Tuesday, August 4, 2026

#காவிரி

#காவிரி வெட்கக்கேடு 400 டிஎம்சி தண்ணீரை வீணடித்த நாம்...உலகிலேயே ஆற்றுக்கு நடுவில் முதலில் அணை கட்டிய தமிழன் என்று மார்தட்டிப் பேசிக் கொள்வோர் கவனத்திற்கு எப்போதும் போல கபினி அணை முதலில் நிரம்பி, முதலாவதாக நமக்கு திறக்க வைத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது இயற்கை! இந்த பதிவு போடும் போது 45,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது! லட்சம் கன அடியை தொட இறைஞ்சுவோம்! காவிரியில் நமது உரிமை என்பது நமது உயிருக்கு சமம்தான், ஆனால் இந்த பதினைந்து நாட்களாக நம் அரசியல்வாதிகள் போட்ட சண்டையை, தண்ணீர் வர ஆரம்பித்த அடுத்த கணமே மறந்து விடப்போகிறார்களே? சென்ற ஆண்டு இயற்கையின் கருணையால் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பியது! 400டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் போனது! இது ஏதோ ஒரு வருடம் நடக்கும் கதை அல்ல! உணர்ச்சிவசப்படாமல், உண்மையை கொஞ்சம் யோசிக்க வேண்டும்! கர்நாடகாவை விட தமிழ் நாட்டிற்கு மழை அதிகம்! 950 டிஎம்சி அளவுக்கு பெய்வதாக சொல்கிறார்கள்! அத்தனை மழை நீரையும், மேட்டூரின் உபரித்தண்ணீரையும் சேமிக்க ஏதாவது யோசித்திருப்போமா? மேட்டூருக்கு கீழே அணைகள் கட்டும் அளவுக்கு இயற்கை சூழல் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் ஏராளமான தடுப்பணைகள் காட்டியிருக்கலாம், இன்றைய நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஏரி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு போய் இருக்கலாம், புதிதாக நிறைய கால்வாய்கள் அமைத்து, சாகுபடி நிலங்களை அதிகமாக்கி இருக்கலாம்! காமராஜர் காலத்திலிருந்தே ஏட்டளவில் இருக்கும் ராசிமணல் அணையை முயற்சி எடுத்து கட்டியிருக்கலாம் (மேட்டூர் அணைக்கு முன்பாகவே 65டிஎம்சி தண்ணீர் தேக்க முடியுமாம்), காவிரி -குண்டாறு நதியை இணைத்திருக்கலாம், பம்பிங் ஸ்டேசன்கள் மூலம் வசிஷ்டர் நதி, கோதையாறு போன்ற சிறிய ஆறுகளை இணைத்து எல்லா ஏரிகளையும் நிரப்பி இருக்கலாம்! எந்த அரசாவது இதுவரை புதிதாக பதவியேற்றதும் நீர் நிலை ஆக்ரமிப்புகளை அகற்றுவது குறித்தோ, காணாமல் போன ஏரி குளங்களை மீட்பது குறித்தோ, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க என்ன வழி என்று அக்கறையோ ஆர்வமோ கொண்டுள்ளதா? நானூறு டிஎம்சி தண்ணீரை வீணாக கடலில் கொட்டுவதை ஆட்சியாளர்கள், தங்கள் ஆட்சியின் அவமானமாக கருத வேண்டாமா? கை மேல் பலனாக ஓட்டுகள் வராத எந்த திட்டத்தின் மேலும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள், நமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை எப்போதுதான் உணரப்போகிறோம்? தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது, இனி எல்லா சத்தங்களும் அடங்கிப்போகும்! அடுத்த வறட்சியில் தூங்கி எழுவோம்! "மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண.." - அகம் 376 காவிரியைப் பற்றி பேசுவதற்கே குறைந்த பட்ச அறிதல் தகுதி கூட நமக்கெல்லாம் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கர்நாடகா அளவிற்கு காவிரியை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை... அந்த புனிதமான காவிரியை போற்றி பாதுகாக்கவும் தெரியவில்லை... கவலையுடன்…. #cauveri

ImageImageImage


No comments:

Post a Comment

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)