Showing posts with label river linking Tamilnadu. Show all posts
Showing posts with label river linking Tamilnadu. Show all posts

Saturday, August 29, 2015

தொய்வில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்.



திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி –கருமேனியாறு - நம்பியாறு இணைப்பின் மூலம் 2.765டி.எம்.சி நீர், நான்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் 42,012.86ஏக்கர் புதிய பாசனப்பரப்பு உட்பட, 56,931.84ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும்.

மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதியும், நிலத்தடி நீரும் உயர்வதால் ஏறக்குறைய 50கிராமங்களுக்குமேல் பயன்பெறும். இத்திட்டத்திற்காக 369கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான செலவீனம் மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாகும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பாராமுகத்தினால் இந்த நதிநீர் இணைப்பு தாமதமாகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2015.

#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

#தமிழகநதிகள்_இணைப்புத்திட்டம் - #RiverlinkinginTamilNadu.


see also : http://ksr1956blog.blogspot.in/2015/07/river-linking.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html


http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html

Tuesday, July 14, 2015

டெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் - River Linking.





நேற்றைக்கு (13-07-2015)  நதி நீர் இணைப்பு குறித்து
ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த  எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது.

 நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

எனது வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தை இரண்டு முறையும், பா.ஜ.க நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்து இதுகுறித்தான உச்சநீதிமன்ற ஆணையை நி|றைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.

இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும்  மத்திய அரசு  நீட்டிக்கவேண்டும்.

தமிழகத் நதிநீர்த்திட்டங்கள் நிலுவை யிலிருந்தாலும்  கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதும், கேரளாவின் அச்சங்கோவில் பம்பை நதியின் 25டி.எம்.சி நீரை தமிழக வைப்பாற்றோரு இணைப்பது போன்ற தமிழகத்தின் திட்டங்களை மத்திய அரசு கொள்ள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், அதுகுறித்தான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லை என்பது மனநிறைவைத் தரவில்லை.

தமிழக நதிநீர்த்திட்டங்கள் :  தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்,  காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்
தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம் குறித்த முழுமையான பதிவை ஏற்கனவே இத்தளத்தில் பதிந்துள்ளேன்.

இதனால்  தமிழகத்தில் பாயும் பெண்ணையாறு (சாத்தனூர் அணை) பாலாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்பு; காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்பு; அத்திக்கடவு- அவினாசி வெள்ளக்கால்வாய்த் திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டங்களை வகுத்திருந்தாலும் உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிலிருந்து கிடைக்காமல் தொய்வில் உள்ளது.

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி இணைப்புத் திட்டம்
 நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு நிதியில் கட்டப்பட்ட கன்னியாகுமரி நெய்யாறு அணை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் நீர்வரத்து, உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி எனப் பல நீர் நிலைப் பிரச்சனைகள் கேரளாவோடு உள்ளது.

அதேபோல கர்நாடகத்தோடு, காவேரி ஒகேனக்கல், தென்பெண்ணையாறு. ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏறி போன்ற நீர்நிலைப் பிரச்சனைகளோடு ஒரு தீர்வு எட்டாமல் ஆண்டுகணக்கில் பிரச்சனைகளாகவே நிற்கின்றன. இந்த நதிநீர் இணைப்பைக் கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்படும்.

ராகுல் காந்தியினுடைய விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் அரசு நதிநீர் இணைப்பை கிடப்பில் போட்டது.  பாட்டி இந்திராகாந்தி ஆதரித்த திட்டத்தை பேரன் ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை.  வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது அமைக்கப்பட்ட சுரேஷ் பிரபு குழுவின் அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்திருந்தால் இத்திட்டங்களுக்கு இப்போது அடிக்கல் நாட்டி இருக்கலாம். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் அந்தக் குழுவின் காலத்தை நீட்டித்துத் தரவில்லை என்பது கவலைக்குரிய செய்தி.  என் வழக்கு நிலுவையிலிருந்தபோது இந்த குழுக்களின் காலத்தை நீட்டிக்கவேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

