Showing posts with label River Linking and Water resources issues of Tamil Nadu. Show all posts
Showing posts with label River Linking and Water resources issues of Tamil Nadu. Show all posts

Tuesday, July 14, 2015

டெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் - River Linking.





நேற்றைக்கு (13-07-2015)  நதி நீர் இணைப்பு குறித்து
ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த  எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது.

 நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

எனது வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தை இரண்டு முறையும், பா.ஜ.க நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்து இதுகுறித்தான உச்சநீதிமன்ற ஆணையை நி|றைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.

இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும்  மத்திய அரசு  நீட்டிக்கவேண்டும்.

தமிழகத் நதிநீர்த்திட்டங்கள் நிலுவை யிலிருந்தாலும்  கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதும், கேரளாவின் அச்சங்கோவில் பம்பை நதியின் 25டி.எம்.சி நீரை தமிழக வைப்பாற்றோரு இணைப்பது போன்ற தமிழகத்தின் திட்டங்களை மத்திய அரசு கொள்ள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், அதுகுறித்தான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லை என்பது மனநிறைவைத் தரவில்லை.

தமிழக நதிநீர்த்திட்டங்கள் :  தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்,  காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்
தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம் குறித்த முழுமையான பதிவை ஏற்கனவே இத்தளத்தில் பதிந்துள்ளேன்.

இதனால்  தமிழகத்தில் பாயும் பெண்ணையாறு (சாத்தனூர் அணை) பாலாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்பு; காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்பு; அத்திக்கடவு- அவினாசி வெள்ளக்கால்வாய்த் திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டங்களை வகுத்திருந்தாலும் உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிலிருந்து கிடைக்காமல் தொய்வில் உள்ளது.

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி இணைப்புத் திட்டம்
 நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு நிதியில் கட்டப்பட்ட கன்னியாகுமரி நெய்யாறு அணை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் நீர்வரத்து, உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி எனப் பல நீர் நிலைப் பிரச்சனைகள் கேரளாவோடு உள்ளது.

அதேபோல கர்நாடகத்தோடு, காவேரி ஒகேனக்கல், தென்பெண்ணையாறு. ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏறி போன்ற நீர்நிலைப் பிரச்சனைகளோடு ஒரு தீர்வு எட்டாமல் ஆண்டுகணக்கில் பிரச்சனைகளாகவே நிற்கின்றன. இந்த நதிநீர் இணைப்பைக் கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்படும்.

ராகுல் காந்தியினுடைய விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் அரசு நதிநீர் இணைப்பை கிடப்பில் போட்டது.  பாட்டி இந்திராகாந்தி ஆதரித்த திட்டத்தை பேரன் ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை.  வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது அமைக்கப்பட்ட சுரேஷ் பிரபு குழுவின் அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்திருந்தால் இத்திட்டங்களுக்கு இப்போது அடிக்கல் நாட்டி இருக்கலாம். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் அந்தக் குழுவின் காலத்தை நீட்டித்துத் தரவில்லை என்பது கவலைக்குரிய செய்தி.  என் வழக்கு நிலுவையிலிருந்தபோது இந்த குழுக்களின் காலத்தை நீட்டிக்கவேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

சுற்றுச் சூழலையும் கவனத்தில் கொண்டு, உபரி நீரை வீணடிக்காமல் சமன் செய்து வறட்சியினால் பாதிக்கப்படும் தீபகற்ப இந்தியாவின் பிறபகுதிகளுக்கு வழங்குவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும், ஆப்ரிக்கா போன்ற நாடுகள் நதிநீர் இணைப்பை வெற்றிகரமாக செய்துள்ளனர்.  அதன் அடிப்படையில் இந்தியாவிலும் நதிநீர் இணைப்பை மேற்கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது. நதிநீர் இணைப்புக்கு கேரளா, கர்நாடகா, ஒரிசா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மகராஷ்ட்டிரா இதில் விருப்பப்படாமல் மௌனம் சாதிக்கிறது.

பிரதமராக தேவக்கௌடா இருந்தபோது, நான் அவரைச் சந்தித்து நதிநீர் இணைப்பை பற்றி பேச்செடுத்ததுமே “ அதெல்லாம் சாத்தியமில்லை” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.  பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இப்படியான மனப்போக்கு இருந்தால் நாடு எப்படி முன்னேற்றமடையும் .

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மன்மோகன்சிங்கைச் இது குறித்து சந்திக்க நேரம் கேட்ட பொழுது,  சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்திக்க பிரதமர் அலுவலகம்   கேட்டுக் கொண்டது.  ஹரிஷ் ரவுத்தை இரண்டு முறை சந்தித்தும், ராகுல்காந்திக்காக நதிநீர் இணைப்பு குறித்து தெளிவாகப் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.

