இந்தியாவின் வரலாற்றை தென் தமிழகத்தில் இருந்து எழுதவேண்டும் என்று
திரும்பத்திரும்பச் சொல்லும் வாதத்திற்கு நியாயங்கள் நிரம்ப உள்ளன.
ஆதிச்சநல்லூர், இன்றைக்கு அகழாய்வு செய்யப்பட்டுவரும் மதுரை கீழடி என்று வரலாற்று ரீதியான தொன்மங்கள் தொடர்ந்து தமிழ்நிலத்தில் தென்பட்டுவருகின்றன.
ஏற்கனவே தென்மதுரை, கபாடபுரம், கடல்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டது. உலகின் மூத்தகுடியான தமிழன் தோன்ற்றமே இலெமூரியா கண்டத்தில் என்கிறது ஆய்வுகள். இன்றைக்கு அகழாய்வுப் பணிகள் கரூர், அரிக்கமேடு தொடங்கி பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கிடைக்கும் தொல்லியல் தடயங்கள் பற்றின பெரிய பட்டியலே உண்டு.
எனவே தென்பாண்டி மண்டலத்தில் தான் வரலாறு துவங்குகின்றது. ஆனால் ஆங்கிலேயர்களோ உண்மையானா எதார்த்தமான வரலாற்றை எழுதாமல்
வடக்கேயிருந்து எழுதி உண்மைகளை பாழ்படுத்திவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆதிச்சநல்லூர் கடந்த நூற்றாண்டு முதலே பேசப்பட்டும், அதன் முக்கியத்துவத்தை மத்திய அரசுகள் உணராமல் உள்ளது. அதுபோல மதுரை கீழடியில் ஆய்வுப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் உண்மையை மறைக்க நினைக்கும் செயலாகத்தான் அமையும்.
திரும்பவும் நம்முடைய வரலாறு நேர்மையாக உண்மையாக எழுதப்படவேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-09-2015