சுற்றுச் சூழலையும் கவனத்தில் கொண்டு, உபரி நீரை வீணடிக்காமல் சமன் செய்து வறட்சியினால் பாதிக்கப்படும் தீபகற்ப இந்தியாவின் பிறபகுதிகளுக்கு வழங்குவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும், ஆப்ரிக்கா போன்ற நாடுகள் நதிநீர் இணைப்பை வெற்றிகரமாக செய்துள்ளனர்.  அதன் அடிப்படையில் இந்தியாவிலும் நதிநீர் இணைப்பை மேற்கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது. நதிநீர் இணைப்புக்கு கேரளா, கர்நாடகா, ஒரிசா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மகராஷ்ட்டிரா இதில் விருப்பப்படாமல் மௌனம் சாதிக்கிறது.

பிரதமராக தேவக்கௌடா இருந்தபோது, நான் அவரைச் சந்தித்து நதிநீர் இணைப்பை பற்றி பேச்செடுத்ததுமே “ அதெல்லாம் சாத்தியமில்லை” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.  பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இப்படியான மனப்போக்கு இருந்தால் நாடு எப்படி முன்னேற்றமடையும் .

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மன்மோகன்சிங்கைச் இது குறித்து சந்திக்க நேரம் கேட்ட பொழுது,  சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்திக்க பிரதமர் அலுவலகம்   கேட்டுக் கொண்டது.  ஹரிஷ் ரவுத்தை இரண்டு முறை சந்தித்தும், ராகுல்காந்திக்காக நதிநீர் இணைப்பு குறித்து தெளிவாகப் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.

மோடி அரசின் நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்தபின் இதுகுறித்து ஆராய மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஐந்தாவது கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும் வேகமாகவும் இல்லாமல் உள்ளது.

மேலும், தென்னிந்திய நதிகளின் இணைப்பைக் குறித்து தீவிரம் காட்டாமல் , வட மாநிலங்களின் நதிகளான கேன் - பேட்வா நதிகள் இணைப்பதில் முனைப்புகாட்டுகின்றன. இதனால்  மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் ராஜஸ்தான் வரை பயன்பெறும்.



தார் பாலைவனத்தில் உள்ள ராஜஸ்தானுக்கே பக்கத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதிநீரைத் திருப்பும் போது. கேரளாவில் வீணாகக் கடலில் சென்று கலக்கும் அதிகப்படியான நீரை தமிழகத்துக்குத் திருப்புவதில் மட்டும் ஏன் சண்டித்தனம் என்று தெரியவில்லை.

மத்திய அரசு 1975லிருந்து  கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட, கேரள உபரி நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டுமென்ற விவாதம் எழுத்துகளில் உள்ளதே தவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.  11வது ஐந்தாண்டு திட்டத்தில் 22.6மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசான வசதி செய்யக்கூடிய அளவில் உபரி நீர் பயன்படுத்தப் படும் என்று திட்டமிட்டும் இன்றுவரை அது கொள்கையளவில் மட்டுமே உள்ளது.

நதிநீர் இணைப்பு என்பதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்ற உணர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2015.


Related Posts 



http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/river-linking-and-water-resources.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

Monday, May 4, 2015

தமிழக நதிநீர் பிரச்சனைகளும், நதிநீர் இணைப்பு பற்றி சில புரிதல்கள் வேண்டும். நவலவாலா குழு. River Linking and Water resources issues of Tamil Nadu - BN Navalawala Task Force




தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும்.

இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.

தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள முதல்வரான திரு.சங்கரும் இந்த அணையைத் திறக்கும் போது, “கேரள மக்களையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது, இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைதான் இருக்கின்றது, அதையும் மீறி நம்முடைய சகோதர பாசம் என்றும் அன்போடு நிலைத்திருக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த நெய்யாற்றின் இடதுகால் வலதுகால் பாசன வசதிகளை கேரளாவும் தமிழ்நாடும் உரிமையோடு  நாமிரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்வோம் என்று பேசிய பேச்சு இன்றைக்கு அர்த்தமில்லாமலும், எதார்த்தமில்லாமலும் போய்விட்டது.

