Showing posts with label indian ocean. Show all posts
Showing posts with label indian ocean. Show all posts

Saturday, August 6, 2022

சீனாவின் உளவுத்துறைக்கப்பல் China dual-use spy ship,

*சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் அம்பன் தோட்டாவில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்…*
*இது குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யாராவது எழுப்பினார்கள் ? என தெரியவில்லை*.

*Sri Lanka seeks Chinese ship delay after Indian pressure*  *Uncertainty of China ship*                    
————————————
*The Yuan Wang 5 is en route from the Chinese port of Jiangyin and due in the Chinese-run Sri Lankan port of Hambantota on Thursday, according to analytics website MarineTraffic*. 
*It is described as a research and survey vessel, but according to an Indian media report, it is a dual-use spy ship, employed for space and satellite tracking and with specific usage in intercontinental ballistic missile launches*.


#ksrpost
6-8-2022.


Saturday, March 7, 2015

சீனாவும்- இந்தியப்பெருங்கடலும் -2 . (China- Indian Ocean –Part II)




பசிபிக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்திலும் சீனா தன்னுடைய ஆளுமையைக் காட்டி உலகப்பெரும் வல்லரசாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு இலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷேவும் துணைபோனார்.

சீனாவுக்கு இப்போது பெருங்கடல்கள் மீது பேராசையும், அதன் வழியாக தன்னுடைய வாணிபத் தடங்களை உருவாக்கி, தங்களுடைய மற்ற வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்துமகாசமுத்திரத்தில், கடலுக்கடியில் உள்ள கனிமவளங்களைப் பற்றி ஆராய இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் தருணத்தில் சீனாவும், எரிபொருட்களின் மூலக்கூறு படிமங்கள் இந்துமகாக்கடலில் கிடைப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற விரும்புகின்றது. அதற்கேற்ப இலங்கையும் சீனாவுக்கு அனைத்து வகையிலும், உதவியாகவும் இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் துருப்புச்சீட்டாகவும் இருந்தது. இந்த இரண்டுநாடுகளும் ஒன்றுக்கொன்று உதவ கள்ளத்தனமாகக் கணக்குப் போட்டுக்கொண்டு உதவிகளைப் பெற்று வந்தனர்.

ஆனால் இன்றைக்கு (06-03-2015) இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனா, சீனாவுடன் செய்துகொண்ட கொழும்பு துறைமுகத்தின் கட்டுமான ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது ஒரு நல்ல செய்திதான்.

16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டின் துவக்கம் வரை, ஐரோப்பிய, அமெரிக்க ஆதிக்கத்தில் இந்துமகாசமுத்திரம் இருந்ததை மறுக்கமுடியாது. இந்துமகாக்கடலில் தொடர்ச்சியான அரபிக்கடலும், வங்கக்கடலும் முறையாக பாகிஸ்தான் மியான்மர் ஆளுமையில் ஒருபகுதியாக இருக்கின்றது. இந்த இருநாடுகளும் சீனாவுக்கு அனுசரணையாக உள்ளதால் கடல்பிராந்தியத்தில் சீனா நிகழ்த்த நினைக்கின்ற எண்ணங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

சீனா கடந்த காலத்தில் தைவானுடனும், வியட்நாம் பிரச்சனையிலும், கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, தனக்கு கடல்வழி மார்க்கத்தில் ஆதிக்கம் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் உள்நாட்டுப்பிரச்சனைகளிலும்,  தற்போது ஹாங்காங்கில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடக்குவதிலும் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டு அங்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது. புவியரசியலில் தெற்காசிய பிரதேசங்களில் நாளுக்குநாள் சீனா எடுக்கின்ற இதுமாதிரியான நடவடிக்கைகள் கவலையளிக்கின்ற வகையில் உள்ளது.

இன்றைக்கு (06-03-2015) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கொழும்பு சென்றுள்ளார். அவர், கடந்தகாலத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணையையும், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கும், வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இராணுவத்தை திரும்பப்பெறுவதற்கும் , தமிழர்களின் விவசாய நிலங்களைத் திரும்பக் கொடுப்பதற்கும், மாகாண கவுன்சிலுக்கு காவல்துறை, நிலவருவாய், மீன்பிடித்தொழில் அதிகாரங்களை வழங்குதல் பற்றியும், சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தையும் பற்றியும் பேசுவாரா என்று தெரியவில்லை.

அடிப்படையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளில் இவைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் கொழும்பில் இருந்துவரும் செய்திகளின்படி பார்த்தால், பிரதமர் மோடி இலங்கைப் பயணம் பற்றியும்,  சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தைப்பற்றி மட்டும்தான் பேசுவார்கள் என்று தெரிகிறது.

