடாகம் போடுவதுண்டு. அரிசி மாவைக் காய்ச்சி அதனுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் அரைத்து சேர்த்து கூழ் காய்ச்சுவார்கள். அதை இரண்டு வகையில் தயாரிப்பதுண்டு.  கெட்டியான கூழை  முறுக்கு பிழியும் குழாயில் பிழிந்து காய வைத்து எடுத்துக் கொள்வார்கள். அதேபோல் சற்று இளகிய நிலையில் உள்ள கூழை ஸ்பூனிலில் எடுத்து வட்டவட்டமாக சேலையில்  விட்டு காயவைப்பார்கள். பின்னர் அவற்றை  சேலையில் இருந்து பிரித்து எடுத்து மேலும் காய வைத்து எடுத்துக் கொள்வார்கள்.  இந்த கூழ் வத்தலை எண்ணெய்யில் பொறித்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வடகம் செய்வது எப்படியென்றால்... வெங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கி,  உரலில் போட்டு ஒன்றுரெண்டாக அரைத்து, உப்பு கலந்து உருண்டையாக செய்து வெயிலில் ஒரு வாரம் காயவைக்க வேண்டும். பின்னர் எண்ணெய்யில் பொறித்து மோர் சாதத்துடனோ, தயிர் சாதத்துடனோ சாப்பிடுவார்கள். அப்பளத்தைப் பொறுத்தவரை கல்லிடைக்குறிச்சியில் இருந்து வாங்கி வருவதுண்டு.
கிராமங்களில் அடிக்கடி ராகியில் களி செய்வார்கள். களியுடன் நல்லெண்ணெய் கலந்து உருண்டையாக நன்றாக உருட்டுவார்கள்.  களியுடன் கருப்பட்டியையும் ஒரு கடி கடித்துக் கொண்டு சாப்பிடும்போது  அவ்வளவு சுவையாக இருக்கும்.
காபிக்கொட்டையை பக்குவமாக வறுத்து அரவை செய்து வாங்கிய காபி பொடியில் டிகாஷன் போட்டு காபி அருந்துவதுண்டு.  டிபன் வகைகளுக்கு தேங்காய் சட்னி, கெட்டி காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி என 3 வகை இருக்கும். 
இந்த காரச் சட்னியைப் பற்றி சொல்லும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது...
பிரபல நாடாளுமன்றவாதியான என்.ஜி.ரங்கா, சுதந்திரா கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரஸுக்கு வந்தார். மூத்த தலைவர். அவர் எங்கள் வீட்டுக்கு இரண்டு முறை வந்துள்ளார். அப்போது இட்லியுடன்  இந்த காரச் சட்னியை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யுடன்  ருசித்துச் சாப்பிட்டுவிட்டு,  இந்த சட்னியை எப்படி தயார் செய்கிறீர்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அந்த அளவுக்கு அது பிரபலம்.
.....இப்படியெல்லாம் ஆறு, குளம், வயல், தோட்டம், துரவு, களத்துமேடு என கிராமச் சூழலில் பின்னிப் பிணைந்து, கள்ளங்கபடமில்லாத பாமர மக்களோடு பழகி, விதவிதமான கிராமத்து உணவுகளை ருசித்து வாழ்ந்த காலங்களை   நினைத்துப் பார்க்கும்போது, நெஞ்சம் கனக்கிறது.
இன்றைக்கு நகர வாழ்க்கையில் பரபரப்பாக நாள்தோறும்  ஓடிக் கொண்டேயிருக்கிறோம். காலச் சூழலுக்கு ஏற்ப நம்மையும் மாற்றிக் கொண்டு வாழப் பழகி விட்டோம். ஆயிரம் வசதிகள், வாய்ப்புகள் இருந்தபோதும், அந்த இனிமையான கிராம வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.
(தொடர்வோம்...)

WhatsApp Image 2025-03-22 at 11.55.31 AM (2).jpegWhatsApp Image 2025-03-22 at 11.55.31 AM (1).jpegWhatsApp Image 2025-03-22 at 11.55.32 AM.jpegWhatsApp Image 2025-03-22 at 11.55.30 AM.jpegWhatsApp Image 2025-03-22 at 12.08.35 PM.jpeg

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*...  ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...