Showing posts with label Agriculture Lands Acquisition. Show all posts
Showing posts with label Agriculture Lands Acquisition. Show all posts

Tuesday, May 5, 2015

தேனி விவசாயி இன்று தற்கொலை. நிலம் கையகப்படுத்தும் மசோதா (5) - Land Acquisition Bill (5)




மோடி அரசு எப்படியும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்திலும் நான்கு விவசாய சங்கங்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏன் அவசரச்சட்டம் என்று மக்களுக்குக் காரணம் சொல்லவேண்டுமென பொதுநல வழக்குகள் தொடுத்துள்ளன.

மத்திய அரசோ, இது  விவசாயிகளுக்கு நன்மைகளும் சாதகமும் நிறைந்த  சட்டம் என்று பசப்பு வார்த்தைகள் சொன்னாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் ஆதாயமடையவே விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கவேண்டுமென்பது அதன் ஒரே குறிக்கோள்.

உச்ச நீதிமன்றமும் இதற்கு நான்குவார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது. இந்த கால அவகாசத்தின் பெயரால் விவசாயிகள் சங்கங்களின் மனுக்கள் ஒன்றும் பயனற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் தான் நேர்கின்றது.

மக்களிடமும், விவசாயிகளிடமும் கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசாங்கம் இதுவரை சரியான இழப்பீடுகளை தரவில்லை. இதுவரைக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிரச்சனையில் ஆறுகோடிக்கும் மேலான மக்கள் தங்கள் ஊர்களையும், நிலங்களையும் விடுத்து ஒன்றுமில்லாத அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள்.

அரசுகள் ஏற்கனவே  கையகப்படுத்திய நிலங்களில் மாநிலம் வாரியாக பயன்படுத்தப்படாத நிலங்கள் ஹெக்டெர் அளவில் கீழ்கண்ட படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள்  பயன்படுத்தப் படாமல் இருக்கும் போது மேலும் விளை நிலங்களைக்  கையகப்படுத்த துடிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்கள் அவையில் ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து அ.தி,மு,க ஆதரித்திருக்கிறது. ஆனாலும் மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. கட்சிவாரியாக பார்க்கும் பொழுதும் 69 கட்சிகள் ஆதரவாகவும், 27 கட்சிகள் சார்புகளற்றும் 148 கட்சிகள் எதிர்த்தும் வருகின்ற நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா ஒப்பேறாது என்றே தெரிகின்றது.

2012காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலிருந்து இந்த மசோதாவைக் கொண்டு வரவேண்டுமென்று ஆட்சிபீடத்துக்கு வருபவர்கள் தீர்மானமாக இருக்கின்றார்கள். 1894ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரங்களை அரசுக்குத் தந்துவிட்டு அதன் உரிமையாளர்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன.

ஏதோ ஒப்புக்கு இழப்பீடு தந்து நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்ற நிலை இருந்தது.  இந்த மசோதாவிலும் அதே நிலை ஆரம்பத்திலிருந்தே உள்ளது. இந்த மசோதாவில் மீள் குடியமர்த்தும் விசயத்திலும் தெளிவான பாதுகாப்பான நிலைப்பாடுகளும் கிடையாது.
நட்ட ஈட்டிலும் இனிப்பான வார்த்தைகள் தான் உள்ளதே ஒழிய செயல்பாடுகள் என்று எதுவும் இல்லை.

உலக அளவில் பெரும் நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு  எட்டாவது இடம். சீனாவுடன் ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கு. இந்தியாவைப் பொறுத்தவரை 36-லிருந்து 38 சதவிகிதம் மக்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பியுள்ளனர். 85% விவசாயிகள் இந்தியாவில் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர். இவர்களிடமிருந்துதான் நிலத்தை பறித்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்க நினைக்கிறது மத்திய அரசு.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி தனியாருக்கு கொடுக்க அவசியமும், அவசரமும்  ஏற்பட்டிந்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட அறுபது சதவிதத்தும் மேலான நிலங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் இருப்பது ஏன்? அதை என்ன செய்யப் போவதாய் உத்தேசம்.

உதாரணத்துக்கு  கோத்ரேஜ் நிறுவனம் 2800ஏக்கர் நிலத்தை மும்பையிலும், இன்போசிஸ் நிறுவனம் 1.4சதுர கி.மீ நிலத்தை பெங்களுரிலும், அதே போல பல பெரும் நிறுவனங்கள் கொல்கத்தா, டெல்லி, சென்னை, கொச்சி போன்ற பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் வெறுமனே இருக்கும் போது இன்னும் ஏன் இந்த நில ஆர்ஜித சட்டமசோதா.  அப்படி விவசாய நிலங்களைக் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் நம்முடைய வினா!