மோடி அரசின் நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்தபின் இதுகுறித்து ஆராய மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஐந்தாவது கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும் வேகமாகவும் இல்லாமல் உள்ளது.

மேலும், தென்னிந்திய நதிகளின் இணைப்பைக் குறித்து தீவிரம் காட்டாமல் , வட மாநிலங்களின் நதிகளான கேன் - பேட்வா நதிகள் இணைப்பதில் முனைப்புகாட்டுகின்றன. இதனால்  மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் ராஜஸ்தான் வரை பயன்பெறும்.



தார் பாலைவனத்தில் உள்ள ராஜஸ்தானுக்கே பக்கத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதிநீரைத் திருப்பும் போது. கேரளாவில் வீணாகக் கடலில் சென்று கலக்கும் அதிகப்படியான நீரை தமிழகத்துக்குத் திருப்புவதில் மட்டும் ஏன் சண்டித்தனம் என்று தெரியவில்லை.

மத்திய அரசு 1975லிருந்து  கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட, கேரள உபரி நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டுமென்ற விவாதம் எழுத்துகளில் உள்ளதே தவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.  11வது ஐந்தாண்டு திட்டத்தில் 22.6மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசான வசதி செய்யக்கூடிய அளவில் உபரி நீர் பயன்படுத்தப் படும் என்று திட்டமிட்டும் இன்றுவரை அது கொள்கையளவில் மட்டுமே உள்ளது.

நதிநீர் இணைப்பு என்பதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்ற உணர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2015.


Related Posts 



http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/river-linking-and-water-resources.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

Monday, May 4, 2015

தமிழக நதிநீர் பிரச்சனைகளும், நதிநீர் இணைப்பு பற்றி சில புரிதல்கள் வேண்டும். நவலவாலா குழு. River Linking and Water resources issues of Tamil Nadu - BN Navalawala Task Force




தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும்.

இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.

தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள முதல்வரான திரு.சங்கரும் இந்த அணையைத் திறக்கும் போது, “கேரள மக்களையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது, இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைதான் இருக்கின்றது, அதையும் மீறி நம்முடைய சகோதர பாசம் என்றும் அன்போடு நிலைத்திருக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த நெய்யாற்றின் இடதுகால் வலதுகால் பாசன வசதிகளை கேரளாவும் தமிழ்நாடும் உரிமையோடு  நாமிரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்வோம் என்று பேசிய பேச்சு இன்றைக்கு அர்த்தமில்லாமலும், எதார்த்தமில்லாமலும் போய்விட்டது.

சிலர் புரிதல் இல்லாமலேயே செண்பகத்தோப்பு போன்ற அணைகள் கட்டினாலே முழுமையாக தண்ணீர்வரும் என்று சொல்கின்றனர். செண்பகத்தோப்பு அணை 1989ல் தி.மு.க ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று தி.மு.கவிலிருந்த திரு.வை.கோ, அன்றைய நெல்லைமாவட்டச் செயலாளர் டி.ஏ.கே. லக்குமணன்,  அமைச்சர் தங்கவேலு மற்றும் நானும் மலையின் மேல் சென்று அந்த இடத்தையெல்லாம் ஆய்வு செய்து அணையும் கட்டப்பட்டது.

கட்டப்பட்ட அணையில் இறுதிப்பணி முடிவு பெறுவதற்குள் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992-1993 காலகட்டங்களில் அந்த அணையின் கட்டப்பட்ட பகுதிகளை கேரளா அரசாங்கம் இடித்துத் தள்ளியது. இந்த விவகாரம் அன்றைக்கு  எந்தப் பத்திரிகையிலும் செய்தியாக வரவில்லை. அப்போது தொலைதொடர்பு ஊடகங்களெல்லாம் கிடையாது.

செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் தான் தண்ணீர் வரத்து வருகின்றது,  அணை நிரம்பி வழிகின்றது. மற்றகாலங்களில் அதிகமாக தண்ணீர் நிரம்புவது  கிடையாது.

அதேபோல தான் நெல்லைமாவட்டத்தின் உள்ளாறு, செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை கட்டினால் மட்டும் போதாது. கேரளாவில் உள்ள நீர் வரத்தும் வந்தால் தான் இந்த அணைகளால் முழுமையாகப் பயன் பெற முடியும்.

ஆனால்,  மேலே குறிப்பிட்ட நெய்யாறு, நெல்லைமாவட்டத்தின்
உள்ளாறு, அடவிநயினார் ,  செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை, முல்லைப்பெரியார், ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு -புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி ஆகிய நீராதாரப் பிரச்சனைகளில் கேரளா தமிழகத்தோடு ஒத்துப் போக மறுக்கின்றது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள்  காவிரி, ஒகேனக்கல், பாலாறு, பெண்ணாறு பொன்னையாறு பிரச்சனைகளில் நமக்கு ஆதரவாக இல்லை.
இந்த நிலையில் செண்பகத்தோப்பு, உள்ளாறு அணைகள்  கட்டிமுடிக்கப்பட்டாலும் நீர் நிரம்பவேண்டியது அவசியம் . அதற்கு கேரளம் ஒத்துக் கொண்டு தண்ணீர் வரத்தை தடைசெய்யக்கூடாது.

