Showing posts with label kovilpatti. Show all posts
Showing posts with label kovilpatti. Show all posts

Sunday, August 2, 2015

சங்கரன்கோவில்- கோவில்பட்டி களப்பணிகள்.





இன்று (02-08-2015) காலை சங்கரன்கோவில் அருள்மிகு.கோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு அவர்கள் முயற்சியில், கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் சங்கரன்கோவில் அரசு வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் திறப்பு விழா  நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்ட மாணவர்கள் விளையாடப் பயன்படுத்தும் விளையாட்டு அரங்கின் சுவர்களும், ஜன்னல்களும் இடிக்கப்பட்டு, சமூக விரோதிகளால் துவம்சம் செய்யப்பட்டிருந்தது.

இதனைச் சரிசெய்ய வேண்டுமென்று சகோதரி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இன்று காலை பத்து மணியளவில்  சகோதரர் ச.தங்கவேலு அவர்களும், நானும் இரண்டாவது முறையாக அங்கு சென்று பார்வையிட்டோம்.

ஏற்கனவே, திரு.தங்கவேலு அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தக் கட்டிடத்தை சரிசெய்து சீர்திருத்தலாம் என்றால் அதற்கான வழிவகை இல்லை என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சொல்லிவிட்டது. நல்லது செய்ய
வேண்டுமென்றாலும் பல தடங்கல்கள். இதற்கு ஆயிரம் அரசு உத்தரவுகள்.



இதுவரை அலங்கோலமாக நாசப்படுத்தப்பட்ட இக்கட்டிடத்தின் அழிவைக் குறித்து, பள்ளி நிர்வாகம் எந்தப் புகாரையும் காவல்த்துறையினரிடம் கொடுத்ததாகத் தெரியவில்லை. சங்கரன்கோவில் நகரக் காவல்த்துறையினரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனவே, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அந்தக் கட்டிடத்தை இன்று காலை பத்துமணிக்கு பார்வையிட்டோம். அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காவல்த் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதுவது என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

இதை எப்படியாவது சரிபடுத்த முயற்சிகளை எடுத்துக் கொள்வது என்றும் , இதைக்குறித்து மாநில அரசு தலைமைச் செயலாளரிடம் பேசுவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

ஏற்கனவே, முதல்முறை பார்வையிட்டபோது இக்கட்டிடம் பற்றி பதிவு செய்திருந்தேன். அப்போது பலரிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை வீண்போகாமல் நிச்சயமாக கடமையை ஆற்றவேண்டியது
எங்கள் பொறுப்பாகும்.

பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு முடித்துவிட்டு,
இன்று முற்பகல்  11:30 மணியளவில் கோவில்பட்டி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி ஆலை அருகே , மேம்பாலம் இறக்கத்தின் கீழ் உள்ள மணியாச்சி விளக்கில் உயர்கோபுர விளக்கு அமைக்க ஆய்வுப் பணிகளை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் ச.தங்கவேலு அவர்களும் மேற்கொண்டோம்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன், முன்னாள் நகரச் செயலாளர் எம்.டி.ஏ காளியப்பன், மணியாச்சி பச்சைமால் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.



ஏற்கனவே இந்த விளக்கை கோவில்பட்டி மெயின்ரோட்டில், இளையரசனேந்தல் விளக்கில், பழைய பாலமுருகன் எதிர்ப்புறத்தில் அமைக்க சில மாதங்கள் முன்பு திட்டமிட்டு, சகோதரர் ச.தங்கவேலு தன்னுடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை ஒதுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.அந்த இடத்தில் பாலம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதால் உயர்கோபுர விளக்கு அமைப்பது சாத்தியமில்லை என்று பதில் வந்தது.

அதனால் இன்றைக்கு திருநெல்வேலிக்குச் செல்லும் நாற்கரச் சாலை அருகே உள்ள கோவில்பட்டி மணியாச்சி விளக்கில் இந்த உயர்கோபுர விளக்கை அமைக்க முடிவு செய்து உரிய பரிந்துரையும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்துவிடும்.