வளர்ச்சி வளர்ச்சி என்று மக்களைத் தளர்ச்சியாக்கும் நடவடிக்கையாகத்தான் இந்த நிலக் கையகப்படுத்தும் சட்டமசோதாவை நாம் பார்க்கவேண்டியுள்ளது .

ஏற்கனவே கடந்த இருபது ஆண்டுகளாக கடன் தொல்லையால் 2லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்திருக்கிறார்கள். இந்த துக்கங்களையே இன்னும் தடுத்து நிறுத்தாமல் மேலும் விவசாயிகளைப் பராரியாக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் அரசு மேற்கொண்டது, தற்போது பா.ஜ.க அரசும் அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

நிலம் கையகப்படுத்துவதற்கு ஏன் ஒட்டுமொத்தமாக மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் கொஞ்சமும் சிந்திக்க மறுப்பது ஏன்? இந்தியாவில் இதுவரை 350 இயக்கங்கள் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து களமிறங்கியுள்ளனர்.

நிலம் என்பது ஒரு விவசாயியின் உயிருக்குச் சமமானது. பயிர் செய்யும் நிலத்தை தங்கள் ஆன்மாவாக பாடுபடும் உழவன் நினைக்கின்றான். எவ்வளவோ நட்டமும் துயரமும் பிரச்சனையும் இருந்தாலும் அந்த விவசாய நிலத்தில் தன்னுடைய கால்நடைகளோடு உழைத்து, அறுவடை செய்து, அந்த மண்ணிலேயே தன் இறுதிகாலங்களில் உயிர் போகவேண்டுமென்று விரும்புகின்றார்கள்.  இயற்கை தந்த இந்த அருட்கொடையான விவசாய பூமியிலிருந்து எந்த விவசாயியையும் நம்மால் பிரித்துவிட முடியாது.

அரசுகள் பழங்குடியினரின் நிலங்களையும், ஒடுக்கப்பட்டவர்களின் நிலங்களையும் பிடிங்குவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. மத்திய அரசு இந்த சட்டத்தின் மூலம் வம்பு செய்வதை எதிர்த்து விவசாயிகள் பல போராட்டங்கள் மூலம் பாதிப்புக்குள்ளாகி, இந்தியாவில் 165 மாவட்டங்களில் 280க்கும் மேலான வன்முறைகளும், மோதல்களும் ஏற்பட்டு சட்ட ஒழுங்கும் கெட்டுப் போயிருக்கிறது.

விடுதலை பெற்ற 67 ஆண்டுகாலத்தில் நிலம் கையகப்படுத்தப் பட்ட பிரச்சனையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கோ விவசாயிகளுக்கோ கிடைக்கவேண்டிய பரிகாரங்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பறித்த நிலங்கள் வீணாக இருக்கின்றது என்பதை நாட்டின் ஆடிட்டர் ஜெனரல் வருத்தத்தோடு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இந்நிலையில் விவசாயிகளின் நிலத்தை ரியல் எஸ்டேட் தரகர் போன்று அரசுகள்  பெரும் முதலாளிகளுக்கு வாங்கித் தருவதில் முனைப்பு காட்டும் போது,  இது  மக்கள் நல அரசாங்கமா ? நடப்பது மக்களாட்சி தானா என்று கேள்வி உருவாகிறது.

மக்களுக்கு உணவளிக்கின்ற விளைநிலங்களை இப்படி பிடிங்கிக் கொடுத்துவிட்டால் உணவை எங்கிருந்து உற்பத்தி செய்வார்கள் என்பது அரசுகளின் மண்டையில் ஏறவில்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

இவ்வளவு காரணகாரியங்கள், எதிர்விளைவுகள் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காங்கிரஸ் ஆனாலும் சரி, பா.ஜ.க ஆனாலும் சரி இந்த மசோதாவை நிறைவேற்றியே தீர்வோம் என்று உடும்புப் புடி புடிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது என்றுதான் புரிபடவில்லை.

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது, தேனியில் வாழை விவசாயி அழகுவேல் தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தன்னுடைய தோட்டத்திலே அரளிக்காயைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்.  கடந்த வாரம் தான் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பருத்தி விவசாயி ராஜாரமன்  தற்கொலை செய்துகொண்டதை வருத்தத்தோடு பதிவு செய்திருந்தோம்.

தமிழகத்தில் மட்டும் இதுவரை  கோவில்பட்டி அருகேயுள்ள நெல்லைமாவட்டம் வரகனூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், சங்கரன்கோவில் அருகேயுள்ள  மேலநீலிதநல்லூர் வெள்ளப்பனேரி செந்தூர்பாண்டியன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி, ஏழை உழவன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், சிவகாசி அருகே பாண்டி,  இப்படி பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாட்டில்  கடன் தொல்லையால் தற்கொலைச் செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

மோடி அவர்களே இது தான் வளர்ச்சியா!


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-05-2015.


