Sunday, July 24, 2022

ராஜீவ்காந்தி படுகொலை.....அரிய முடியாத சில புதிர்கள்..!முடிச்சுகள்..!!

ராஜீவ்காந்தி படுகொலை.....அரிய முடியாத சில புதிர்கள்..!முடிச்சுகள்..!!
              -வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சிறையில் 31 ஆண்டுகள் கழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி பேரறிவாளன் விடுதலை. இதில் எந்த பிழையற்ற சட்டப்படி நடந்துள்ளது.மற்ற ஆறுவரும் விடுதலை ஆக வேண்டும்.மே 21 (2022) ராஜீவ் படுகொலை நினைவு நாளுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு மே 18 (2022) விடுதலை என தீர்ப்பு வந்தது.இதற்கு நெடிய போராட்ட வரலாறும் உண்டு.
இந்த வழக்கே சரியாக புலனய்வு செய்யவில்லை என்பது பொது கருத்தும் உண்டு. ராஜீவ் படுகொலையை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதன் உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தன்டிக்க வேண்டும்.இதில் மாற்றுக்கருத்து இல்லை. இளம் பிரதமரை கொன்றது கொடுமையானது,மறுக்கவில்லை. ஆனால் இதற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று எந்த அடிப்படை விசாரணையில் முடிவுக்கு வந்தனர் என்பது குழப்பமாகவும்,கேள்வியாகவும் உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி தாமஸ், இந்த வழக்கை புலனய்வு அதிகாரியும் சரியான கோணத்தில் விசாரணையும்,புலனாய்வும் எடுத்து செல்லவில்லை என கூறினர். 2013 ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும். அவர் நிரபராதி என கூறியது மறுக்க முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணய்யர் தொடர்ந்து பேரறிவாளன் நியாயங்களையும் பேசியும் எழுதியும் வந்தார். எனவே இதில் பிழைகள் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில்1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்தில் சென்று நடத்திய வெறியாட்டத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தவர்களுக்கு, உடமையிழந்தவர்களுக்கு, மானபங்கப்படுத்தப் பட்டவர்களுக்கு, விதவையானவர்களுக்கு, பெற்றோர் அற்ற பிள்ளைகளுக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை.இதை குறித்த எந்த விசாரணையும் இல்லை..! அமைதிப்படையா? அமளி படையா? என கலைஞர் குறிப்பிட்டார்.1990 இல் படைகள் திரும்பும் போது சென்னையில் முதல்வர் கலைஞர் வரவேற்க்க செல்ல மறுத்தார்.
;இந்த வழக்கில் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலையில் உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 142-ன் படி பேரறிவாளனை விடுதலை செய்யும் நிலையில் தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசனம் பிரிவு, 161 படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். நாகேஸ்வர ராவ் ,பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு உறுதிப்படுத்திய குடியரசுத் தலைவர்( பிரிவு 72), ஆளுநர் (பிரிவு 161) இருவரின் அதிகார வரம்பை நிராகரித்திருக்கிறது. 
ஆயுள் தண்டனையும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை மாநில அரசு விடுவிக்கலாம் என்கின்ற முடிவை கையொப்பம் இடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகனைகளை எழுப்பி , இறுதியாக தன் அரிதிலும் அரிதான அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-142 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து இருக்கிறது. காங்கிரஸ் தவிர தமிழ்நாட்டில் பெரும்பாலும் கட்சிகள் இத்தீர்பை வரவேற்று இருக்கின்றன.
.இந்த வழக்கு தடா நீதிமன்றம் ,சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றம் ,சென்னை ஆளுநர் மாளிகை, குடியரசு மாளிகை ,டெல்லி உள்துறை அமைச்சகம் என்று அதிகார வரம்பின் தளங்களுக்கும் சென்ற வழக்கு.19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 50 வயதில் விடுதலை ஆனார்.
ராஜீவ் கொலை வழக்கில் சென்னையிலிருந்து பேருந்தில் திருச்சி வழியாக திண்டுக்கல் சென்று அருப்புக்கோட்டை இரவிச்சந்திரனின் நண்பர் சார்லஸ் வீட்டில் யதார்த்தமாக குடும்பத்தாரோடு பேசிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரனை செய்த விதங்களை அப்போது நான் அறிந்து வேதனைப் பட்டதுண்டு. அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில் படித்த போது ஈழப்போராட்டத்தில் தானும் பங்கேற்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட்டும், சினிமாவும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தில் தானும் பங்குகொள்ள வேண்டுமென்ற உந்துதல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேற தேவையான பணத்தை மட்டும் பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு இராமேஸ்வரத்திற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஈழத்திற்கு சென்றதன் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. இவரும் அந்த ஏழுவரில் ஒருவர். இப்படி இவர்கள் ராஜீவ் கொலையில் பட்ட பாடுகள் ஏராளம்.