எங்களைப் பொறுத்தவரையில் கோவில்பட்டியில், மறைந்த சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பதும், நதிநீர் இணைப்பைக் குறித்து எனது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நதி நீர் இணைப்பின் நன்மைகள் குறித்தான விழிப்புணர்வையும்  ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்வதும் என இரண்டு முக்கியப்பணிகள் எங்கள் முன் இருக்கின்றன அதையும் உறுதியோடு செய்வோம். இதேபோன்ற கருத்தரங்கங்கள் சங்கரன்கோவிலிலும் மற்றும் இராஜபாளையம் அல்லது சிவகாசியிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்யவேண்டியது கடமை.
இனி வரும் காலங்களில் தேர்தல்களில் நிற்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பணிகளை ஆற்றவில்லை என்பதை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-08-2015




Tuesday, June 2, 2015

கி.ராவின் “மனுசங்க” கரிசல்மண் கோவில்பட்டி பற்றிய தி இந்து தொடருக்கு கடிதம். - Karisal- Kovilpatti- Kee.Ra





அன்புடையீர்,
     வணக்கம்,

 கதைசொல்லி ஆசிரியர் கி.ரா அவர்களின், “மனுசங்க...” என்ற தொடர்
 தி இந்து தமிழ் ஏட்டில், செவ்வாய்க் கிழமை  மண்மணம் பத்தியில் தொடர்ந்து படித்துவருகிறேன்.

இன்றைய (02-06-2015) தொடரில் எங்கள் கரிசல் மண்ணின் கேந்திரநகரமான கோவில்பட்டி பற்றிய அடையாளங்களைச் சிறப்பாக சிலாகித்துள்ளார் கி.ரா. கதிரேசன் கோயில் பாதை, மூப்பனார் பேட்டை போன்றவையெல்லாம் கோவில்பட்டியின் அடையாளங்கள்.

இந்த மூப்பனார் பேட்டையில் தான் கிராமங்களிலிருந்து மாட்டுவண்டியில் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்து சம்சாரிகள் வியாபாரிகளிடம் விற்பது உண்டு. கதிரேசன் கோவில் பாதையில் உள்ள திலாக்கிணறுகளையும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளார் கி.ரா.

இன்றைக்குப் பலர் குதிரைவாலி தானியத்தை எங்கே இருக்கின்றது என்று தேடியலைகின்றனர்.  குதிரைவாலி, ராகி, கம்பு, சோளம் என பல தானியங்களை விளைவித்த பூமிதான் கரிசல் மண். அன்றைக்கு இவையெல்லாம் அந்த மண்ணின் உணவுகளாக இருந்தன.

 கம்புதோசை, ராகிதோசை, சோளதோசை, ராகி களி என்பதெல்லாம் முக்கிய உணவுகள். மானாவாரியில் பயிராகும் கேரளாவில் சமைப்பது போல
பரு அரிசியான  “புழுதிபிரட்டி ” கரிசல் மண்ணில் விளைந்தது.  இந்த அரிசியின் மேற்பரப்பில்  சிவப்பு நிறங்களில் திட்டுத்திட்டாக இருக்கும். மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கும்.

கி.ரா படைப்பின் நாயகன் சீனி நாயக்கர் வானம்பார்த்த கரிசல்காட்டின் சம்சாரி. அப்புராணி சப்புராணியாக வாழ்ந்தவர். இந்த மண்ணில் பாரதியும், வ.உ.சியும் பிறந்ததால் கோவில்பட்டியில் காங்கிரசும், பொதுவுடைமைக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இருந்தது.

பேரறிஞர் அண்ணா தி.மு.க-வை துவக்கியபோது, ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்தில் தி.மு.கவை கோவில்பட்டியில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைத்தார்.  தினமணி ஆசிரியர். ஏ.என்.சிவராமன், காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திகுளம் சுவாமிகள் எனப் பல ஆளுமைகள் உலா வாந்த நகர் கோவில்பட்டி.   விவசாயிகள் போராட்டங்களின் போது அதன் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு போராட்ட தளமும், களமுமாக இருந்தது கோவில்பட்டிதான் .

இவ்வாறான உயிரோட்டமான போராட்டக்களமான எங்கள் மண்ணைப்பற்றி கி.ரா அவர்கள் எழுதிவருவதை பலரும் விரும்பிப் படிக்கின்றார்கள்.  தி இந்துவுக்கு கரிசல் மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-06-2015.