Monday, April 6, 2015

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் - வெங்கையா நாயுடு. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள் -6 . Land Bill, ready to face any consequences -Venkaiah Naidu. -6







நிலம் கையகப்படுத்தும்  அவசரச் சட்டத்தை முதலில் மத்திய அரசு பிறப்பித்த பொழுது, என்ன இவ்வளவு அவசரம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாமே என்று கண்டனங்கள் தெரிவித்தும், மோடி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

இதுகுறித்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திடீரென அ.தி.மு.க ஆதரவோடு நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் இதுவரை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே சட்டமாக்காத நிலையில், முதலில் பிறப்பித்த அவசரச் சட்டத்தினுடைய காலவரை முடிவடைந்தது. அதன்பின்னும், வேண்டுமென்றே பல கண்டனங்களுக்கிடையே விவசாயிகளைக் காவு கொடுக்கும் வகையில் மறுபடியும் இரண்டாவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கேலிக்குத்தாகிவிட்டது.

ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியா ஒரு துக்ளக் அணுகுமுறை என்று அனைவரும் விம்ர்சிக்கக் கூடிய வகையில் மோடி அரசு நடந்துகொண்டது. தற்போது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு எந்த விளைவுகள் வந்தாலும் நில கையகப்படுத்தும் மசோதாவைச் சட்டமாக்கிவிடுவோம் என்ற பேச்சு அதிர்ச்சியலையை தந்துள்ளது.

வெளிநாட்டு கார்ப்ரேட்  கம்பெனிகளுக்கு கூஜா தூக்க மோடி அரசு தயாராகி விட்டதின் விளைவுதான் வெங்கையா நாயுடுவின் இந்தப் பேச்சு.

நாடு விடுதலையடைந்த பின்பு, இதுபோல  நான்குமுறை  அவசரச் சட்டங்கள் மீண்டும் இரண்டாவது தடவையாகப்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.


      

1956ல் பண்டிதர் நேரு காலத்தில்  திருவாங்கூர் - கொச்சின் மாநிலத்தின் நிதிநிலை ஒதுக்கீடு குறித்தான மசோதா மற்றும்  அவசரப்பணிகள் குறித்தும் முதல் தடவையாக அவசரச் சட்டம் இரண்டாவதுமுறையாகப் பிறப்பிக்கப்பட்டது.

1987ல் இராஜீவ் காந்தி காலத்தில் தடா மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை கடத்தல் தடுப்புச் சட்டம் குறித்தும் அவசர மசோதா இரண்டாவது தடவை பிறப்பிக்கப்பட்டது.

அதைப்போலவே 1994ல் நரசிம்மராவ் காலத்தில்  மணிப்பூர் -பஞ்சாப்- புது டெல்லி மாநகராட்சி குறித்து அவசரச்சட்டம் இரண்டாம் தடவையாகப் பிறப்பிக்கப்பட்டது.

நான்காவது முறையாக  தற்போது மோடி அரசு,  நில கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற இரண்டாம் தடவை  திரும்பவும் அவசரச் சட்டத்தை  பிறப்பித்துள்ளது.

விவசாய நாடான இந்தியாவில் 60சதவித வேலை வாய்ப்பும், 60சதவித நிலப்பரப்பும் வேளாண்மையை நம்பி  இருந்தாலும் ,  அரசின் மெத்தனத்தால் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வெறும் 18சதவிகிதம்.

தவிர விவசாயிகளிடம் ஏற்கனவே கையகப் படுத்திய நிலங்களையும் அரசுகள் இன்னமும் பயன்படுத்தாமல் வைத்துள்ளது .
கோல் இந்தியா நிறுவனம் வசம் உள்ள 2லட்சம்  ஹெக்டேர் நிலத்தில் வெறும் 50,000ஹெக்டேர் நிலப்பரப்பைத் தான் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. எஞ்சிய நிலம் எந்தப் பயன்பாடும் இல்லாமல் வெறுமனே உள்ளது.

2005ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற சட்டத்தின் மூலமாக 60,374ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 576-சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டாலும், அதில் வெறும் 37சதவிகித நிலப்பரப்பு கூட முழுமையாக பயன்படுத்தாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள 63சதவிகித விவசாய நிலங்கள் பயன்படுத்தப் படாமலே உள்ளது.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32,87,260 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் நிலப்பகுதி மட்டும் 29,73,190  (மலைகள், நதிகள், நீர்நிலை பரப்புகள் நீங்கலாக) சதுர கிலோமீட்டர் ஆகும். வனப்பகுதி மட்டும்  6,77,598 சதுர கிலோமீட்டர், மீதமான  விவசாய நிலப்பகுதி வெறும் 1,79,900 சதுர கிலோமீட்டர் மட்டுமே.