ராஜீவ் படுகொலை நடந்த நேரத்திலேயே 1991 இல் இங்கே கேகப்பட்ட வினாக்கள்,புதிர்கள் கட்டுரையாக அன்றைக்கு தினமணி நாளிதழக்கு அனுப்பிவைத்தேன். ஏனோ அன்றைய சூழ்நிலையில் வெளியாகவில்லை. அதில் எழப்பட்ட கேள்விகள் அப்படியே இன்றும் இருக்கின்றது.திரும்பவும் 31 ஆண்டுகளுக்கு பிறகு அதே வினாக்களை கட்டுரையாக இங்கே வைக்கின்றேன்.
யாரும் நியாயப்படுத்த முடியா இந்த கொலைக்குற்றம் செய்த கொடியவரை தண்டிக்கப்பட்டே தீரவேண்டும். இதுவே இயற்கையின் நீதியும் ,நமக்கு நாமே வகுத்துக்கொண்ட நெறிமுறையும் ஆகும். 31 வருடம் ஆகியும் ராஜீவ் படுகொலை பற்றிய உண்மைகள் புலப்பட்டதாகவோ தெரியவில்லை. வரும் நவம்பர் 21ம் தேதியோடு அமெரிக்க அதிபர் கென்னடி கொலைசெய்யப்பட்டு 61 ஆண்டுகள் ஆகப்போகிறது. ,யார் அந்த கொலைக்கு காரணம் என்று இன்றுவரை தெரியவில்லை.ராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் போல நேதாஜி எங்கு சென்றார் என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை.அணு விஞ்ஞானி பாபா விமானப்பயணத்தில் இறந்தது இன்னும் மூடுமந்திரமாக உள்ளது.
இந்திரா காந்தி கொலையுண்டபோது, எத்தனை அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது நிதானமாக “பெரிய மரம் விழுந்தால்” என்று பேசிக் கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி. அதற்கும் 1984-இல்விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு இன்று வரை டெல்லி லோக் நாயக் பவனில் எந்த முடிவு இல்லாமல் அரசு பணத்தை வீனடித்துகொண்டுள்ளனர். மிகவும் காலதாமதமாக அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள்.
ராஜீவ் காந்தி படுகொலையில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய பல்வேறு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டும், உண்மைகளும் புலப்படாமல் ராஜீவ் கொலையினுடைய முடிச்சுகள் பலவும் அவிழ்க்கப்படாமலும் ,உறுதியான ,தெளிவான உண்மைகளை மக்கள் மன்றத்தில் இதுவரையிலும் வைக்க முடியவில்லை.எனவே ராஜீவ் காந்தி கொலை குறித்து பல வினாக்கள் நம் முன் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைப்பற்றி அறியாத நேரத்தில் 1980 -ல் இருந்து விடுதலைப் புலிகள் இயக்க தோழர்களோடு,அவர்களது வழக்குகளில் வாதாடிய வகையிலும், அவர்களோடு நெருக்கமாக பழகி கலந்து பேசிய சூழலில் பல்வேறு விடயங்களை ,தகவல்களை நான் சொல்லியாக வேண்டும்.
ஒரு சிலர் இவர் எப்படி சொல்லலாம்..? என்ற வினா எழப்பலாம்? முன்னாள் எம்.பி,இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை ஆசிரியர் ராமகிருஷ்ணன், புதிய கலாச்சாரம் ஏட்டில் கூட 1980-களில் தோழர் .மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரையில் ப.நெடுமாறனோடு நெருக்கமான வழக்கறிஞர் இராதகிருஷ்ணன் விடுதலைப் புலிகள் இயக்க தோழர்களுக்கு ஆதரவாக செய்தி தொடர்பாளர் போல பணியாற்றுகிறார் என அப்போது குறிப்பிட்டதை யாரும் மறுக்க முடியாது. பிரபாகரன் அவர்களோடு தங்கியிருந்த நாட்களும்,புலிகள் இயக்கத்தின் நாற்றாங்கால்களாய் இருந்த பேபி சுப்பிரமணியன், பாலசிங்கம், ரகு, நேசன், நடேசன், திலகர், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, சூசை, பண்டிதர், சங்கர், ரஞ்சன், செல்லக்கிளி, ஜானி போன்ற முன்னணி தோழர்களோடு நெருங்கிய நட்போடு 1987 வரை இந்தியாவில் இருந்த நாட்களில் காரணத்தினால், சில மனதில் பட்ட கேள்விகளை எழுப்பி ,அதை ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன்.
