Tuesday, August 4, 2026

நடந்தாய் வாழி காவேரி ...!!!

நடந்தாய் வாழி காவேரி ...!!! . இதுதான் காவிரி நதியின் பயணம்! காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல. காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை. ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும். காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது. ஹாரங்கி ஹேமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. ஆனால் கபினியின் பயணம் வேறு. கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது. அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன. இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது. இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் அளவிடப்படுகிறது. பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge) கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது. 01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு: Harangi: 127.55/129 அடி – 94% Hemavathi : 100.98/117 அடி – 64% KRS: 91.80/124.80 அடி – 34% Kabini: 56.28/65 அடி – 74% Mettur: 73.82/120 அடி – 39% Bhavani Sagar: 55.32/105 அடி – 18% Amaravati: 28.54/90 அடி – 9% “சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது. மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன. அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல. அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது. சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு. சுருக்கமாக காவிரியின் பயணம்: பல மழைப்பகுதிகள் → தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள் → துணையாறுகள் மற்றும் அணைகள் → KRS–கபினி நீர் இணைப்பு → பிலிகுண்டுலு அளவீடு

No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...