1954ல் பஞ்சசீலத்தை நேருகாலத்தில் சீனா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து வெறும் ஒப்பந்தமாகத்தான் உள்ளது. எந்த இணக்கமான நிலையும் இதுகுறித்து ஏற்படவில்லை. பஞ்சசீலம் கையெழுத்தான உடனேயே திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அங்கிருந்து தலாய்லாமா அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு ஓடிவரவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.

சீனாவின் அடவாவடி அருணாச்சலப் பிரதேச எல்லைத் தலையீடு வரை இன்றும் தொடர்கின்றது. அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து இந்தியப்பெருங்கடலில் ரோந்து வந்து கொண்டிருப்பது கண்காணிக்கப் படவேண்டியது. சீனாவின் ட்ராகன் பசுபிக் கடலில் ஆட்டம் போட்டுவிட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை துறைமுகம் வரைக்கும் பக்கத்தில் வந்துவிட்டது. மன்னார் வளைகுடா கடந்து இராமேஸ்வரத்தை நெருங்க அதிக தூரமில்லை. ஏற்கனவே கடந்த 24-02-2015 பதிவில் திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும், சீனாவும் குத்தகைக்குப் பெற முயற்சி எடுத்த்தை குறிப்பிட்டிருந்தேன்.

மைத்ரிபால் சிரிசேனா இன்றைக்கு கொழும்பு துறைமுகம் விரிவாக்க கட்டுமானத்திற்காக சீனாவோடு செய்துகொண்ட ஒப்பந்தந்தை இரத்து செய்ததாக அறிவித்திருந்தாலும், மற்ற ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருமா?, அவற்றை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெருமா? என்ற கேள்வியெல்லாம் நம் முன்னே இருக்கின்றன.

இந்த சூழ்நிலைகளை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு இந்துமகா சமுத்திரம் குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வையோடு இந்தியா தன் முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையோடு இருக்கின்றதோ, அதேஅளவு அக்கறையுடன் அந்நியசக்திகள் இந்தியப்பெருங்கடலில் அண்டாமல் கவனித்துக்கொள்வதும அவசரமும், அவசியமும் ஆகும். இந்தியப்பெருங்கடலில் அந்நியசக்திகள் தலைதூக்கினால், அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் அவர்களின் விரிவாக்கம் ஏற்பட்டுவிடும்.

வங்கதேசப்போரின் போது, உலகஅரங்கில் எப்படி இந்திராகாந்தி காய்களை நகர்த்தினாரோ  அம்மாதிரி வலுவாகவும், தெளிவாகவும், வலிமையோடும், இந்தியா இந்துமகாசமுத்திரப் பிரச்சனையிலும், சீனாவுடனான அருணாச்சல பிரதேச எல்லை விவகாரம், பிரம்மப்புத்திராநதி பிரச்சனை, கடல்வழி சீனாவின் எரிவாயுக்குழாய் பதிப்பு நடவடிக்கைகளிலும், சில்க்வே என்ற சீனாவின் வியாபார மார்க்க முயற்சிகள், ஆகியவற்றில் இந்தியா சீனாவை கண்காணிப்பதோடல்லாமல் அதன் ஆதிக்கத்தையும் முறியடிக்க வேண்டும்.

இந்தியப்பெருங்கடலில், கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு முனைகளில், வலுவான இராணுவ கண்காணிப்புடன், கடற்படைத்தளங்களை  அமைக்க இந்தியா முயலவேண்டும். இதுபற்றி முறையாக கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-03-2015

Tuesday, February 24, 2015

புவி அரசியலில் இந்து மகாக்கடலும் இலங்கை திரிகோணமலையும்.




ம்பது ஆண்டுகளுக்கு முன் சீனா, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தது.
அன்றைய இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தப்போக்கு நல்லதல்ல என்று இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்த எச்சரிக்கைகளின் பயத்தை உணர்ந்த பண்டாரநாயக்கா
சீனாவுக்கு திரிகோணமலையினை கையளிக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியினைத் சரியாக இன்றோடு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 24-02-1965 அன்று,தெளிவாக மக்கள் மத்தியில் வெளியிட்டார்.

அதுவரை இந்தியாவை பயமுறுத்த திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கலாம் என நினைத்த சிறிமாவோ தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்த திரிகோணமலைத் துறைமுகம் இயற்கைத்துறைமுகம் ஆகும். பாறைகள் சுற்றியிருக்க அருகருகே நிற்கும் கப்பல்கள் கூட கண்ணுக்குப் புலப்படாது. துறைமுகத்தின் செயல்பாடுகள் கருவிகள் மூலம் தான் கண்காணிக்கமுடியும். இத்தகைய பாதுகாப்புத் தன்மையாலும், திரிகோணமலைத் துறைமுகம் இந்தியாவுக்கு அருகிலே அமைந்திருப்பதாலும் ஆதிக்கசக்தி படைத்த நாடுகளுக்கு இந்த துறைமுகத்தின் மீது எப்போதும் ஒரு கண்ணுண்டு.