ராஜீவ் படுகொலை நடந்தபோது;கிட்டு, எங்களுக்கு இதற்க்கும் தொடர்பு இல்லை என அதிகார பூர்வமாக விடுதலை புலிகள் சார்பாக அப்போது அறிக்கையும் வெளியிட்டார் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள் : 
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். காங்கிரஸ் அகில இந்திய பொது செயலாளர் ஜி.கே.மூப்பனார் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஆகிய இருவரும் ஶ்ரீ பெரும்புதூரில் கூட்டம் நடத்த வேண்டாம் அது பாதுகாப்பான இடமல்ல என சொல்லியும்; அதை மறுத்து காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்த மார்கரட் ஆல்வா ஒப்புதலில் கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீ பெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?யாரால்..?தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்தபோதும் ,டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்குதான் நடத்தியாகவேண்டும் கூறியது ஏன்,எப்படி என்று விசாரிக்கப்பட்டதா? இதில் மரகதம் சந்திரசேகர் நிலை என்ன..?
2. விசாகப்பட்டினத்தில் ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என விமான நிலையத்திலிருந்து தான் தங்கும் விடுதிக்கு திரும்பினார் ராஜீவ். உடனே கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் முன்னாள் மத்திய அமைச்சர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் செண்னை வரை பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. என தகவல். இது உண்மையா..? ராஜீவ் வந்த விமான பைலட் மாற்றப்பட்டரா..?
3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள்.ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். பின் என்ன ஆனார்கள்..? சென்னைக்கு உடன் வந்தார்களா..? 
4.ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது என தகவல்.இது உண்மையா..?
5. . ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து ஶ்ரீ பெரும்புதூர் கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவரின் கான்வாயில் ஏறினார்கள் என தகவல். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
6.பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் உடன் இருந்த தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள்.இதில் உண்மை என்ன விசாரிக்கப்பட்டது ..?
7. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
8. தான் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
9. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
10. . பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?மேற்கு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!
11. மரகதம் சந்திரசேகர் ,ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் மறைந்த லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். வினோதினி எங்கிருந்து ஏன் வந்தார். வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்த்தனாவின் உறவினர் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் ஏன் விசாரிக்கவில்லை?
12 லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
13. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் மறைந்த லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது என்பது உண்மையா?. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?
14. சிவராசனும்,தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை. அதுவும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் இருக்கும் இடத்தில் அனுமதி எப்படி எளிதில் கிடைத்தது...?
15. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
16 காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் கொலை விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
17. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த எந்த ஒரு சரியான ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் இருக்கவில்லை என தகவல். இது உண்மையா..?
18. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவதற்கு சரியான, தெளிவான ஆதாரம் இல்லை. அது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
19. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் படுகொலையை செய்திருக்கக்கூடாது? என விசாரிக்கப்படவில்லை.
20. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகிய மூவரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?
21. திருச்சி வேலுசாமி கூற்றுபடி சுப்ரமணிய சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே ராஜீவ் கொலைசெய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை…?
22.சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் லண்டனில் சிலரை சந்தித்தார்கள் என்ற செய்தி அப்போது எழுந்தது . அது குறித்து விசாரணை நடத்தினார்களா..?
23. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
24. மத்திய அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
25. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த பின் நாட்களில் முள்ளிவாய்க்கால் போரில் சம்பந்தப்பட்ட எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை. ஏன்? எம்.கே. நாராயணனிடம் இருந்த ராஜீவ் கொலையில் பின்நாட்களில் கிடைத்த அந்த ஒரே காணொளிப் பதிவு எப்படி தொலைந்து போனது என்றார்.எது சரி…?இது உண்மையா..?
 26. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமி குறிப்பு முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?
27. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை சிங்கள அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது
  28. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று நல்ல உறவில் பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் ராஜீவை வேலுபிள்ளை பிரபாகரன் கொலை செய்ய திட்டமிட வேண்டும்?
  29. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு ஆதரவும் ,முக்கியம், அவசியமும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்திய மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற வகையில் இந்த தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான இந்த முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்வார?
  30 . ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தாரா. இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
  31. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணிய சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று அன்றைய பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?