சிலர் புரிதல் இல்லாமலேயே செண்பகத்தோப்பு போன்ற அணைகள் கட்டினாலே முழுமையாக தண்ணீர்வரும் என்று சொல்கின்றனர். செண்பகத்தோப்பு அணை 1989ல் தி.மு.க ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று தி.மு.கவிலிருந்த திரு.வை.கோ, அன்றைய நெல்லைமாவட்டச் செயலாளர் டி.ஏ.கே. லக்குமணன்,  அமைச்சர் தங்கவேலு மற்றும் நானும் மலையின் மேல் சென்று அந்த இடத்தையெல்லாம் ஆய்வு செய்து அணையும் கட்டப்பட்டது.

கட்டப்பட்ட அணையில் இறுதிப்பணி முடிவு பெறுவதற்குள் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992-1993 காலகட்டங்களில் அந்த அணையின் கட்டப்பட்ட பகுதிகளை கேரளா அரசாங்கம் இடித்துத் தள்ளியது. இந்த விவகாரம் அன்றைக்கு  எந்தப் பத்திரிகையிலும் செய்தியாக வரவில்லை. அப்போது தொலைதொடர்பு ஊடகங்களெல்லாம் கிடையாது.

செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் தான் தண்ணீர் வரத்து வருகின்றது,  அணை நிரம்பி வழிகின்றது. மற்றகாலங்களில் அதிகமாக தண்ணீர் நிரம்புவது  கிடையாது.

அதேபோல தான் நெல்லைமாவட்டத்தின் உள்ளாறு, செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை கட்டினால் மட்டும் போதாது. கேரளாவில் உள்ள நீர் வரத்தும் வந்தால் தான் இந்த அணைகளால் முழுமையாகப் பயன் பெற முடியும்.

ஆனால்,  மேலே குறிப்பிட்ட நெய்யாறு, நெல்லைமாவட்டத்தின்
உள்ளாறு, அடவிநயினார் ,  செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை, முல்லைப்பெரியார், ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு -புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி ஆகிய நீராதாரப் பிரச்சனைகளில் கேரளா தமிழகத்தோடு ஒத்துப் போக மறுக்கின்றது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள்  காவிரி, ஒகேனக்கல், பாலாறு, பெண்ணாறு பொன்னையாறு பிரச்சனைகளில் நமக்கு ஆதரவாக இல்லை.
இந்த நிலையில் செண்பகத்தோப்பு, உள்ளாறு அணைகள்  கட்டிமுடிக்கப்பட்டாலும் நீர் நிரம்பவேண்டியது அவசியம் . அதற்கு கேரளம் ஒத்துக் கொண்டு தண்ணீர் வரத்தை தடைசெய்யக்கூடாது.

1983லிருந்து நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்ற எனது
பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கடமை என்று பார்க்காமல் அவசியம், அவசரமாக நாட்டின் நலனைக் கருதி நதிநீர் இணைப்பு வேண்டும் என்பதைப் புரிதலோடு நடவடிக்கை எடுக்கவேண்டும், அதற்கான குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்று சொல்லியும் மன்மோகன்சிங் அரசு 2012பிப்பிரவரியில் அளித்த தீர்ப்பைக்கூட நடைமுறைக்குக் கொண்டு வராமல்இருந்தது.


 நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவுத்தை சந்தித்துப் பேசி ,
“நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப் போகிறேன்” என்ற பிறகுதான் மன்மோகன் சிங் அரசு ஒப்புக்கு குழு ஒன்றை அமைத்தது.  அந்தக் குழுவும் செயல்படாமல் இருந்தது.