Saturday, May 23, 2015

அன்பார்ந்த கோவில்பட்டி அன்பர்களுக்கு - KOVILPATTI

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்துவரும் கோவில்பட்டி நகருக்கு  மூன்று முக்கியப் பணிகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால யோசனை.
 அவை...





1. பேரறிஞர். அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை  1949 ல் செப்டம்பர் 18ம் நாள் மாலை நான்கு மணிக்கு, கொட்டும் மழையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் துவங்கினார். அதன்பின்னர் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைவர்.கலைஞர் அவர்கள் அறுபத்துஐந்து  ஆண்டுகள் முன்னால்  கோவில்பட்டியில் துவங்கி வைத்தார்.  அடுத்த ஆண்டு 1950 ஆகஸ்டு 26,27 ஆகிய இரண்டு நாட்கள். திருநெல்வேலி மாவட்ட திமுக முதல் மாநாட்டை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.  அந்த இருநாட்களும் முறையே சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் கூட்டம் திரண்டிருந்தது.

இம்மாநாட்டில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் “சந்திரமோகன்” நாடகத்திலும் நடித்தார். நாவலர் இரா.நெடுஞ்செழியன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இனமானப் பேராசிரியர், ஈ.வி.கே.சம்பத், மதியழகன், என்.வி.நடநாசன், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.இராமசாமி, தத்துவமேதை சி.கே.சீனிவாசன் (மாநாட்டுத் திறப்பாளர்), இராம.அரங்கண்ணல், இளம்பரிதி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கோவில்பட்டி மாநாடு வெற்றிபெற டபிள்யூ.டி.துரைசாமி
ஏர்வாடி அலிஷேக் மன்சூர் ( மும்பை மாநில செயலாளர்
அலிஷேக் மீரான் அவரகளின்தந்தையார் ) (மாநாட்டுச் செயலாளர்) பாலகிருஷ்ணன், ஈ.வே.அ.வள்ளிமுத்து (வரவேற்புக்குழுத் தலைவர்- அன்றைய நகர்மன்றத் தலைவர்), எஸ்.நடராஜன், கலிங்கன் (துணைச் செயலாளர்கள்) கலைமணி காசி, ஆ.திராவிடமணி, (விளம்பரக்குழு உறுப்பினர்) எச்.பி.துரைசாமி (பொருளாளர்) ஆகியோர் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகளும் சேர்ந்து பெரும்பணி ஆற்றினர்.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில், மாவீரன் கே.வி.கே.சாமி, சி.பா.ஆதித்தனார், நீதிபதி. இரத்தினவேல் பாண்டியன், வை.கோ எம்.எஸ்.சிவசாமி, தினகரன் நிறுவனர் கே.பி.கே., தங்கபழம், நீதிமாணிக்கம், அழகிய நம்பி, நெல்லை மஸ்தான், தூத்துக்குடி இரா.கிருஷ்ணன், ஏ.எல்.சுப்பிரமணியம், கடையநல்லூர் ஆ.திராவிடமணி, கா.மு.கதிரவன், சங்கரன்கோவில் சி.ஆர்.சுப்பிரமணியம், தம்பிதுரை, தூத்துக்குடி அய்யாச்சாமி,லக்குமணன், புளியங்குடி பழனிசாமி, வெள்ளைத்துரை பாண்டியன், கேப்டன் என்.நடராஜன், நெல்லை மஜீத், களந்தை ஜின்னா, பக்கீரப்பா, டாக்டர் பத்மநாபன், தென்காசி திரவியம், என்.நடராஜன், ரத்தினம், ஏர்வாடி அப்துல்காதர், அ.பு.இளங்கோவன், தூத்துக்குடி ஜோசப், கோவில்பட்டி பெரியசாமி, புதுப்பட்டி செல்வம், இ.நம்பி, சிவகிரி சுபகணேசன், சிங்கை கந்தசாமி, கீழப்பாவூர் இராமநாதன், கோவில்பட்டி தமிழரசன், நாசரேத் ஜெயபால், சாமித்துரை, திருச்செந்தூர் நல்லகண்ணு, தென்திருப்பேரை பன்னீர்செல்வம், களந்தை லாரன்ஸ், கடையநல்லூர் எஸ்.எஸ்.சாகுல் அமீது, புளியங்குடி சேதுராஜ், டாக்டர் உசேன், தாழையூத்து புல்லையா, திசையன்விளை திருவிடைமுத்து, சிலாத்திகுளம் நம்பி, திருக்குறுங்குடி துரை போன்ற கழகத்தைக் காத்த எண்ணற்ற பலரின் கழகப் பணிகள் வரலாற்றில் இன்றைக்கும் உள்ளது.

அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள்  கோவில்பட்டியில் தி.மு.க-வை துவக்கி வைத்ததையும்,  திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தி.மு.க மாநாடு கோவில்பட்டியிலே நடைபெற்றதையும்  நினைவுபடுத்தும் வகையில் அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நிலையில் கல்வெட்டு அமைக்கவும் இருக்கின்றோம்.

எட்டையபுரம் பாரதி இல்லத்தை நினைவு இல்லமாக தலைவர் கலைஞர் அறிவித்த  கல்வெட்டை அரசு அப்புறப்படுத்தியது. அடியேன் முயற்சியில்  2009ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் பாரதி பிறந்தநாள் அன்று எட்டையபுரத்தில் பாரதி இல்லத்தில் திரும்பவும் அக்கல்வெட்டை வைத்தது முக்கிய நிகழ்வாக இன்றைக்கும் கருதுகிறேன். இதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் போராடியது ஒரு பெரும் கதை.

2. கோவில்பட்டி விவசாயிகள் போராட்டத்தில்  கேந்திர நகரமாக மட்டுமில்லாமல், உயிரோட்டமான தளமாகவும் அமைத்தது. விவசாயிகள் போராட்ட காலக்கட்டத்தில் துப்பாக்கிச்சூடுகளால் கோவில்பட்டி மயான பூமியாகக் காட்சியளித்தது. கலைமணி காசி அவர்களின் உணவுவிடுதி அருகே பெரும் கலவரமும் வெடித்தது. இப்படியான முதல்கட்டப் போராட்டத்தினால்  நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கம் வீறுகொண்டு எழுந்தது.

 1971 முதல் 1991வரை விவசாயிகள் பலர் இந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். அந்த போராட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தலைவர்.கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. விவசாயப் போராட்டங்களின் தலைவராக இருந்த சி. நாராயணசாமி நாயுடு 1984ல் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் காலமானார். அவரது பேட்டியை நண்பர் கல்கி பிரியன் அவர்கள் கல்கியில் வெளியிட்டார். அதுதான் அவரது கடைசிகால பேட்டியாகும்.
ச்விவசாயிகள் சங்கத் தலைவர். சி.நாராயணசாமி நாயுடு நினைவாக கோவில்பட்டியில் திருவுருவச் சிலையை லட்சுமி ஆலை அருகில் நிறுவவேண்டும். அதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

3. கோவில்பட்டி மெயின்ரோடு இளையரசனேந்தல் சந்திப்பில்,  திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ் எதிர்புறம் அருமை நண்பர், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.  ச.தங்கவேலு., அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயரமான ஹைமாஸ் விளக்கு  அமைக்க உள்ளோம்.

தேர்தல் அரசியலில் என்னை இவ்வட்டார மக்கள் அங்கீகரித்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இந்த மூன்று பணிகளையும் எந்த அரசியல் லாபநோக்கமும் இல்லாமல், தேர்தலை மனதில் கொள்ளாமலும் இந்நகருக்குச் செய்கின்ற முக்கிய கடமையும் பொறுப்புமாக கருதுகின்றேன். நீண்டகாலமாக இது திட்டமிட்ட பணியாகும்.

கோவில்பட்டியைக் குறித்து, 2004ல் நான் எழுதி வெளியிட்ட நூலான,  “நிமிரவைக்கும் நெல்லை”-யில் விரிவான பதிவுகளைச் செய்துள்ளேன்.
மேலும், திராவிட இயக்கம், காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சிகள், சுதந்திரா கட்சி என அனைத்து கட்சிகளும் 1950-60-70 காலக்கட்டங்களில் நடத்திய நிகழ்ச்சிகள், கோவில்பட்டியின் தொன்மை, இலக்கியத் தொடர்புகள், மற்றைய சிறப்புகளைக் குறித்து ஒரு ஆய்வுத் தொடர் இத்தளத்தில் எழுத இருக்கின்றேன்.






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-05-2015.


















#தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...

  #தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...