புவி அரசியலில் அமெரிக்காவின் கழுகுப்பார்வையும் ; சீனாவின் ட்ராகன் நெழிவதும் திரிகோணமலையினை நோக்கி என்று.வேடிக்கையாகச் சொல்வார்கள்

அதற்கேற்றார்போலவே, இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில், 1970 - 80காலகட்டத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமாக சிறிமாவோ பண்டாரநாயகா, “வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா”, “அமெரிக்க எண்ணெய்” நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளுக்காக திரிகோணமலை துறைமுகத்தை வழங்க முன்வந்தார்.

இதற்கு சற்றுகாலம் முன்பு, இந்திய பெருங்கடலில் டியூகோகர்சியா இராணுவ தளத்தை இலங்கையின் உதவியோடு அமெரிக்கா அமைத்தபோது, இந்திராகாந்தியின் எச்சரிக்கையின் விளைவாக அமெரிக்கா அங்கிருந்து தனது தளத்தை மாற்றிக்கொண்டது. வங்கதேசம் உதயமாகி இந்திராகாந்தியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த நேரம் அப்போது. சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கு நட்புறவும் இருந்தது.



இதேபோன்ற பதட்டநிலை எப்போதும் இந்தியப் பெருங்கடலில் நிலவி வருகின்றது. இதற்கு முக்கியக்காரணம் இலங்கை தான். இராஜபக்‌ஷே தயவில் சீனாவின் ஆதிக்கம் இந்துமகா சமுத்திரத்திலும் , வங்கக்கடலிலும் இன்றைக்கு வரை கோலோச்சுகின்றது. கச்சத்தீவுவரை சீனாவின் நடமாட்டம் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

சீனா தங்களுடைய உற்பத்திகளைச் சந்தைப்படுத்த ஆப்பரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமைக்கும் வணிகப் பாதையான சில்க்வே(Silk way) அமைக்கும் திட்டம் மற்றும் இந்தியபெருங்கடல், வங்கக்கடல் அடியில் எரிவாயுக்குழாய்கள் பதித்து மியான்மர் வழியாக சீனாவுக்குக் கொண்டு செல்லும் திட்டமும் அதற்கான பணிகளும் நடக்கின்றன.

இந்தியப்பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டவும், அமைதிமண்டலமாக இந்தியப்பெருங்கடல் வங்கக்கடல் பகுதிகளை பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. ஏனென்றால் கடந்தவாரம் பிரதமர் மோடி அருணாச்சலபிரதேசத்திற்குச் சென்றதற்கு சீனா கண்டணம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் மண்ணிற்கே ஒரு பிரதமர் செல்வதற்கு அண்டைநாடு கண்டணம் எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பிரம்மபுத்ரா நதியின் இடையே அணைகள் கட்டுவதும், மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதும் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் சீனா கட்டிவருகின்றது. பிரம்மபுத்திராவின் நீர்வரத்தையே சீனாவுக்கு மாற்றிவிடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது.

நில எல்லையிலே இத்தனை முரண்டுபிடிக்கும் சீனா, தனக்குச் சம்பந்தமில்லாத இந்தியப்பெருங்கடலில் கால் வைத்தால் பயங்கரமான எதிர்வினைகள் உருவாகும்.

இந்நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியப்பெருங்கடலில் என்னென்ன தாதுக்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. . கடலுக்கடியில் கிடைக்கும் துத்தநாகம், இரும்பு, கோபால்ட், நிக்கல், தங்கம், வெள்ளி என இந்தியப் பெருங்கடலினடியில் இருக்கும் தாதுக்களை கண்டறிய ஒரு ஆராய்ச்சி அடுத்துவரும் நான்காண்டுகளும் நடைபெறும் என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.


டிசம்பர் மாதம் கோவாவில் துவங்கி மொரீசியஸ் வரை முதல்கட்டமாக இந்த ஆய்வுப்பணிகள் நடைபெறும் . இது வரவேற்புக்குரியது. இதுவரை இந்தியா பெரிய ஆய்வுகளை இந்துமகா சமுத்திரத்தின் கடல்பரப்பில் நடத்தவில்லை. இந்த ஆராய்ச்சியாவது, இந்தியாவின் ஆளுமையை ஓரளவு கடல்பகுதியில் நிலைநிறுத்துமென்ற திருப்தி நமக்கு எழுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...

  #தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...