கடந்த வருடம் பா.ஜ.க அரசு மோடி தலைமையில் அமைந்தபின்
திரும்பவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்த பின் தான் பி.என் நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை செய்திகளாக, விளம்பரமாக வரவில்லை என்றாலும் எதோ ஒன்றைச் சாதித்தோம் என்ற மனதிருப்தி. தற்போது நதிநீர் இணைப்புப் பணிகளை முழுமூச்சாக இந்தக் குழு கவனிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த குழுவின் 80% பணிகள் முடிவுக்கு வந்து அது நிறைவு பெறாமலே காங்கிரஸ் அரசு முடக்கிவிட்டது. இதையெல்லாம் எனது கடந்த நதிநீர் இணைப்பு பற்றிய பதிவில் விரிவாகச் சொல்லியிருந்தேன்.

** நதிநீர் இணைப்பு குறித்து விரிவான பதிவுகள்.

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html


செண்பகத் தோப்பு அணையை கட்டிவிட்டால் மட்டும் போதாது.
அதற்கு நீர்வரத்து வரும் வகையில், அச்சன்கோவில் -பம்பை-வைப்பார் இணைப்பும்  கேரளாவில் மேற்குநோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் தான் இந்த அணைகள் கட்டினாலும் நீர் வரத்து வந்து அதனால் பாசன வசதி கிடைக்கும் என்பது புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும்.

நீர்வரத்து இல்லாமல்  அணைகளைக் கட்டி என்ன பயன். இதுகுறித்து
பி.என் நவலவாலா குழுவுக்கு தங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யவேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.

இன்னொரு வேதனையான விசயம் என்றால் இந்த நவலவாலா குழுவின் முழுப்பயனும் தமிழகத்துக்குத்தான் வருகின்றது. இந்தக்குழுவை ஒடிசா, கேரளா, கர்நாடகா போன்ற அரசுகள் எதிர்க்கின்றது.  ஆனால் இந்தக் குழுவைப் பற்றி எந்த செய்தியும் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை என்பது கொடுமையான விஷயமாகும். தினமணி மற்றும் ஆங்கில இந்து மற்றும்  ஏட்டில் 7வது அல்லது 8வது  பக்கத்தில் மட்டும் தான் செய்தியாக வந்தது.



நடிகை திரிஷாவுக்குத் திருமணம் நடக்குமா என்பதைப் பெரிய செய்தியாகக் வெளியிடுகின்றார்கள். தமிழ்நாட்டின் நலன் கவனிக்கப்படவேண்டிய செய்தியில் அக்கறையில்லாமல் பத்திரிகைகள் இருப்பது வெட்கக்கேடான அவமானமான விஷயமாகும்.  குறைந்தபட்சம் இந்தப் பதிவைப் படித்தவர்களாவது தங்களுடைய நண்பர்களிடம் பகிர வேண்டுகிறேன்.

பி.என். நவலவாலா  குழுவுவிடம் பதிவு செய்யவேண்டியவை
1.  அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்.
2.   கங்கை காவேரி வைகை தாமிரபரணி நெய்யாற்றோடு இணைத்து கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயன்பெறும்.
3.   கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பையை தமிழக வைப்பாற்றோரு இணைக்கவேண்டும் போன்ற முக்கிய பிரச்சனைகளைக் குறித்து இந்தக் குழுவிடம் நிறைவேற்றப்படவேண்டுமென்று மனுக்கள் அனுப்ப வேண்டும் .

இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் தான் நீர்வரத்து வரும் என்ற புரிதலோடு நாம் கடமையாற்ற வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-05-2015.











Wednesday, April 15, 2015

நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நதிநீர் பிரச்சனைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு- River Linking Questions and Supreme Court Order.








மத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை
விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில்
சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது.