இந்நிலையில் மேலும் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தாமல், ஏற்கனவே கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களையே பயன்படுத்தலாமே,

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு தொழில் வளர்ச்சி என்று பேசுவதும், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று திமிர்ப்பேச்சு பேசுவதும் இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு பொறுத்தமான  அணுகுமுறையாக இருக்காது.

இஸ்ரேல் நாடு ஒருகாலத்தில் உணவு தானியங்களுக்கு வெளிநாடுகளிடம் கையேந்தி பெரும் சோதனைகளைச் சந்தித்தது. இப்போது விவசாயத்தை முழுமையாக அந்நாடு விரிவு படுத்தியதால்  உணவு ஏற்றுமதியில் உலக அளவில்  சிறந்துவிளங்கி, பொருளாதார வளர்ச்சியையும் எட்டியுள்ளது

திரைப்படங்கள்  தொடங்கும் முன்பு காட்டப்படும் செய்திப் படங்கள் போல இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாம்  படிக்க மக்களுக்குப் பொறுமையில்லை என்றாலும், அவசியம் இதுபற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் நாமெல்லாம் இருருக்கின்றோம்.

கையகப் படுத்திய நிலங்களே பயன்படுத்தப் படாமல் இருக்க, நில ஆர்ஜிதச் சட்டத்தை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கொண்டு வந்தே தீருவோம் என்று  ஏன் இவ்வளவு அக்கறையும் அலம்பலும் மோடி கூட்டாளிகளுக்கு.

மக்களிடமிருந்து  எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று  வெங்கையா நாயுடு போன்றவர்கள்  கூச்சலிடுவது  மக்கள் நலனுக்காகவா?

உண்மைகள் உறங்குகின்றன, நியாயங்கள் நிராயுதபாணியாக உள்ளன. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள்.....


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-04-2015.


Sunday, March 29, 2015

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் - பொருளாதார நிபுணரின் திமிரான பேச்சு "Get out from Agriculture" highly condemnable speech. (விவசாயிகள் 5)

விவசாயத்தை விட்டொழித்தால் நாடுமுன்னேறும் என்று பொருளாதாரம் படித்த பிரகஸ்பதியின் பேச்சு.  - "Get out from Agriculture" It is a condemnable speech. 




காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர், பொருளாதார நிபுணர்.  நீலகண்டன் என்பவர், “விவசாயம் ஒன்றும் உயிர்நாடி அல்ல; விவசாயத்தை விட்டு விவசாயிகளே  வெளியேருங்கள், அது தான் உங்களுக்கு நல்லது” என்று பேசியுள்ளார். இந்த செய்தி இன்றைக்கு (29-03-2015) நாளிதழ்களில் வந்துள்ளது.

இவருடைய இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது. விவசாயிகளைப் புண்படுத்தும்படியாக இவர் பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தன்னுடைய இந்தப் பேச்சுக்குத் துணையாக அமெரிக்காவில் விவசாயம் நடக்கவில்லை என்றும், தொழில்கள் தான் அங்கே அதிகமாக உள்ளது என்றும், அங்கு ஒருசதவிகிதம் தான் விவசாயம் நடக்கிறது என்றும் , அதே போல சீனாவிலும் விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை என்றும்,  அங்கு விவசாயம் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால்,  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் குடும்பம் இன்றைக்கும் நிலக்கடலை விவசாயம் செய்கின்றார்களே! . அங்கே பல காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விவசாயம் தான் முக்கியத்தொழில். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்  உலகிலேயே பெரிய ஆப்பிள் விவசாயி இல்லையா?

சீனாவிலும் தொழிலுக்கு ஒதுக்குவது போல விவசாயத்திற்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு, பொதுவுடமை நாடு எனச் சொல்லப்பட்டாலும் தனியார் பண்ணைகளும் தற்போது வளர்ந்து வருவதாகவே செய்திகள் உள்ளன.

இப்படியெல்லாம் இருப்பது நீலகண்டனுக்குத் தெரியாதா? ஒருவேலை சென்னையிலே வாழ்ந்து கிராமப்புறத்திலே ஒதுங்காத மனிதராக இருந்திருப்பாரோ?  இப்படிப்பட்ட ஞானசூன்யங்களும், மேதாவிகளும் பேசுகின்ற பேச்சுக்கு ஏற்பதான் அரசாங்கமும் நடந்துகொள்கின்றது.

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், நேரடியாக விவசாயத்திற்கு பயன்பாட்டை விட வேளாண் வணிகத்திற்குத்தான் முக்கியமாக நிதி ஒதுக்கீடும் அமைந்துள்ளன. விவசாயமில்லாமல், விவசாய வணிகம் எப்படி நடக்கும் என்று கூட கணிக்கமுடியாத கோட்டு சூட்டு போட்ட டெல்லி பரிவாரங்களுக்கு என்ன தெரியும் விவசாயிகளைப்பற்றி.