1983லிருந்து நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்ற எனது
பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கடமை என்று பார்க்காமல் அவசியம், அவசரமாக நாட்டின் நலனைக் கருதி நதிநீர் இணைப்பு வேண்டும் என்பதைப் புரிதலோடு நடவடிக்கை எடுக்கவேண்டும், அதற்கான குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்று சொல்லியும் மன்மோகன்சிங் அரசு 2012பிப்பிரவரியில் அளித்த தீர்ப்பைக்கூட நடைமுறைக்குக் கொண்டு வராமல்இருந்தது.


 நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவுத்தை சந்தித்துப் பேசி ,
“நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப் போகிறேன்” என்ற பிறகுதான் மன்மோகன் சிங் அரசு ஒப்புக்கு குழு ஒன்றை அமைத்தது.  அந்தக் குழுவும் செயல்படாமல் இருந்தது.

கடந்த வருடம் பா.ஜ.க அரசு மோடி தலைமையில் அமைந்தபின்
திரும்பவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்த பின் தான் பி.என் நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை செய்திகளாக, விளம்பரமாக வரவில்லை என்றாலும் எதோ ஒன்றைச் சாதித்தோம் என்ற மனதிருப்தி. தற்போது நதிநீர் இணைப்புப் பணிகளை முழுமூச்சாக இந்தக் குழு கவனிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த குழுவின் 80% பணிகள் முடிவுக்கு வந்து அது நிறைவு பெறாமலே காங்கிரஸ் அரசு முடக்கிவிட்டது. இதையெல்லாம் எனது கடந்த நதிநீர் இணைப்பு பற்றிய பதிவில் விரிவாகச் சொல்லியிருந்தேன்.

** நதிநீர் இணைப்பு குறித்து விரிவான பதிவுகள்.

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html


செண்பகத் தோப்பு அணையை கட்டிவிட்டால் மட்டும் போதாது.
அதற்கு நீர்வரத்து வரும் வகையில், அச்சன்கோவில் -பம்பை-வைப்பார் இணைப்பும்  கேரளாவில் மேற்குநோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் தான் இந்த அணைகள் கட்டினாலும் நீர் வரத்து வந்து அதனால் பாசன வசதி கிடைக்கும் என்பது புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும்.

நீர்வரத்து இல்லாமல்  அணைகளைக் கட்டி என்ன பயன். இதுகுறித்து
பி.என் நவலவாலா குழுவுக்கு தங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யவேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.

இன்னொரு வேதனையான விசயம் என்றால் இந்த நவலவாலா குழுவின் முழுப்பயனும் தமிழகத்துக்குத்தான் வருகின்றது. இந்தக்குழுவை ஒடிசா, கேரளா, கர்நாடகா போன்ற அரசுகள் எதிர்க்கின்றது.  ஆனால் இந்தக் குழுவைப் பற்றி எந்த செய்தியும் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை என்பது கொடுமையான விஷயமாகும். தினமணி மற்றும் ஆங்கில இந்து மற்றும்  ஏட்டில் 7வது அல்லது 8வது  பக்கத்தில் மட்டும் தான் செய்தியாக வந்தது.



நடிகை திரிஷாவுக்குத் திருமணம் நடக்குமா என்பதைப் பெரிய செய்தியாகக் வெளியிடுகின்றார்கள். தமிழ்நாட்டின் நலன் கவனிக்கப்படவேண்டிய செய்தியில் அக்கறையில்லாமல் பத்திரிகைகள் இருப்பது வெட்கக்கேடான அவமானமான விஷயமாகும்.  குறைந்தபட்சம் இந்தப் பதிவைப் படித்தவர்களாவது தங்களுடைய நண்பர்களிடம் பகிர வேண்டுகிறேன்.

பி.என். நவலவாலா  குழுவுவிடம் பதிவு செய்யவேண்டியவை
1.  அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்.
2.   கங்கை காவேரி வைகை தாமிரபரணி நெய்யாற்றோடு இணைத்து கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயன்பெறும்.
3.   கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பையை தமிழக வைப்பாற்றோரு இணைக்கவேண்டும் போன்ற முக்கிய பிரச்சனைகளைக் குறித்து இந்தக் குழுவிடம் நிறைவேற்றப்படவேண்டுமென்று மனுக்கள் அனுப்ப வேண்டும் .

இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் தான் நீர்வரத்து வரும் என்ற புரிதலோடு நாம் கடமையாற்ற வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-05-2015.











#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...