1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை  ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் என பொதுநல வழக்காகத் தொடுத்தேன். இதுகுறித்து  உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த பொதுநல வழக்கிற்கு  30ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 27-02-2012 அன்று தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் மத்தியஅரசு நதி நீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும். ஒருபக்கத்தில் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையை சரி செய்ய இது உதவுவதோடு இதுஒரு முக்கியப்பிரச்சனை. இதைப்பற்றி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, மற்றும் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார் அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது.

சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் அப்போது இருந்ததால், உடனே இந்தத் தீர்ப்பு பற்றி  முழுமையாக அறியமுடியவில்லை. 2012 மார்ச் மாத இறுதியில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கவேலு அவர்களும் மன்மோகன்சிங் அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ரவுத்தை சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், இது குறித்து குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம்.



ஆனால் அன்றைய மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. திரும்பவும் அக்டோபர் மாதம் அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்தித்து மனுகொடுத்தும் நீங்கள் அதை பரிசீலிக்கவில்லை.

உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன் என்று குறிப்பிட்டவுடன், 02-11-2012ல், உத்தரவு எண் : BM/683-707 என்ற உத்தரவின் மூலம்  ஒரு குழுவை அமைத்தார்கள். அந்தக்குழு ஒப்புக்காக நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வதற்காக நியமிக்கப்பட்டது. ஆனாலும் அந்தக்குழுவின் உத்தரவை முறைப்படி சரியாக வெளியிடவில்லை.

திரும்பவும் இதைக் குறித்து உச்சநீதிமன்றத்தின்  கவனத்திற்கு சென்ற பின்தான் ஒரு வருடத்திற்கு மேலாக, அதாவது 15மாதத்திற்கு பிறகுதான் முறையான உத்தரவும் வெளியிடப்பட்டது.

ஏனெனில், அன்றைய மன்மோகன்சிங் அரசு இந்திரா காந்தி விரும்பிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை  ராகுல் விரும்பவில்லை என்ற காரணத்தினால் கிடப்பில் போட்டது. இதற்கிடையில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொழுது ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, இன்றைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீரிணைப்பு குறித்தான சாத்தியங்களை அறிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு 80சதவிகிதப் பணிகளை முடித்து இதுபற்றிய அறிக்கையை இறுதிப்படுத்தும் நேரத்தில் மன்மோகன்சிங்கின் யு.பி.,ஏ முதல் அரசு 2004ம் ஆண்டு பதவியேற்றது.

அப்போது, சுரேஷ் பிரபு குழுவின் காலம் முடியும் தருவாயில் இருக்கும் பட்சத்தில் அந்தக்குழுவுக்கு ஆறுமாத கால நீட்டிப்புத் தந்திருந்தால் அறிக்கையை தாக்கல் செய்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்டு உழைத்த அறிக்கையின் பயன் விரயமாகிவிட்டது.

இது குறித்து, உடனே அப்போது உச்சநீதிமன்றத்தில் என் வழக்கின் மூலமாக கவனத்திற்கு கொண்டு வந்தேன். அன்றைக்கு அரசு வழக்கறிஞர் மன்மோகன்சிங்அரசுக்கு இதில் அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றது. குழுவின் காலத்தையும் நீட்டிப்போம் என்று சொன்ன உறுதிமொழியை மத்திய சர்கார் காப்பாற்றாமல் கிடப்பில் போட்டது.

காங்கிரஸ் அரசு பத்தாண்டு காலமும் நதிநீர் இணைப்பு என்பது
ஒரு ஒவ்வாமையாகக் கருதியது. இந்நிலையில் மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தபோது, நாடாளுமன்றத்தின் தேர்தல் 2014ல் நடந்தது.

2014ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவியேற்றபின்,
24-07-2014அன்று இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து நானும் தங்கவேலுவும்,  ஹரீஷ் ரவுத்திடம் அளித்த மனுவைப் போன்றே அமைச்சர் உமாபாரதியிடமும் கோரிக்கை மனுக்களையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தோம்.