கிராம வளர்ச்சிக்கான  நிதி ஒதுக்கீடும்  இம்முறை குறைந்துவிட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையில் விவசாய, கிராமப்புற, ஏழைமக்களுக்கு ஒதுக்கிய 3000கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வ வரியைக் குறைக்கும் வகையில்  8,325கோடி ரூபாய் பெரும் முதலாளிகள் கொழுக்க ஒதுக்கியதில் என்ன நியாயம் இருக்கமுடியும்.

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 2015-2016ம் நிதி ஆண்டில் 171கோடி ரூபாய் எதற்காக சலுகை வழங்கப் படவேண்டும்? இதனைக் கணக்குப் பார்த்தால் ஒருநாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7கோடி ரூபாய்க்கு கூடுதலான தொகை பெருமுதலாளிகளுக்கு சலுகையாகக் கிடைக்கின்றது என்று
பிரபல  “தி இந்து பத்திரிகையாளர் பி.சாய் நாத்” கூறுகிறார்.

கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 42டிரில்லியன் ரூபாய் (1-டிரில்லியன் = 100 ஆயிரம் கோடி) அளவைத் தாண்டி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சாய்நாத் மேலும் குறிப்பிடுகிறார்.

விவசாயம் அழியட்டும், பெரும் முதலாளிகள் கொழுக்கட்டும், பன்னாட்டு நிறுவனங்கள் உள்நுழையட்டும் என்ற மனப்பாங்கை, படித்த அதிகாரிகள், மற்றும் அரசாங்கங்கள் கொண்டுள்ளனர்.  விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் இவர்கள் எல்லாம் மானமுள்ள மனிதர்களா?

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும் பறிக்கப்பட்டு, அதனை மலிவாகக் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கியும், பல இலவசங்களையும், சலுகைகளையும்  அவர்களுக்கு அளித்தும், டாடா, அம்பானி, அதானி, மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோரையே தொடர்ந்து கொழுக்கச் செய்கிறது அரசுகள்.

ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் வெறுங்கையை நீட்டிக்கொண்டு விவசாயம் செய்யாதே என்று உபதேசம். அட மானங்கெட்டவர்களே!  மைதாசு போல சோறு இல்லாமல் பணத்தையா மெல்லப் போகிறீர்கள் வருங்காலத்தில்...

இப்படியெல்லாம் கண்ணெதிரே நடக்கும் கொள்ளைகளும், கேடுகளும். இதற்கு நீலகண்டன்கள் போன்ற மெத்தப் படித்த எமகண்டன்களும் காவடி தூக்குகிறார்கள்.   அடப்பாவிகளே! ஜான் அகஸ்டஸ் வால்க்கரும், ஆல்பர்ட் ஓவார்டும் போற்றிய ஞானம் இந்த மண்ணின் விவசாயிகளுக்குரியது. வேளாண்மையில் புரட்சிகளைக் கண்ட உழவர்களை அடையாளம் கண்ட விஞ்ஞானிகள் ரிச்சாரியாவும், யக்ஞராமனும் வாழ்ந்த பூமி இது.
கொஞ்சமாவது பாடுபடும் விவசாயி மீது மனசாட்சியைக் காட்டக்கூடாதா?






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-03-2015


Wednesday, March 25, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் . -- Land Acquisition.(4)







நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வரும் 5ம் தேதியோடு காலக்கெடு முடிவடைகிறது. அதேவேளையில்  அவசரச் சட்டமும் காலாவதி ஆகின்றது. இப்படியான சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

கடந்த டிசம்பர் 31ம் தேதி நில கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ம் தேதிமுதல் துவங்குகின்றது. மாநிலங்கள் அவையில் இம்மசோதா நிறைவேறுமா என கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், அனைத்து எதிர்கட்சிகளும் இந்தச் சட்டம் கூடாது என்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது.

கடந்த இரண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகளிலும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மோடி அரசு அவ்வாறு திருத்தங்களைச் செய்யாமல் விவசாயிகள்,  பழங்குடியினர், மீனவர்கள் நலன்களை புறக்கணித்துவிட்டு, புணரமைப்பு , மறுகுடியமர்த்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை எனச்  தெளிவான பரிகாரங்கள் எதுவுமில்லை.

பொதுநோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கு தெளிவான வரையறைகளோ விபரங்களோ சரியாக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும் போது 80சதவிகிதம் நில உரிமையாளர் ஒப்புதலும், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித நில உரிமையாளர் ஒப்புதல் வேண்டுமென இருந்ததை 50சதவிகிதம் இருந்தாலே போதும் என இப்பொழுது மோடி அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு, வீட்டு வசதி, தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு என்ற ஐந்து துறைகளிலும் தனியார் கூட்டு நிறுவவங்களோடு செயல்படும்போது விவசாயிகள் தங்கள் ஒப்புதல்களை அளிக்கத் தேவையில்லை என்று இப்பொழுது மோடி கொண்டுவந்துள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நோக்கமென்று சொல்லப்படுகின்ற திட்டங்களுக்கு எந்த மதிப்பீடும், சமூக அக்கறையோ, தாக்கமோ மதிப்பிடத் தேவையில்லை என்று, அடாவடியாக நிலங்களை அபகரித்துக்கொள்ளும் வகையில் இப்போதைய மசோதா அமைந்துள்ளது.

வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்திலிருந்த பிரிவை மாற்றி, எதைப்பற்றியும் சிந்திக்காமல் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றநிலையில் மசோதா அமைந்துள்ளது. இந்தவகையில் எளிதாக மீத்தேனுக்கும், நியூட்ரினோவுக்கும் நிலங்களை கையகப்படுத்த முடியும்.

முந்தைய சட்டத்தில், நிறுவனங்கள் கம்பெனி திட்டம் 3வது பிரிவின் கீழ்
பதிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுது அதை அறவே நீக்கி தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்கள், கார்ப்ரேஷன்கள் என யார்வேண்டுமானாலும் பெரிய முதலாளிகளுக்கு உதவியாக நிலத்தை கையகப்படுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

நிலம் இழந்தோர்கள் இழப்பீடு வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு ஐந்தாண்டுகள் காலவரையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்பதை மாற்றி, நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டோ, இடைக்கால தடைகேட்டோ செல்ல முடியாதபடி நீதியே மறுக்கப்பட்டுள்ளது.

இப்படியான கொடிய முறையில் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா அமைந்திருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


The UPA's 2013 Act made it mandatory to obtain the consent of 70-80% of farmers in case land was acquired for private and PPP projects.

The NDA's amendments to the UPA's land law severely compromise farmer rights and violate the Article 14th of Our Constitution of India.

The Fight for Land will go on....

ஆங்கிலேயர்கள் நில கையகப்படுத்தும் சட்டம் 1894ல் பிறப்பித்து நாட்டின் விடுதலைக்கு முன்னால் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் நிலத்தை அள்ளி வழங்கினார்கள். அதே நிலைமையாக இப்போதைய மோடிதலைமையில் உள்ள  மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கத்தான் இந்தச் சட்டம்.



தேர்தல் நேரத்தில் மோடி பேசியதென்ன?
இப்போது செய்துகொண்டிருப்பதென்ன?

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-03-2015.

Wednesday, March 11, 2015

நில கையகப்படுத்தும் மசோதா நிறைவேறியது -Land Acquisition Bill (2)




விவசாயிகளுக்கு எதிரான, நாடுமுழுவதும் பல கண்டனங்களுக்கு உள்ளான ”நிலம் கையகப்படுத்தும்  மசோதா” நேற்றைக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒன்பது திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டது.

எதிர்கட்சிகள் ஐம்பதுக்கும் மேலான திருத்தங்கள் வழங்கியும், சிவசேனா போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தும், அ.தி,மு.க ஆதரவோடு மோடி அரசு இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆனால், மாநிலங்கள் அவையில்  இந்த மசோதாவினை நிறைவேற்ற மத்திய அரசு பல நெருக்கடிகளுக்கு உட்படும்.

2011ல் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலே நிலம் கையகப்படுத்தும் மசோதா  கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய மசோதாவின் படி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மாற்று நிலம் வழங்குதல் போன்ற பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன.

நில உரிமையாளரின் ஒப்புதல், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்ய குறிப்பிடும் பிரிவுகளை பலமிழக்கச் செய்யும் வகையில் இம்மசோதா உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியின் கூட்டணிக்கட்சிகளே இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்றைக்கு (10-03-2015) வாக்கெடுப்பின் போது எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன, கூட்டணிக்கட்சியான சிவசேனா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் :

1.நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி விவசாயிகள் 70சதவிகிதம்பேரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பதிலிருந்து குறிப்பிட்ட திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

2.சமூக கட்டமைப்பு திட்டங்கள் இந்த பட்டியலிலிருந்து நீக்க்கப்பட்டுள்ளது.

3.பள்ளி, மருத்துவமனை போன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித  விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

4.இரயில்பாதை, நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்தும் போது, சில கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் விதிக்கப்படும்.

5.நிலம் கையகப்படுத்துதல் பற்றிய முறையீடு குறித்து, உரிமையாளர் உயர்நீதி மன்றத்தை அணுகத் தேவையில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்திடம் முதலில் முறையிட வேண்டும் என்ற சில உப்புச்சப்பற்ற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கும் அதிமுக ஆதரவு.

அப்பாவிகள் யாரென்று பார்த்து, யார்மீது கைவைக்கலாம் என்றால் ஏழைபாழையாக இருக்கும் விவசாயிதான் இந்த அரசுகளின் கண்ணுக்குப் புலப்படுகின்றான். விவசாயியின் அடி மடியில் கைவைத்துவிட்டது மத்திய அரசு.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11-03-2015.