 32. பெல்ட் பாம்(வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவேயில்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக்கொடுத்தது குறித்து விசாரிக்கப்படவில்லை.எதனால்?
33.பேரறிவாளன் பேட்டரி செல் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு. அவர் அந்த வயதில் சாதாரண பேட்டரி வாங்கி கொடுத்து இருந்தால் பரவாயில்லை. அந்த பேட்டரியில் உள்ள மூலப்பொருட்கள் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய பேட்டரி என சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அவ்வளவு சக்தி வாய்ந்த பேட்டரி வாங்க யார் பேரறிவாளனுக்கு அன்றைக்கு உதவியது..? பின்னணியில் இருந்தவர்கள் பற்றி விசாரித்தார்களா..?
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகியும் இந்த கேள்விகளுக்கு இதுவரை உண்மை தெரியவில்லை . இவ்வாறு குழப்பமான நிலையில் தி.மு.க ஆட்சியை இழந்தது. இந்த சம்பவம் நடந்த போது 1991- இல் நாடாளுமன்ற, சட்ட மன்றம தேர்தல்கள் தமிழகத்தில் நடந்தது.தி.மு.க நிர்வாகிகளும், ஈழ ஆதரவாளர்களும், தாக்கப்பட்டனர், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.இவர்களின் வீடுகளும், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன .
 தி.மு.க கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ராஜீவ் படுகொலையில் முரசொலி அலுவலகம் நொறுக்கப்பட்டு. முரசொலி இதழ் எரிக்கப்பட்டது. ஆலங்குளத்தில் ஆலடி அருணா பெட்ரோல் பங்க் நாசப்படுதபட்டது. டி ஆர் பாலுனுடைய தியேட்டர் பாதிக்கப்பட்டது.எனக்குத் தெரிந்த திமுகவின் பேச்சாளராக வலம் வந்த புளியங்குடி பழனிசாமியின் வீடு சூறையாடப்பட்டு அவரது குடும்பம் தெருவில் நின்று சமைத்து சாப்பிட்ட காலமெல்லாம் உண்டு . அதேபோல விளாத்திகுளம் போஸ் தி.மு.க இளைஞரணி பொறுப்பில் இருந்தவர்.அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திலேயே சாகடிக்கப்பட்டார். அந்த காவல் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சென்னை மன்றத்தில் நான் வழக்கும் தொடுத்தேன். இப்படியெல்லாம் பல சம்பவங்கள் அன்றைக்கு நடந்தன.தடா என்ற கொடிய சட்டம் பாய்ச்சப்பட்டு, இந்த கொலை குற்றத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள் சிறைப்பட்டனர்.
 இவ்வாறெல்லாம் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்று நினைத்தாலும் மனம் பதறுகிறது.தி.மு.க ஆட்சியில் 1989-90 வரை ராஜீவ்காந்தி குறுக்கும் நெடுக்கும் பல பயணங்கள் மேற்கொண்ட போதும் பாதுகாப்பாக டெல்லி திரும்பினார். அதற்கு பிறகுதான் ஏதோ சூழ்ச்சிகள் நடந்தது தெளிவாகிறது.
 சரியான புலனாய்வும், தெளிவும் இந்த வழக்கில் இல்லாததால், விருப்பத்திற்கு ஏற்றவாறு பலருடைய வாழ்க்கையும்,அமைதியும் பறிபோயின. இன்னும் சிறையில் சிலர் குற்றவாளிகளாக இந்த வழக்கில் வாடுகின்றனர். தெளிவான புலனாய்வும் விசாரணையும் செய்திருந்தால் நியாயமான முடிவுகள் தெரிந்திருக்கும்.ஏதோ ஒரு முடிவு எடுத்துக்கொண்டு தி.மு.க, ஈழ ஆதரவாளர்கள் தான் காரணம் என்று பிணையப்பட்ட, உண்மைக்கு மாறாக எடுத்த முடிவினால் ஏற்பட்ட விளைவுகளை துலாக்கோல் நிலையில் இருந்து எண்ணி பார்க்க வேண்டும். நியாயங்கள் மறுக்கப்படக்கூடாது.நீதி மயக்கத்தில் இருக்கக்கூடாது என்பது தான் நமக்கு நாமே வகுத்துக் றகொண்ட வழிமுறைகளும்,நெறிமுறைகளும் ஆகும். இந்த செய்தியை சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதிகேட்ட முறையிலிருந்து நாம் படித்த படிப்பினையாகும்.

                                                                                                                                 - அரசியலாளர்

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...