அவற்றைப் பெற்றுக் கொண்ட உமாபாரதி “ இன்றைக்கு இதை அமைச்சரவையில் பேசினோம், இது எங்கள் வாஜ்பாயின் கனவுத் திட்டம், உறுதியாக நிறைவேற்றுவோம்” எனக்கூறினார்.
உங்களின் 30ஆண்டுகால வழக்குப் பணியும், உச்சநீதிமன்றத்தில் நீங்கள் பெற்ற உத்தரவும் தான் எங்களுக்கு இந்தப்பணியை எடுத்து செய்ய அவசியப்படுத்துகிறது என்று சொல்லி என்னை இதுகுறித்து வாழ்த்தவும் செய்தார்.

குடிநீர் வினியோகம், 3.5கோடி ஏக்கர் நிலங்கள் விவசாயம், உள்நாட்டு நீர் போக்குவரத்து, 34,000மெகா வாட் நீர்மின்சார உற்பத்தி, உள்நாட்டு மீன்வளப் பெருக்கம் அதுமட்டுமில்லாமல் மண்ணில் வெப்பத்தை தடுக்கும் ஈரப்பதம் என்பதெல்லாம் நதி நீர் இணைப்பால் ஏற்படும் பயன்கள்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்டு இந்திராகாந்தி, மொரார்ஜி ஆகிய பிரதமர்கள் விரும்பிய திட்டம். இவ்வாறான திட்டத்திற்கு நிறைவேற்ற இவ்வளவு காலம் சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  நதிகள் இணைப்புத்திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கேன், பேத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதனால் கேன் நதியின் உபரி நீர் பேத்வா நதியுடன் இணைக்கப்பட்டு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்கள் பயனடையும்.

அதேபோன்று தமிழகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும் வகையில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டங்கள் கிட்டத்தட்ட 600கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்டு நான்குநேரிவரை கால்வாய்கள் வெட்டப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி, காவிரி, அக்னியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டமும், தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டமும் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.

நதிநீர் இணைப்பு சாத்தியப்படுத்தப் பட்டால்தான் மற்ற அணைத் திட்டங்களையும் சரியாக செயல்படுத்த முடியும்.
ஒரு உதாரணத்திற்கு செண்பகத்தோப்பு அணைத்திட்டம் கட்டி இடிக்கப்பட்டு, பல போராட்டங்கள் நடத்தியும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.
நதிநீர் இணைத்தால் தான் அந்த அணைக்கும் தண்ணீர் வரும்.

குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு இணைத்தால் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணை வரை நீர்வரத்து ஏற்படும்.
அடுத்தகட்டமாக, மேற்கு நோக்கிப்பாயும் கேரள நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் போது ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா என்ற அணைப்பகுதிகளுக்கும் நீர்வரத்து வரும். அதுமட்டுமில்லாமல் குமரிமாவட்டத்திலும் மூடப்பட்டுள்ள நெய்யாறு, மற்றும் முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பம்பாறு ஆகிய நீர்ப்பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

எனவே அணைகளைச் சீர்செய்யவேண்டும், கட்டவேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் அச்சன்கோவில்-பம்பை –வைப்பாற்றோடு இணைத்து மேற்கு நோக்கிப் பாயும் கேரள நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்பினால் தான் நீர்வரத்துகளும் அணைகளுக்கு வரும் என்பதை நதிநீர் ஆர்வலர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் இன்றைக்கு பி.என்.நவலவாலா தலைமையில், குழுவை மறுசீரமைத்து ஆய்வுகளைத் தொடங்க உள்ளன. ஏற்கனவே சுரேஷ் பிரபு ஆய்வு செய்த அறிக்கைகளையோடு இந்தக்குழுவும் ஆய்வு செய்து பணிகளை முடித்தால் நதிநீர் இணைப்பின் முதல்கட்டம் நிறைவு பெறும்.

வெற்றுப்பேச்சாக இல்லாமல், இவை நடைமுறைக்கு வரவேண்டும். இதில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கின்றனர். அதை மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நீர் என்பது அடிப்படை ஆதாரம்.