Thursday, February 26, 2015

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். (1)




Agriculture Lands Acquisition ...

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம்.
_________________________________________________________________

விவசாயிகளை எந்த அரசாங்கம் வந்தாலும் வஞ்சித்து காவு வாங்குகிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்  எண்ணிக்கை லட்சக்கணக்கிற்கும் மேலாகிவிட்டது. எவ்வளவோ விவசாயப் போராட்டங்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வில் விடியல் மட்டும் ஏற்படவில்லை.

 சிவசேனை, அகாலிதளம், லோக் ஜன சக்தி, போன்ற தோழமை கட்சிகள் எதிர்த்தும் வம்படியாக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவருவதே குறியாக இருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு.  அவசரச் சட்டமாக பிறப்பித்தபோது இதனை ” கருப்பு அவசரச்சட்டம்” என்று அனைவரும் கண்டித்தார்கள்.

மோடி அரசு, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதி சில திருத்தங்களோடு இந்த அவசர சட்டத்தைப் பிறப்பித்து, உடனடியாக அது நடைமுறைக்கு வருகின்றது என அவசரமும் காட்டியது. பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு இருந்தும் நாடாளுமன்றத்தில் விவாதித்து இதனை சட்டமாக்குவதை விட்டுவிட்டு, இத்தனை அவசரப்பட்டதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.   நாடுமுழுவதும் இச்சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது.

நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தில், நில உரிமையாளரிடம் நிலத்தைக் கையகப்படுத்தும் போது, சில தேவைகளுக்காக அவர்களின் அனுமதி நாட வேண்டியதில்லை என ஏற்கனவே சட்டப்பிரிவு 10 (ஏ) சொல்கிறது.

மேலும், தேசியப்பாதுகாப்பு, இராணுவத்தேவை, மின்சார திட்டங்கள், இரயில் வழித்தடங்கள், சாலைகள், தொழில் பூங்காக்கள், வறியவர்களுக்கு வீடுகள் கட்டுதல்  போன்ற அடிப்படையான தேவைகளுக்கு, நில உரிமையாளர்களிடம் அனுமதி இல்லாமல் நிலங்களை ஆர்ஜிதப்படுத்தலாம்.

ஆனாலும், நிலத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, விவசாயத்திற்கு ஏற்ற வளமான நிலம்தானா என்று கவனிக்கவேண்டியது அவசியம் என்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் பிரிவுகள் இருந்தன. இப்போது உள்ள வரைவுச் சட்டத்தில் செழிப்பான விவசாய நிலமாக இருந்தால் கூட அதனை கவனிக்க அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கைகளுக்கு  எந்த  அனுமதியும் தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல், கீழ்குறிப்பிட்ட சட்டங்களும்  நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களோடு இணைத்து நடைமுறைக்கு வருகின்றது.

1) நிலக்கரி வளமுள்ள பகுதிகளில் நிலம் கையக்கப்படுத்துதல் மற்றும்       வளர்ச்சித் திட்டங்களுக்கான சட்டம்.
                    *இச்சட்டம் மீத்தேன்/நியூட்ரினோ திட்டத்திற்கும் இது    பொருந்தும்.

2) தேசிய நெடுஞ்சாலை திட்டம் -1956.

3) சுரங்கங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்துதல்.

4) அணுசக்தி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் -1962.

5) பெருநகர் ரயில்வே கட்டுமானப் பணிச் சட்டம் -1978.

6) இந்திய டிராம்ஃபே சட்டம் -1886.

7) இரயில் வழிப்பாதை சட்டம் -1989.

8) தொல்பொருள் மற்றும் பழங்கால நினைவகங்கள் ஆய்வுச்சட்டம் -1958.

9) பெட்ரோலிய கனிம வள குழாய் பதிப்புச் சட்டம் -1962.

10) மின்சாரச் சட்டம் -2003.

11) அசையா  சொத்து கேட்பு மற்றும் ஆர்ஜிதப்படுத்தல் சட்டம் -1952.

12) மறு குடியேற்றங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம்.

13) தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையச் சட்டம் -1948.

*

ஏற்கனவே, குஜராத், மகராஷ்ட்ரா, மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றுப்படுகையில் பெரிய அணைகள் கட்டப்படும் என்று விவசாயிகளைத் துரத்தப்பட்டதை கண்டித்து மேதா பட்கர் தலைமையில் கடுமையாக போராடினார்கள்.

மேலும் இந்த நில ஆக்கிரமிப்புகளால் மக்கள் கொதித்தெழுந்து
மேற்கு வங்க நந்திகிராமத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா டைட்டானியம் மணல் ஆலையும் துரத்தப்பட்டதெல்லாம் நாம் அறிந்ததே...

