Friday, August 21, 2026

கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றை குடையாக எடுத்தாயே!

 கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றை குடையாக எடுத்தாயே!

மாலே மணிவண்ணா! கோல விளக்கே, கொடியே, விதானமே! ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா! கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! எழுந்துவர மாட்டாயா? சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம் அணிவோம். ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து உண்போம். ஆகா! சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக வழியுமாம்! மேலும் சொல்கிறார் நாச்சியார்: குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே! வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா! நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல் நமக்கும் பெருக்கெடுக்கிறது. அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார். வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் மணமாலை சூட்டினானாம்! நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம். கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர்கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம். முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில், மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்! அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா! அவன் நன்மையுடையவன் அல்லவா! ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்! அவன் எப்படி? ஏ, வெண் சங்கே; நீ சொல்! அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே! அவன் இதழ்ச் சுவையை எனக்குச் சொல்ல மாட்டாயா! ஏ, மேகங்காள்! விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்! மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்! களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்! மதயானை போலெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்! எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா! ஒரு பெண் கொடியை வதைசெய்தால், இவ்வைகயகத்தார் மதிப்பாரா? நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்! நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்! நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்! நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது! கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" - இரண்டாம் பாகத்திலிருந்து..

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...