வட இந்தியாவிலும் வடகிழக்கிலும் வெள்ளங்கள் ஓடுகின்றன. தக்காணபீடபூமியும் தென்னிந்தியாவும் வறட்சியில் வாடுகின்றன. மகாகவி பாரதி குறிப்பிட்டவாறு மையத்து நாடுகளைப் பயிர் செய்யும் வகையில் நதிநீர் இணைப்பை விரைவு படுத்தவேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நதிநீர் இணைப்பு வேண்டுமென்று இந்த வழக்கை நான் தாக்கல் செய்தபோது, என்னை பரிகாசம் செய்த நண்பர்களும் உண்டு. ஃபீஸ் வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்வதை விட்டுவிட்டு நதிநீர் இணைப்பு, இமயமலையைக் கொண்டுவா என்று வழக்குத்தொடுப்பதா என்று என்னைக் கிண்டல் செய்த மூத்த வழக்கறிஞர்கள் ஒருசிலர் இப்போது இல்லை.

ஏகடியம் எல்லாம் பொருட்படுத்தாமல் முப்பது ஆண்டுகாலம் இந்த வழக்கை நடத்தி டெல்லிக்கும் சென்னைக்கும் விமானத்தில் அலைந்திருக்கிறேன். திடீரென இரவில் டெல்லியிலிருந்து நாளை வழக்கு வருகிறது உடனே வாருங்கள் என்பார்கள் நண்பர்கள். அதிகாலையில் டெல்லிக்கு கிளம்பவேண்டும். அப்பொழுதெல்லாம் இவ்வளவு விமான வசதிகள் கிடையாது. காலையிலும் மாலையிலும் தான் விமான சேவைகளும் உண்டு.

டெல்லிக்கு விமானத்தில் சென்றவுடன், துணிகளை மாற்றிக்கொண்டு வழக்கறிஞர் கோட்டோடு உச்சநீதிமன்றத்திற்கு ஓடவேண்டும். இப்படியெல்லாம் பட்டபாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதன்மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டதென்றால் 1975ல் ஒன்றுபட்ட நெல்லைமாவட்டமாக எங்கள் மாவட்டம் இருந்தபோது வறட்சி, விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை, அரிசி கிடைக்காமல் மக்காச் சோளத்தை மக்கள் உண்டனர். அன்றைக்கு கவர்னராக இருந்த மோகன்லால் சுகாடியாவோடு பழ.நெடுமாறனும் நானும் நெல்லையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிப் பயணித்தோம்.

அன்றைக்குத்தான் , கேரளாவில் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது அதைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பலாம் என்று ஒரு அறிக்கையை மத்திய அரசு   தாக்கல் செய்தது. அப்போது சுகாடியா ஏன் கேரளா தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்கொடுக்கக் கூடாது என்று சொன்னதால் ஆர்வமேற்பட்டு தரவுகளைச் சேகரித்தேன். அதன்விளைவே இந்த வழக்கு.

நதிநீர் இணைப்புத் திட்டம் பற்றி மத்திய அரசின் குழு நியமிக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்சனையை எடுத்தோம், நம்மால் முடிந்த அளவு முடித்தோம் என்ற இதய சுத்தியோடு உழைத்த உழைப்பு மனத்தளவில் மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகின்றது.

நதிநீர் இணைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்……

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-04-2015.

Thursday, March 26, 2015

தமிழக நதிகள் இணைப்புத்திட்டம் - River linking in Tamil Nadu.


______________________________________________________

திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட, தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த 369கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளும் நடந்தவண்ணம் இருந்தன.
திடீரென நான்குநேரிவரை நெருங்கிய இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 5166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இவையாவும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 253கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு போதுமான நிதியும் இல்லை. மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் கண்டும்காணாமல் இருக்கின்றது. இத்திட்டம் கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.

#River_linking_in_Tamilnadu

#KSR_Posts

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...