தமிழகத்தில் மீத்தேன்; கெயில் குழாய் பதிப்பு; நியூட்ரினா என மத்திய அரசின் திட்டங்கள் பிசாசுகளைப் போல விவசாயிகளைத் தொடர்ந்து துரத்துகின்றன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வனாந்திரங்களில் வாழும் பூர்வகுடிகளுக்கு எதிராக வனச்சட்டங்களையும் கொண்டுவர முயற்சித்தனர். வியாபாரிகளுக்கும், கார்பரேட் முதலாளிகள், கனிம வளங்களைச் சுரண்டுபவர்களுக்கும் தான் மத்திய அரசுகள் கட்சி பேதமில்லாமல் விசுவாசமாக நடந்துகொள்கிறது. பொதுநலன் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த பணக்காரர்களுக்கு இச்சட்டங்கள் சாதகமாக அமைகின்றன.

ஆளவந்தார்கள் தேர்தல் நேரத்தில், தாங்கள் தேர்தல் நிதியாகப் பெற்ற பெருந்தொகைகளுக்கு இம்மாதிரி சட்டங்கள் மூலம் தங்கள் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்கின்றார்கள். ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் குறிப்பிட்டவாறு, நேரு  காலத்திலிருந்தே டெல்லி சிவப்புநாடாக்கள்  விவசாயிகள் என்பவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற மோசமான மனநிலையினை உருவாக்கிவிட்டார்கள்.

நேருவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் தொழில் துறைக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டது. விவசாயத்திற்கு அனுகூலமாக எந்த திட்டங்களும் இல்லை. தில்லி யோஜனா பவனில் செயல்பட்ட திட்டக் குழுவும், இப்போது பிரதமர் மோடியால் மாற்றியமைக்கப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) -ம் விவசாயிகள் மீது அக்கறையற்ற தன்மையில் தான் இருக்கிறது.  டெல்லி அதிகார மையங்கள் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்கள் நொந்து சாகடிக்கப்படவேண்டுமென்ற திட்டங்கள் தீட்டுகின்றார்களா?

ஆட்சியாளர்களே! பிரான்ஸில்  வயிற்று பசிக்கு ரொட்டி கேட்ட விவசாயிகளிடம்  “கேக் சாப்பிடுங்கள்” என்று திமிர் பிடித்த ராணி மேரி ஆண்டாய்னட் மமதையில் சொன்னதால் தான்
பிரெஞ்சு புரட்சி தோன்றியது.

உழவன் உழுதால் தான் உலகம் உயரும். அவன்  பாடுபடும்  நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு, அவனை வஞ்சித்தால் அவன் போர்குணத்தோடு  எழுவான்.  அந்த எழுச்சி உங்கள் ஆணவங்களை அளித்தொழிக்கும். இதனை கவனத்தில் கொண்டு விவசாயிகளை அணுகுங்கள்.

*
 "விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென
காலம் காலமாய் காத்து...
காகிதமாய் வந்த கரன்சி
விலை நிலமாய் பிடுங்கி கொள்ள...

அதிகாலை கதிரவன் கரம் படும் முன் எழுந்து,
மீதி நிலமாவது காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும்,
முன்பு பெய்த சிறு மழையை,
வற்றியமண்ணே முகர்ந்துகொள்ள....

நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால்
வண்ணம் ஆக்கப்பட்ட சாயா ரசயான கழிவும்
சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது
பொன்னான மண்ணையும், மனிதனையும்....

வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை
எப்படியாயினும் கலங்காமல் உழைத்த,கலப்பை
தன்னை சொல்லி கொண்டு காட்சி பொருளாய் இன்று...
தானியங்கள் அள்ளிய முறம் கூட முற்றத்தில்
மரணித்து விடும் நிலையில் இருக்கும், மாடுகள்
சந்தையிலிருந்து காசப்புகடைக்கு,கண்ணீருடன்...

"தனியொருவனுக்கு உணவு இல்லையென்றால்.....என்றான் பாரதி உணவளிக்கும் உழவே வழியின்றி உணவின்றி
சிறிது சிறிதாக இறப்பை நோக்கி,
இனியும் மாறும் என்று...

இவ்வுலகில்,மரங்கள் வைத்து மழை வரவழைத்து,
இனியும்,பூமிக்கு தீங்கு எதுவும் செய்யமால்,
செயலில் வாழ்வாதாரத்தை பெருக்கினால் ஒழிய,
தொன்று தொட்டே சொல்லப்பட்டுவந்த,
"எதிலும் முதன்மையானது உழவு"
இந்த வரிகள் நிஜமாகுமா ? ” -கவிஞர் நந்த கோபால்.

பின் குறிப்பு : விவசாயிகள்  தற்கொலைகள் குறித்து தேசிய
மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான தரவுகள் திரட்டப்பட்டு , மனுவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.


சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...